தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், அதன் வருவாய் அதற்கேற்ப ஏன் அதிகரிக்கவில்லை? -அருண் ஜனார்தன்

 தமிழ்நாடு அரசு வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளைக் கண்டறிய மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. இருப்பினும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் வருவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க நீண்டகாலத் தீர்வுகளைக் கண்டறிவதே இக்குழுவின் முக்கிய சவாலாகும்.

நீண்டகாலமாக, தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இது மோட்டார் வாகனங்கள் (Automobiles) மற்றும் மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கிறது, ஜவுளிகளை ஏற்றுமதி செய்கிறது, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கிறது, நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிற்பேட்டைகளை உருவாக்குகிறது, மேலும் சேவைத் துறையையும் சீராக விரிவுபடுத்தியுள்ளது. பெரும்பாலான வழக்கமான அளவுகோல்களின்படி, மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகிறது.


இருப்பினும், மாநில நிதிநிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய வெள்ளையறிக்கை (White Paper), பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரம் வளர்ந்த போதிலும், அரசின் நிதிநிலைமை பலவீனமடைந்துள்ளதைக் காட்டுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கு இணையான வேகத்தில் அரசின் வருவாய் உயரவில்லை. மாறாக, கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக, வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் நிதிச் சுதந்திரம் குறைந்துள்ளது.


இந்தச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு மத்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் 'வருவாய் பெருக்குதல் குழுவை' (Revenue Augmentation Committee) அமைத்துள்ளது.


எழுத்துப்பூர்வமாக, இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மிகவும் தெளிவானது. வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல், வரி ஏய்ப்புகளைக் கட்டுப்படுத்துதல், புதிய வரி மற்றும் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைக் கண்டறிதல், அத்துடன் கலால், பதிவுத் துறை, சுரங்கம், வணிக வரிகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தல். மேலும், தொழில்நுட்பத்தைப் பலப்படுத்துதல் மற்றும் மதுபானம், பொதுச் சொத்துக்கள் மூலம் வரும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை ஆலோசித்தல்.


ஆனால், வெள்ளை அறிக்கையின் வழியே நோக்கும்போது, இக்குழுவிடம் உண்மையில் மிகப்பரிய ஒரு கேள்விக்கே விடை கேட்கப்படுகிறது. மாநிலத்தின் சொந்தப் பொருளாதார வளர்ச்சியை, அதன் வருவாய் ஏன் பிரதிபலிக்காமல் நின்றுவிட்டது?

வளர்ச்சியும் வருவாயும்: முரண்பாடு


பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் பொருளாதாரம் வளரும்போது, அரசின் வருவாயும் அதிகரிக்க வேண்டும். தொழிற்சாலைகள் அதிகரித்தால் சரக்கு மற்றும் சேவை வரி (GST) வசூல் அதிகரிக்கும். நில விற்பனை அதிகமானால் பதிவுத் துறை வருவாய் உயரும். வாகனங்களின் எண்ணிக்கை பெருகினால் மோட்டார் வாகன வரிகள் அதிகளவில் கிடைக்கும். மக்களின் வருமானம் உயரும்போது அவர்களின் செலவினங்களும், அதைத் தொடர்ந்து வரி வசூலும் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சியையும் அரசின் வருவாய் வளர்ச்சியையும் இணைக்கும் இந்தத் தொடர்பைப் பொருளாதார நிபுணர்கள் 'வருவாய் மிதப்புத்தன்மை' (Revenue Buoyancy) என்று அழைக்கிறார்கள்.


இருப்பினும், கொரோனா பாதிப்பிலிருந்து மாநிலப் பொருளாதாரம் மீண்டு வந்த பிறகும்கூட, தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் (மாநிலத்தால் நேரடியாக வசூலிக்கப்படும் வரிகள்) பலவீனமடைந்துள்ளதை இந்த 'வெள்ளை அறிக்கை' சுட்டிக்காட்டுகிறது.


மாநிலத்தின் சொந்த வரி வருவாய், அதன் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross State Domestic Product (GSDP)) வகிக்கும் பங்கு 2021–22-ஆம் நிதியாண்டில் 5.93 சதவீதமாக இருந்து, 2025–26-ஆம் ஆண்டில் 5.45 சதவீதமாகக் குறைந்துள்ளதாக குறிப்பிடுகிறது. பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வந்தபோதிலும், ஆய்வு செய்யப்பட்ட காலக்கட்டத்தில் பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும். இந்த வீழ்ச்சியானது ஒரு தற்காலிகப் பிரச்சனை அல்ல, மாறாக இது அமைப்பியல் சார்ந்த ஒரு தீவிரப் பிரச்சனை என்று வெள்ளை அறிக்கையின் மூலம் கண்டறியப்படுகிறது.

இது இக்குழுவின் பங்களிப்பை மாற்றி அமைக்கிறது. இதன் வெற்றி என்பது, அடுத்த மூன்று மாதங்களில் இது எந்த அளவிற்குக் கூடுதல் வருவாயைக் கண்டறிகிறது என்பதில் மட்டும் இல்லை. அதைவிட முக்கியமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதன் வருவாய்க்கும் இடையே உள்ள நீண்டகாலத் தொடர்பை இக்குழு மீண்டும் மீட்டெடுக்க வேண்டும்.


'இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அதற்கேற்ப அரசின் வருவாயும் இயற்கையாகவே உயருமானால், இக்குழு மாநிலத்தின் அமைப்பியல் சார்ந்த பிரச்சனையை தீர்த்துவிட்டது என்று அர்த்தம். ஆனால், இந்த இடைவெளி தொடர்ந்து நீடித்தால், குறுகியகாலத்தில் கிடைக்கும் எந்தவொரு வருவாய் உயர்வும் ஒரு தற்காலிக நிதிச் சரிசெய்தலாக மட்டுமே இருக்கும்' என்று மாநில நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 


வரி அமைப்பில் உள்ள குறைகளைத் தேடுதல்


நிர்வாகக் குறைபாடுகள், நிதி இழப்புகள் மற்றும் ஊழல் ஆகியவையே வருவாய் இழப்பிற்கு முக்கியக் காரணங்கள் என வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், இந்தக் கசிவுகளைக் கண்டறிவது இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதி மட்டுமே ஆகும்.


“மாறிவரும் பொருளாதாரத்திற்கு ஏற்ப மாநிலத்தின் வருவாய் அமைப்பு நடைமுறையில் உள்ளதா என்பதே உண்மையான கேள்வி” என்று மாநில நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குத் தெரிவித்தார்.


"வேகமாக வளர்ந்துவரும் சில துறைகள் வருவாய்க் கணக்கீட்டில் சரியாகச் சேர்க்கப்படாமல் போகலாம். சில வர்த்தகங்களின் பொருளாதார மதிப்பிற்கு இணையான வரிகள் விதிக்கப்படாமல் குறைவாக இருக்கக்கூடும். வேறு சில துறைகளில் வரிகள் சட்டப்பூர்வமாக இருந்தாலும், அவற்றை வசூலிக்கும் நடைமுறை பலவீனமாக இருக்கலாம். நிர்வாகச் சீர்கேடு, வரி ஏய்ப்பு மற்றும் வரி விலக்குகள் ஆகியவை இணைந்து, நாட்டின் பொருளாதாரம் ஈட்டும் வருவாயை அரசு முறையாகப் பெறுவதைத் தடுக்கின்றன. அதனால்தான், வெறும் புதிய வரிகளைப் பரிந்துரைப்பதுடன் நிறுத்திவிடாமல், வரி இணக்கம், நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் கட்டமைப்பு மாற்றங்களை பல்வேறு துறைகளில் ஆராயும் அதிகாரம் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்துள்ளார்.


இதன் முக்கிய நோக்கம் என்பது வெறும் புதிய வரிகளை விதிப்பது மட்டும் அல்ல. மாநில அரசு எங்கு வருவாயை இழக்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதே ஆகும்.


வருவாய் என்பது நிதிப் பதிவேட்டின் ஒரு பக்கம் மட்டுமே


இந்தக் குழுவின் தலைப்பு 'வருவாயைப் பெருக்குவது' குறித்து கவனம் செலுத்தினாலும், வெள்ளை அறிக்கை மற்றும் அதன் பின்னணியில் உள்ள கொள்கை சிந்தனைகள் இரண்டும் அதற்கு சமமான மற்றொரு முக்கியமான கேள்வியைச் சுட்டிக்காட்டுகின்றன. "பொதுமக்களின் பணம் எவ்வளவு திறமையாகச் செலவிடப்படுகிறது?"


"அரசு நிதித்துறை என்பது அதிக வரியைச் சேகரிப்பதன் மூலம் மட்டுமே முன்னேறிவிடாது. செலவினப் பக்கத்தில் உள்ள கையாடல் மற்றும் வீண் செலவுகளைக் குறைக்கும்போதும் மேம்படுகிறது. முறையற்ற முறையில் செலவழிக்கப்படும் ஒரு ரூபாய் என்பது, அரசிடம் சேராமலேயே போன ஒரு ரூபாய்க்கு இணையான நிதிப் பாதிப்பையே ஏற்படுத்தும்" என்று மாநில நிதி மற்றும் செலவினப் பிரிவுகளுடன் தொடர்புடைய மூத்த ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.


இது, இக்குழுவின் சிக்கலை வெறும் வரித் துறைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல் மேலும் விரிவுபடுத்துகிறது. "கொள்முதல் அமைப்புகள், திட்டங்களைச் செயல்படுத்துதல், மானியங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் விநியோக முறைகள் ஆகிய அனைத்துமே நிதித் திறனைப் பாதுகாப்பது பற்றிய உரையாடலின் ஒரு பகுதியாக மாறுகின்றன. ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி உள்ளிட்ட தவிர்க்க முடியாத செலவுகள் ஆகியவற்றுக்காக மாநிலத்தின் வருவாயில் பெரும் பகுதி செலவிடப்படுகின்றன என்றும்; இதனால் வளர்ச்சிப் பணிகள் மற்றும் மூலதன முதலீடுகளுக்கான நிதிப் பங்கீடு படிப்படியாகக் குறைந்து வருகிறது என்றும் இந்த வெள்ளை அறிக்கையே குறிப்பிடுகிறது" என்றும் கூறினார்.


எனவே, செலவினங்களின் திறனை மேம்படுத்துவது என்பது வரி செலுத்துவோர்மீது கூடுதல் சுமையைச் சுமத்தாமல், அரசின் பொது ஆதாரங்களைப் பெருக்குவதற்கான மற்றொரு சிறந்த வழியாக அமைகிறது.


வரி அல்லாத வருவாயைச் சீரமைத்தல் 


பொதுத்துறை நிறுவனங்களின் ஈவுத்தொகைகள், நிலங்களை பணமாக்குதல், சேவைக்கட்டணங்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் உள்ளிட்ட வரி அல்லாத வருவாய்களை ஆய்வு செய்யுமாறு அக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இது குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவை பற்றிய ஒரு பரந்த புரிதலைப் பிரதிபலிக்கிறது. அரசாங்கம் நிதி ஆதாரங்களைப் பெருக்குவதற்கு வரிகள் மட்டுமே ஒரே வழி கிடையாது.


அரசு வழங்கும் பொதுச்சேவைகளின் தரமே, மக்கள் சேவைக்கட்டணங்கள் மற்றும் கட்டண விகிதங்களை விரும்பிச் செலுத்துவதை தீர்மானிக்கிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குடிநீர் விநியோகம், போக்குவரத்து, பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் அரசுச் சேவைகள் போன்றவை, பயனாளிகள் தாங்கள் பெறும் சேவைக்கு ஏற்ற மதிப்பு இருப்பதாக உணரும்போது மட்டுமே நிதிரீதியாகத் தற்சார்பு அடைகின்றன. எனவே, நிதிச் சீர்திருத்தம் என்பது நிர்வாகச் சீர்திருத்தத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொதுச்சேவைகளின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் ஒரே நேரத்தில் உயர்த்தாமல், அரசால் வரி அல்லாத வருவாயை நிலையான முறையில் உயர்த்த முடியாது. 


இந்தக் குழுவின் குறிப்பு விதிகளில் தொழில்நுட்பம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. டிஜிட்டல் அமைப்புகள் சட்ட நடைமுறைகளை எளிதாக்கவும், தனிநபர் தன்னிச்சையான முடிவுகளைக் குறைக்கவும், கண்காணிப்பை மேம்படுத்தவும் உதவும். இருப்பினும், பல்வேறு துறைகளின் அனுபவத்தைப் பார்க்கும்போது, தொழில்நுட்பம் மட்டுமே ஊழலை முழுமையாக ஒழித்துவிடாது என்பதைக் காட்டுகிறது.


"சாலைப் போக்குவரத்துத் துறை உட்பட பல துறைகள் ஏற்கனவே கணிசமான அளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், தொழில்நுட்பப் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏதுவாக நிறுவனங்களே தங்களை மெதுவாக மாற்றியமைத்துக் கொள்வதால், ஊழல்களும் நீடிக்கின்றன. எனவே, சவால் என்பது வெறும் டிஜிட்டல் முறைகளை அறிமுகப்படுத்துவதில் மட்டும் இல்லை. மாறாக, ஆட்சியை வலுப்படுத்துவதில்தான் உள்ளது. ஊக்கத்தொகைகளைச் சீரமைத்தல், பொறுப்புணர்வை அதிகரித்தல், கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை நிறுவனங்கள் புதிய வழிகளில் கடந்து செல்ல முடியாதவாறு உறுதி செய்தல் ஆகியவை அவசியமாகும்" என்று மாநில நிதித் துறையுடன் இணைந்து பல அரசுத் திட்டங்களுக்குச் ஆலோசகராக இருக்கும் நிபுணர் கூறினார். தொழில்நுட்பம் நிர்வாகத் திறனை மேம்படுத்துமே தவிர, அது நிர்வாகத்திற்கு மாற்றாக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கடினமான முடிவுகள், கட்டமைப்புச் சார்ந்த சவால்கள்


வரி இணக்கத்தை (Tax compliance) மேம்படுத்துவது அரசியல்ரீதியாக எளிய காரியமாகத் தோன்றினாலும், குழுவின் பிற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பெரும் விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் வழிவகுக்கலாம். பயனர் கட்டணங்கள், மதுபானக் கொள்கை, அரசுச் சொத்துக்களைப் பணமாக்குதல் மற்றும் பிற வரிசாரா வருவாய்கள் (Non-tax revenues) குறித்து ஆய்வு செய்ய இந்தக் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.


இவை ஒவ்வொன்றிலும் சாதக-பாதகங்கள் உள்ளன. சொத்துப்பதிவுத் தொகையை உயர்த்துவது வணிகநிலச் சந்தையைப் பாதிக்கக்கூடும். குடிநீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியச் சேவைக்கான கட்டணங்களை மாற்றுவது மக்களின் வாங்கு திறனைப் பாதிக்கலாம். மதுபானக் கொள்கையில் மாற்றங்களைச் செய்வது வெறும் அரசு வருவாயைத் தாண்டிப் பல கேள்விகளுக்கு வழிவகுக்கும். மதுபானங்களை அரசே சில்லறை விற்பனை செய்வது போன்ற வணிகச் செயல்பாடுகளில் அரசின் பங்கு எந்தளவுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.



மேலும், இந்த புதிய குழு அமைக்கப்பட்டதையும் அதன் நோக்கத்தையும் அறிந்த பல வல்லுநர்கள் கூறுவதாவது, செலவினச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது, ஒவ்வொரு திட்டமும் அதற்காகச் செலவழிக்கப்படும் அரசுப் பணத்திற்கு ஏற்பத் தகுந்த பலன்களைத் தருகிறதா என்பதைச் சில கடுமையான கேள்விகள் கேட்டு ஆய்வு செய்ய வேண்டியிருக்கலாம் என்கின்றனர். 


எனவே, இந்தக் குழுவின் முன் உள்ள சிக்கல் அரசியல்ரீதியானதும்கூட. ஒவ்வொரு சீர்திருத்தமும் சிலருக்குப் நன்மைகளையும், அதேவேளையில் சிலருக்கு ஏற்கனவே கிடைத்துவரும் பலன்களையும் இழப்பதற்கான சூழலையும் உருவாக்குகிறது.


மிகவும் கடினமான சவால் நிர்வாகத்திற்குள்ளேயே அடங்கியுள்ளது. ஏனெனில், வருவாய் இழப்புகள் என்பது ஏதோ ஒரு தனிநபரின் ஊழலால் மட்டும் உருவாவதில்லை. மாறாக, பலதரப்பட்ட நபர்கள் இணைந்து செயல்படும் ஆழமாக வேரூன்றிய ஒரு தவறான அமைப்பினாலேயே ஏற்படுகின்றன. குறிப்பாகச் சுரங்கம், இயற்கை வளங்கள், ஒப்பந்தங்கள், ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமலாக்கம் போன்ற துறைகளில் நடக்கும் தவறுகள், தனிப்பட்ட நபர்களின் தோல்வியாக இல்லாமல், ஒரு வலையமைப்பாகவே பிணைக்கப்பட்டு இயங்குகின்றன.


இத்தகைய சட்டவிரோத நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஊழல் தொடர்ந்து நிலைத்திருக்க வழிவகுக்கும் நிறுவன அமைப்புகளின் ஊக்கத் திட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும். சிறந்த வரிவடிவமைப்புக் கொள்கைகளை (Tax policy) உருவாக்குவதைவிட, இந்த நடைமுறை மாற்றங்களைக் கொண்டுவருவது இறுதியில் மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.


அரசு தனது செயல்பாடுகளைத் தானே சுயபரிசோதனை செய்ய வலியுறுத்தும் ஒரு குழு


இந்தக் குழுவிற்கு வழக்கத்திற்கு மாறாக மிக விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரிகளுக்கு அழைப்பாணை (Summon) அனுப்பவும், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து ஆவணங்களைக் கோரவும், தனித்தனி வருவாய்ப் பிரிவுகளுக்குச் சிறப்பு பணிக்குழுக்களை உருவாக்கவும், அரசுக்கு வெளியேயுள்ள வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு. இதனால், பல வழிகளில் இது ஒரு நிறுவனரீதியான சுயபரிசோதனை நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.


தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீர்குலைந்ததற்கான அறிகுறிகளை 'வெள்ளை அறிக்கை' (White Paper) சுட்டிக்காட்டியது. ஆனால், அந்த அறிகுறிகளுக்கான உண்மையான காரணங்கள் மற்றும் வழிமுறைகளைக் கண்டறியும் பொறுப்பு இப்போது இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கக் கட்டத்தில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு, இது அரசு நிதி நிர்வாகத்தையும் தாண்டி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.


Original Link : Tamil Nadu is growing rapidly. Why are its revenues not keeping pace? -Arun Janardhanan

Share: