இந்தியாவின் வடிவமைக்கப்பட்ட அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. -குஷ்பூ குமாரி

வடிவமைக்கப்பட்ட அரிசி (Designer Rice) என்பது அதிக புரதச்சத்தும் மற்றும் குறைந்த சர்க்கரை குறியீடும் (Low Glycemic Index) கொண்ட ஒரு புதிய வகை அரிசியாகும்; இது நாம் உணவிலிருந்து ஆற்றலைப் பெறும் முறையை மேம்படுத்த உதவும். இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? சர்க்கரை குறியீடு (Glycemic Index (GI)) மற்றும் சர்க்கரை சுமை (Glycemic Load (GL)) ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன? 


திருவனந்தபுரத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் - தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் (Council of Scientific and Industrial Research (CSIR) - (National Institute for Interdisciplinary Science and Technology (NIIST)) சேர்ந்த விஞ்ஞானிகள், “வடிவமைக்கப்பட்ட அரிசி” (Designer Rice) எனப்படும் ஒரு சிறப்பு வகை அரிசியை உருவாக்கியுள்ளனர். இந்திய அரசாங்கத்தின்கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின்கீழ் (CSIR) உள்ள ஒரு முன்னணி ஆராய்ச்சி ஆய்வகம்தான் இந்த தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (NIIST) ஆகும்.


இந்த அரிசி அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற “CSIR-NIIST Tech Connect: From Lab to Market” என்ற நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் ‘Tata Consumer Products Limited’ மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘SS Soul Foods’ ஆகிய நிறுவனங்களுக்கு வணிகரீதியாக மாற்றப்பட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. விஞ்ஞானிகள் இந்த வடிவமைக்கப்பட்ட அரிசியை (Designer rice) உருவாக்க மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. மாறாக, உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தையே (Food-processing technology) பயன்படுத்தியுள்ளனர். இது நமது அடிப்படை உணவான அரிசியின் கட்டமைப்பில் செய்யப்பட்ட ஒரு அடிப்படையான மறுவடிவம் ஆகும்.

2. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் - தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (CSIR-NIIST) இயக்குநரும், இந்தத் திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளருமான டாக்டர் சி. ஆனந்தராமகிருஷ்ணன் இதைப் பற்றி விளக்கமளிக்கையில், "ஒரு கட்டிடத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய அரிசி என்பது பெரும்பாலும் 'சர்க்கரை செங்கற்களால்' (மாவுச்சத்து) ஆன ஒரு வீட்டைப் போன்றது என்றால், எங்கள் குழு அந்த வீட்டைப் பிரித்தெடுத்து, அதில் இருந்த அதிகப்படியான மாவுச்சத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'புரதத் தூண்களை' (Protein beams) கொண்டு அதை மாற்றியமைத்துள்ளது," என்று கூறினார்.


3. அந்தக் குழுவினர், உடைந்த அரிசியை அரைத்து மாவாக்கி, அதனுடன் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 போன்ற ஊட்டச்சத்துக்களைக் கலந்து, மீண்டும் அரிசி வடிவிலான தானியங்களாக மாற்றினர். இவ்வாறு உருவாக்கப்பட்ட அரிசி, பார்ப்பதற்கும், தொடுவதற்கும், சுவைப்பதற்கும் சாதாரண அரிசி போலவே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.


வடிவமைக்கப்பட்ட அரிசியின் நன்மைகள்


* குறைந்த சர்க்கரை குறியீடு (Low GI): இந்த வடிவமைக்கப்பட்ட அரிசி (Designer Rice) மிகவும் பயனுள்ளது; ஏனெனில் இதன் சர்க்கரை குறியீடு (GI) அளவானது 55-க்கும் குறைவாக உள்ளது. இது உடலில் ஆற்றலை மிக மெதுவாக வெளியிடுகிறது என்றும் இதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் ரத்தச் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தவிர்பபதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


* புரதச்சத்தின் ஆற்றல் மையம்: சாதாரண அரிசியில் 6 முதல் 8 சதவீதம் மட்டுமே புரதச்சத்து இருக்கும் நிலையில், இந்த வகை அரிசியில் 20 சதவீதத்திற்கும் அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது.


* வலுவூட்டப்பட்ட பாதுகாப்பு: இரும்புச்சத்து, போலிக் அமிலம் (Folic acid) மற்றும் வைட்டமின் பி12 (Vitamin B12) ஆகியவற்றை நேரடியாக அரிசியின் உட்பகுதியிலேயே சேர்ப்பதன் மூலம், இரத்த சோகை (anaemia) ஏற்படுவதற்கான ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்கிறது.


4. இந்தியாவில் நிலவும் முரண்பாடான ஆரோக்கிய நெருக்கடியைச் சுட்டிக்காட்டுதல். விஞ்ஞானிகள் இதை “மறைமுகப் பசி” (Hidden hunger) எனப்படும் சவாலை எதிர்கொள்வதற்கான தீர்வுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். டாக்டர் சுதீப் கர்மாக்கர், இந்த கண்டுபிடிப்பு ஒரு “சுழற்சி பொருளாதாரத்தின்” (Circular economy) சிறந்த முன்னுதாரணம் என்றும் குறிப்பிட்டார். அரிசி ஆலைகளில் வெளியேற்றப்படும் உபரிப் பொருளான உடைந்த அரிசியைப் பயன்படுத்துவதன் மூலம், இதுவரை சரியாகப் பயன்படுத்தப்படாத ஒரு வளத்திற்கு, உழவர்கள் கூடுதல் மதிப்பு சேர்க்கும் வாய்ப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.


சர்க்கரை குறியீடு (GI)


5. சர்க்கரை குறியீடு (GI) என்பது ஒரு உணவு எவ்வளவு விரைவாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (குளுக்கோஸ்) அளவை உயர்த்துகிறது என்பதை அளவிடும் முறையாகும். கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) கொண்ட உணவுகளுக்கு மட்டுமே இந்தச் சர்க்கரை குறியீட்டு அளவு உண்டு. உணவுகள், இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு அதிகரிக்கின்றன என்பதைப் பொறுத்து, அவை 0 முதல் 100 வரை வகைப்படுத்தப்படுகின்றன. 

6. பொதுவாக, குறைந்த சர்க்கரை குறியீடு (Low GI) கொண்ட உணவுகள் இரத்த சர்க்கரை அளவை மெதுவாகவே அதிகரிக்கின்றன. முழு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் போன்றவை குறைந்த சர்க்கரை குறியீடு மதிப்பைக் கொண்ட உணவுகள் ஆகும். இந்த உணவுகள் உடல் எடையைக் குறைக்கவும், நீண்டநேரம் பசி எடுக்காமல் தடுக்கவும் உதவுகின்றன. மேலும், இவை இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) மேம்படுத்தி, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.


இரத்தச் சர்க்கரைச் சுமை (GL)


7. இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் நிபுணரான (Endocrinologist) டாக்டர் சதுர்வேதி கூறுகையில், இரத்தச் சர்க்கரைச் சுமை (GL) என்பது மிகவும் நடைமுறைக்கு ஏற்ற ஒரு அளவீடு ஆகும். ஏனெனில், இது நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டின் (மாவுச்சத்து) வகை மற்றும் அதன் அளவு ஆகிய இரண்டையுமே கணக்கில் கொள்கிறது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட்டில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது என்று மட்டும் பார்க்காமல், நாம் உணவை உண்ணும்போது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை எந்த அளவுக்கு உண்மையாகப் பாதிக்கிறது என்பதை  இந்த அளவீடு காட்டுகிறது.


8. இரத்தச் சர்க்கரைச் சுமை (Glycemic Load) என்பது ஒரு உணவின் சர்க்கரை குறியீட்டையும் (Glycemic Index), அந்த உணவில் உள்ள கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) அளவையும் கணக்கில் கொள்கிறது. ஒரு உணவின் சர்க்கரை குறியீடு (GI) மதிப்பையும், அதில் உள்ள கார்போஹைட்ரேட் அளவையும் பெருக்கி, வரும் விடையை 100-ஆல் வகுப்பதன் மூலம் இரத்தச் சர்க்கரைச் சுமை (GL) அளவு கணக்கிடப்படுகிறது. இதன்படி, அதிக சர்க்கரை குறியீடு மதிப்பைக் கொண்டிருந்தாலும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட ஒரு உணவு 'குறைந்த இரத்தச் சர்க்கரைச் சுமை' மதிப்பைப் பெறலாம்; அதேபோல் குறைந்த சர்க்கரை குறியீடு கொண்ட உணவு 'அதிக இரத்தச் சர்க்கரைச் சுமை' மதிப்பையும் பெறலாம்.




இந்தியாவின் அரிசி உற்பத்தி குறித்து


9. 2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் வெளியிட்ட தகவலின்படி, இந்தியா சுமார் 150 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியுடன், சீனாவை (145.28 மில்லியன் டன்) முந்தி, 2024–25 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.


10. நெல் சாகுபடிக்கு வெப்பமான மற்றும் ஈரப்பதமான தட்பவெப்பநிலை, அதிகப்படியான நீர் மற்றும் ஆற்றுப் படிவுகளால் உருவான வண்டல் மண் (alluvial soil) ஆகியவை அவசியமாகும். ஆறுகளின் வெள்ளச் சமவெளிகள் நெல் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற, அதிக விளைச்சல் தரும் பகுதிகளாக விளங்குகின்றன.


11. நெற்பயிர் 20°C முதல் 37.5°C வரையிலான வெப்பநிலையில் மிகச்சிறப்பாக வளர்கிறது. இது காரீஃப் (தென்மேற்குப் பருவமழை காலம்) மற்றும் ரபி (குளிர்காலமும் வசந்த காலமும்) ஆகிய இரு காலங்களிலும் பயிரிடப்படுகிறது. மேலும், இது பல்வேறுபட்ட நிலப்பரப்புகளிலும் பரவலாக விளைவிக்கப்படுகிறது.


செறிவூட்டப்பட்ட அரிசி


1. 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், மத்திய அரசு பிரதமர் ஏழைகள் நல உணவுத் திட்டம் ( Pradhan Mantri Garib Kalyan Anna Yojana (PMGKAY)) மற்றும் அதனுடன் தொடர்புடைய இதர திட்டங்களின்கீழ் வழங்கப்படும் அரிசியில் சத்துக்களைச் சேர்க்கும் "செறிவூட்டப்பட்ட அரிசி" முறையைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்தது. 


2. மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகக்குறைந்த பாதிப்புடன், பொதுச் சுகாதார நன்மைகளை வழங்குவதற்காகவும், உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்காகவும், அந்த உணவில் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்துக்களின் அளவைத் திட்டமிட்டு அதிகரிப்பதே உணவுச் செறிவூட்டல் முறை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)), வரையறுக்கிறது


3. தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி (National Family Health Survey (NFHS-5)), பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே நிலவும் அதிகப்படியான ஊட்டச்சத்துக் குறைபாடும், பெண்களிடையே பரவலாகக் காணப்படும் இரத்த சோகை காரணமாக, 'உணவு செறிவூட்டல்' ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. அரிசியில் நுண் ஊட்டச்சத்துக்களைச் (Micronutrients) சேர்ப்பதன் மூலம், ஏழை எளிய மக்களின் உணவுத் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.


4. அரிசியில் நுண் ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பதற்கு பூசுதல் (coating), தூவுதல் (dusting) மற்றும் வெளியேற்றுதல் (extrusion) போன்ற பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், 'வெளியேற்றுதல்' (extrusion) முறையே முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது; இதில் ஒரு ‘extruder’ இயந்திரத்தைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் (Fortified Rice Kernels (FRK)) தயாரிக்கப்படுகின்றன.


5. உலர்ந்த அரிசி மாவுடன் மிகச்சிறிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் கலக்கப்பட்டு, அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவையானது வெப்பமூட்டும் வசதி கொண்ட 'Twin-screw extruder' என்ற இயந்திரத்தின் வழியாக செலுத்தப்படுகிறது. இதன்மூலம் சாதாரண அரிசியின் வடிவிலேயே செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் உருவாக்கப்படுகின்றன. இந்த அரிசி மணிகள் பார்ப்பதற்கு "சாதாரண அரிசியைப் போலவே" இருக்க வேண்டும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.


6. இந்த அரிசி மணிகள் உலர்த்தப்பட்டு, குளிரூட்டப்பட்டு, பின்னர் சிப்பம் (Packaged) செய்யப்படுகின்றன. இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் (FRK) குறைந்தது 12 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். இந்த மணிகளை சாதாரண அரிசியுடன் கலந்து 'செறிவூட்டப்பட்ட அரிசி' தயாரிக்கப்படுகிறது. மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 1 கிலோ சாதாரண அரிசிக்கு 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி மணிகள் சேர்க்கப்பட வேண்டும்.


7. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளின்படி, 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து (28–42.5 மி.கி), போலிக் அமிலம் (75–125 மைக்ரோகிராம்) மற்றும் வைட்டமின் பி12 (0.75–1.25 மைக்ரோகிராம்) ஆகியவை அடங்கியுள்ளன.


8. ஒரு கிலோ அரிசியுடன் துத்தநாகம் (Zinc - 10 மி.கி முதல் 15 மி.கி), வைட்டமின் A (500-750 மைக்ரோகிராம் RE), வைட்டமின் B-1 (1 மி.கி முதல் 1.5 மி.கி), வைட்டமின் B-2 (1.25 மி.கி முதல் 1.75 மி.கி), வைட்டமின் B-3 (12.5 மி.கி முதல் 20 மி.கி) மற்றும் வைட்டமின் B-6 (1.5 மி.கி முதல் 2.5 மி.கி) ஆகிய சத்துக்களையும் சேர்த்து செறிவூட்டப்படலாம் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளது.

Original link:

India’s Designer Rice launched.


Share: