e-KYC விதிமுறைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை விலக்குகின்றனவா? -சோபனா கே. நாயர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பை (e-KYC) மத்திய அரசு ஏன் கட்டாயப்படுத்துகிறது? மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) முறைக்கு முன்பு, சரிபார்ப்புக்கு வேறு எந்த முறையும் இல்லையா? தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System) என்றால் என்ன?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பை (e-KYC) மத்திய அரசு ஏன் கட்டாயப்படுத்துகிறது? மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) முறைக்கு முன்பு, சரிபார்ப்புக்கு வேறு எந்த முறையும் இல்லையா? தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System) என்றால் என்ன?


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) 2.69 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் 26 கோடி பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில், சுமார் 15 லட்சம் தொழிலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி  மற்றும் நவம்பர் மாதம் 14-ஆம் தேதிக்கு இடைப்பட்ட ஒரே மாதத்தில், நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஆறு மாத மொத்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இருமடங்காகும். இதே காலகட்டத்தில் சேர்க்கப்பட்ட 10.5 லட்சம் தொழிலாளர்களை விட இது மிக அதிகம். இந்த நீக்கங்களின் அதிகரிப்பு, தகுதியற்ற தொழிலாளர்களை அகற்ற, தொழிலாளர்களுக்கு மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பு  உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (e-KYC-know your customer) சரிபார்ப்பை மேற்கொள்ள மத்திய அரசு எடுத்த நடவடிக்கையுடன் ஒத்துப்போகிறது.


அரசாங்கத்தின் காரணங்கள் என்ன?



ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பணியாளர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தச் செயல்பாட்டில், மின்னணு-வாடிக்கையாளர் (e-KYC) முறையானது மற்றொரு படியாகும். இது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் சேவை வழங்குதலை மேம்படுத்தும். இதுவரை, அனைத்து மாநிலங்களிலும் உள்ள 56 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் தங்கள் மின்னணு-வாடிக்கையாளர் சரிபார்ப்பை முடித்துள்ளனர்.


முன்பு தொழிலாளர்கள் எவ்வாறு சரிபார்க்கப்பட்டனர்?



ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் (MNREGA) பலன்களைத் தகுதியானவர்கள் மட்டுமே பெறுவதை உறுதிசெய்ய, அரசாங்கம் பல சரிபார்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மே மாதம் 2022-ஆம் ஆண்டு முதல் ஓராண்டு காலம் பரிசோதித்த பிறகு, தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (National Mobile Monitoring System (NMMS)) செயலி மூலம் டிஜிட்டல் வருகையைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கியது. ஒவ்வொரு ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பணித்தளத்திலும் உள்ள மேற்பார்வையாளர்கள், ஒரு நாளுக்கு இரண்டு முறை, தொழிலாளர்களின் புவிசார் குறியிடப்பட்ட (geotagged) புகைப்படங்களை எடுத்துப் பதிவேற்ற வேண்டும்.


ஜனவரி மாதம் 2023-ஆம் ஆண்டில், அரசாங்கம் ஆதார் அடிப்படையிலான கட்டண முறையையும் (Aadhaar Based Payment System (ABPS)) கட்டாயப்படுத்தியது. ABPS ஆனது தொழிலாளியின் 12 இலக்க ஆதார் எண்ணை அவர்களின் கட்டண முகவரியாகப் பயன்படுத்துகிறது. இந்த முறை செயல்பட, தொழிலாளியின் ஆதார் எண்ணானது, அவரது வேலை அட்டை (Job Card), வங்கிக் கணக்கு மற்றும் இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) தரவுத்தளம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், வங்கியின் நிறுவன அடையாள எண்ணும் (Institutional Identification Number (IIN)) இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (NPCI) தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


e-KYC எவ்வாறு செயல்படுகிறது?


மே மாதம் 2022-ஆம் ஆண்டு முதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தொழிலாளர்களின் வருகை அனைத்து வேலை தளங்களிலும் தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (NMMS) செயலியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த செயலியில் மின்னணு சரிபார்ப்பு வசதியும் உள்ளது. இதில், மேற்பார்வையாளர் தொழிலாளியின் புகைப்படத்தை எடுத்து, அந்தப் புகைப்படம் சரிபார்ப்புக்காகத் தொழிலாளியின் ஆதார் புகைப்படத்துடன் ஒப்பிடப்படுகிறது.


e-KYC இயக்கத்திற்கும் MNREGA தொழிலாளர்களின் பணி நீக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?


பல ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்கள் பதிவேடுகளில் இருந்து நீக்கப்படுவது இது முதல் முறையல்ல. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவே தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (NMMS) மற்றும் ஆதார் அடிப்படையிலான கட்டண முறை (ABPS) அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், இதுவே சில பணியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு (NMMS) மூலம், பணியாளர்கள் பெரும்பாலும் மோசமான இணைய (network) இணைப்பை, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், எதிர்கொண்டனர். மேலும், பலருக்கு இந்தத் தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. இந்தக் காரணங்களால், அவர்களின் வேலை பதிவு செய்யப்படவில்லை, அதனால் அவர்கள் ஊதியத்தை இழந்தனர் என்று புகார்கள் எழுந்தன. 


ஆதார் அட்டையை வேலை அட்டைகளுடன் இணைப்பதுதான் ஆதார் அடிப்படையிலான கட்டண முறையைப் (ABPS) பயன்படுத்துவதற்கான முதல் படியாகும். ஆனால், இது பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும், ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் வேலை அட்டையில் உள்ள விவரங்களுடன் பொருந்தவில்லை. ஒரு தொழிலாளியின் பெயரில் ஒரு சிறிய எழுத்துப் பிழை கூட அவரைத் திட்டத்திலிருந்து நீக்க காரணமாக இருந்தது. இதன் காரணமாக, ஆதார் அடிப்படையிலான கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, 2021–22 ஆண்டு  முதல் 2022–23 ஆண்டு வரையிலான காலத்தில் தொழிலாளர்கள் நீக்கப்படுவது என்பது 247 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பானது உறுதியளித்த “வெளிப்படைத்தன்மையை” (“transparency.”) கொண்டுவரத் தவறிவிட்டது. அமைப்பில் பதிவேற்றப்பட்ட பல புகைப்படங்கள் தேவையற்றவையாக அல்லது உண்மையான வேலைக்குத் தொடர்பில்லாதவையாக இருந்தன. பெரும்பாலும், தொழிலாளர்களின் புகைப்படங்கள் நேரடியாக எடுக்கப்படாமல், மற்ற புகைப்படங்களிலிருந்து நகலெடுக்கப்பட்டன. மேலும், உண்மையான தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தன. இந்தச் சிக்கல்களின் காரணமாக, அமைச்சகம் ஜூலை மாதம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இது, தொழிலாளர்களின் புகைப்படங்கள் மற்றும் வருகைப் பதிவை ஒவ்வொரு மட்டத்திலும்  கிராம பஞ்சாயத்து, தொகுதி (Block), மாவட்டம் மற்றும் மாநிலம்  சரிபார்க்குமாறு மாநிலங்களுக்குத் தெரிவித்தது. சுற்றறிக்கை வெவ்வேறு சரிபார்ப்பு சதவீதங்களை நிர்ணயித்தது: கிராம பஞ்சாயத்து அளவில் 100% தொழிலாளர்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தொகுதி அளவில் (Block): 20% புகைப்படங்கள் தோராயமாகச் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும்  மாவட்ட அளவில் 10% சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் மாநில அளவில் 5% சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு e-KYC அறிமுகப்படுத்தப்படுவதற்கான காரணங்களில் ஒன்று தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பின் (NMMS)  தோல்வியாகும்.


மின்னணு சரிபார்ப்பு முறை (e-KYC) காரணமாக வேலை அட்டை நீக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை அரசாங்கம் மறுத்துள்ளது. வேலை அட்டைகள் அல்லது பணியாளர்கள் எவ்வாறு நீக்கப்பட வேண்டும் என்பது குறித்த விரிவான நிலையான இயக்க நடைமுறையை (Standard Operating Procedure (SOP)) அமைச்சகம் ஏற்கனவே ஜனவரி மாதத்தில் வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது இந்தப் பணியாளர்களுக்கு நியாயம், பொறுப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, அனைத்து மாநிலங்களுக்கும் தெளிவான மற்றும் சீரான விதிகளை இந்த நிலையான இயக்க நடைமுறை வழங்குகிறது. இதில் தவறுதலாக நீக்கப்படுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்புகளும் இதில் அடங்கும். நீக்கப்பட முன்மொழியப்பட்ட பணியாளர்களின் பெயர்களை வெளியிடுவது மற்றும் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய போதுமான அவகாசம் அளிப்பது போன்றவை இதில் அடங்கும். எனினும், மின்னணு சரிபார்ப்பு நிறைவு விகிதங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் ஏன் இன்னும் அதிக எண்ணிக்கையிலான நீக்கங்கள் உள்ளன என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை. உதாரணமாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 78.4 சதவீதப்  பணியாளர்கள் மின்னணு சரிபாரப்பை நிறைவு செய்துள்ளனர். ஆனாலும், அங்கு 15.92 லட்சம் வேலை அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு (67.6%) 30,529 அட்டைகளையும், சத்தீஸ்கர் (66.6%) 1.04 லட்சம் அட்டைகளையும் நீக்கியுள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


Original Article: Are e-KYC norms excluding MGNREGA workers?


Share: