வீடுகளின் மேற்கூரைகளில் அதிக அளவில் சூரியஒளி மின்தகடுகள் அமைப்பது மின்சார விநியோகத்தை மேம்படுத்த வேண்டுமல்லவா? ஆனால், இதற்கான விடை நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளாவின் தற்போதைய மின்சாரப் பயன்பாட்டு முறைகள், அம்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியமின் உற்பத்தியால் கிடைக்கக்கூடிய நன்மைகளை எவ்வாறு குறைக்கின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
பிரதமரின் சூர்ய கர் யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின்கீழ், வீடுகளின் கூரைகளில் சூரியஒளி மின்தகடுகளைப் பொருத்துவதில் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா திகழ்கிறது.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் கலவையான வரவேற்பைப் பெற்றுள்ள போதிலும், கேரள மாநிலம் இதை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளது. மேற்கூரை சூரியமின் உற்பத்தியில், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களைவிட உற்பத்தி அளவில், கேரளா தேசிய அளவில் நான்காவது இடத்தில் உள்ளது.
இருப்பினும், இந்த வெற்றி கேரளாவின் அதிகரித்துவரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதில் ஒரு புதிய சவாலையும் உருவாக்கியுள்ளது. முதன்முதலில் இது முரண்பாடாகத் தோன்றலாம்—அதிகப்படியான மேற்கூரை சூரியஒளி மின் உற்பத்தி அமைப்புகள் மின் விநியோகத்தை மேம்படுத்தத்தானே செய்ய வேண்டும்?
ஆனால், இதற்கான பதில் அவ்வளவு எளிதானது அல்ல. கேரளா மின்சாரத்தைப் பயன்படுத்தும் முறை, அந்மாநிலத்தின் சாதனை அளவிலான சூரியஒளி மின் உற்பத்தியின் பலன்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது.
கேரளாவின் சூரிய மின்சக்தி வெற்றிப் பயணம்
மாநில அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 2026-ஆம் ஆண்டு மே மாத முடிவில் கேரளாவின் நிறுவப்பட்ட சூரிய மின்சக்தி திறன் 2,508 மெகாவாட்டாக (MW) உயர்ந்துள்ளது. இதில் பெரும் பகுதியை வகிப்பது வீடுகளின் மேற்கூரைகளில் பொருத்தப்படும் சூரியஒளி மின்தகடுகள் ஆகும். இவை, மட்டுமே 2,036 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
பிரதமரின் சூர்ய கர் (PM Surya Ghar) திட்டத்தின்கீழ், கேரளாவில் 2.96 லட்சம் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, 3,03,531 குடும்பங்கள் இதனால் பயன்பெற்று வருகின்றன. இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே 1,150 மெகாவாட் சூரிய மின்சக்தி திறன் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
இதனுடன் ஒப்பிடுகையில், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் 22,383 சூரியஒளி மின் அமைப்புகள் மூலம் 33,843 குடும்பங்கள் மட்டுமே பயனடைந்துள்ளன. அங்கு நிறுவப்பட்டுள்ள மொத்த மின்திறன் 91 மெகாவாட் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, கேரளாவின் அனைத்து வகையான ஆற்றல் மூலங்களில் இருந்தும் கிடைக்கக்கூடிய மொத்த மின் உற்பத்தியில் சூரியஒளி மின்சாரம் மட்டுமே 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிக அதிகம் ஆகும். இந்திய அளவில் உள்ள மொத்த மின்திறனான 532 ஜிகாவாட்டில் (GW), சூரியஒளி மின்சாரம் 150 ஜிகாவாட் என்கிற அளவில் மட்டுமே பங்களிக்கிறது.
அப்படியானால் இதிலுள்ள பிரச்சனை என்ன?
தொழில்துறையில் நன்கு வளர்ச்சியடைந்த பல மாநிலங்களில், மின்சாரத்தின் பயன்பாடு பகல் நேரத்திலேயே மிக அதிகமாக இருக்கும். ஆனால், கேரளாவில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலான நேரத்திலேயே மின்சாரத் தேவை அதிகரிக்கிறது. ஏனெனில், அங்குள்ள மின்சாரத் தேவையில் 75 சதவீதம் வீடுகளுக்கே தேவைப்படுகிறது. மேலும், தொழிற்துறை மற்றும் வணிகரீதியான மின்சாரப் பயன்பாட்டின் அளவு மொத்தப் பயன்பாட்டில் சுமார் 20 சதவீதம் மட்டுமே ஆகும்.
இது ஒரு பெரிய முரண்பாட்டை உருவாக்குகிறது: பகல் நேரத்தில் சூரியஒளி மின்சாரம் தாராளமாகக் கிடைக்கிறது, ஆனால் மின்சாரத்திற்கான தேவயோ சூரிய ஆற்றல் உற்பத்தி செய்யப்படாத இரவு நேரத்தில்தான் மிக அதிகமாக உள்ளது.
இந்தப் பிரச்சினை கேரள மாநிலத்தில் மட்டும் அல்ல. இந்தியா முழுவதிலும் உள்ள மின்சாரக் கட்டமைப்புகளும் இரவு நேரத்தில்தான் மிகக் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது. இருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், இரவு நேரத்தில் குறைவான மின்சாரத் தேவை இருந்தபோதிலும், போதிய மின் விநியோகம் இல்லாததே இதற்கு முதன்மை காரணமாகும். ஆனால், கேரளாவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை வேறுபட்டதாகும், அங்கு இரவு நேரத்தில்தான் மின்சாரத் தேவை அதிகரிக்கின்றன.
இதன் விளைவாக, பகலில் உற்பத்தி செய்யப்படும் சூரியஒளி மின்சாரத்தில் பெரும்பகுதி உடனுக்குடன் பயன்படுத்தப்படுவதில்லை.
கேரள மாநில மின்சார வாரியத்தின் (Kerala State Electricity Board (KSEB)) தரவுகளின்படி, மேற்கூரை சூரியஒளி மின்தகடுகளை அமைத்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள்—அதாவது 'உற்பத்தியாள நுகர்வோர்கள்' (Prosumers)—தாங்கள் பகலில் உற்பத்தி செய்யும் சூரியஒளி மின்சாரத்தில் 36 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகின்றன/ர். மீதமுள்ள 64 சதவீதம் மின்சாரம் மாநிலத்தின் முதன்மை மின் தொகுப்பிற்குப் அனுப்பப்படுகிறது. பிறகு இரவு நேரத்தில், இந்த உற்பத்தி நுகர்வோர்கள் தாங்கள் மின் தொகுப்பிற்கு அனுப்பிய மின்சாரத்தில் சுமார் 45 சதவீத அளவை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.
உற்பத்தியாள நுகர்வோர் (Prosumer) என்பது, சொந்தப் பயன்பாட்டிற்காகத் தங்களது வீட்டுக் கூரையில் சூரியஒளி மின்உற்பத்தித் தகடுகளை அமைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதுடன், தங்களுக்கு மிஞ்சிய கூடுதல் மின்சாரத்தை மாநில மின் தொகுப்பிற்கு வழங்கும் வீடுகள் அல்லது வணிக நிறுவனங்களே உற்பத்தி நுகர்வோர் (Prosumer) என்று அழைக்கப்படுகின்றன.
இது மின் விநியோகக் கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கிறது?
பகல் நேரத்தில், வீட்டின் கூரைகளில் நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின்தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் குறைந்த மின்னழுத்த விநியோகக் கட்டமைப்பில் செலுத்தப்பகிறது. மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் நேரத்தில், சூரியமின் சக்தி அதிகமாக விநியோகிக்கப்படும்போது கட்டமைப்பின் மின்னழுத்தம் உயர்கிறது. இதனால் மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகள் சேதமடைவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
பொதுவாக 3 கிலோவாட் (kW) திறன் கொண்ட ஒரு மேற்கூரைச் சூரியமின் சக்தி அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 12 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால், ஒரு வீடு சராசரியாக 6 யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, நுகர்வோரே உற்பத்தியாளராகவும் இருக்கும் 'உற்பத்தி நுகர்வோர்கள்' (Prosumers) தங்கள் மின்சாரப் பயன்பாட்டை மாலை மற்றும் இரவு நேரங்களுக்கு மாற்றுகின்றனர். இது மின் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் மின்சாரத்திற்கான தேவையை மேலும் அதிகரிக்கிறது.
மேற்கூரை சூரியஒளி மின்தகடுகள் கட்டமைப்பு பரவலான பிறகு, கேரளாவில் மின்சாரத்தில் இயங்கும் சமையல் அடுப்புகளின் (Induction cookers) விற்பனை அதிகரித்ததை இதற்கு ஒரு நல்ல உதாரணமாகக் கூறலாம்.
இதன் காரணமாக, தேசிய மின்சாரச் சந்தையில் இரவில் மின் விநியோகம் குறைவாக இருக்கும் போது, அதிகரித்து வரும் நுகர்வோரின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கேரளா மின்வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
கேரளாவின் மின்சார உற்பத்தி கலவை
கேரளா பாரம்பரியமாக நீர்மின்சாரத்தையே (Hydroelectric power) பெருமளவில் நம்பியிருக்கிறது. இருப்பினும், சமீபத்திய தரவுகளின்படி, அம்மாநிலத்தின் தினசரி மின்சாரத் தேவையில் 83 சதவீதம் இப்போது தேசியச் சந்தையில் இருந்து பெறப்படும் மின்சாரக் கொள்முதல் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தரவுகளின்படி, கேரளாவின் சராசரி தினசரி மின்சாரப் பயன்பாடு 88.45 மில்லியன் யூனிட்டுகளாக உள்ளது.
இதில், கேரளா நீர், காற்று மற்றும் சூரியசக்தி மூலமாகத் தினசரி 15 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள 73.41 மில்லியன் யூனிட்கள் தேசிய மின்சாரச் சந்தையிலிருந்து போட்டி விலையில் வாங்கப்படுகின்றன. மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரங்களில் இதன் விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் வரை உயரக்கூடும் என்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளில், கேரளா தனது நீர்மின் உற்பத்தித் திறனில் வெறும் 150 மெகாவாட் (MW) அளவை மட்டுமே அதிகரித்துள்ளது. அதேவேளையில், அதன் சூரிய மின்உற்பத்தித் திறன் 2,400 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
முன்னோக்கிச் செல்லும் பாதை
நாட்டின் பிற பகுதிகள் எதிர்கொள்ளும் அதே சிக்கலைத்தான் கேரள மாநிலமும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (Renewable energy) பயன்பாடு அதிகரிக்கும் போது, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் நேரத்திற்கும் மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கும் நேரத்திற்கும் இடையிலான இடைவெளியும் அதிகரிக்கிறது. இதற்குத் தீர்வாக அமைவது மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் 'ஆற்றல் சேமிப்பு' (Energy storage) முறைதான் என்று 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஏற்கனவே செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்காகக் கேரள மாநில மின்சார வாரியம் (KSEB), பகல் நேரத்தில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை மீண்டும் மின் விநியோகக் கட்டமைப்பிற்கு அனுப்பாமல், அதனைச் சேமித்து வைக்க 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பை' (Battery Energy Storage System (BESS)) நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை, இரவில் மின்சாரத் தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மாநில மின்சார வாரியங்களில் இத்தகைய புதிய அணுகுமுறையை முதன்முதலில் ஏற்றுக்கொண்ட நிறுவனங்களில் கேரளா மாநில மின்சார வாரியமும் (KSEB) ஒன்றாகும். இதன் முதல் 'மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு' (BESS) திட்டம், 125 மெகாவாட் (MW) சேமிப்புத் திறனுடன், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மைலாட்டி (Mylatti) பகுதியில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது செயல்பாட்டைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த கட்டங்களில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் மலப்புறத்தில் உள்ள அரீக்கோடு (Areekode) ஆகிய இடங்களில் வெவ்வேறு சேமிப்புத் திறன்களுடன் கூடிய, பல மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) திட்டங்கள் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், 3 கிலோவாட்டுக்கு (kW) மேல் திறன் கொண்ட அனைத்து சூரியஒளி மின் உற்பத்தி நிலையங்களுக்கும் மின்கலன் சேமிப்பு அமைப்புகளைக் கட்டாயமாக்க வேண்டும் என்று மின்கலன் ஆற்றல் சேமிப்பு அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த முன்மொழிவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.