2 விபத்துகள், 34 உயிரிழப்புகள் மற்றும் ஒரு தாமாக முன்வந்து தொடரப்பட்ட வழக்கு : நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க உச்சநீதிமன்றம் தனது ‘முழுமையான நீதி’ வழங்கும் அதிகாரங்களை பயன்படுத்தியது ஏன்? -தீராஜ் மிஸ்ரா

ஏப்ரல் 13 தேதியிட்ட இந்த உத்தரவு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (National Highways Authority of India(NHAI)) மற்றும் மாநில பொதுப்பணித் துறைகளைக் (state public works departments) கடுமையாக விமர்சித்துள்ளது. நிர்வாக மெத்தனப்போக்கு அல்லது மோசமான உள்கட்டமைப்பு காரணமாக ஒரு அதிவேக விரைவுச்சாலை, ஆபத்து நிறைந்த வழித்தடமாக மாறிவிடக்கூடாது என்று அது கூறியது.


2025 நவம்பரில் இரண்டு வெவ்வேறு சாலை விபத்துக்களில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து, சாலை விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அளவிலான சாலைத் துறைகளுக்கு 13 அம்ச வழிகாட்டுதல்களை வழங்கி ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


ஏப்ரல் 13 தேதியிட்ட அந்த உத்தரவு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) போன்ற சாலை துறைகளையும், மாநில பொதுப்பணித் துறைகளையும் (PWDs) கடுமையாக விமர்சித்ததுடன், நிர்வாக மெத்தனப்போக்கு அல்லது மோசமான உள்கட்டமைப்பு காரணமாக ஒரு சாலை, குறிப்பாக அதிவேக விரைவுச்சாலை, ஆபத்து நிறைந்த வழித்தடமாக மாறிவிடக் கூடாது என்றும் கூறியது. மேலும், உயிர் மற்றும் தனிநபர் சுதந்திரப் பாதுகாப்பைக் கையாளும் அரசியலமைப்பின் 21-வது சரத்து, சாலையில் பயணிப்பவர்களின் பாதுகாப்பையும் உள்ளடக்கியது என்பதையும் அது அங்கீகரித்தது.

சட்டவிரோத வாகன நிறுத்தம் அல்லது அபாயகரமான சாலைப் பகுதிகள் போன்ற தவிர்க்கக்கூடிய ஆபத்துகளால் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டால்கூட, அது அரசுக்குள்ள கடமை தோல்வியடைவதையே காட்டுகிறது. இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘வாழ்க்கைக்கான உரிமை’ (Right to Life) என்பது, சட்டவிரோதமாக உயிரைப் பறிப்பதற்கு எதிரான ஒரு உத்தரவாதம் மட்டுமல்ல, மனித உயிர் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்படும் ஒரு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கான அரசின் மீதான ஒரு நேர்மறையான கடமையும் ஆகும்,” என்று நீதிமன்றம் கூறியது.


இந்த விவகாரத்தில், அரசியலமைப்பின் 142-வது பிரிவின்கீழ் தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


2025, நவம்பர் 2 அன்று, இராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் உள்ள ‘மடோரா’ அருகே, பாரத்மாலா விரைவுச்சாலையில் (ஜாம்நகரை அமிர்தசரஸுடன் இணைக்கும்) அமைந்துள்ள சாலையோர உணவகம் (தாபா) அருகே நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் மீது யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மோதியது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அடுத்த நாள் நடந்த மற்றொரு சம்பவத்தில், தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை-163-ல் எதிர்திசையில் இருந்து சரளைக்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, சாலையில் இருந்த பள்ளத்தைத் தவிர்க்க முயன்றபோது, ​​மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் 40 நாட்கள் மட்டுமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.


இந்த இரண்டு சம்பவங்களும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வழிவகுத்தன. பிரதான சாலையின் ஒருபுறத்தில் பெரிய வாகனங்கள், குறிப்பாக லாரிகள், நிறுத்தப்பட்டிருக்கும் சாலைகளில் நிலவும் ஒரு தீவிரமான பிரச்சனையை நீதிமன்றம் ஆராய்ந்தது. இரவு நேரங்களில் ஓட்டுநர்கள் நிறுத்தப்பட்ட வாகனங்களைக் கவனிக்கத் தவறுவதாலோ அல்லது அவை நிலையாக நிற்கின்றனவா அல்லது நகர்கின்றனவா என்பதைத் தவறாகக் கணிப்பதாலோ, இந்த வழக்கம் பெரும்பாலும் விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது.


அனுமதியின்றி இயங்கும் சாலையோர தாபாக்களாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன. அங்கு, லாரி ஓட்டுநர்களும் உதவியாளர்களும் தங்கள் வாகனங்களைச் சாலையில் நிறுத்தியபிறகு, உணவு உண்பதற்காக வழக்கமாகத் தடுப்பைத் தாண்டிச் செல்கின்றனர்.


நீதிமன்றம் என்ன கூறியது?


தனது வழிகாட்டுதல்களில், கனரக அல்லது வர்த்தக வாகனங்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட நிறுத்துமிடம், வாகன நிறுத்துமிடம் அல்லது சாலையோர வசதி ஆகிய இடங்களைத் தவிர, வேறு எங்கும் தேசிய நெடுஞ்சாலையின் வாகனப் பாதையிலோ அல்லது தார் போடப்பட்ட சாலையோரத்திலோ நிறுத்தவோ அல்லது நிற்கவோ கூடாது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. அதிகாரிகள், அத்தகைய வாகனங்களைக் கண்காணிக்க மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (Advanced Traffic Management System (ATMS)) பயன்படுத்த வேண்டும் என்றும், ஜிபிஎஸ் அடிப்படையிலான, (GPS-based) நேர முத்திரையிடப்பட்ட புகைப்பட ஆதாரங்களுடன் காவல்துறைக்கு எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும், மேலும் அதனை இ-சலானுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.


மேலும், எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையின் வழித்தடப் பகுதிக்குள் (Right of Way (ROW)) புதிய தாபா, உணவகம் அல்லது வணிகக் கட்டிடம் கட்டுவதற்கும் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து புதிய மற்றும் தற்போதுள்ள அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களையும் இடிப்பதை மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்தவொரு தேசிய நெடுஞ்சாலையின் முக்கியப் பகுதியிலிருந்து 40 மீட்டர் (குடியிருப்பு) மற்றும் 75 மீட்டர் (வணிகம்) தொலைவிற்குள் நிலப் பயன்பாட்டை மாற்றுவதைத் தடைசெய்து, மாநில அரசுகள் 60 நாட்களுக்குள் அறிவிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.


கண்காணிப்பு, மருத்துவ அவசரஊர்திகள் மற்றும் அபாயப் பகுதிகள்


நெடுஞ்சாலைகளையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைப் (National Highways Authority of India(NHAI)) போன்ற போக்குவரத்துத் துறைப் பணியாளர்களைக் கொண்டு பிரத்யேக நெடுஞ்சாலை கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும், அனைத்து நான்கு மற்றும் ஆறு வழி நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் முழுவதும் TMCC கேமராக்கள், VSDS வேகக் கண்டறி கருவிகள், VIDS கேமராக்கள், மாறும் செய்திப் பலகைகள் மற்றும் அவசர அழைப்புப் பெட்டிகளுடன் கூடிய தனது மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பை (ATMS) முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை (NHAI) கேட்டுக்கொண்டுள்ளது.


விபத்துகளின் போது விரைவாகப் பதிலளிப்பதற்காக, ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியிலும் 75 கி.மீ.க்கு மிகாத இடைவெளியில், சுங்கச்சாவடிகள், சாலையோர வசதிகள் அல்லது பிரத்யேகப் பணியிடங்களில் அடிப்படை உயிர் ஆதரவு (BLS) மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் மீட்பு கிரேன்களைப் பணியில் ஈடுபடுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு (NHAI) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளை வழங்குவதற்காக, அமிர்தசரஸ் முதல் ஜாம்நகர் நெடுஞ்சாலைக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஒவ்வொரு 75 கி.மீ. இடைவெளியிலும் லாரிகள் நிறுத்துவதற்கான வசதிகளை அமைக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (NHAI) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விபத்து ஏற்படும் அபாயமாக உள்ள இடங்களை 45 நாட்களுக்குள் கண்டறிந்து வெளியிடவும், அதிக ஒளித்திறன் கொண்ட எல்.ஈ.டி/உயரமான கம்ப விளக்குகள், வேகக் கட்டுப்பாட்டுக் கேமராக்கள், ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் மற்றும் குறுக்குக் கோடு குறியீடுகளை நிறுவவும் இந்த நெடுஞ்சாலை ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்தியாவின் மொத்த சாலை நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஏறத்தாழ 2% மட்டுமே உள்ளன. இருப்பினும், சாலை விபத்து மரணங்கள் அனைத்திலும் இவை ஏறத்தாழ 30 விழுக்காட்டைக் கொண்டுள்ளன.


Original link:

2 accidents, 34 deaths, a suo motu case: Why SC used its ‘complete justice’ powers to fix the highways.


Share: