அரசியலமைப்பின் 19-வது பிரிவின்கீழ் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளிலிருந்து போராட்டம் நடத்தும் உரிமை வந்தாலும், அது நிபந்தனையற்றது அல்ல. மேலும், நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
இந்தியாவின் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி, திங்கட்கிழமை, ஜூலை 20 அன்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவிருக்கும் பேரணிக்கு முன்னதாக, ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தைத் தொடர சிஜேபி அனுமதி பெறவில்லை என்றும், பேரணி நடத்துவதற்கு ஒப்புதலுக்காக விண்ணப்பிக்கவும் இல்லை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவி நீக்கம் செய்யக் கோரி வரும் சிஜேபி அமைப்பு, ஜூன் 20 முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது. திட்டமிட்டபடி திங்கட்கிழமை பேரணி நடைபெறும் என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடத்தும் உரிமையை நிர்வகிக்கும் சட்டங்கள் குறித்தும், இந்தியாவில் ஒரு பொதுப் போராட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு ஏன் காவல்துறை அனுமதி தேவைப்படுகிறது என்பது குறித்தும் கீழே குறிப்பிட்டுள்ளது.
போராடுவதற்கான உரிமை
இந்தியக் குடிமக்களுக்கு, போராட்டம் நடத்தும் உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 19-வது பிரிவின்கீழ் இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளிலிருந்து உருவாகிறது. பிரிவு 19(1)(a)-ன் கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் பிரிவு 19(1)(b)-ன் படி ஆயுதங்கள் இன்றி பொது இடத்தில் அமைதியாகக் கூடுவதற்கான உரிமை குறித்து குறிப்பிடுகின்றன.
ஆனால், இது ஒரு நிபந்தனையற்ற உரிமை அல்ல; இது சில கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டது. எனவே, அவ்வாறு செய்யும்போது அதிகாரிகளிடமிருந்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்று, பொது அமைதி பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்தால், ஒருவர் தனது போராட்ட உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்தலாம்.
விதி சட்டக் கொள்கை மையத்தில் (Vidhi Centre for Legal Policy) உருவாக்கப்பட்ட, சட்டத் தகவல்களுக்கான திறந்த அணுகல் டிஜிட்டல் ஆதாரமான Nyaaya.org வழங்கிய, “பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தின்முன் கொண்டுவரப்பட்ட பல வழக்குகள், போராட்டம் நடத்தும் உரிமை ஜனநாயகத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும், இந்த உரிமை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, அரசு அதிகாரிகளும் குடிமக்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் அவை வகுத்துள்ளன,” என்று “சட்டப்பூர்வமான போராட்டத்திற்கான வழிகாட்டி” (Guide to Lawful Protesting) என்ற தலைப்பிலான டிசம்பர் 2020-ல் வெளியிடப்பட்ட குறிப்பு கூறுகிறது.
காவல்துறை அனுமதிக்குத் தேவையான ஆவணங்கள்
அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் 'சட்டம் மற்றும் ஒழுங்கு' (Law and order) ஒரு பொருளாக இருப்பதால், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கத் தனக்கென தனிப்பட்ட சட்டங்களையும் விதிகளையும் இயற்றிக்கொள்ள முடியும். எனவே, போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கான அனுமதிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.
இதுபோன்ற எந்தவொரு போராட்டம் அல்லது பொதுக் கூட்டத்திற்கும், ஏற்பாடு செய்பவர்கள் அது நடைபெறும் அதிகார வரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்திலிருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate (NOC)) பெற வேண்டும். அத்தகைய போராட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட காவல் நிலையங்களின் அதிகார வரம்பை உள்ளடக்கியிருந்தால், காவல் ஆணையர் அலுவலகமோ (Commissionerate Office)அல்லது காவல் துணை ஆணையர் (Deputy Commissioner of Police (DCP)) அலுவலகமோ தடையில்லாச் சான்றிதழை வழங்க வேண்டும்.
போராட்டத்திற்கான தடையில்லாச் சான்றிதழ் (NOC) அல்லது ஏதேனும் குறிப்பிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பத்தில், ஏற்பாட்டாளர்களின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். தேவைப்படும் மற்ற விவரங்களில், குறிப்பிட்ட போராட்டத்திற்கான காரணங்கள், அதன் கால அளவு, அதில் பங்கேற்கும் நபர்களின் தோராயமான எண்ணிக்கை மற்றும் கூட்டம் கூடும் இடம் ஆகியவை அடங்கும். பேரணியாக இருந்தால், செல்லும் பாதை வழங்கப்பட வேண்டும். மேலும், ஒலிபெருக்கிகள், கூடாரங்கள் மற்றும் பந்தல்கள் போன்ற உபகரணங்களின் பயன்பாடும் குறிப்பிடப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவல் துறையிடம் குறிப்பிட்ட படிவம் எதுவும் இல்லையென்றால், தடையில்லாச் சான்றிதழுக்கான (NOC) விண்ணப்பத்தை, மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுடன் ஒரு எளிய கடித வடிவில் சமர்ப்பிக்கலாம். அதனை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் உயர் அதிகாரிக்கோ அல்லது துணை ஆணையர் (DCP) அலுவலகத்திற்கோ முகவரியிட வேண்டும். விண்ணப்பதாரரின் அடையாளச் சான்று, விண்ணப்பதாரரின் இருப்பிடச் சான்று, விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் காவல் துறையினரால் கோரப்படும் வேறு ஏதேனும் தொடர்புடைய ஆவணங்கள் அதனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கேற்பவர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மற்றும் பிற வசதிகள், அத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ளும் காவல் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்கான விவரங்கள் குறித்தும் காவல் துறையினர் கூடுதல் தகவல்களைக் கோரலாம். சில சமயங்களில், விண்ணப்பதாரர் மற்றும்/அல்லது பிற அமைப்பாளர்களை இந்த விவரங்களை ஒரு உறுதிமொழிப் பத்திர (affidavit) வடிவில் சமர்ப்பிக்குமாறு காவல்துறை கேட்கக்கூடும்.
காவல்துறையால் அனுமதியை மறுக்க முடியுமா?
ஆம். போராட்டத்திற்கான உரிமை என்பது நிபந்தனையற்ற உரிமை அல்ல என்பதால், காவல்துறை அதற்கான அனுமதியை மறுக்கலாம். இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. இதற்குக் காரணம், போராட்டத்திற்காகக் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களின் நலன்களையும், பொது அமைதியைப் பராமரிப்பதன் அவசியம் ஆகியவற்றையும் காவல்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.
போராட்டமானது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நட்புறவுகள், பொது அமைதி, கண்ணியம் அல்லது ஒழுக்கநெறி ஆகியவற்றின் நலன்களைப் பாதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கருதினால், அனுமதி மறுக்கப்படலாம். அத்தகைய கோரிக்கையை மறுப்பதற்கான பிற காரணங்கள் நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது ஒரு குற்றச் செயலுக்குத் தூண்டுதல் ஆகியவையாக இருக்கலாம்.
பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (முன்னர் 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144) பிரிவு 163-ன் கீழ், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பதன் மூலம், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமைதியான போராட்டத்திற்கான அனுமதியைக் கூட ரத்து செய்ய முடியும்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது அனுமதி திரும்பப் பெறப்பட்டாலோ, காவல்துறை அல்லது மாநில அதிகாரிகள் (மாவட்ட நீதிபதி போன்றோர்), அச்சுறுத்தலின் துல்லியமான தன்மை, போராட்டத்தால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் நடைபெற்று வரும் போராட்டத்திற்குத் தடை உத்தரவுகளை விதிப்பதற்கான காரணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, திட்டவட்டமான தெளிவான காரணங்களை வழங்க வேண்டும்.