வங்கிகள் பற்று அட்டை பராமரிப்புக் கட்டணம் (debit card maintenance fees), ஏடிஎம் கட்டணங்கள் (ATM charges) மற்றும் கணக்கு பராமரிப்புக் கட்டணங்களை (account maintenance charges) வசூலிக்கின்றன.
தற்போதைய நிகழ்வு : பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இரண்டும், பற்று அட்டைகளின் பயன்பாடு (use of debit cards), ஏடிஎம் வசதிகள் (ATM facilities) மற்றும் கணக்குப் பராமரிப்புக் கட்டணங்கள் (account maintenance) போன்றவை வங்கிகள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்தக் கட்டணங்களில் சில, குறிப்பாகப் பொதுத்துறை வங்கிகளால் (PSBs) தற்போது திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், மற்ற சில கட்டணங்கள் பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளன.
பற்று அட்டை கட்டணம் (debit card charge) என்றால் என்ன?
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது, நிதி அமைச்சகம், பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கும் பல்வேறு கட்டணங்கள் குறித்த தரவுகளை நாடாளுமன்றத்திற்கு வழங்கியிருந்தது. இவற்றில் மிகப்பெரியது ‘பற்று அட்டை கட்டணம்’ (debit card charge) ஆகும். பற்று அட்டை கட்டணங்கள் என்பவை “பற்று அட்டைகளுக்கான வருடாந்திர பராமரிப்புக் கட்டணங்கள்” ஆகும்.
வங்கிகள் இந்தக் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன. பற்று அட்டை சேவைகள் மற்றும் அது தொடர்பான உள்கட்டமைப்பைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட இது பயன்படுத்தப்படுகிறது. பற்று அட்டைகளை வழங்குதல், அட்டை சேவைகளை நிர்வகித்தல், சேதமடைந்த அல்லது தொலைந்த அட்டைகளை மாற்றுதல், பின்தள அமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை வழங்குதல் போன்ற செலவுகளை வங்கிகள் ஈடுசெய்ய இந்தக் கட்டணம் உதவுகிறது.
மேலும், பாதுகாப்பான பற்று அட்டைப் பரிவர்த்தனைகளை (safe debit card transactions) உறுதி செய்வதற்கும் மோசடியைக் கண்காணிப்பதற்குமான பாதுகாப்பு அமைப்புகள், பற்று அட்டைகளைப் பயன்படுத்தி இணையவழிப் பணம் செலுத்துதலை எளிதாக்கும் அமைப்புகள், விற்பனை முனையங்கள் (point-of-sale (POS) terminals), மற்றும் காலாவதியான அட்டைகளைப் புதுப்பித்தல், அட்டைச் சேவைகளைப் பராமரித்தல் போன்ற அட்டை மேலாண்மைச் சேவைகள் ஆகியவற்றின் செலவுகளை ஈடுசெய்வதிலும் இந்தக் கட்டணங்கள் ஓரளவிற்கு உதவுகின்றன.
"இந்த பெயரளவிலான கட்டணம், நீங்கள் தடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கிச் சேவையைத் தொடர்ந்து அனுபவிப்பதை உறுதி செய்கிறது," என பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 12 பொதுத்துறை வங்கிகள் 2021-22 ஆம் ஆண்டில் பற்று அட்டை கட்டணமாக ₹3,905.5 கோடி வசூலித்துள்ளன. இந்தத் தொகை 2021-22-ஆம் ஆண்டை விட 93.7% வளர்ச்சி பெற்று, 2025-26-ஆம் ஆண்டில் ₹7,563.8 கோடியாக அதிகரித்துள்ளது.
ஒரு அட்டைக்கான (per-card) அடிப்படையில் பார்க்கும்போது, இது 2021-22ல் ஒரு பற்று அட்டைக்கு சுமார் ₹61 ஆக இருந்தது. இது 2025-26க்குள் ஒரு அட்டைக்கு ₹115.1 ஆக உயர்ந்துள்ளது. இது 88.8% அதிகரிப்பு ஆகும்.
வங்கிகள் விதிக்கும் பிற கட்டணங்கள் யாவை?
மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், வங்கிகளால் விதிக்கப்படும் மற்ற இரண்டு கட்டணங்களான ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கணக்கு பராமரிப்புக் கட்டணங்கள் குறித்த தரவுகளை வழங்குகிறது.
ஏடிஎம் கட்டணங்கள் என்பவை, வாடிக்கையாளர்களிடமிருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்கள் மற்றும் பிற வங்கிகளிடமிருந்து பெறும் பரிமாற்றக் கட்டணங்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு வங்கி ஈட்டும் வருமானமாகும்.
அடிப்படையில், ஒரு வங்கியால் வழங்கப்பட்ட அட்டையை மற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் பயன்படுத்தும்போது, அந்த வங்கி மற்ற வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணமே பரிமாற்றக் கட்டணம் (interchange fee) ஆகும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பற்று அட்டையை பேங்க் ஆஃப் பரோடா ஏடிஎம்மில் பயன்படுத்தும்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடாவுக்கு ஒரு பரிமாற்றக் கட்டணத்தைச் (interchange fees) செலுத்த வேண்டும்.
இந்த ஏடிஎம் கட்டணங்கள் மூலம் ஒரு வங்கி ஆண்டுதோறும் ஈட்டும் தொகை என்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் பிற வங்கிகளிடமிருந்து அது பெறும் வருமானத்திலிருந்து, மற்ற வங்கிகளுக்கு அது செலுத்த வேண்டிய தொகையைக் கழித்த நிகரத் தொகையாகும். தரவுகளின்படி, பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர பெரும்பாலான பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த எண்ணிக்கை எதிர்மறையாக உள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள், தங்களின் சொந்த ஏடிஎம்கள் மூலம் ஈட்டும் வருவாயை விட, பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம்களைப் பயன்படுத்துவதற்காக அவற்றுக்கு அதிகமாகச் செலுத்துகின்றன. இது நியாயமானதே. ஏனெனில், நாட்டிலேயே மிகப்பெரிய ஏடிஎம் வலையமைப்பை எஸ்பிஐ கொண்டுள்ளது. அதேவேளையில், ஏடிஎம் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறும் நகர்ப்புறங்களிலும் தனியார் வங்கிகள் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன.
வங்கிகள் வசூலிக்கும் இரண்டாவது கட்டணம் கணக்கு பராமரிப்புக் கட்டணம் (account maintenance fee) ஆகும். இருப்பினும், பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் இந்தக் கட்டணத்தை நிறுத்திவிட்டன. தற்போது எஸ்பிஐ வங்கி மட்டுமே இந்தக் கட்டணத்தை வசூலிக்கிறது. அதுவும் பெரும்பாலும் வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் நடப்புக் கணக்குகளிலிருந்து மட்டுமே வசூலிக்கிறது.
வங்கிகள் ஏன் குறைந்த இருப்புக்கான அபராதத்தை (low-balance penalties) விதிக்கின்றன?
ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள சராசரி இருப்பு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை விடக் குறைவாக இருக்கும்போது, குறைந்த இருப்புக்கான அபராதம் விதிக்கப்படுகிறது. உங்கள் இருப்பு அந்த வரம்பிற்குக் கீழே ஒருமுறை மட்டும் குறைந்து, பின்னர் விரைவில் ஒரு உயர் நிலைக்கு மீண்டால், இந்த அபராதம் விதிக்கப்படாது.
செயல்பாட்டுச் செலவுகளை (operational costs) ஈடுகட்டவும், கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கவும், ஒட்டுமொத்த பணப்புழக்கத்தை நிர்வகிக்கவும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. அதாவது, இவை வங்கிகளுக்கு மற்றுமொரு வருமான ஆதாரமாக அமைகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, வங்கிகள் தங்கள் நிர்வாகக் குழுவால் (Board) அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணங்க, குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காததற்காகக் கட்டணங்களை விதிக்கலாம். ஆனால், அத்தகைய கட்டணங்கள் நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், சேவைகளை வழங்குவதற்கான செலவுக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த பதிலின்படி, 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள், சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பைப் பராமரிக்காததற்கான அபராதக் கட்டணங்களை நிறுத்தியுள்ளன. மீதமுள்ள இரண்டு வங்கிகள் அத்தகைய கட்டணங்களை முறைப்படுத்தியுள்ளன.
2025-26 ஆம் ஆண்டிலும் 12 வங்கிகளும் இந்தக் கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்துள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும், அவற்றுள் 11 வங்கிகள் முந்தைய ஆண்டை விடக் குறைந்த தொகையையே வசூலித்துள்ளன. எஸ்பிஐ வங்கியில் மட்டும் கட்டணம் அதிகரித்துள்ளது. தனியார் வங்கிகள் இதுபோன்ற கட்டணங்களைத் தொடர்ந்து வசூலித்து வருகின்றன.
கடந்த நான்கு நிதியாண்டுகளில் 12 பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து குறைந்த இருப்புத் தொகைக் கட்டணமாக ₹10,230.75 கோடியை வசூலித்த நிலையில், அதே காலகட்டத்தில் 21 தனியார் வங்கிகள் ₹15,939.62 கோடியை வசூலித்துள்ளன.
Original Link : What are the various charges banks collect from customers? -T.C.A. Sharad Raghavan