தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தால், கட்டுப்படுத்தும் உத்தரவுகளை பிறப்பிக்க முடியுமா? -ரிஸ்மி லியா எம்.

 தற்போதைய செய்தி: அரசியலமைப்பின் 338-வது பிரிவின் கீழ்,தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு (NCSC) நீதிமன்றங்களை போல் அதிகாரங்கள் இல்லை என்றும், பணி தொடர்பான பிரச்சனைகளில், ஆணையத்தால் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று தெளிவுபடுத்தியது. விசாரணையின் போது சாட்சிகளை அழைத்தல், ஆவணங்களைக் சமர்ப்பிக்கக் கோரிக்கை விடுத்தல் மற்றும் சாட்சியங்களைப் பெறுதல் போன்ற உரிமையியல் நீதிமன்றத்திற்கு (civil court) இணையான அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்கள் விசாரணைகளை எளிதாக்குவதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மும்பை துறைமுக ஆணையத்தின் ஊழியர் ஒருவர் கோரிய பதவி உயர்வுச் சலுகைகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இது போன்ற ஒரு தீர்ப்பை  வழங்கியுள்ளது.


இந்த வழக்கு எதைப் பற்றியது?


இந்த வழக்கு, மும்பை துறைமுக ஆணையத்தில் பணியாற்றிய ஒரு ஸ்டெனோகிராபரின் பணி தொடர்பான சிக்கலினால் உருவானது. அவர் 1997-ஆம் ஆண்டு மும்பை துறைமுக ஆணையத்தில் பணியில் சேர்ந்தார். 2002-ஆம் ஆண்டின் அலுவலக நினைவுக் குறிப்பின் (Office Memorandum) அடிப்படையில், பட்டியல் சாதி (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீட்டு கொள்கையின்கீழ் வழங்கப்பட்ட தொடர்ச்சியான பணிமூப்பு காரணமாக (consequential seniority) அவர் ஸ்டெனோகிராபர் நிலை–II-லிருந்து ஸ்டெனோகிராபர் நிலை–I-க்கு பதவி உயர்வு பெற்றார்.


இருப்பினும், 2006-ஆம் ஆண்டு M. நாகராஜ் vs இந்திய யூனியன் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்த அரசாங்க அறிவுறுத்தல்களுக்குப் பிறகு, அதன் விளைவாகக் கிடைத்த பணிமூப்புப்பலன் திரும்பப் பெறப்பட்டதால், அவர் ஒரு கீழ்நிலைப் பதவிக்கு மாற்றப்பட்டார். மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த பிறகு, அவர் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்தை (National Commission for Scheduled Castes (NCSC)) அணுகினார்.


அவரது பதவி உயர்வை மீண்டும் வழங்கவும், அதனுடைய அனைத்து பணப் பலன்களையும் (consequential monetary benefits) அளிக்கவும் ஆணையம் துறைமுக ஆணையத்திற்கு உத்தரவிட்டது. ஆணையத்தின் உத்தரவில் தலையிட பம்பாய் உயர் நீதிமன்றம் மறுத்ததால், துறைமுக ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?


அரசியலமைப்பின் 338-வது பிரிவு, தேசிய பட்டியல் சாதிகள்    ஆணையத்திற்கு,  நீதிமன்றங்களை போல் அதிகாரங்களை (adjudicatory powers) வழங்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


நீதிபதி சஞ்சய் கரோல் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் வரம்பிற்கு உட்பட்டவை. அரசியலமைப்பின் 338, 338-A மற்றும் 338-B கட்டுரைகளின்கீழ் அமைக்கப்பட்ட இந்த ஆணையங்கள் சமூக நலன்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டவைகளாக இருந்தாலும் அவற்றின் பங்கு, பரிந்துரை மற்றும் ஆலோசனை வழங்குவதாக மட்டுமே நாடாளுமன்றத்தால்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் அமைப்புகளை போல இந்த ஆணையங்கள் இல்லை. நீதித்துறை அல்லது நீதிமன்றதிற்கு இணையான அதிகாரம் கொண்ட (quasi-judicial) அமைப்புகளாக இந்த ஆணையங்கள் உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிட்டது.


நீதிமன்றம், அரசியலமைப்பின் 338(5)-வது உட்பிரிவை ஆய்வு செய்தது. இதில், அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்புகளை விசாரித்தல், புகார்களை ஆய்வு செய்தல், பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளனவா என்பதை கண்காணித்தல், அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் குடியரசுத்தலைவருக்கு அறிக்கைகள் சமர்ப்பித்தல் போன்ற பணிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 338(8)-வது உட்பிரிவின்கீழ், சாட்சிகளை ஆஜராக அழைத்தல், சாட்சியங்களைப் பெறுதல், ஆவணங்களை கோருதல் போன்ற உரிமையியல்  நீதிமன்றத்தின் சில அதிகாரங்கள் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


ஆனால், நாடாளுமன்றம் தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்கியுள்ள உரிமையியல் நீதிமன்ற அதிகாரங்களை மிகவும் தெளிவாகவும் வரையறுக்கப்பட்ட வகையிலும் குறிப்பிட்டுள்ளது. பெயரளவில் (‘Namely’) என்ற சொல்லைப் பயன்படுத்தி குறிப்பிட்ட அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புக்குட்பட்ட தன்மையைக் காட்டுகிறது. எனவே, ஆவணங்களை கோருவதற்கும் (requisition), சாட்சியங்களைப் பெறுவதற்கும் அதற்கு அதிகாரம் இருந்தாலும், அந்த சாட்சியங்களின் அடிப்படையில் கட்டாய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் உண்மை நிலைகளை (factual findings) பதிவு செய்து, அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மத்திய அல்லது மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்க மட்டுமே வழங்க முடியும்" என்று நீதிமன்றம்   தெரிவித்தது.


நீதிமன்றம், 338(5)-வது உட்பிரிவின் (a) மற்றும் (d) துணைப்பிரிவுகளையும் ஆய்வு செய்தது. (a) துணைப்பிரிவு, பட்டியல் சாதியினருக்காக அரசியலமைப்பிலோ அல்லது பிற சட்டங்களிலோ வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகளை விசாரித்து கண்காணிக்கும் அதிகாரத்தை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையத்திற்கு வழங்குகிறது. பாதுகாப்புகளை உருவாக்குவது சட்டத்தின் பணியாகும். அவை நடைமுறையில் சரியாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதே பட்டியல் சாதியினருக்கான தேசிய ஆணையத்தின் பணி என்று நீதிமன்றம் கூறியது.


அதேபோல், (d) துணைப்பிரிவின்படி, பட்டியல் சாதியினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து ஆண்டுதோறும் அல்லது தேவையான பிற நேரங்களில் குடியரசுத்தலைவருக்கு அறிக்கைகளை தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்மூலம், ஆணையத்தின் பரிந்துரைகள் மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் ஒரு பகுதியாகும்  என்றும் நீதிமன்றம் விளக்கியது.


மேலும், 1996-ஆம் ஆண்டு அகில இந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின பணியாளர்கள் நல சங்கம் vs  யூனியன் ஆஃப் இந்தியா மற்றும் 2011-ஆம் ஆண்டு கலெக்டர் vs அஜித் ஜோகி உள்ளிட்ட முந்தைய தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய பட்டியல் சாதிகள்  ஆணையத்தின் (NCSC) பணி பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதாக மட்டுமே உள்ளது.  நீதிமன்றங்களை போல தீர்ப்பு வழங்கும் அதிகாரம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் சுட்டிக்காட்டியது.


இதன் அடிப்படையில், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், 30 நாட்களுக்குள் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானது என்றும், அதற்கு சட்டப்பூர்வமான பலன் (Legal Effect) இல்லை என்றும் அறிவித்தது.


இந்தத் தீர்ப்பு, அரசியலமைப்பின் 338, 338A மற்றும் 338B பிரிவுகளின் கீழ், உள்ள அரசியலமைப்பு ஆணையங்களின் அதிகார வரம்புகளை தெளிவாக வரையறுத்து, அவை நீதித்துறை அல்லது நீதிமன்றதிற்கு இணையான அதிகாரம் கொண்ட (quasi-judicial) அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிடுவதைத் தடுப்பதால், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.


Original Link :Can the National Commission for Scheduled Castes issue binding directions? -Rizmi Lia M.

Share: