நோய்த்தொற்று எப்போது தொடங்கியது? தடுப்பூசி தொடர்பான முன்னேற்றம் என்ன?
தற்போதைய நிகழ்வு : காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்திய எபோலா நோய்த்தொற்று தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில், இந்நோயால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டியுள்ளது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஜூலை 28, 2026 நிலவரப்படி, காங்கோவில் 3,442 நோய்த்தொற்றுகளும் 1,521 இறப்புகளும் பதிவாகியுள்ளன. நெருக்கடியில் சிக்கியுள்ள காங்கோ, நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போராடிவரும் நிலையில், கிட்டத்தட்ட 797 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எபோலா (Ebola) என்றால் என்ன?
எபோலா, ஒரு கொடிய நோயாகும். இது ஆர்த்தோ எபோலா வைரஸ்கள் (orthoebola viruses) எனப்படும் ஒரு வகை வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த நோய் முதன்முதலில் 1976-ல் தெற்கு சூடான் மற்றும் காங்கோவில் ஏற்பட்டது. விலங்குகள் இந்த வைரஸின் இயற்கையான விருந்தோம்பிகளாகக் (natural hosts) கருதப்பட்டாலும், பாதிக்கப்பட்ட விலங்குகளின் திரவங்களையும் சுரப்புகளையும் மனிதர்கள் உட்கொள்ளும்போதோ அல்லது அவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும்போதோ இது அவர்களுக்குப் பரவக்கூடும். இந்த வைரஸுக்கான காப்புக் காலம் (incubation period) இரண்டு முதல் 21 நாட்கள் வரை இருக்கும். இந்த நோயால், காய்ச்சல், சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியுடன் கூடிய தோல் தடிப்பு ஆகியவை இதன் சில அறிகுறிகளாகும்.
இந்த நோய் காற்றில் பரவுவதில்லை. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட அல்லது இறந்த ஒருவரின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடனோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் திரவங்களால் அசுத்தமான மேற்பரப்புகளுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டுமே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. ஒருவருக்கு நோயின் அறிகுறிகள் தென்படத் தொடங்கிய பின்னரே, அவர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பும் திறன் கொண்டவராகிறார்.
இந்த நோய்ப்பரவலுக்குக் காரணமான வைரஸ் வகை எது?
காங்கோவில் தற்போது பரவிவரும் இந்த நோய், மனிதர்களுக்கு நோயை உண்டாக்கும் நான்கு வகையான ஆர்த்தோஎபோலா வைரஸ்களில் (orthoebolaviruses) மிகவும் அரிதான ஒன்றான புண்டிபுக்யோவால் (Bundibugyo) ஏற்படுகிறது. இதற்கு முன்னர் 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் காங்கோவில் பதிவாகியுள்ள இந்த வகை வைரஸுக்கு, அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சைகளோ இல்லை. மிகவும் பொதுவான எபோலா வைரஸ் வகைக்கு மட்டுமே இரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டதால், அப்பகுதியில் இந்த நோய் கட்டுப்பாடின்றி பரவியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நோய்ப்பரவல் எப்போது தொடங்கியது, அதைக் கட்டுப்படுத்துவது ஏன் கடினமாக உள்ளது?
ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Africa Centres for Disease Control and Prevention (Africa CDC)), மே 15, 2026 அன்று எபோலா நோய் பரவல் ஏற்பட்டதாக அறிவித்தன. இருப்பினும், காங்கோ நாட்டின் தகவலின்படி, முதல் எபோலா மரணம் அதற்கு முன்னதாகவே, ஏப்ரல் 24, 2026 அன்று புனியா (Bunia) பகுதியில் நிகழ்ந்துள்ளது. தவறான எதிர்மறைப் பரிசோதனை முடிவுகள் (false-negative results) மற்றும் பிற தாமதங்களால் உறுதிப்படுத்தல் தடைபட்டதாகவும் கூறியுள்ளது. இறந்தவரின் உடல் அதிக மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதிக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. நாட்டின் சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி, இதுவே நோய் பரவல் தீவிரமடையக் காரணமாக அமைந்தது.
இட்டூரி மாகாணத்தின் (Ituri Province) தலைநகரான புனியா, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளுடன் இந்த நோய்ப் பரவலின் மையப்புள்ளியாக விளங்குகிறது. வடக்கு கிவு (North Kivu), தெற்கு கிவு (South Kivu), ஹவுட்-உலே (Haut-Uele) மற்றும் ஷோபோ (Tshopo) ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
தடுப்பூசி இல்லாதது ஒருபுறம் இருக்க, கிளர்ச்சியாளர்களின் மோதலால் அப்பகுதியில் நிலவும் பாதுகாப்பின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, சாலைகள் மற்றும் ஆய்வகங்கள் உள்ளிட்ட மோசமான உள்கட்டமைப்பு ஆகியவை துயரங்களை மேலும் அதிகரித்துள்ளன. சமூகத்தில் அவநம்பிக்கை அதிகமாக இருப்பதுடன், பாதுகாப்பற்ற அடக்க முறைகள் மற்றும் தாமதமாகத் தகவல் தெரிவித்தல் ஆகியவையும் மக்களைச் சென்றடையும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் விகிதம் (contact tracing rate) 78.3% மட்டுமே உள்ளது. இது, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் 90–95% என்ற கண்டறியும் விகிதத்தைவிட இது மிகவும் குறைவானதாகும்.
தற்போதைய நோய்ப் பரவலின் வேகம் கவலையளிப்பதாக உள்ளதுடன், இது மிகப்பெரிய நோய்ப் பரவலாக உருவெடுக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கணிப்பின்படி, தற்போதைய நோய்ப் பரவலானது, தலையீடுகள் ஏதுமின்றி 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 11,000-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவான 2014-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்கப் பெருந்தொற்றின் அளவை மிஞ்சும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
"இந்த நோய் பரவல் வேகமாகப் பரவி வருகிறது. நாம் இன்னும் அதைப் பின்தொடரவே முயன்று கொண்டிருக்கிறோம்," என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
எபோலா பாதிப்புகளைக் கண்டறிந்து கண்காணிக்க காங்கோ தனது கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அந்நாடு கூடுதல் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கியுள்ளது மற்றும் மக்கள் கூடும் கூட்டங்களுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. இந்த நோய்ப் பரவல், சர்வதேச சுகாதார விதிமுறைகளின்கீழ் இரண்டாவது மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான "சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை" (Public Health Emergency of International Concern (PHEIC)) என்று உலக சுகாதார அமைப்பு மே 17, 2026 அன்று அறிவித்தது. எபோலாவை எதிர்த்துப் போராடுவதற்காக 518 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆறு மாத கால கூட்டுத் திட்டத்தையும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவித்தார். இந்த நோய்ப் பரவலுக்காக 107 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களும் தெரிவித்துள்ளன. இந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்தியா அவசர மருந்துப் பொருட்களை அனுப்பியுள்ளது.
அண்டை நாடுகளில் நிலைமை என்ன?
காங்கோவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் உகாண்டா, கடைசி நோயாளி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜூலை 28, 2026 அன்று தங்கள் நாடு எபோலா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டதாக அறிவித்தது. உகாண்டாவில் மொத்தம் 20 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது அவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர், இருவர் உயிரிழந்தனர். ருவாண்டா, கென்யா, தான்சானியா, அங்கோலா, புருண்டி, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, தெற்கு சூடான் மற்றும் சாம்பியா ஆகிய பிற அபாய நிலையில் உள்ள நாடுகளைப் போலவே, உகாண்டாவும் தொடர்ந்து எச்சரிக்கை நிலையில் உள்ளது.
தடுப்பூசி தொடர்பான முன்னேற்றம் என்ன?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆக்ஸ்போர்டு/அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசியில் பயன்படுத்தப்படும் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ChAdOx1 BDBV என்ற தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் தன்னார்வலருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இது மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை கட்டத்தை எட்டியுள்ளது. வேறு பல எபோலா தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவற்றில் எதுவும் இன்னும் மனிதர்களுக்கான பரிசோதனை நிலையை எட்டவில்லை.
Original Link :Why is it difficult to contain the growing Ebola outbreak in DRC? -Abhinaya K