Showing posts with label Insurance. Show all posts
Showing posts with label Insurance. Show all posts

காப்பீடு மட்டுமல்ல, இந்தியர்களுக்கு உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பும் தேவை. -ரமா வி பாரு, விகாஷ் ஆர் கேஷ்ரி

பொதுச் செலவினங்களுக்கான (public spending) முக்கியத்துவம், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சுகாதாரப் பராமரிப்பை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய வலுவான பொது அமைப்புகள் உள்ளன.


டிசம்பர் 12 உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு (Universal Health Coverage (UHC)) தினமாகும். இந்த ஆண்டின் கருப்பொருள், "தாங்க முடியாத சுகாதாரச் செலவுகள்? நாம் இதனால் நோயுற்று விட்டோம்!" (Unaffordable health costs? We’re sick of it!) என்பதாகும். இது சுகாதாரப் பராமரிப்பின் அதிகரித்துவரும் நிதிச் சுமையால் ஏற்படும் பெருகிவரும் விரக்தியை எடுத்துக்காட்டுகிறது. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு தினத்தைக் கடைப்பிடிக்கும்போது, ​​உலகளாவிய சுகாதாரக் காப்பீடு மற்றும் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிவது முக்கியம். உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது பரந்த நோக்கமுடையது. இது நோய்க்கு மட்டும் பாதுகாப்பு அளிப்பது மட்டுமல்லாமல், தடுப்பு, மேம்பாடு, குணப்படுத்தல், புனர்வாழ்வு மற்றும் நோய்த்தணிப்பு சேவைகள் உட்பட முழுமையான முதன்மை சுகாதாரப் பராமரிப்புக்கான நியாயமான அணுகலையும் உறுதி செய்கிறது.


உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்பது, பல சர்வதேச உடன்படிக்கைகளில் எடுத்துரைக்கப்பட்டு, 1978-ம் ஆண்டு அல்மா-அட்டா பிரகடனத்தில் (Alma-Ata Declaration) உலக சுகாதார அமைப்பால் (World Health Organisation (WHO)) வலுப்படுத்தப்பட்ட, ஆரோக்கியத்திற்கான உலகளாவிய மனித உரிமையில் வேரூன்றியுள்ளது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் 2010-ம் ஆண்டு உலக சுகாதார அறிக்கை, நிதி சீர்திருத்தம் மற்றும் இடர் பாதுகாப்பு ஆகியவற்றை உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு வழியாக வலியுறுத்தியது. அதைத் தொடர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு குறித்த தீர்மானம் இந்த செயல்திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. பின்னர், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு நிலையான வளர்ச்சி இலக்குகளில் இணைக்கப்பட்டது.


நடைமுறையில், இந்தியா உட்பட பல நாடுகளில் சமீபத்திய சீர்திருத்தங்கள், முதன்மைப் பராமரிப்பு அணுகுமுறையை பலவீனப்படுத்தி, பொது சுகாதாரக் காப்பீடு மூலம் நிதிப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துள்ளன. இந்தத் திட்டங்கள் மருத்துவமனையில் சேர்வதற்கான செலவுகளை ஈடுசெய்வதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், அவை வெவ்வேறு நோய்களுக்கான தொகுப்புகளையும் வரையறுக்கின்றன. நோயாளிகள் பெரும்பாலும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது என்பதை சான்றுகள் காட்டுகின்றன. இத்தகைய செலவினங்கள், தொகுப்புகளால் ஈடுசெய்யப்படாத அல்லது போதுமான அளவு காப்பீடு செய்யப்படாமலோ அல்லது சேவை வழங்குநர்களால் காப்பீட்டு விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாலோ ஏற்படுகின்றன.


மாறாக, நன்கு நிதியளிக்கப்பட்ட பொது சுகாதார அமைப்புக்குள், வலுவான முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்கள் முன்னுரிமையாகச் செயல்படும் வகையில் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் வடிவமைக்கப்படும்போது, ​​அதன் விளைவுகள் சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது. பல கிழக்கு ஆசிய நாடுகள் காப்பீட்டு அணுகுமுறை மூலம் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டன. ஆனால், காலப்போக்கில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பையும் வலுப்படுத்தியுள்ளன. வயதான மக்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் இத்தகைய மாற்றங்களை அவசியமாக்கியுள்ளன. சீனா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் இப்போது ஏறக்குறைய அனைவருக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளது. இருப்பினும், இது அரசாங்கத்திற்கு மிகவும் செலவு மிக்கதாக இருந்துள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனா செலவுகளைக் கட்டுப்படுத்தவும், தடுப்பு, ஆரம்பகால கண்டறிதல் மற்றும் பின்தொடர் பராமரிப்பில் கவனம் செலுத்தி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பை வலுப்படுத்துவதில் முதலீடு செய்யவும் முடிவு செய்தது. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விரிவான மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


பொதுச் செலவினங்களுக்கான அர்ப்பணிப்பு என்பது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பராமரிப்பு நிலைகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சமாகும். கிழக்கு ஆசிய மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சேவைகளை வழங்குவதில் தனியார் துறையின் பங்களிப்புடன் வலுவான பொது அமைப்புகள் உள்ளன. ஒரு வலுவான பொதுத் துறை, தரம் மற்றும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் தனியார் துறையைக் கட்டுப்படுத்துவதில் ஒரு அரணாகச் செயல்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், இந்த நாடுகளில், கொள்கைகளைத் தீர்மானிப்பதில் தனியார் துறைக்கு உள்ள செல்வாக்கு ஒரு தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.


இந்தியா சுதந்திரத்திற்குச் சற்று முன்பு போரே குழுவால் (Bhore Committee) பரிந்துரைக்கப்பட்டபடி, அனைவருக்கும் சுகாதார வசதி வழங்குவதில் இந்தியாவுக்கு ஒரு நீண்டகால அர்ப்பணிப்பு உள்ளது. ஒரு வலுவான ஆரம்ப சுகாதார அமைப்பு உருவாகும்வரை பொதுக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படக்கூடாது என்று அக்குழு அறிவுறுத்தியது. இருப்பினும், ஆரம்ப சுகாதாரத்திற்குத் தொடர்ச்சியாகப் போதிய நிதி ஒதுக்கப்படாததால், பொதுத் துறையின் சேவைகள் பலவீனமடைந்துள்ளன. இது தனியார் துறையைச் சார்ந்திருப்பதை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. தேசிய மாதிரி கணக்கெடுப்புத் தரவுகள் (National Sample Survey data), ஏழைகள் பெருகிவரும் விலை உயர்ந்த தனியார் சுகாதார சேவைகளைச் சார்ந்து இருப்பதை வெளிப்படுத்துகின்றன. இது குடும்பக் கடன்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.


தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (National Rural Health Mission(NRHM), இப்போது National Health Mission (NHM)) போன்ற முன்முயற்சிகள் இருந்தபோதிலும், சுகாதார அமைப்பில் பலவீனங்கள் இன்னும் உள்ளன. சில மாநிலங்கள் பொதுசுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்கள் மூலம் சுகாதார சேவைகளுக்கான அணுகலில் உள்ள சமமற்ற நிலைகளையும், சிகிச்சையின் அதிகரித்துவரும் செலவுகளையும் குறைக்க முயன்றன. 2008-ல், ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (Rashtriya Swasthya Bima Yojana) காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முன்முயற்சிகளின் மூலம், இந்தத் திட்டங்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை ஒரு நீடித்த கவனமாக மாற்ற உதவியது.


கோவிட் பெருந்தொற்று, சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களுக்கான அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும், பல நாடுகளில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு என்பதிலிருந்து அனைவருக்கும் சுகாதார சேவை என்ற நிலைக்கு மாற வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனத்தை ஈர்த்தது. பல சுகாதார சவால்களைக் கருத்தில் கொண்டு, விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தின் சமூகத் தீர்மானிக்கும் காரணிகளில் பொது முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இந்தியா இந்த வழியைப் பின்பற்றுவது அவசியமாகிறது.


பாரு, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் பேராசிரியர் ஆவார். கேஷ்ரி, ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் ஜிண்டால் பொது சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுப் பள்ளியின் இணைப் பேராசிரியராகவும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள UNSW-யின் துணை மூத்த விரிவுரையாளராகவும் உள்ளார்.


Original link:

Not just insurance, Indians need universal healthcare


Share:

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100% ஆக உயர்த்துவதற்கான மசோதாவை மக்களவையில் அரசு அறிமுகப்படுத்துகிறது.


Oபிரதமர் மோடி எப்போதும் சாதாரண மக்களுக்குக் காப்பீடு வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் என்றும், கோவிட் பெருந்தொற்று காலத்திலும் அரசாங்கம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் காப்பீட்டு வசதியை வழங்கியது என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை (Foreign Direct Investment (FDI)) 100%-ஆக உயர்த்துவதற்கான மசோதா செவ்வாய்க்கிழமை மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது.


நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரப்பட்ட மசோதாவின்படி, சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) சட்டம், 2025, 1938-ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்டம், 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் மற்றும் 1999ஆம் ஆண்டு காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டம் போன்ற சட்டங்களில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100%-ஆக உயர்த்துவதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய உள்ளது.


மசோதாவை அறிமுகப்படுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பொது மக்களின் காப்பீடு எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தில் இருந்து வருகிறது. மேலும், கோவிட் தொற்றுநோய்களின் போதும் ஒன்றிய அரசு சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினருக்கு காப்பீட்டை வழங்கியுள்ளது” என்று கூறினார்.


எதிர்க்கட்சி உறுப்பினர்களில் சிலரின் ஆட்சேபனைகள் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். மேலும், முன்மொழியப்பட்ட சட்டம் குறித்த விவாதத்தின்போது அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருப்பதாக என்று நிதியமைச்சர் கூறினார்.


இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து, ஆர்.எஸ்.பி உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன், "இந்த மசோதாவின் பெயருக்கும் அதன் உள்ளடக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று கூறினார். காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்ற முன்மொழிவையும் அவர் எதிர்த்தார்.


திமுக உறுப்பினர் டி. சுமதி அவர்களும், காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா ராய், "இந்த மசோதாவின் பெயர் ஆளும் கூட்டணியின் முழக்கங்களைப் போலத் தெரிகிறது என்றும் இதுபோன்ற பெயர்கள் எந்த மசோதாவிலும் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று கூறினார். 100% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது காப்பீட்டுத் துறையில் ஒரு பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


மசோதாவின் வரைவின்படி, இந்தத் திருத்தம் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இருப்பினும், தலைவர், நிர்வாக இயக்குநர் அல்லது தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.


இது காப்பீட்டு அல்லாத ஒரு நிறுவனத்தை காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்பதற்கும் வழிவகுக்கிறது. இந்த மசோதா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12, 2025) அன்று ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது. குறிக்கோள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கையின்படி, காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துவதையும், பாலிசிதாரர்களின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்வதையும் இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மசோதா, காப்பீட்டுதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக காப்பீட்டுதாரர்கள் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை உருவாக்குவதற்கு வழிவகை செய்கிறது. இது காப்பீட்டு நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதுடன், ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் மற்றும் இந்தத் துறை மீதான ஒழுங்குமுறை மேற்பார்வையை மேம்படுத்தும்.


தலைவர் மற்றும் பிற முழுநேர உறுப்பினர்களின் பதவிக்காலத்தைப் பொறுத்தவரை, ஐந்து ஆண்டுகள் அல்லது அவர்களுக்கு 65 வயது ஆகும் வரை, இவற்றில் எது முன்னர் நடைபெற்றாலும் அதுவரை பதவியில் இருக்கலாம் என்று இந்த மசோதா வழிவகை செய்கிறது. தற்போது, ​​முழுநேர உறுப்பினர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 62 ஆண்டுகளாகவும், தலைவருக்கு 65 ஆண்டுகளாகவும் உள்ளது. நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், புதிய தலைமுறை நிதித்துறை சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, காப்பீட்டுத் துறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தார்.


இதுவரை, காப்பீட்டுத் துறை ரூ.82,000 கோடியை அந்நிய நேரடி முதலீட்டின் மூலம் ஈர்த்துள்ளது. LIC சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், கிளை விரிவாக்கம் மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற செயல்பாட்டு முடிவுகளை எடுக்க அதன் வாரியத்திற்கு அதிகாரம் அளிக்க முன்மொழிகின்றன.

முன்மொழியப்பட்ட திருத்தம், முதன்மையாக காப்பீட்டுதாரர்களின் நலன் மற்றும் அவர்களின் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துதல், காப்பீட்டு சந்தையில் கூடுதல் பங்குதாரர்கள் நுழைவதை எளிதாக்குதல், அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Original link:

Government introduces Bill in Lok Sabha to hike FDI in insurance sector to 100%


Share:

புதிய காப்பீட்டு மசோதா : இதில் என்ன உள்ளது, என்ன விடுபட்டுள்ளது? -ஜார்ஜ் மேத்யூ

சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) மசோதா-2025-ன் (Sabka Bima Sabki Raksha (Amendment of Insurance Laws) Bill) இறுதி வரைவில் சாதகமான அம்சங்களும் உள்ளன, பாதகமான அம்சங்களும் உள்ளன. அதன் ஒரு கண்ணோட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 12, வெள்ளிக்கிழமை அன்று, மத்திய அமைச்சரவை சப்கா பீமா சப்கி ரக்ஷா (காப்பீட்டுச் சட்டங்கள் திருத்தம்) மசோதா-2025-க்கு (Sabka Bima Sabki Raksha (Amendment of Insurance Laws) Bill) ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதல், மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவதற்கான வழிவகை ஏற்பட்டது.


இந்த மசோதா, இந்தியாவின் காப்பீட்டு கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 1938-ம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தில் (Insurance Act) பரந்த அளவிலான மாற்றங்களை முன்மொழிகிறது. மேலும், இது 1956-ம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகச் சட்டம் (Life Insurance Corporation Act) மற்றும் 1999-ம் ஆண்டு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் (Insurance Regulatory and Development Authority of India(IRDAI)) சட்டத்திலும் திருத்தங்களை முன்மொழிகிறது. இந்தத் துறையை நவீனமயமாக்குதல், பரந்த காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வை ஆகியவையே இதன் குறிப்பிடப்பட்ட இலக்குகளாகும்.


இருப்பினும், இறுதி வரைவு சாதகமான மற்றும் பாதகமான அம்சங்கள் இரண்டையும் காட்டுகிறது. 100% அந்நிய நேரடி முதலீடு (FDI) போன்ற நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பல மாற்றங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒருங்கிணைந்த உரிமம் போன்ற பிற முக்கியமான தொழில்துறை கோரிக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளன அல்லது நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. இது மசோதாவின் ஒட்டுமொத்த தாக்கம் குறித்து பங்குதாரர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் தற்போதைய குளிர்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மசோதா, தொழில்துறை எதிர்பார்ப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் அரசாங்கத்தின் பரந்த நிதித்துறை சீர்திருத்த செயல்திட்டம் ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதால், இது விவாதங்களைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மசோதாவில் என்னென்ன உள்ளன?


100% அந்நிய நேரடி முதலீடு (Foreign Direct Investment (FDI)) : இந்தத் திருத்தம் இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 74%-லிருந்து 100% ஆக உயர்த்தும். இந்த மாற்றம் நிலையான மற்றும் நீண்டகால முதலீடுகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொழில்நுட்பப் பரிமாற்றத்தை எளிதாக்கவும், காப்பீட்டுப் பரவல் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தவும், '2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' (Insurance for All by 2047) என்ற இலக்கை அடையவும் உதவும். தற்போது இந்தியாவில் சுமார் 70 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. அதேசமயம், உலகளவில், ஏறக்குறைய 10,000 காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளன. இந்த உலகளாவிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒரு சிறிய பகுதியினர் இந்திய சந்தையில் நுழைந்தாலும்கூட, நாட்டிற்குள் வரும் மூலதனத்தின் அளவு கணிசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 100% ஆக உயர்த்துவது, இந்தியாவின் காப்பீட்டுத் துறையை உலகமயமாக்குவதற்கான ஒரு தீர்க்கமான படியாகும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தச் சீர்திருத்தம் அதிக அளவிலான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய தயாரிப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தம், இடர் மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் போட்டியை அதிகரிக்க வேண்டும். மிக முக்கியமாக, இது அதிநவீன காப்பீட்டு உறுதி மாதிரிகள் மற்றும் மின்னணு உரிமைகோரல் தளங்கள் முதல் மேம்பட்ட இடர் மதிப்பீட்டுக் கருவிகள் வரை உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கான அணுகலையும் கொண்டு வரும். இது தொழில்துறையின் மீள்தன்மை மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்தும். இந்த மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவான காப்பீட்டு சுற்றுச்சூழல் அமைப்பிற்கான அடித்தளத்தை அமைக்கின்றன.


இந்திய காப்பீட்டு தரகர்கள் சங்கத்தின் (Insurance Brokers Association of India (IBAI)) தலைவர் நரேந்திர பரிந்த்வால், இந்தத் துறையை உலகளாவிய மூலதனத்திற்கு முழுமையாகத் திறப்பது இந்தியாவின் காப்பீட்டு சந்தை மற்றும் அதன் விதிமுறைகள் மீதான நம்பிக்கையைக் காட்டுகிறது என்று கூறினார். இந்த மாற்றம் காப்பீட்டாளர்கள் நீண்டகால மூலதனம், உலகளாவிய இடர் மேலாண்மை நிபுணத்துவம், சிறந்த நடைமுறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பெற அனுமதிக்கும். காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும், சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், இந்தியா முழுவதும் உரிமைகோரல்கள் மற்றும் சேவையை மேம்படுத்துவதற்கும் இவை முக்கியம் என்று குறிப்பிட்டார்.


அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100%-ஆக அதிகரிப்பது காப்பீட்டுத் துறைக்கு ஒரு வலுவான ஊக்கியாக செயல்படும் என்று யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஷரத் மாத்தூர் கூறினார். மேலும், “அதிக மூலதன காப்பீட்டாளர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும், இருப்புநிலைக் குறிப்புகளை வலுப்படுத்தவும், மேம்பட்ட இடர் மதிப்பீட்டு மாதிரிகள் மற்றும் மிகவும் திறமையான உரிமைகோரல் மேலாண்மை அமைப்புகளில் முதலீடு செய்யவும் உதவும்,” என்று அவர் கூறினார்.


வெளிநாட்டு மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கான சலுகைகள் (Sops for foreign reinsurers) : வெளிநாட்டு மறு காப்பீட்டு நிறுவனங்களுக்கான நிகர சொந்த நிதித் தேவை (இதில் பங்கு மூலதனம், இலவச இருப்புக்கள், பங்கு தவணைக் கட்டண கணக்கில் உள்ள இருப்பு மற்றும் உபரியைக் குறிக்கும் மூலதன இருப்புக்கள் ஆகியவை அடங்கும்) ரூ.5,000 கோடியிலிருந்து ரூ.1,000 கோடியாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது மேலும் பல மறு காப்பீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைவதை எளிதாக்கி, நாட்டில் அதிக மறு காப்பீட்டுத் திறனை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். இது உலகளாவிய மறு காப்பீட்டு நிறுவனங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த விதிமுறைகளைத் தளர்த்துவதன் நோக்கம், சிறிய மற்றும் புதிய கால மறு காப்பீட்டு நிறுவனங்களை இந்தியாவிற்கு ஈர்ப்பதும், தற்போது பொதுத்துறை நிறுவனமான இந்திய பொது காப்பீட்டுக் கழகத்தின் (General Insurance Corporation of India(GIC Re)) ஆதிக்கத்தில் உள்ள இந்தத் துறையில் போட்டியை விரிவுபடுத்துவதும் ஆகும்.


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்துக்கு (IRDAI) கூடுதல் அதிகாரங்கள் : பாலிசிதாரர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மேம்படுத்தப்பட்ட அமலாக்க அதிகாரங்களைப் பெற உள்ளது. இதில் காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது இடைத்தரகர்களால் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட ஆதாயங்களைப் பறிமுதல் செய்யும் அதிகாரமும் அடங்கும். இது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தண்டனை வழங்கும் திறன்களை, விதிமீறல்களில் ஈடுபடுவோரிடமிருந்து சட்டவிரோதமாக ஈட்டிய லாபங்களை வசூலிக்கும் அதிகாரம் கொண்ட செபி-யின் (SEBI) திறன்களுக்கு இணையாகக் கொண்டுவருகிறது.


தொழில்துறை செயல்பாடுகளை மேலும் நெறிப்படுத்தவும், காப்பீட்டாளர்களுக்கு தடையற்ற சேவையை உறுதி செய்யவும், இந்த மசோதா காப்பீட்டு இடைத்தரகர்களுக்கு ஒருமுறை பதிவு செய்யும் (one-time registration) முறையை முன்மொழிகிறது. இது மீண்டும் மீண்டும் ஒப்புதல்கள் பெறும் தேவையை நீக்கி, இணக்க நடைமுறைகளை எளிதாக்குகிறது. வணிக செயல்முறைகளை எளிதாக்கும் மற்றொரு நடவடிக்கையாக, காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை மாற்றுவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) ஒப்புதல் தேவைப்படும் வரம்பு 1%-லிருந்து 5% ஆக உயர்த்தப்படும். இது பங்கு பரிமாற்றங்களை எளிதாக்கி, ஒழுங்குமுறைத் தடைகளைக் குறைக்கும்.


இந்தத் திருத்தம் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்குள் (IRDAI) வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், ஒழுங்குமுறை நிர்வாகத்தை வலுப்படுத்தவும் முயல்கிறது. ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கான ஒரு முறையான நிலையான இயக்க நடைமுறை (standard operating procedure (SOP)) சட்டத்தில் இணைக்கப்படும். இது மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் கணிக்கக்கூடிய விதி உருவாக்கும் செயல்முறையை உறுதி செய்யும். கூடுதலாக, இந்த மசோதா அபராதம் விதிப்பதற்கான தெளிவான அளவுகோல்களை அறிமுகப்படுத்துகிறது. இது அமலாக்கத்தை மிகவும் பகுத்தறிவுள்ளதாகவும், வெளிப்படையானதாகவும், அனைத்து வழக்குகளிலும் சீரானதாகவும் ஆக்குகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த நடவடிக்கைகள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (IRDAI) கடுமையான விதிகளை வழங்குவதையும், தேவையற்ற இணக்கச் சுமைகளைக் குறைப்பதையும், மேலும் வலுவான, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் காப்பீட்டாளர்களுக்கு உகந்த காப்பீட்டு ஒழுங்குமுறைக் கட்டமைப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.


ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கு (LIC) கூடுதல் அதிகாரங்கள் : புதிய திருத்தங்களின் கீழ், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (Life Insurance Corporation of India (LIC)) அதிக செயல்பாட்டுச் சுதந்திரம் வழங்கப்படுகிறது. இது அந்த நிறுவனம் அதிக சுதந்திரமாகச் செயல்படவும், விரைவாக முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கும். இந்த மசோதா, முன் அரசு அனுமதி இல்லாமல் புதிய மண்டல அலுவலகங்களைத் திறக்க ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கு (LIC) அதிகாரம் அளிக்கிறது. இது விரைவான விரிவாக்கம், மேம்பட்ட நிர்வாகத் திறன் மற்றும் சிறந்த பிராந்திய மேற்பார்வைக்கு வழிவகுக்கும். கூடுதலாக, ஆயுள் காப்பீட்டு கழகத்திற்கு (LIC) தனது வெளிநாட்டுச் செயல்பாடுகளை, அது செயல்படும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு ஏற்ப மறுசீரமைத்து சீரமைக்க அனுமதிக்கப்படும். இந்த நெகிழ்வுத்தன்மை, வெளிநாட்டு இணக்கத் தேவைகளுக்கு ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) விரைவாகத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளவும், அதன் உலகளாவிய இருப்பை வலுப்படுத்தவும், உள்நாட்டில் பல அடுக்கு ஒப்புதல் செயல்முறைகளால் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும் உதவும். ஒட்டுமொத்தமாக, இந்த மாற்றங்கள் ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (LIC) நிர்வாகக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகள் இரண்டிலும் திறம்பட செயல்படக்கூடியதாகவும், அதிக செயல்திறன் மிக்கதாகவும், போட்டித்தன்மை கொண்டதாகவும் மாறும்.


இந்த மசோதாவில் விடுபட்டிருக்கக்கூடியவை என்ன?


ஒருங்கிணைந்த உரிமம் (Composite license) : இந்த மசோதாவில் உள்ள மிக முக்கியமான குறைபாடுகளில் ஒன்று, ஒருங்கிணைந்த உரிமங்களுக்கான விதிகள் இல்லாததுதான். இது பல காப்பீட்டு நிறுவனங்களால் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்ட ஒரு சீர்திருத்தமாகும். தற்போதுள்ள 1938-ம் ஆண்டு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ், காப்பீட்டாளர்கள் கடுமையான வரம்புகளை எதிர்கொள்கின்றனர். ஆயுள் காப்பீட்டாளர்கள் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் மட்டுமே விற்க முடியும். பொது காப்பீட்டாளர்கள் ஆயுள் காப்பீட்டுப் பிரிவில் நுழைய முடியாது. இந்த கடுமையான பிரிவு பல பத்தாண்டுகளாக இந்தத் துறையை வரையறுத்து, நிறுவனங்கள் ஒரே நெறிமுறைகளின் கீழ் முழு அளவிலான காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்குவதைத் தடுக்கிறது.


ஒரு ஒருங்கிணைந்த உரிமம், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத பிரிவுகள் (life and non-life segments) இரண்டிலும் செயல்பட அனுமதிப்பதன் மூலம் இந்த நிலப்பரப்பை அடிப்படையாக மாற்றியிருக்கும். இது இத்துறையின் நீண்டகாலப் பிரிவுகளை அகற்றி, காப்பீட்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்த, தொகுக்கப்பட்ட சலுகைகளை வடிவமைக்க உதவியிருக்கும். உதாரணமாக, ஆயுள் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு மற்றும் பொதுக் காப்பீட்டுத் தயாரிப்புகளை ஒரே தொகுப்பாக இணைப்பது ஆகும். வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பல காப்பீடுகளை நிர்வகிப்பதற்குப் பதிலாக, வாடிக்கையாளர்கள் நிர்வாக வசதி, எளிமை மற்றும் விரிவான பாதுகாப்பைத் தேடுவதால், இத்தகைய தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.


அரசாங்கம் ஒருங்கிணைந்த உரிமங்களை அனுமதித்திருந்தால், பல முக்கிய நிறுவனங்கள் புதிய வணிகத் துறைகளில் நுழைந்திருக்கலாம் அல்லது விரிவடைந்திருக்கலாம். இது புதிய போட்டி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவித்திருக்கும். காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புத் தொகுப்புகளை விரிவுபடுத்தவும், குறுக்கு விற்பனை வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த உரிமங்களை தீவிரமாகப் பின்தொடரும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்த்தனர்.


ஒருங்கிணைந்த உரிமங்கள் காப்பீட்டுத் துறைக்கு ஒரு பெரிய மாற்றமாகக் கருதப்படுகின்றன. அவை உலகளாவிய தரத்திற்கு இணையான, சீரான மற்றும் எளிதான காப்பீட்டு அனுபவங்களை வழங்க அனுமதிக்கின்றன. இந்த மசோதாவிலிருந்து அவை விலக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க தவறவிடப்பட்ட வாய்ப்பாகும். இது இந்தியாவின் காப்பீட்டுத் துறையின் நீண்டகால கட்டமைப்புப் பிரச்சனைகளை மாற்றமின்றி அப்படியே வைத்திருக்கச் செய்கிறது.


குறைக்கப்பட்ட மூலதன விதிமுறைகள் மற்றும் புதிய நிறுவனங்கள் : இந்த மசோதாவில் மற்றொரு முக்கிய அம்சம் விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது. இது புதிய காப்பீட்டாளர்களுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைகளைக் குறைப்பதாகும். தற்போது, காப்பீட்டு நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.100 கோடியாகவும், மறுகாப்பீட்டாளர்களுக்கு ரூ.200 கோடியாகவும் இருக்க வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இந்த வரம்புகள் நீண்டகாலமாக மிக அதிகமாகவும் என்று விமர்சிக்கப்படுகின்றன. இவை சிறப்பு வாய்ந்த, பிராந்திய அல்லது குறிப்பிட்ட பிரிவு நிறுவனங்கள் சந்தையில் நுழைவதைத் தடுக்கின்றன. பரிந்துரைக்கப்பட்ட சீர்திருத்தம் இந்த மூலதன விதிமுறைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதனால் சிறிய, புதுமையான மற்றும் பிராந்தியத்தை மையமாகக் கொண்ட காப்பீட்டாளர்கள் இந்தத் துறையில் பங்கேற்க முடியும். மூலதனத் தேவைகளைக் குறைப்பது, குறைந்த சேவைப் பிரிவுகளை, குறிப்பாக கிராமப்புற சந்தைகள், முறைசாரா துறை தொழிலாளர்கள், நுண் வணிகங்கள், கிக் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இலக்காகக் கொள்ளக்கூடிய புதிய நிறுவனங்களுக்கு கதவுகளைத் திறந்திருக்கும். இந்தத் தரப்பினரிடையே காப்பீட்டுப் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது.


நுழைவுத் தடையைக் (entry barrier) குறைப்பதன் மூலம், இந்தத் துறை சுகாதாரம் மட்டும் அல்லது நுண் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற சிறப்பு காப்பீட்டாளர்களுக்கு வழிவகுத்திருக்கலாம். இது அதிக போட்டி, பல்வகைத்தன்மை மற்றும் நுகர்வோர் தேர்வை உருவாக்குகிறது. உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் சமூக அணுகல் கொண்ட காப்பீட்டாளர்கள் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்குவதன் மூலம் நிதி சேர்க்கையை இது அதிகரித்திருக்கும். எனவே மசோதாவில் இந்த விதி இல்லாதது தவறவிட்ட வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இது சந்தை கட்டமைப்பை மறுவடிவமைத்து, ஊடுருவலை வலுப்படுத்தி, இந்தியா முழுவதும் உள்ளடக்கிய காப்பீட்டு வளர்ச்சியை தீவிரப்படுத்தியிருக்கக்கூடும்.


பல பிற திட்டங்கள் : இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட உண்மையான காப்பீட்டு திருத்த மசோதா, பரஸ்பர நிதிகள், கடன்கள் மற்றும் வரவு அட்டைகள் (credit cards) போன்ற பிற நிதி தயாரிப்புகளை விநியோகித்திருக்கவும், புதிய வருவாய் வழிகளை உருவாக்கவும், ஒருங்கிணைந்த தீர்வுகளை வழங்கவும், மூலதனத் தேவைகளைக் குறைக்கவும் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப முதலீட்டு விதிமுறைகளை திருத்துவதில் அதிக நெகிழ்வுத்தன்மையையும், காப்பீட்டுத்தாரர்களுக்கான வருமானத்தை மேம்படுத்தவும் இது முன்மொழிந்தது. இதைத்தவிர, தனிப்பட்ட காப்பீட்டு முகவர்கள் பல நிறுவனங்களின் காப்பீடுகளை விற்க அனுமதிப்பதையும், ஒரு ஆயுள் மற்றும் ஒரு பொது காப்பீட்டாளருக்கு மட்டுமே கட்டுப்படுத்தும் தற்போதைய கட்டுப்பாட்டை நீக்குவதையும் இது முன்மொழிந்தது.

இந்தியாவின் இடர் மேலாண்மை சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குவதற்கு அவசியமானதாக பல தொழில்துறை தலைவர்கள் கருதிய கேப்டிவ் காப்பீட்டு நிறுவனங்களை (captive insurance units) நிறுவுவதற்கு பெரிய நிறுவனங்களை அனுமதிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட திட்டம் குறித்தும் இந்த மசோதா நிவர்த்தி செய்ய வாய்ப்பில்லை. இது பல தொழில்துறை தலைவர்கள் இந்தியாவின் இடர் மேலாண்மை சுற்றுச்சூழல் அமைப்பை நவீனமயமாக்குவதற்கு அவசியமானது என்று கருதினர். கேப்டிவ் காப்பீட்டாளர்கள், தங்கள் முதன்மை நிறுவனங்களின் அபாயங்களை காப்பீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட முழு உரிமையுள்ள காப்பீட்டு துணை நிறுவனங்கள் ஆகும். சிக்கலான வெளிப்பாடுகளை நிர்வகிக்கவும், காப்பீட்டு செலவுகளைக் குறைக்கவும், காப்பீட்டு மற்றும் கோரிக்கைகள் மீது அதிக கட்டுப்பாட்டைச் செலுத்தவும் பெரிய நிறுவனங்களால் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


Original link: 

New Insurance Bill: What’s in & what’s left out?


Share: