வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை (SIR) ஏன் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்? - ராஜீவ் குமார்

 தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பழைய தரவுகளைப் பயன்படுத்துவதால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இது புதிய வாக்காளர்களை சேர்ப்பதைத் தடுப்பதோடு, வரும் தேர்தல்களின் நம்பகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகின்றனர்.


அறிவியல், பொறியியல், நிர்வாகம் அல்லது தகவல் தொழில்நுட்பம் என எந்தத் துறையாக இருந்தாலும், குறைபாடுள்ள அடித்தளத்தால் ஒருபோதும் வலிமையான கட்டமைப்பை உருவாக்க முடியாது. தவறான அல்லது முழுமையற்ற தரவுகள் எப்போதும் நம்பகமற்ற முடிவுகளையே தரும். வாக்காளர் பட்டியல் திருத்தமும் இதற்கு விதிவிலக்கல்ல என்று விமர்சிக்கப்படுகிறது. எத்தனை நடைமுறைகளைச் சேர்த்தாலும், தெளிவற்ற அடிப்படைத் தரவுகளால் ஒருபோதும் நேர்மையான முறையை உருவாக்க முடியாது. நவீனமான, துல்லியமான அடித்தளம் மட்டுமே நம்பகமான தேர்தல் அமைப்பை உருவாக்க உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.


தற்போது நடக்கும் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) திட்டத்தின் முக்கியப் பிரச்சனை என்னவென்றால் இத்திட்டம் 2002-2004 ஆகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட பழைய வாக்காளர் பட்டியல்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அந்தப் பட்டியல்கள் முற்றிலும் காகிதத்தில், கையால் எழுதப்பட்டவை மற்றும் பிழைகள் நிறைந்தவையாகவே உள்ளன. இந்தியா, டிஜிட்டல் யுகத்தில் முன்னோடியாகவும், தேர்தல் ஆணையம் உலக அளவில் மிகவும் மேம்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பைப் (Election Commission of India NETwork (ECINet)) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய போதிலும், இன்றும் அந்தக் காலாவதியான, பிழை நிறைந்த பழைய பட்டியல்களையே நம்பியிருப்பது ஆச்சரியமளிக்கிறது என்று தெரிவிக்கின்றனர்


இந்தப் பின்னடைவு, நாட்டின் பத்தாண்டு கால டிஜிட்டல் முன்னேற்றத்தை அழித்துவிட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR-2.0)  பழைய முறைகளிலும், நம்பகத் தன்மையற்ற, சரிபார்க்க முடியாத தரவுகளைக் கொண்டும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள தொடங்கபட்ட முயற்சி, அதற்கு நேர்மாறாக பல மாதங்களாக நீடிக்கும் பெரும் நெருக்கடியாக மாறிவிட்டது என்று கூறப்படுகிறது. 

மரபுப் பட்டியலின் ஒரு பார்வை

முந்தைய சிறப்பு தீவிர திருத்தங்கள் (SIR) பெரும்பாலும் வழக்கமான திருத்த நடவடிக்கைகள் போலவே நடந்தன. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளுக்காகத் தொடங்கபட்டன. புதிதாக வந்து குடியேறியவர்கள், வாக்களிக்கும் வயது வந்தவர்களை சேர்ப்பது பழைய வாக்காளர்களின் பதிவுகளைச் சரி செய்வதற்கோ புதுப்பிப்பதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, இது வெறும் சாதாரண நடைமுறையாகவே மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கை என்று விமர்சிக்கப்படுகிறது. 


இதன் விளைவாக வந்த வாக்காளர் பட்டியல்களில் முழுமையற்ற, தெளிவற்ற மற்றும் விடுபட்ட தகவல்கள் உள்ளன. மேலும், அதன் தரநிலைகள் மாநிலங்கள் மற்றும் தொகுதிகளுக்கு இடையே வேறுபடுகின்றன. குறிப்பாக, கடைசிப் பெயர்கள் இல்லாமல் முதல் மற்றும் நடுப் பெயர்கள் மட்டுமே இருக்கும் பதிவுகள், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card (EPIC)) அல்லது வீட்டு எண் விடுபட்டிருப்பது, மற்றும் அகர்வால்/அக்ரவால், ராகேஷ்/ராகேஷ் (Rakesh/Rakeash), சங்கல்/சஹ்கல் (Sangal/Sahgal), மற்றும் வீர்/விர் (Veer/Vir) போன்ற எழுத்துப் பிழைகள் பரவலாகக் காணப்படுகின்றன. 


வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும்போது அதிர்ச்சியான தவறுகள் தெரிய வருகின்றன. உதாரணமாக, ஒரே ஆணுக்கு பல மனைவிகள் இருப்பதாகவோ அல்லது கிரண், சீமா இருவருக்கும் ஒரே கணவர் (ஷர்துல்) என்று பெயர் இருப்பதாகவோ பதிவு காட்டுகிறது. லட்சக்கணக்கான இந்தி, ஆங்கிலம், வங்காளி பதிவுகளை ஒரு ஆசிரியர் கைமுறையால் சரிபார்த்து பல நாட்கள் செலவழித்தும், அவர் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்திருந்தும் கூட, அவருடைய சொந்தப் பெயரையே அந்தப் பட்டியலில் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் 2002-2004 காலகட்ட வாக்காளர் தரவுத்தொகுப்பில் எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

வாக்காளர் பட்டியல் இன்னும் காகித வடிவில் (PDF மட்டுமே) இருப்பதால், 60 கோடி பேர் கொண்ட மாபெரும் தரவுத்தளத்தை யாராலும் சரிபார்க்கவோ, ஒப்பிட்டுப் பார்க்கவோ, துல்லியத்தன்மையைச் சோதிக்கவோ முடியவில்லை என்கின்றனர். தேர்தல் ஆணையத்தின் இணையதள தேடு கருவி பெரும்பாலும் சரியாக இயங்குவதில்லை. சரிபார்ப்பு பயணிகளின் போது விவரம் தேடினால்  “விவரம் எதுவும் இல்லை” அல்லது “பிழை” என்று பதில் தருவதாகத் தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான முறை முயன்றும் சரியான முடிவு கிடைக்கவில்லை. இறுதியில், ஆவணக் கோப்புகளை (pdf) இணைய தளங்களில் பதிவிறக்கச் சொல்வதோடு அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (Block Level Officer (BLO)) போகச் சொல்வதோடு நின்றுவிடுகிறது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. மாநில தேர்தல் அதிகாரிகளே இந்த வாக்காளர் பட்டியல்களைத் தருவதாகவும், தேர்தல் ஆணையம் அதை வெறுமனே இணையதளத்தில் “தகவல்களை சேகரித்து வைத்திருப்பதை” (host) மட்டுமே செய்கிறது என்றும் தேர்தல் ஆணையத்தின் தேடல் பக்கத்திலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால், பட்டியலில் ஏற்படும் பிழைகளுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க மறுக்கிறது என்பது தெளிவாகிறது. இந்தப் பட்டியல்கள் டிஜிட்டல் தரவுத்தொகுப்பாக (தேடவும் ஒப்பிடவும் முடியும் வகையில்) இல்லாத வரை, அவை வெறும் ஆவணங்களாக மட்டுமே இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது. 


இந்த முழுமையற்ற, பழைய பதிவுகளே இன்றைய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு (SIR) அடிப்படையாக உள்ளன. அதனால், நிறைய உண்மையான வாக்காளர்களின் பெயர்களே பட்டியலில் இல்லாமல் போய்விடுகிற அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.


வளங்களின் குறைவான பயன்பாடு


இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பைப் (ECINet) பயன்படுத்தி  வாக்காளர்கள் தற்போதுள்ள ஒரு பில்லியன் பதிவுகள் கொண்ட தரவுத்தளத்தை கைபேசி எண்கள், வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்கள், பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரிகள் மற்றும் குடும்ப உறவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேட அனுமதிக்கிறது. இது போலி அல்லது விடுபட்ட உள்ளீடுகளைக் கண்டறிந்து மேலும் பதிவு செய்தல், நீக்குதல், திருத்தங்கள், ஆதார் இணைப்பு, தொகுதிகள் மற்றும் வாக்குச் சாவடிகளைக் கண்டறிதல், வாக்குச் சாவடி நிலை அலுவலர்களைத் தொடர்புகொள்வது, வாக்காளர்களின் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அட்டைகளைப் பதிவிறக்குதல், புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் அவற்றின் நிலையைக் கண்காணித்தல் போன்ற சேவைகளை ஆதரிக்கிறது. இந்தச் செயல்பாடுகள் விரிவானவை மற்றும் பொதுவாகக் குறைபாடற்ற முறையில் செயல்படுகின்றன, மேலும் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் கணக்கெடுப்புப் படிவங்களை இணையதளங்களில் மூலம் சமர்ப்பிக்கவும் உதவுகின்றன.


இருப்பினும், பழைய வாக்காளர் பட்டியல் திருத்த தரவு இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பில் (ECINet) திறம்பட ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சிறிதளவு முயற்சியில், 2002–04 வாக்காளர் பட்டியல்களை டிஜிட்டல் மயமாக்கித் தேடக்கூடிய வகையில் மாற்றலாம், இது தேர்தல் படிவங்களை நிரப்புவதற்குத் தேவையான அதே அம்சங்களை வழங்கும். அவ்வாறு செய்யாதது பழைய பட்டியல்களில் உள்ள பலவீனங்களை மறைப்பதற்காகவா என்கிற கேள்வியை எழுப்புகிறது.


2002-04 ஆண்டில் எங்கு வாக்களித்தோம் என்பதை இப்போது மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்ப்பது நியாயமில்லை. வாக்காளர் அடையாள அட்டை ஒழுங்காகப் பாதுகாக்கப்படவில்லை,  மக்கள் சின்னக் காகிதச் சீட்டையே நம்பியிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் பலமுறை வீடு மாறியவர்கள் பழைய வாக்குச்சாவடி, பகுதி அல்லது வரிசை எண்ணை நினைவில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்


வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மிகக் குறைந்த உதவியையே மக்களுக்கு வழங்குகிறார்கள். ஏனெனில், பெரும்பாலானவர்கள் காகிதத்தில் உள்ள வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை  வழங்குவதோடு, அவற்றைச் சேகரிப்பதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. அவர்களிடம் கடந்தகால வாக்குப்பதிவு தொடர்பான பதிவுகள் இல்லாததால், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அவை தேவைப்படாவிட்டாலும், அவர்களில் பலர் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கூடுதல் முகவரிச் சான்றுகளைக் கேட்கிறார்கள். பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் இணையதளங்களில் தரவுகளை உள்ளிடும் திறன் இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர் விண்ணப்பப் படிவங்கள் இன்னும் பதிவேற்றப்படாமால் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கும் மேற்பட்ட படிவங்கள் இன்னும் பதிவேற்றப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. படிவங்கள் கையால் எழுதப்பட்டு, பின்னர் பதிவேற்றப்படுவதாலும், வாக்காளர்கள் தற்போதைய புகைப்படங்களுக்காகப் பணம் செலுத்த வேண்டியதாலும், அந்தப் புகைப்படங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மீண்டும் ஸ்கேன் செய்வதாலும், காகிதத்தாலான வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் பணிச்சுமையை அதிகரிக்கின்றன. இந்தக் காகிதம்–எண்ம–காகிதம் சுழற்சி மெதுவாகவும், திறனற்றதாகவும், பிழைகள் ஏற்படக்கூடியதாகவும் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.


மாறாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பின் (ECINet) மூலம், டிஜிட்டல்மயமாக்கல், காகிதப் புகைப்படங்கள், கையொப்பங்கள் அல்லது ஆவணங்கள் தேவையின்றி, பிழையின்றி இணைய தளங்கள் வழியாக விரைவான வாக்காளர் விண்ணப்ப சமர்ப்பிப்புகளை அனுமதிக்கிறது. படிவங்கள் 6, 7 மற்றும் 8 பயனர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின்  உதவியின்றி இணையதளத்தில் ஆதார் எண்ணை சேர்க்க, நீக்க, திருத்த அல்லது இணைக்க அனுமதிக்கின்றன. ஆதார் அடையாள அட்டையின் மூலம் சரிபார்ப்பு செயல்முறையைச் சீராகவும் நம்பகத்தன்மையுடனும் செய்ய முடிகிறது என்கின்றனர்.


முக்கியமாக 2002–04 பட்டியலில் உள்ள குறைபாடுகளினால் ஏற்பட்டவை—படிவம் 8 (Form 8) மூலம் சிறிய பிழைகள் சரி செய்யப்படலாம். ஆனால், அதற்கான ஒப்புதல்களை தேர்தல் ஆணையம் மிக அரிதாகவே வழங்குகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், படிவம் 6 (Form 6) மூலம் தாங்கள் முதல் முறையாக வாக்களிக்க வந்தவர்கள் என்று தவறாக உரிமை கோரலாம் என்கின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) மூலம் செய்யப்படும் வாக்காளர் மின்னணுப் படிவச் சமர்ப்பிப்புகள், வெளிப்படையான இணையதள சமர்ப்பிப்புகளைப் போலன்றி, "பெறப்பட்டது" என்பதை மட்டுமே காட்டுகின்றன. எனவே, அதிகாரத்துவத் தடைகளும், அதிகாரப்பூர்வ தாமதங்களும் ஒரு எளிமையான டிஜிட்டல் பணிகளைத் தடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.


தொழில்நுட்பம் சார்ந்த புரிதல் இல்லாத குடிமக்களுக்கு, தேர்தல் ஆணையம்  நடமாடும் சாதனங்களுடன் கூடிய சேவை மையங்களைப் பயன்படுத்தி, பயிற்சி பெற்ற பணியாளர்களைக் கொண்டு, வாக்காளர் விண்ணப்பங்களை இணையவழியில்

சமர்ப்பிக்க உதவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைத்து, காகிதப் படிவங்களைத் தவிர்த்திருக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் வாக்குறுதியளித்த காகிதமில்லா, மக்களுக்கு உகந்த, வெளிப்படையான முறையை வழங்குவதற்குப் பதிலாக, அதன் பழங்கால முறைகள் வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் குழப்பத்தையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன.


முழுவதும் டிஜிட்டல்மயமாக்குவது எப்படி?


கீழே உள்ள படிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி SIR 2026-ஐ முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கவும், காகிதமில்லாததாகவும், சரிபார்க்க எளிதாகவும் மாற்றும் என்கின்றனர்.


டிஜிட்டல் மயமாக்கல் மூலம் தேடும் திறன்: அனைத்து மாநில/யூனியன் பிரதேச வாக்காளர் பட்டியல்களையும், முழுமையாகத் தேடக்கூடிய டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றவும். தேடக்கூடிய தரவு மற்றும் மெட்டா (meta) தரவு மேலாண்மைக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்தவும், அதே நேரத்தில் பிராந்திய மொழிகளைப் பார்ப்பதற்கு (காட்சிப்படுத்துவதற்கு) மட்டும் வைத்திருக்கவும்.


தரவு ஒருங்கிணைப்பு: பழைய ஆவணங்களை ஆதார், பான்/வருமான வரி, ஓட்டுநர் உரிமம் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பதிவுகள் போன்ற நம்பகமான தரவுத்தளங்களுடன் இணைக்கவும். ஒருங்கிணைப்புக்கு வலுவான செயலி நிரலாக்க இடைமுகங்கள் (Application Programming Interface (API)) மூலம் நிலைத்தன்மை சோதனைகளை பயன்படுத்தவும். இதில், ஆதார் முக்கிய அடையாளக் குறிப்பாக செயல்படுகிறது.


வாக்காளர் வகைகளை வேறுபடுத்துங்கள்: வாக்காளர்களை மூன்று குழுக்களாக வகைப்படுத்தவும்: 


(i) நிலையான முகவரி வாக்காளர்கள்,


(ii) அடிக்கடி இடம்பெயர்பவர்கள்

(iii) குடியேற்றம்/தேசியப் பிரச்சினைகள் உள்ளவர்கள்.


மின்னணு வாக்குச்சீட்டுகளை இணையவழியில் சமர்ப்பித்தல்: மின்னணு வாக்குச் சீட்டுகள் முழுமையாக இணையவழியில் சமர்ப்பிக்கப்படுவதை உறுதிசெய்து, பயிற்சி பெற்ற பணியாளர்களால் இயக்கப்படும் நடமாடும் டிஜிட்டல் சேவை மையங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தொழில்நுட்ப திறனுள்ள பணியாளர்கள் ஏராளமாக உள்ளனர். தேர்தல் அதிகாரிகள் கள ஆய்வில் கவனம் செலுத்தும்போது, இந்தியாவுக்கு உதவ ஏராளமான தொழில்நுட்பத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர்.


அனைத்து செயல்முறைகளையும் டிஜிட்டல் மயமாக்குங்கள் : ஆவணச் சரிபார்ப்பு, பதிவேற்றங்கள் மற்றும் சரிபார்ப்புக்குப் பிந்தைய படிகள் அனைத்தையும் தெளிவான, வெளிப்படையான பணிகளுடன்  முற்றிலும் இணையவழியில் கையாள அறிவுறுத்தப்படுகிறது. 


இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR-2026) காலாவதியான காகிதப் பதிவுகளைச் சார்ந்திருப்பதிலிருந்து நவீன, நம்பகமான, தொழில்நுட்பம் சார்ந்த தேசியப் பயிற்சியாக மாற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


முன்னோக்கி செல்லும் வழி


முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய அமைப்பு, பழைய வாக்காளர் சிறப்பு திருத்த பணியில் இருந்த நீண்டகாலப் பிரச்சினைகளை முழுமையாக நீக்கிவிடும். இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவல் வலையமைப்பு வழியாக எல்லா செயல்முறைகளும் தடையின்றி சீராக இயங்கும். இந்தமாற்றங்கள் மிக எளிமையானவை, நடைமுறையில் செயல்படுத்த எளிதானவை, நீட்டிக்கப்பட்ட வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளைக் காலக்கெடுவிற்குள் எளிதாக முடிக்க முடியும். பெரும்பாலான பணிகளுக்கு மிகக் குறைந்த முயற்சியே போதும்; தரவு ஒருங்கிணைப்பு மட்டுமே சற்று அதிக நேரம் எடுக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர். இது ஒருமுறை செயல்படுத்தப்பட்டவுடன், வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் அனைத்துப் பகுதிகளும் வேகமாகவும், எளிமையாகவும், மிகவும் நம்பகரமாகவும் மாறிவிடும் என்கின்றனர்.  பிழைகள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தீர்க்கப்படுவதால், பதற்றம், குழப்பம், மன அழுத்தம் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


ஒரு டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்றியமையாதது, அதே நேரத்தில் தவிர்க்க முடியாத ஒன்றும்கூட. 2026 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, சரிபார்ப்பு மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட நம்பிக்கை சார்ந்த அமைப்பாக மாற வேண்டும். இது தாமதமான நடவடிக்கை என்றாலும் மிகவும் அவசியமாகிறது. 


ராஜீவ் குமார், IIT கரக்பூர், IIT கான்பூர், BITS Pilani மற்றும் JNU ஆகிய நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையின் முன்னாள் பேராசிரியராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) ஆகியவற்றில் முன்னாள் விஞ்ஞானியாகவும் இருந்தவர்.

Original link:

Why the SIR needs to be completely digitised 




Share: