பிரதமர் மோடி குறித்த கருத்துக்காக பெண் மீது வழக்குப்பதிவு: இந்தியாவில் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுவது குற்றமா? -அபூர்வா விஸ்வநாத்

 அரசியல் தலைவர்களை விமர்சிக்கப் பயன்படுத்தப்படும் சொற்கள் குறித்து விவாதங்கள் நடந்துவரும் நிலையில், ஆபாசம், பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு போன்ற வழக்குகளைச் சட்டம் எவ்வாறு அணுகுகிறது? மேலும், பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகள் தொடர்பான சமீபத்திய வழக்கு என்ன?


டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசிய கருத்துகளுக்காக, நொய்டா காவல்துறையினர் 25 வயதான ருச்சிகா சிங் என்ற பெண் மீது கடந்த புதன்கிழமை ஜூலை மாதம் 29-ஆம் தேதி "பூஜ்ஜிய  முதல் தகவல் அறிக்கை" (Zero FIR) பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கை பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவுகள் 352 (இழிவுபடுத்துதல்), 353(1) (பொது அமைதிக்கு இடையூறு விளைவித்தல்) மற்றும் 356(1) (அவதூறு) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஜீரோ எஃப்.ஐ.ஆர். என்பது இந்தியாவில் ஒரு சிறப்பு வகை காவல் புகார் ஆகும். இதை குற்றம் நடைபெற்ற இடத்தைப் பொருட்படுத்தாமல் எந்த காவல்  நிலையத்திலும் பதிவு செய்யலாம். இதற்கு ‘0’ என்ற வரிசை எண் ஒதுக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் அதிகாரமுள்ள சரியான காவல் நிலையத்திற்கு அனுப்பப்படும்.


இந்த வழக்கு பொதுமக்களிடையே ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. குறிப்பாக, தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் நாகரீகமற்ற வார்த்தைகள் குறித்த ஒழுக்க நெறிமுறைகள் சார்ந்த கருத்துகளாக மாறியுள்ளது. இந்தியாவில் நாகரீகமற்ற மொழியைப் பேசுவது குற்றமா?


ஆபாசம் ஒரு குற்றமாக


இத்தகைய மோதல்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் சட்டப்பிரிவு பாரதிய நியாய சன்ஹிதாவின் (Bharatiya Nyaya Sanhita (BNS)) பிரிவு-296 ஆகும் (முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு-294). இப்பிரிவின்படி, மற்றவர்களுக்கு வெறுப்பூட்டும் வகையில், (அ) எந்தவொரு பொது இடத்திலும் ஏதேனும் ஆபாசமான செயலைச் செய்பவர், அல்லது (ஆ) பொது இடத்தில் அல்லது அதற்கு அருகில் ஆபாசமான பாடல், கவிதை அல்லது வார்த்தைகளைப் பயன்படுத்துபவர், வாசிப்பவர் அல்லது பேசுபவர் யாராக இருந்தாலும் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


பொது இடங்களில் சத்தமாகவும், நாகரிகமின்றியும் ஒருவர் நடந்துகொள்ளும்போது பொதுவாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டு இதுவாகும். ஆனால், "ஆபாசம்" (Obscene) என்பதற்குச் சட்டப்பூர்வமாகத் துல்லியமான விளக்கம் உள்ளது. அதை நீதிமன்றங்கள் மிகக்குறுகிய வரம்பிற்குள்ளேயே விளக்கியுள்ளன.


ஆபாசத்தை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்


டி.எச். லாரன்ஸ் எழுதிய 'Lady Chatterley’s Lover' என்ற கடைசி நாவல் இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது, 'ஆபாசம்' என்பதற்கான சட்டரீதியான வரைவிலக்கணம் சோதனைக்கு உள்ளானது. 1865-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சித் டி. உதேசி எதிர் மகாராஷ்டிர அரசு (Ranjit D. Udeshi vs State of Maharashtra) வழக்கில், உச்சநீதிமன்றம் இந்தத் தடையை உறுதி செய்ததுடன், ஆபாசப் புத்தகங்களை விற்பனை செய்வதைத் தடைசெய்யும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (Indian Penal Code (IPC)) பிரிவு-292 செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பளித்தது.


இவ்வாறு தீர்ப்பளித்தபோது, ஆபாசம் என்பதைத் தீர்மானிக்க 1868-ஆம் ஆண்டின் ஆங்கிலேய சட்ட விதியான 'ஹிக்லின் சோதனையை' (Hicklin test) நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தச் சோதனையின்படி, ஒரு புத்தகத்தின் தனிப்பட்ட ஒரு பகுதி மட்டுமே ஆபாசமாக இருந்தாலும், அது மனதளவில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வாசகர்களைச் சீரழிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்தால், அந்த முழுப் படைப்பும் ஆபாசமானது என்றே கருதப்படும். இதன் அடிப்படையில், 'Lady Chatterley’s Lover' நாவல் ஆபாசமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Hicklin Test (ஹிக்லின் சோதனை): 19-ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயச் சட்ட விதி. இதன்படி, ஒரு புத்தகத்தில் உள்ள ஒரே ஒரு வரி அல்லது காட்சி ஆபாசமாக இருந்தாலும், முழுப் புத்தகமும் ஆபாசமானது எனக் கருதப்படும்.


ஆங்கிலேயச் சட்டம் காலப்போக்கில் இந்த பழைய அணுகுமுறையைக் கைவிட்டபோதிலும், இந்திய நீதிமன்றங்கள் பல ஆண்டுகளாக ஹிக்லின் சோதனை முறையையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தன. ஆனால், 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற தூர்தர்ஷன் எதிர். ஆனந்த் பட்வர்தன் (Doordarshan vs Anand Patwardhan) வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையைக் கையாண்டது. ஆனந்த் பட்வர்தனின் ‘Father, Son and Holy War’ என்ற ஆவணப் படத்திற்கு 'A' சான்றிதழ் (Adults only) வழங்கப்பட்டிருந்த காரணத்தால், அதைத் திரையிட தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் மறுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப அனுமதித்தது. மேலும், ஒரு படைப்பைத் தனித்தனி காட்சிகளாகப் பிரித்துப் பார்க்காமல், அதை முழுமையாகவும், ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலும் பார்த்து மட்டுமே அது ஆபாசமானதா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.


2014-ஆம் ஆண்டு அவிக் சர்க்கார் எதிர் மேற்கு வங்க அரசு (Aveek Sarkar vs State of West Bengal) வழக்கில் இந்தச் சட்டம் மேலும் மாற்றம் கண்டது. டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் மற்றும் அவரது நிச்சயிக்கப்பட்ட மனைவியின் நிர்வாணப் புகைப்படம் ஆபாசமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், பழைய 'ஹிக்லின் சோதனை' முறையை அதிகாரப்பூர்வமாக நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'சமூக நெறிமுறைகள் சோதனை' (Community Standards Test) என்ற முறையைக் கொண்டுவந்தது. இந்தப் புதிய சோதனையின்படி, ஒரு சாமானிய மனிதன் இன்றைய காலத்தின் சமூகநெறிமுறைகளின் அடிப்படையில் அணுகும்போது, ஒரு விஷயம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் இருந்தால் மட்டுமே அது ஆபாசமானதாகக் கருதப்படும்.


பாலின உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் அமைந்த பாலின தொடர்பான விஷயங்கள் மட்டுமே 'ஆபாசமானது' (Obscene) எனக் கருதப்பட முடியும். இருப்பினும், ஒரு விஷயம் ஆபாசமானதா இல்லையா என்பது, இன்றைய சமுதாயத்தின் பொதுவான தரநிலைகளின் அடிப்படையில், ஒரு சராசரி மனிதனின் பார்வையிலிருந்தே மதிப்பிடப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. 


சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா, 1957-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராத் எதிர். அமெரிக்கா (Roth vs United States) வழக்கிலிருந்து எடுக்கப்பட்ட சமூக நெறிமுறைகள் (Community standards) என்ற வார்த்தையில் உள்ள ஒரு சிக்கலைச் சுட்டிக்காட்டினார். ராத் தீர்ப்பில் சமூக நெறிமுறைகள், அப்பொருள் தெளிவாகப் புண்படுத்தும் வகையில் உள்ளதா, மற்றும் அது சமூக மதிப்பு அற்றதா என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட சோதனைமுறை பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் உச்சநீதிமன்றம் இதில் முதல் பகுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் அவர் விளக்கினார். பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுவது மட்டும் ஏன் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் விளக்காததால் இது சட்டத்தை மிகவும் தெளிவற்றதாக மாற்றுகிறது என்று வாதிட்ட அவர், இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் எது ஒழுக்கமானது என்பதை பெரும்பான்மையினரின் கருத்துக்கள் மட்டுமே தீர்மானிக்க இது வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.


தகாத அல்லது அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குற்றமா? 


2024-ஆம் ஆண்டில், ‘TVF’ நிறுவனத்தின் 'College Romance' என்ற வலைத்தொடரின் ஒரு பகுதியில் அதிகளவில் அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் (IT Act) சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது ஆபாசமாக உள்ளது எனக் கூறி, அதைத் தடை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. தகாத அல்லது அநாகரிகமான வார்த்தைகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒன்றை ஆபாசமானது (Obscene) என்று கூறிவிட முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சில வார்த்தைகளுக்குப் பாலினரீதியான அர்த்தங்கள் இருந்தாலும், அவை வழக்கமாக மக்களின் அன்றாடப் பேச்சில் கோபம், ஏமாற்றம், துக்கம், ஆத்திரம் அல்லது உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றனவே தவிர, பாலியல் எண்ணத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. எனவே, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது மட்டுமே ஒரு விஷயத்தை ஆபாசமானதாக மாற்றிவிடாது.


இதே கொள்கையை 2026-ஆம் ஆண்டில் மேலும் இரண்டு வழக்குகளில் உச்சநீதிமன்றம் பின்பற்றியது. ஏப்ரல் மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிவகுமார் எதிர் மாநில அரசு (Sivakumar v State) வழக்கில், தகராறின் போது ஒருவரை "bastard" என்று திட்டியதற்காகப் பிரிவு-294-ன்கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை விடுவித்தது. அதேபோல, ஜூலை மாதம் 2026-ஆம் ஆண்டில் நடைபெற்ற மணி எதிர் மாநில அரசு (Mani vs State) வழக்கில், ஆபாசம் என்பது நாகரிகமற்ற அல்லது தரக்குறைவான வார்த்தைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தகாத வார்த்தைகளையோ அல்லது புண்படுத்தும் மொழியையோ பயன்படுத்துவது மரியாதையற்றதாகவோ அல்லது கேட்பதற்குச் சங்கடமாகவோ இருந்தாலும், அதை உடனடியாக ஆபாசக் குற்றம் என்று கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது.


ஒரு பேச்சு "ஆபாசமானது" (Obscene) எனத் தீர்மானிக்கப்பட வேண்டுமென்றால், அது பாலின உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதாவது, அது தீவிரமான மற்றும் தகாத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையிலோ அல்லது தூண்டும் வகையிலோ இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அளவுகோலுக்குள் வரவில்லை என்றால், அது பொதுவாகக் குற்றவியல் சட்டத்தின்கீழ் ஆபாசமான ஒன்றாகக் கருதப்படாது.


நொய்டா வழக்கு


பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கையில் (Zero FIR) பயன்படுத்தப்பட்டுள்ள பிரிவுகள் (இழிவுபடுத்துதல், பொதுமக்களுக்குக் கெடுதல் விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல்) பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்டவை ஆகும். மேலும், இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட சட்டப்பூர்வ சோதனைகள் உள்ளன. பிரிவு-352-ன்கீழ், குற்றம்சாட்டப்பட்டவர் செய்த இழிவுபடுத்தல் செயல், யாரோ ஒருவரின் மனதைப் புண்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அது உண்மையிலேயே பொது அமைதிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடனோ அல்லது அமைதியைக் கெடுக்கக்கூடும் என்ற நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும்.


பிரிவு-253 (பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல்) என்பது ஆயுதப்படைகளில் கிளர்ச்சியைத் தூண்டுவது, அரசுக்கு எதிராகக் குற்றங்கள் செய்ய வழிவகுக்கும் அச்சத்தை உருவாக்குவது அல்லது சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டுவது போன்ற கடுமையான குற்றங்களைத் தூண்டும் செயல்களைக் கையாளுவதாகும். இதற்கு ஒரு அரசியல் தலைவரைப் பற்றி வெறுமனே கடுமையான கருத்துக்களைத் தெரிவிப்பதைவிட, மிக உயர்ந்த அளவிலான தவறான செயல்பாடு தேவைப்படுகிறது. அதேபோல, அவதூறு சட்டத்திலும் சில விலக்குகள் உள்ளன. ஒரு பொதுப் பதவியில் இருக்கும் நபரின் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளைப் பற்றி நல்லெண்ணத்துடன் செய்யப்படும் விமர்சனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.


2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது. அதில், சமூக வலைதளங்களில் ஓர் அரசியல் கட்சியை "சாபக்கேடு" (Scourge) என்றோ அல்லது "தொல்லை/பூச்சி" (Pest) என்றோ விமர்சிப்பது கடுமையானதாகவோ அல்லது புண்படுத்துவதாகவோ இருக்கலாம்.  ஆனால், அது பொது அமைதிக்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாத வரை, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 352 அல்லது 353-ன்கீழ் குற்றமாகாது என்று அறிவித்தது. மேலும், இதுபோன்ற கருத்துக்கள் அதிகபட்சமாக அவதூறுச் சட்டத்தின்கீழ் மட்டுமே வரக்கூடும் என்றும், அரசியல் பேச்சு சுதந்திரத்திற்கான அரசியல் அமைப்புச் சட்டப் பாதுகாப்பிற்குட்பட்டது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.               


Original Link : FIR against woman over comments on PM Modi: Is crude language a crime in India? -Apurva Vishwanath

Share: