பருவநிலை மாற்றம் ஒரு பொது சுகாதார அவசரநிலை. -நரேஷ் ட்ரெஹான்

 பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களால் இந்தியா அதிகரித்துவரும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.


பருவநிலை மாற்றம் குறித்து நாம் பேசும்போது, பொதுவாக கடல் மட்டம் உயர்வது அல்லது கடுமையான வானிலை மாற்றங்கள் பற்றியே விவாதிக்கிறோம். இன்னும் சிலர், இத்தகைய இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், மற்றொரு முக்கியமான விஷயத்தை மிகச் சிலரே சுட்டிக்காட்டுகின்றனர். அதுதான் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பரவலான சுகாதார சீர்கேடுகள் ஆகும். இந்த மாற்றங்கள் ஏற்கனவே இருக்கும் நோய்களைத் தீவிரப்படுத்துவதுடன், புதிய நோய்கள் உருவாவதற்கும் வழிவகுக்கின்றன.


இந்த நிலைமை குறிப்பாக இந்தியாவில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. மும்பை போன்ற நகரங்களில் பெய்யும் கனமழையினால் அடிக்கடி ஏற்படும் கடுமையான வெள்ளப்பெருக்கு, நீர் மூலம் பரவும் நோய்களான காலரா, டைபாய்டு, ஹெபடைடிஸ் ஏ (கல்லீரல் அழற்சி வகை நோய்) மற்றும் லெப்டோஸ்பைரோசிஸ் (எலி காய்ச்சல்) போன்றவை பரவுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளம், கழிவுநீர் மேலாண்மை அமைப்புகளைச் சீர்குலைத்து, சுத்தமான குடிநீரை மாசுபடுத்துவதுடன், மக்களைக் கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்குகிறது.


மறுபுறம், வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இது வயிற்றுப்போக்கு நோய்கள் (Diarrhoeal Diseases) மற்றும் நாள்பட்ட நீரிழப்பு (Chronic Dehydration) போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகப்படுத்துகிறது.


நோய் பரவும் அபாயம் அதிகரித்தல்


இதற்கிடையில், மாறிவரும் பருவநிலைகள் தொற்றுநோய்கள், ஒவ்வாமைகள் (Allergies) மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்களை (Vector-borne diseases) அதிகரிக்கின்றன. வெப்பநிலை மற்றும் மழையளவில் ஏற்படும் மாற்றங்கள் இயல்பான சுழற்சியைச் சிதைப்பதோடு, மகரந்தக் காலம் (Pollen seasons) நீடிக்கவும் காரணமாகின்றன. நோய்கள் பரவும் கால அளவு அதிகரிப்பதோடு, அவை புதிய பகுதிகளுக்கும் பரவி வருகின்றன. இது காலநிலை மாற்றத்தினால் நோய்த்தொற்று பரவுவதை அமைதியாக வேகப்படுத்துகிறது. முன்பு இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாத சமூகங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள சுகாதார அமைப்புகள் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள முழுமையாகத் தயாராக இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு ஒரு தெளிவான உதாரணம், கொசுக்களால் பரவும் நோய்களின் விரைவான பரவலாகும்.  அதிக வெப்பநிலை காரணமாக, முன்பு கொசுக்கள் வாழத் தகுதியற்ற இடங்கள் இப்போது அவை பெருகுவதற்கு ஏற்ற இடங்களாக மாறியுள்ளன. இந்த மாற்றம் டெல்லி நகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவும் விதத்தில் ஏற்கனவே தெரிகிறது. முன்பு செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்த டெங்கு பாதிப்புகள், தற்போது நவம்பர் மாதத்தில் உச்சத்தை அடைகின்றன. இதற்குக் காரணம், வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழல் கொசுக்கள் நீண்டகாலம் உயிர்வாழ வழிவகுப்பதே ஆகும்.


இதேபோல், ஒரு காலத்தில் பெரும்பாலும் கங்கை சமவெளிப் பகுதிகள் மற்றும் மத்திய இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட மலேரியா நோய், இப்போது இமாச்சலப் பிரதேசம் போன்ற குளிர்ச்சியான பகுதிகளிலும் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 


பருவநிலை மாற்ற அச்சுறுத்தல்கள்


பருவநிலை மாற்றமானது காற்று மாசுபாட்டை மேலும் அதிகரிக்கிறது. கோடைகாலம் அதிக வெப்பமடைவதால், மக்கள் குளிர்சாதன வசதியை (Air Conditioning) அதிகமாகச் சார்ந்திருக்கிறார்கள். இது எரிசக்தி பயன்பாட்டையும், பசுமை இல்ல வாயு (Greenhouse Gas) வெளியேற்றத்தையும் அதிகரிக்கிறது. இந்த வாயு வெளியேற்றத்தில் துகள் பொருட்கள்-2.5 (Particulate Matter 2.5 (PM2.5)) எனப்படும் மிக நுண்ணிய துகள்கள் அதிக அளவில் உள்ளன. இவை நமது நுரையீரலுக்குள்ளும், ரத்த ஓட்டத்திலும் நேரடியாக நுழையக்கூடியவை என்பதால் இது உடல் உறுப்புகளை, குறிப்பாக நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பெரிதும் பாதிக்கின்றன.


நுண்ணிய துகள்கள் (PM2.5) நுரையீரலின் ஆழமான பகுதி வரை சென்று, அங்கு வீக்கத்தை உண்டாக்குகின்றன. இவை நுரையீரலின் செயல்பாட்டுத் திறனைக் குறைப்பதுடன், ஆஸ்துமா (Asthma) மற்றும் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (Chronic Obstructive Pulmonary Disease (COPD)) போன்ற நோய்களின் பாதிப்பைத் தீவிரப்படுத்துகின்றன.


இந்த நுண்ணிய துகள்கள் இரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம், அதிரோஸ்க்லரோசிஸ் (Atherosclerosis) (இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து தடிமனாதல்) வேகத்தை அதிகரிக்கலாம் மற்றும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறுநீரகங்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றன; நீண்டகால பாதிப்பு சிறுநீரகச் செயல்பாட்டைச் சிதைத்து, இரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறனைக் குறைத்து, நாள்பட்ட சிறுநீரக நோயை (Chronic Kidney Disease (CKD)) உண்டாக்குகிறது.


பசுமை இல்ல வாயுக்கள் (Greenhouse Gases) வளிமண்டலத்தில் அதிகப்படியான வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்கின்றன. இதனால் ஒரு சுழற்சி வினை உருவாகிறது. அதாவது, வெப்பத்திலிருந்து தப்பிக்க நாம் பயன்படுத்தும் குளிரூட்டிகள் மற்றும் பிற சாதனங்கள், மீண்டும் வெப்பத்தையே அதிகரித்து நிலைமையை மோசமாக்குகின்றன. இந்த வெப்ப அழுத்தம், உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்காக இதயத்தை வழக்கத்தைவிடக் கடினமாக இயங்கச் செய்கிறது. இது ரத்த ஓட்ட மண்டலத்திற்கு (Cardiovascular system) தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கிறது. இதன் விளைவாக உயர் ரத்த அழுத்தம் (Hypertension), மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர். குறிப்பாக, முறையான தங்குமிடம் இல்லாதவர்கள் மற்றும் வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்யும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் இந்த வெப்பத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


ஒடிசா, தெலங்கானா மற்றும் விதர்பா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில், வெப்பத்தாக்கம் (Heat Stroke) காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில், இரவிலும் அதிக வெப்பநிலை நிலவுவதால், பகல் நேர வெப்பத்திலிருந்து உடல் தன்னை மீட்டெடுத்துக் கொள்ளவும், குளிர்ச்சியடையவும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.


குழந்தைகளும் இதில் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் — அதிகப்படியான வெப்பம் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு ஆளாவது, காலத்திற்கு முந்தைய பிறப்பு (Premature Births) மற்றும் குழந்தை பிறக்கும்போது எடை குறைவாக இருத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


உணவுப் பாதுகாப்பின் மீதான தாக்கம்


பருவநிலை மாற்றம் நமது ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், உணவு மற்றும் ஊட்டச்சத்து வழியாகவும் மறைமுகப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தீவிரமான வானிலை மாற்றங்கள் மற்றும் பருவம் தவறிப் பெய்யும் மழையினால் பயிர் சுழற்சிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் வேளாண் உற்பத்தி குறைந்து, உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே நேரத்தில், பயிர்களின் ஊட்டச்சத்துத் தரம் குறைந்து வருவதும், உணவுகளின் விலை உயர்ந்து வருவதும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன. இது குறிப்பாகக் குழந்தைகளிடையே நுண்ஊட்டச்சத்து குறைபாடு (micronutrient deficiencies) மற்றும் நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடு போன்ற மறைமுகப் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.


அதிகரித்து வரும் வெப்பநிலையானது பால் உற்பத்தியையும் குறைக்கிறது. ஏனெனில், வெப்ப அழுத்தத்திற்கு உள்ளாகும் கால்நடைகள் குறைந்த அளவே பாலை உற்பத்தி செய்கின்றன. இது கைக்குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளின் ஊட்டச்சத்தைப் பாதிக்கிறது. உணவுப் பாதுகாப்பில் ஏற்படும் இத்தகைய கூட்டுத் தாக்கங்கள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதுடன், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே நோய் பாதிப்பு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன.


இந்த விவகாரங்கள் குறித்த எச்சரிக்கைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை. பருவநிலை மாற்றம் என்பது இனி தொலைவில் இருக்கும் அச்சுறுத்தல் அல்ல என்றும் இந்தியாவின் பொதுச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அது ஏற்கனவே ஒரு நெருங்கிய உண்மையாகிவிட்டது.  இதை வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனையாக மட்டும் பார்ப்பது, மனிதர்கள் மீது இந்தப் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் கடுமையான பாதிப்புகளைப் புறக்கணிப்பதாகவே கருதப்படும். இதனை ஒரு மருத்துவ அவசரநிலையாக அங்கீகரிப்பதே, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதல் படியாகக் கூறப்படுகிறது. 


டாக்டர் நரேஷ் ட்ரெஹான், மெடாண்டா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.


Original article: Climate change as a public health emergency. -Naresh Trehan

Share: