குழந்தை பராமரிப்பு என்பது வெறும் சமூகப் பாதுகாப்பு வலை மட்டுமல்ல. அது வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தி. -ஆர்த்தி அஹுஜா, உத்சவ் கெரியா

குழந்தை பராமரிப்பு செலவு மிக்கதாகவோ அல்லது கிடைக்காத நிலையிலோ இருக்கும்போது, பல தாய்மார்கள் வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்வது அல்லது வேலையைவிட்டு வெளியேறுவதால் உற்பத்தித்திறன் குறைகிறது.


இந்தியாவின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு நீண்டகாலமாகவே முதுகெலும்பாக இருந்து வருகிறது. இருப்பினும், பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதியளவு இருப்போரின் நேரத்தையும் திறமையையும் விடுவிக்கும் "மென்மையான" உள்கட்டமைப்பை நாம் புறக்கணித்தால், 8-10 சதவிகித வளர்ச்சி இலக்கு தடைபடும் வாய்ப்புள்ளது. குழந்தைப் பராமரிப்பு என்பது வெறும் "பாதுகாப்பு வலை" என்று பார்க்கப்படாமல், வளர்ச்சி, உற்பத்தித்திறன் மற்றும் மனித மூலதனத்திற்கான ஒரு "ஊன்றுகோலாக” மாற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.


உற்பத்தித்திறனில் ஏற்படும் சுமையானது வெளிப்படையாகத் தெரிகிறது. ஏனெனில், பல இலட்சக்கணக்கான தாய்மார்கள் குழந்தைப் பராமரிப்புக்கான வசதிகள் செலவு மிகுந்ததாகவோ அல்லது அணுக முடியாததாகவோ இருப்பதால், வேலையைவிட்டு வெளியேறுகின்றனர் அல்லது தங்களது வேலை நேரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர். நம்பகமான குழந்தைப் பராமரிப்பு வசதிகள், பெண்கள் தங்கள் திறமைகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ற வேலைகளில் தொடர்ந்து பணியாற்ற வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. 


சில மாநிலங்கள் சாத்தியக் கூறுகளைத் தெளிவாகக் காட்டுகின்றன. உற்பத்தித் துறையில் உள்ள பெண்களில் ஏறக்குறைய நான்கில் மூன்று பங்கு பேர் ஐந்து தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குழந்தை பராமரிப்பு, விடுதிகள் மற்றும் இலவச பொதுப் போக்குவரத்து உட்பட, பெண்கள் வேலை செய்ய உதவும் சமூக ஆதரவில் முதலீடு செய்துள்ளனர்.


உலகளாவிய எடுத்துக்காட்டுகள் குழந்தை பராமரிப்பு வசதி எவ்வாறு பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகின்றன. வியட்நாமில் ஏற்கெனவே பாலின சமத்துவம் இருந்தாலும், நல்ல குழந்தை பராமரிப்பு வசதி இருப்பதால் பெண்கள் சிறந்த, முறையான வேலைகளில் சேர்ந்து நீண்டகாலம் பணியாற்ற முடிகிறது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவின் குடிசைப் பகுதிகளில் இலவச குழந்தை பராமரிப்பு அளிக்கப்பட்டபோது, தாய்மார்கள் தங்கள் வேலை நேரத்தை அதிகரித்து, பகல்நேர பராமரிப்பு நேரத்துக்கு ஏற்ப வேலை செய்ய முடிந்தது என்கின்றனர்.


எதிர்காலத் திட்டமானது ஒரு கலப்பின (hybrid) மாதிரியாக இருக்க வேண்டும் : ஆரம்பகால தூண்டுதலை வீடுகளுக்குள் நீட்டிக்க, மின்னணு தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் நேரடி மையங்கள். குறிப்பாகத் தொழில்துறைப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் நிறைந்த நகர்ப்புற வார்டுகளில், அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைக் காப்பகங்கள் மூலம் முழுநாள் குழந்தை பராமரிப்பு மையங்கள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில், பகுதிநேர பள்ளிப் பணியாளரைச் சேர்த்தது ஊட்டச்சத்து விளைவுகளைப் பராமரிக்கும் அதே வேளையில் கற்பித்தல் நேரத்தை இருமடங்காக அதிகரித்தது. சுய உதவிக் குழுக்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அல்லது உள்ளூர் இளைஞர்களைக் கொண்டு துணைப் பணியாளர்களை (para-professionals) நியமித்தால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உதவ முடியும் — இது மேகாலயாவிலும் சண்டிகரிலும் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தைப் போல ஊழியர்களின் உதவித்தொகையைச் சற்று அதிகரித்தாலே குறைந்த செலவில் அங்கன்வாடி மையங்களை முழுநாள் சேவையாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. 


குழந்தையின் முதல் 1,000 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்தக் காலத்தில் மூளை வளர்ச்சியில் 80% நிகழ்கிறது. பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் வீட்டிலேயே பெற்றோருடன் செலவிடுவதால், அன்றாட எளிய தொடர்புகளே வாழ்நாள் முழுவதுக்குமான கற்றலின் அடித்தளமாக அமைகின்றன. திரையில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாலும், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி சமையல் செய்முறை சொல்வது, நடக்கும்போது வண்ணங்களைக் காட்டுவது போன்ற தினசரி விஷயங்களைக் கற்றல் வாய்ப்புகளாக மாற்றலாம். வாட்ஸ்அப் குழுக்கள் போன்ற டிஜிட்டல் சமூக குழுக்களில் பெற்றோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஒடிசாவில் நடத்திய ஆய்வில், வாரந்தோறும் நடக்கும் தாய்மார்கள் குழு அமர்வுகள் (வாட்ஸ்அப் வழியாகவும்) குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் மொழித் திறனை வீட்டுக்கு வந்து கற்பிப்பது போலவே மேம்படுத்துவதாகக் கண்டறிந்தனர். அதாவது, டிஜிட்டல் மூலமான சக பெற்றோர்களின் கற்றல் (peer learning) மிகவும் பயனுள்ளதாகவும், செலவு குறைவாகவும் உள்ளது. ஊட்டச்சத்து கண்காணிப்புக் கருவி (Poshan Tracker) மூலம் அரசாங்கம் ஆரம்பகால கற்றல் வழிகாட்டுதலை வழங்குகிறது.


குழந்தைப் பராமரிப்பை முக்கியமான, சந்தையை வடிவமைக்கும் முன்னுரிமையாக மாற்ற, இந்தியாவிற்கு ஒரு வலுவான நிறுவனத் தலைமை (institutional anchor) தேவைப்படுகிறது. ஆரம்பகால குழந்தைப் பராமரிப்புக்கான ஒரு தேசிய பணி மூலம் (National Mission on Early Childhood Care), மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தொழிலாளர், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் அமைச்சகங்களை ஒன்றிணைத்து, குழந்தை நலனை குழந்தை பராமரிப்புத் திட்டங்களுடன் இணைக்க முடியும், இது பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்கின்றனர்.


மக்கள்தொகை அம்சத்தில், இப்போதுதான் சரியான நேரம். பல மாநிலங்களில் கருத்தரிப்பு விகிதம் இடமாற்று நிலைக்குக் கீழே உள்ளது. 2050-ஆம் ஆண்டுக்குள் ஐந்தில் ஒரு இந்தியர் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார். பெண்களின் தொழிலாளர் பங்களிப்புக்கும் குழந்தைகளின் கற்றலுக்கும் வலுவான ஆதரவு இல்லாவிட்டால், மக்கள்தொகை நன்மை (demographic dividend) பற்றாக்குறையாக (deficit) மாறிவிடும்: குறைவான குழந்தைகள், மோசமான திறன்களுடன், மற்றும் உற்பத்தித் திறனுள்ள தொழிலாளர்கள் மிகக் குறைவாக இருப்பர்.


அரசாங்கம் வழிகாட்டுதலையும், வணிகம் புதுமைகளையும், குடிமைச் சமூகம் கடைக்கோடி மக்களைச் சென்றடைவதையும் உறுதி செய்வதன் மூலம், இந்தியா பெண்களின் முழுத் திறனையும் வெளிக்கொணர்ந்து, ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை பாதுகாப்பாக, பராமரிக்கப்பட்டு, கற்றுக் கொள்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.


அஹுஜா, முன்னாள் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் ஆவார். கேரியா, ராக்கெட் லேர்னிங்கின் (Rocket Learning) இணை நிறுவனர் ஆவார்.


Original link:

Childcare isn’t just a social safety net. It’s a lever for growth.


Share: