இந்தியா-ஆஸ்திரேலியா யுரேனிய ஒப்பந்தம் : இந்தியாவின் அணுசக்தி லட்சியங்களுக்கு உள்நாட்டு இருப்பு ஏன் போதுமானதாக இல்லை? -பிரத்யுஷ் தீப்

2047-ம் ஆண்டுக்குள் அணுமின் உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரம் (GWe) அளவிற்கு விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியா ஆஸ்திரேலியா முதல் கஜகஸ்தான் வரையிலான நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்தியா யுரேனியத்தைப் பெற்று வருகிறது.


இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியா தனது சிவில் அணுசக்தித் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் ஒரு முக்கியப் படியாக, ஆஸ்திரேலியாவுடன் ஒரு நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்தியா-ஆஸ்திரேலியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் (India-Australia Civil Nuclear Cooperation Agreement) கையெழுத்திடப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


வழங்கப்படவுள்ள யுரேனியம் ஆக்சைடு அல்லது யெல்லோகேக்கின் (yellowcake) அளவு மற்றும் ஒப்பந்தத்தின் கால அளவு வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் கனடா மற்றும் கஜகஸ்தானுடன் கையெழுத்திடப்பட்ட இதேபோன்ற நீண்டகால யுரேனியம் விநியோக ஒப்பந்தங்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது, இந்தியா தனது திட்டமிடப்பட்ட அணுமின் உற்பத்தி விரிவாக்கத்திற்காக எரிபொருள் விநியோகத்தைப் பன்முகப்படுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொள்ளும் முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


2047-ம் ஆண்டுக்குள் தனது சிவில் அணுசக்தித் திறனை 100 ஜிகாவாட்-மின்சாரமாக (GWe) விரிவுபடுத்தும் லட்சிய இலக்கை இந்தியா பின்பற்றி வரும் வேளையிலும், கடந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்த சிவில் அணுசக்தித் துறையை அதிக தனியார் பங்கேற்புக்குத் திறந்துவிட்ட நிலையிலும் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் பொதுவாகக் காணப்படும் ஒரு தனிமமான யுரேனியம், அணுசக்தி எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு பல செயலாக்க நிலைகளைக் கடக்க வேண்டும். சுரங்கத் தொழில் மற்றும் அரைத்தல் (mining and milling), உருமாற்றம் (conversion), செறிவூட்டல் (enrichment-தேவைப்படும் இடங்களில்), மற்றும் எரிபொருள் தயாரிப்பு (fuel fabrication) ஆகியவை இவற்றில் அடங்கும்.


இந்தியாவின் அணுமின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் தற்போது எங்கிருந்து கிடைக்கிறது? நாட்டின் வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதில் உள்நாட்டு யுரேனியம் இருப்புக்களின் பங்கு என்ன?


இந்தியாவுக்கு கூடுதல் யுரேனியம் தேவை


இயற்கை யுரேனியத்தில் இயங்கும் நாட்டின் உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுக்கான (Pressurised Heavy Water Reactors (PHWR)) எரிபொருள் தேவைகள், அரசுக்குச் சொந்தமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Uranium Corporation of India Ltd (UCIL)) சுரங்கங்களின் உற்பத்தி மற்றும் இறக்குமதி ஆகியவற்றின் கலவையின் மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன. தாராபூர் அணுமின் நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இலகுநீர் அணு உலை (Light Water Reactors (LWRs)) வகைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் முழுவதுமாக இறக்குமதி செய்யப்படுகிறது.


ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேகாலயா, இராஜஸ்தான், கர்நாடகா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள 47 யுரேனியம் படிவங்களில், உள்நாட்டு யுரேனியம் ஆக்சைடு இருப்பு தற்போது சுமார் 4.3 லட்சம் டன்களாக உள்ளது. நாட்டில் யுரேனியம் தாதுவை அகழ்ந்தெடுத்துப் பதப்படுத்தும் பொறுப்பை யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) கொண்டுள்ளது. மேலும், இது ஜார்க்கண்டில் உள்ள ஜடுகூடா மற்றும் துராம்டிஹ், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தும்மலப்பள்ளி ஆகிய இடங்களில் முக்கியச் சுரங்கங்களை இயக்குகிறது.


இருப்பினும், நாட்டின் மொத்த 8.7 ஜிகாவாட் அணுசக்தித் திறனில், 2.4 ஜிகாவாட் திறனுக்கான யுரேனியம் தேவை மட்டுமே தற்போது உள்நாட்டு மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யப்படுகிறது என்றும், மீதமுள்ளவை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன என்றும், 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டுவதற்கான செயல்திட்டத்தை தயாரிப்பதற்காக மின்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, ஜூன் 2025-ல் குறிப்பிட்டது.


"எனவே, 2047-ம் ஆண்டில் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறன் என்ற இலக்கை அடைய, இந்தியா தனது யுரேனியம் விநியோகத்தை அதிகரிப்பதோடு, அதற்கு இணையான பதப்படுத்தும் மற்றும் உற்பத்தித் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும்," என்று அது கூறியது. 2047-ம் ஆண்டில், நாட்டிற்கு ஆண்டுதோறும் கூடுதலாக 8,029 டன் இயற்கை யுரேனியமும், 1,045 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியமும் தேவைப்படும் என்று அக்குழு மதிப்பிட்டுள்ளது.


அணுசக்தி விநியோகர்கள் குழு (Nuclear Suppliers Group (NSG)) விலக்கு, உலகளாவிய யுரேனியம் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துகிறது



2008-ம் ஆண்டில், அணுசக்தி விநியோகர்கள் குழு (NSG) அந்நாட்டிற்கு ஒரு 'முழுமையான' விலக்கை வழங்கியபோது, ​​அதன் சிவில் அணுசக்தி உலைகளுக்காக யுரேனியத்தை இறக்குமதி செய்யும் நாட்டின் திறனை இந்தியா பெற்றது. இதன்மூலம், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (Nuclear Non-Proliferation Treaty (NPT)) கையெழுத்திடாத நாடுகளில், இத்தகைய வர்த்தகச் சலுகைகளை அனுபவிக்கும் ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது.


சர்வதேச அணுசக்தி முகமையின் (International Atomic Energy Agency (IAEA)) பாதுகாப்புகளின் கீழ் இயங்கும் அணு உலைகளுக்காக, 2008-09 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், இந்தியா மொத்தம் 18,842.60 மெட்ரிக் டன் (mt) யுரேனியத்தை யுரேனியம் தாதுச் செறிவூட்டி (uranium ore concentrate), இயற்கையான யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் (pellets) மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம்-டை-ஆக்சைடு துகள்கள் வடிவில் இறக்குமதி செய்துள்ளது என்று அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.


அரசுத் தரவுகளின்படி, 2024-25-ஆம் ஆண்டில், அணுமின் நிலையங்கள் 56,631.48 மில்லியன் யூனிட் (mu) மின்சாரத்தை உற்பத்தி செய்தன. அதில் 39,180 மில்லியன் யூனிட் (mu) இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டது. 2025-2033 காலகட்டத்தில், செயல்பாட்டில் உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட பாதுகாக்கப்பட்ட அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளை (safeguarded Pressurised Heavy Water Reactors (PHWR)) இறக்குமதி செய்யப்படும் இயற்கை யுரேனியத்தின் மதிப்பிடப்பட்ட தேவை சுமார் 9,000 மெட்ரிக் டன் யுரேனியம் (mtu) ஆகும்.


இந்தியா தற்போது ரஷ்யா மற்றும் உஸ்பெகிஸ்தானிலிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்கிறது. மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட 2.6 பில்லியன் டாலர் மதிப்பிலான விநியோக ஒப்பந்தத்தின்கீழ், கனடா சுரங்க நிறுவனமான கேமெகோ நிறுவனங்களிடமிருந்து (Cameco Corp.) வரும் சரக்குகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய யுரேனியம் உற்பத்தியாளரான கஸாடோம்பிராம்(Kazatomprom), இந்தியாவிற்கு கணிசமான அளவு யுரேனியத்தை விற்க பிப்ரவரியில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கஜகஸ்தானும் இந்தியாவின் மிக முக்கியமான யுரேனியம் வழங்குநர்களில் ஒன்றாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டு வரை கேமெகோ மற்றும் கஸாடோம்பிராம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தியாவின் முக்கிய யுரேனியம் விநியோகர்களாகத் திகழ்ந்தன.


வர்த்தகத் தரவுகளின்படி, இந்த நாடுகளைத் தவிர, 2025-26-ஆம் ஆண்டில் பிரான்ஸ் இந்தியாவிற்கு யுரேனியம் தாதுக்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தையும் வழங்கியது. அதேநேரத்தில், 2024-25-ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து இதேபோன்ற இறக்குமதிகள் பெறப்பட்டன.


இந்தியா இறக்குமதியைச் சார்ந்திருப்பதற்கான காரணம் : அதிக செலவுகள், குறைந்த தரத்திலான யுரேனியம் தாது ஆகும்.

இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தைச் சார்ந்திருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று பொருளாதாரம் ஆகும்.


மின்சார அமைச்சகக் குழுவின்படி, உள்நாட்டில் யுரேனியத்தை அகழ்ந்தெடுத்து யுரேனியத் தாதுச் செறிவூட்டப்பட்ட பொருளாக (uranium ore concentrate) மாற்றுவதற்கு, சர்வதேச சந்தைகளில் இருந்து அதைப் பெறுவதைவிட மூன்று முதல் நான்கு மடங்கு அதிக செலவாகிறது. இந்தியாவில் காணப்படும் யுரேனியத் தாதுவின் தரம் குறைவாக இருப்பதே இந்த அதிக செலவுக்கு முக்கியக் காரணமாகும். இருப்பினும், அணுசக்தியை நோக்கிய தற்போதைய உலகளாவிய நகர்வு, வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவில் யுரேனியத்தின் விலையை உயர்த்தக்கூடும்.


மேலும், சிறந்த தரத்திலான தாதுவைக் கொண்ட சுரங்கங்களைக் கண்டறியும் சாத்தியம் அல்லது கொடுக்கப்பட்ட தரமான தாதுவுடன் புதிய பிரித்தெடுப்பு தொழில்நுட்பம் உருவாவதால், உள்நாட்டு யுரேனியம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். இது செலவு மிக்கதாக இருந்தாலும், ஓரளவிற்கு எரிசக்தி பாதுகாப்பைப் பெற உதவும். இதை எளிதாக்குவதற்காக, விரிவாக்கத்தை எளிதாக்கும் வகையில் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் கூடுதல் பங்கு மூலதனத்தை அரசு செலுத்த பரிசீலிக்கலாம்,” என்று அக்குழு பரிந்துரைத்திருந்தது.


Original Link: India-Australia uranium deal: Why domestic reserves are not enough to fuel India’s nuclear ambitions.

Share: