இந்தியாவின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி :


 ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், 2016-ஆம் ஆண்டின் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்குப் பதிலாக, 2026-ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவின் புதிய திடக்கழிவு மேலாண்மை விதியை அறிவித்தது. இந்த விதிகள் ஏப்ரல் 1, 2026 அன்று அமலுக்கு வந்தன. மேலும், ஒன்றிய அரசு 2016-ஆம் ஆண்டின் நெகிழி கழிவு மேலாண்மை (Plastic Waste Management Rules) விதிகளில் திருத்தங்களை  மேற்கொண்டுள்ளது.


இரண்டு விதிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பார்ப்போம்.


முக்கிய அம்சங்கள்:


1. பத்து ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட திடக் கழிவு மேலாண்மை விதிகள், 2000-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நகராட்சி திடக் கழிவு விதிகளை மாற்றியமைத்தது. இது கழிவுகளைச் சேரும் இடத்திலேயே பிரித்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி, வீடு வீடாகச் சென்று சேகரித்தல் மற்றும் குப்பைக் கிடங்குகளில் நகர்ப்புறக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.


2. இந்தியா ஒரு பெரிய திடக்கழிவு மேலாண்மை நெருக்கடியை எதிர்கொள்கிறது. ஆண்டுதோறும் 620 லட்சம் டன்களுக்கும் அதிகமான கழிவுகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு நாளும், நமது நாட்டில் 1.85 லட்சம் டன் கழிவுகளை உருவாக்குகிறது. ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2023-24-ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, கழிவுகளில் 1.79 லட்சம் சேகரிக்கப்பட்டுள்ளது. 1.14 லட்சம் டன் கழிவுகள் சுத்திகரிக்கப்படுகின்றன.  மேலும், 39,629 டன் நிலக்கழிவுத் திடங்களில் (landfill) செலுத்தப்படுகின்றன.


3.  அதிகரித்து வரும் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, 2026-ஆம் ஆண்டின் விதிகள், மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்களின் பொறுப்புகளை அதிகரிப்பது, கழிவுகளை நிலக்குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்புவதையும் முறையற்ற முறையில் பிரிப்பதையும்  தடுப்பது மற்றும் ஒரு “வட்டப் பொருளாதாரத்தை” (circular economy) ஊக்குவிக்க முயல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.


4. தொடக்கத்திலேயே கட்டாயமாகப் பிரித்தெடுக்கும் நான்கு வழிமுறைகள்: அரசாங்கம் ஒரு “கழிவுப் படிநிலையை” வகுத்து, கழிவுகளைப் பிரித்தெடுப்பதற்கான “நான்கு வழி” முறையை வரையறுத்துள்ளது. இந்தப் படிநிலையானது, தடுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, மீட்டெடுத்தல் மற்றும் இறுதி முயற்சியாக அப்புறப்படுத்துதல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்தப் பிரித்தெடுப்பு முறை, சுகாதாரக் கழிவுகள் மற்றும் சிறப்புப் பராமரிப்புக் கழிவுகளைச் சேர்ப்பதன் மூலம் ‘உலர் கழிவு-ஈரக் கழிவு’ (dry-waste-wet-waste) அமைப்பை விரிவுபடுத்துகிறது.


வட்டப் பொருளாதாரம் (Circular Economy)


வட்டப் பொருளாதாரம் என்பது உற்பத்தி மற்றும் நுகர்வு முறைமையாகும். இதில் பகிர்வு, வாடகைக்கு பயன்படுத்துதல், மறுபயன்பாடு, பழுதுபார்த்தல், புதுப்பித்தல் மற்றும் மறுசுழற்சி (recycling) ஆகியவற்றின் மூலம் உள்ள பொருட்கள் மற்றும் வளங்களை முடிந்தவரை நீண்டகாலம் பயன்படுத்துவது அடங்கும். இதன் மூலம் பொருட்களின்  கால அளவு நீடிக்கப்படுகிறது. வளங்களை மீட்டெடுத்து மறுபயன்படுத்தும் சுழற்சி பொருளாதார அணுகுமுறை, கழிவுக் கசடு (sludge) போன்றவற்றை உயிரிவாயு (biogas) அல்லது உரமாக மாற்றும் திறனை வழங்குகிறது. இந்த முறையையே “பழுப்பு தங்கம்” (brown gold)  என்று குறிப்பிடுகின்றனர்.


5. குப்பைக் கிடங்குகளை தவிர்க்கும் முயற்சி: பிரிக்கப்படாத கழிவுகளை குப்பைக் கிடங்குகளை தவிர்க்கும் முயற்சி, புதிய விதிகள் இணக்கமின்மைக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு (environmental compensation) விதிக்கின்றன. உதாரணமாக, மையப்படுத்தப்பட்ட தளத்தில் பதிவு செய்யாதது, தவறான தகவல் அளித்தல், ஆவணங்களை பொய்யாக உருவாக்குதல் மற்றும் தவறான கழிவு மேலாண்மை போன்ற செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், இது குப்பைக் கிடங்குகளுக்கான கட்டணத்தையும் உயர்த்துகிறது. புதிய விதிகள், குப்பை மேடுகளைக் குப்பை அகற்றுதலுக்கான இறுதி இடமாகவும், மேலும் பயன்படுத்த முடியாத, மறுசுழற்சி செய்ய இயலாத மற்றும் ஆற்றலாக மாற்ற இயலாத கழிவுப் பொருட்களுக்கு மட்டுமே உரிய இடமாக  மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


6. மையப்படுத்தப்பட்ட இணையதளம்: புதிய விதிகள், பல்வேறு பங்குதாரர்களையும் திடக்கழிவு சுழற்சியின் அனைத்து நிலைகளையும் கண்காணிப்பதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட இணையதளத்தை அறிமுகப்படுத்துகின்றன. மொத்தக் கழிவுகளை உருவாக்குபவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கழிவு பதப்படுத்தும் மற்றும் கொண்டு செல்லும் முகமைகள், கழிவு சேகரிப்பாளர்கள், அகற்றும் மற்றும் பதப்படுத்தும் வசதிகள் மற்றும் ரயில்வே, விமான நிலையங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்ற பெரிய அதிகார அமைப்புகள் ஆகிய அனைத்து அமைப்புகளும் இந்த மையப்படுத்தப்பட்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.


மொத்த உற்பத்தியாளர்கள் என்பவர்கள் யார்?


பின்வரும், நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் (Bulk generators) என வரையறுக்கப்படுகின்றன. 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தரைப்பரப்பைக் கொண்ட கட்டிடங்கள், ஒரு நாளைக்கு 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் நுகர்வு அல்லது நாளொன்றுக்கு 100 கிலோகிராம்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கழிவு உற்பத்தி செய்யும் பகுதிகள் குடியிருப்புச் சங்கங்கள், வணிக வளாகங்கள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் பெரிய நகரக் குடியிருப்புகள் போன்றவை  இதில் இடம் பெற்றிருக்கும்.


7. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும், 2026-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள், நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் குப்பைக் கிடங்குகளையும் குப்பைக் கொட்டும் இடங்களையும் வரைபடமாக்க வேண்டும். அவர்கள் மலை போல் கிடைக்கும் குப்பைகளை குறைப்பதற்காக, உயிரியல் சீரமைப்பு (bioremediation) மற்றும் உயிரியல் சுரங்கம் (biomining) போன்ற முறைகளை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலகெடுவிற்குள் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.


8. உயிரியல் சீரமைப்பு (bioremediation) என்பது சுற்றுச்சூழலில் உள்ள நச்சுக்களைக் குறைக்கும் நோக்கில் செயல்படும் பாக்டீரியா, பூஞ்சைகள் அல்லது பிற உயிரியல் காரணிகளைப் பயன்படுத்தும் ஒரு செயல் முறையாகும். உயிரியல் சுரங்கத்தில், பாறைத் தாதுக்கள் அல்லது சுரங்கக் கழிவுகளிலிருந்து பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்களைப் பிரித்தெடுக்க நுண்ணுயிரிகள் (microbes) பயன்படுத்தப்படுகின்றன. இது உலோகங்களால் மாசுபட்ட இடங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.


9. கழிவிலிருந்து பெறப்படும் எரிபொருள் (Refuse Derived Fuel (RDF)): அதிக கலோரி மதிப்பு கொண்ட நகராட்சி திடக்கழிவுகளைப் பகுதி பகுதியாக பிரித்து மற்றும் நீர் நீக்கம் செய்வதன் மூலம் RDF உற்பத்தி செய்யப்படுகிறது. கலோரி மதிப்பு (Calorific value) என்பது நெகிழி கழிவுகள், வேளாண்க் கழிவுகள் மற்றும் சமையலறைக் கழிவுகள் போன்ற எரிபொருட்களில் இருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலைக் குறிக்கிறது. பல்வேறு கழிவு வகைகளிலிருந்து வெளிவரும் கழிவிலிருந்து பெறப்படும் எரிபொருளைக் கொண்டு திட எரிபொருளை மாற்றுவதற்குத் தொழில்துறைக்கு இலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயன்பாடு ஆரம்பத்தில் 6% ஆகவும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 15% வரையாகவும் இருக்க வேண்டும்.


10. புதிய விதியின்படி, 1500 கிலோ கலோரிகள் அல்லது அதற்கு மேற்பட்ட வெப்ப மதிப்பு (calorific value) கொண்ட கழிவுகள், கழிவிலிருந்து பெறப்படும் எரிபொருள் (RDF) மூலம் ஆற்றல் உற்பத்திக்கோ அல்லது சிமெண்டு மற்றும் வெப்ப மின் நிலையங்களில் (thermal plants) துணையாக பயன்படுத்தப்பட வேண்டும்.


2026-ஆம் ஆண்டு நெகிழிக் கழிவு மேலாண்மை (திருத்த) விதிகள்


1. இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருப்பது மட்டுமல்லாமல், வேகமாக அதிகரித்துவரும் நெகிழி நெருக்கடியின்  முக்கிய புள்ளியாகவும் விளங்குகிறது. லீட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 10.2 மில்லியன் டன் நெகிழிக் கழிவுகளை உருவாக்குகிறது. இது, அதிக மாசுபாடு ஏற்படுத்தும் நாடுகளின் அளவைவிட இருமடங்கிற்கு அதிகமான அளவாகும்.


2. நெருக்கடியின் தீவிரத்தை உணர்ந்து, இந்திய அரசு 2016-ஆம் ஆண்டின் நெகிழி கழிவு மேலாண்மை (Plastic Waste Management Rules) விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த விதிகள் அறிக்கையிடல் தேவைகளை வலுப்படுத்தியதுடன், நெகிழி மேலாண்மையில் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (Extended Producer Responsibility (EPR)) என்ற அடிப்படைக் கருத்தையும் அறிமுகப்படுத்தின. முறையாக, விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு இந்தியாவில் 2011-ஆம் ஆண்டின் மின்னணுக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.


3. பின்னர் செய்யப்பட்ட திருத்தங்கள், குறிப்பாக 2018, 2022, 2024, 2025-ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டவை மற்றும் சமீபத்திய திருத்தங்கள் போன்றவை, பல அடுக்கு நெகிழிகளுக்குள், மக்கும் நெகிழிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட உள்ளடக்கம், அபராதங்கள் மற்றும் கண்டறியும் திறன் தொடர்பான இடைவெளிகளை நிவர்த்தி செய்ய முயன்றன.


4. 2022-ல், விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பை (EPR) அறிமுகப்படுத்தியபோது,  ஒன்றிய அரசு 19 வகைகளை உள்ளடக்கிய ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளின் பயன்பாட்டைத் தடை செய்தது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி என்பது, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்படும் நெகிழி பொருட்களைக் குறிக்கிறது. பொருட்களின் பேக்கேஜிங் முதல், பாட்டில்கள் (ஷாம்பு, சலவைத்தூள், அழகுசாதனப் பொருட்கள்), பாலித்தீன் பைகள், முகக்கவசங்கள், காபி கோப்பைகள், ஒட்டும் படலம், குப்பைப் பைகள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றில், உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் நெகிழிகளில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியே அதிக பங்கைக் கொண்டுள்ளது.


5. 2026-ஆம் ஆண்டு விதிகளின்படி, பொதிப்படுத்துவதன் மூலம்  மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இலக்குகள் 2025-26 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை வகை வாரியாக படிப்படியாக அதிகரிக்கப்படுகின்றன. வகை I திட நெகிழியை பொதிப்படுத்துவதன் மூலம்  குறைந்தபட்சம் 30% மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள் இருக்க வேண்டும், இது 2028-29-ஆம் ஆண்டுக்குள் 60%-ஆக உயரும். தங்கள் இலக்கை அடையாத நிறுவனங்கள், அந்தப் பற்றாக்குறையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கை ஆண்டுதோறும் ஈடுசெய்யும் பட்சத்தில், அதுபோன்ற பற்றாகுறையை மூன்று ஆண்டுகள் வரை  கொண்டுசெல்லலாம்.


6. 2026-ஆம் ஆண்டின் விதிமுறையானது, ஆற்றல் மீட்புக்காக நெகிழி கழிவுகளை ‘பயன்பாட்டுக்குப்பின் அப்புறப்படுத்துதலை’ (end-of-life disposal) அங்கீகரிக்கிறது. இதில், சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற தொழில்களில், கழிவிலிருந்து ஆற்றல் (waste-to-energy (WTE)) செயல்முறைகள், கழிவிலிருந்து எண்ணெய் மாற்றம் மற்றும் சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய வழிகாட்டுதல் ஆகும்.

Original article :  India’s new Solid Waste Management Rules 2026 -Khushboo Kumari

Share: