தென்னாப்பிரிக்காவில் நடந்த G20 உச்சி மாநாட்டில் நடந்தது என்ன? -ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி?


தென்னாப்பிரிக்காவில் நடந்த G20 உச்சிமாநாட்டில், அமெரிக்கா கூட்டத்தைப் புறக்கணித்து இறுதி உரையை உருவாக்குவதில் பங்கேற்கவில்லை என்றாலும், நவம்பர் 22ஆம் தேதியன்று  ஒரு கூட்டுப் பிரகடனத்தை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவின் செய்தித் தொடர்பாளர், இந்த ஆவணத்தை "மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது" என்று கூறினார். இது பல மாத வேலைகள் மற்றும் தீவிரமான இறுதி வாரத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மற்ற உறுப்பினர்களிடையே "மிகப்பெரிய ஒருமித்த கருத்து" இருந்ததாகவும் செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த சூழலில், G20 உச்சிமாநாடு 2025-ன் முக்கிய சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.


முக்கிய அம்சங்கள்:


122 பத்திகள் கொண்ட G20 பிரகடனத்தை, ஆப்பிரிக்க பிராந்தியத்தில் முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கூடியிருந்த பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். G20 தென்னாப்பிரிக்க உச்சிமாநாட்டில் இந்தியாவால் தனது G20 தலைமையின் முக்கிய இலக்குகள் எதிரொலிக்க முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநாட்டில் தலைவர்களின் அறிவிப்பு உலகளாவிய தெற்கின் பிரச்சினைகள் மற்றும் முன்னுரிமைகள் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்தது.


G20 பிரகடனத்தின் சிறப்பம்சங்கள்


1. உபுண்டுவின் உணர்வு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்: தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது பிரகடனம், “தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் கூடியிருந்த தலைவர்களான நாங்கள்... முதல் முறையாக, G20 கூட்டத்திற்காக ஆப்பிரிக்காவில் கூடியுள்ளோம் என்று கூறினார். உபுண்டுவின் உணர்வில், தனிப்பட்ட நாடுகள் தனியாக செழிக்க முடியாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். 'நாம் இருப்பதால் நான்' என்று பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படும் 'உபுண்டு'வின் ஆப்பிரிக்க தத்துவம், பரந்த வகுப்புவாத, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சூழலில் தனிநபர்களின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வலியுறுத்துகிறது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிப் போர்களையும் அவரது சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் மறைமுகமாகக் குறிப்பிட்டு, "இந்த சவாலான அரசியல் மற்றும் சமூக-பொருளாதார சூழலை எதிர்கொள்ளும் போது, சவால்களை கூட்டாக எதிர்கொள்ள பலதரப்பு ஒத்துழைப்பில் எங்கள் நம்பிக்கையை நாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறோம். உலகெங்கிலும் நடக்கும் போர்கள் மற்றும் மோதல்களால் ஏற்படும் மிகப்பெரிய மனித துன்பங்கள் மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம்.


2. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தத்திற்கான அழைப்பு: இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை (UN Security Council) சீர்திருத்தி, அதன் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்தது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தப்பட வேண்டும் என்று ஜி20 பிரகடனம் கூறியது. ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் போன்ற பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அது அழைப்பு விடுத்தது.


3. பயங்கரவாதம் கண்டிக்கப்படுகிறது: இந்தியாவின் பார்வையில், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களும் வெளிப்பாடுகளும் கண்டிக்கப்பட்டுள்ளன. "பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களும் வெளிப்பாடுகளும் நாங்கள் கண்டிக்கிறோம்" என்று ஆறாவது பத்தியில் உள்ளது.


4. பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்பில் கவனம் செலுத்துங்கள்: பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்பது குறித்தும், இந்த விவகாரத்தில், இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் முக்கிய விளைவுகளில் ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்றும் பிரகடனம் கூறியது. "பெண்கள் மற்றும் சிறுமிகளின் அதிகாரமளிப்புக்கான எங்கள் முழு உறுதிப்பாட்டையும், பாலின சமத்துவத்தை அடைவதற்கான சமூக மற்றும் பொருளாதார தடைகளை அவசரமாக அகற்றுவதையும் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும், அரசியல், பொருளாதார மற்றும் பொது வாழ்வில் முடிவெடுக்கும் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் முழுமையான, சமமான மற்றும் அர்த்தமுள்ள பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தை உறுதி செய்கிறோம். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். மேலும், அமைதியை உருவாக்குவதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கிறோம்.


2025ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டில் இந்தியாவால் முன்மொழியப்பட்ட முன்முயற்சிகள்:


இந்த ஆண்டு G20 உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வுக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும், G20 பரிசீலிக்க வேண்டிய ஆறு திட்டங்களை முன்மொழிந்தார்.


1.போதைப்பொருள்-பயங்கரவாதத் தொடர்பை எதிர்கொள்வதற்கான G20 முன்முயற்சி: நவம்பர் 22ஆம் தேதி, பிரதமர் மோடி G20 உச்சி மாநாட்டில், ஃபெண்டானில் (fentanyl) உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும் உதவுகிறது என்று கூறினார். இந்த உலகளாவிய அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொள்ள, "போதைப்பொருள்-பயங்கரவாத பொருளாதாரத்தை" "பலவீனப்படுத்த" "போதைப்பொருள்-பயங்கரவாத இணைப்பை எதிர்ப்பதற்கான G20 முன்முயற்சியை" அவர் முன்மொழிந்தார்.

2. G20-ஆப்பிரிக்கா திறன் பெருக்கத் திட்டம்: பிரதமர் மோடி முன்மொழிந்த இத்திட்டத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 10 லட்சம் சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களை உருவாக்கி பயிற்றுவிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

3. பிற முயற்சிகள்: G20 உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு மறுமொழி குழுவை உருவாக்குதல், உலகளாவிய பாரம்பரிய அறிவு கூட்டுக்குழுவை உருவாக்குதல், திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மை மற்றும் ஒரு முக்கியமான தனிமம் தொடர்பான சுற்றறிக்கை திட்டதையும் அவர் முன்மொழிந்தார்.


4. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) அணுகுமுறை அணுகல், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றில் உறுதியாக இருப்பதாக என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, உலகிற்கு “செயற்கை நுண்ணறிவிற்கு உலகளாவிய ஒப்பந்தம்" தேவை என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார். இதில் பயனுள்ள "மனித மேற்பார்வை, பாதுகாப்பு-வடிவமைப்பு, வெளிப்படைத்தன்மை" மற்றும் "போலியான புகைபடங்கள், குற்றம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு" செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் கடுமையான தடைகள் ஆகியவை அடங்கும்.



5. ஜோகன்னஸ்பர்க் உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் மோடி முக்கியமான தனிமங்கள், கண்ணியமான வேலை மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றி பேசினார். பிப்ரவரி 2026-ல் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டிற்கு அனைத்து G20 நாடுகளையும் அவர் அழைத்தார்.



20  நாடுகள் குழு (G20) பற்றி


1. G20 அல்லது இருபது நாடுகள் குழு, 19 நாடுகளைக் கொண்ட ஒரு குழுவாகும். அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஐக்கிய ரட்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றின் முறைசாரா குழுவாகும்.


2. இந்த உறுப்பினர்கள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமானதையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் கொண்டுள்ளனர். சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு மன்றமாக, அனைத்து முக்கிய சர்வதேச பொருளாதார பிரச்சினைகளிலும் உலகளாவிய கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை வடிவமைப்பதிலும் வலுப்படுத்துவதிலும் இந்தக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது.

3. ஐக்கிய நாடுகள் சபையைப் போல் இல்லாமல், G20-க்கு நிரந்தர செயலகம் அல்லது ஊழியர்கள் இல்லை. மாறாக, G20 தலைமைத்துவம் ஆண்டுதோறும் உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. மேலும், G20 நாடுகளின் கொள்கையை ஒன்றிணைத்தல், அதன் செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல் மற்றும் உச்சிமாநாடுகளை நடத்துதல் போன்றவை இந்தகுழுவின் முக்கிய பொறுப்பாகும்.


4. G20 தலைமைப் பொறுப்புக்கு “ட்ராய்கா” (Troika) என்ற மூன்று நாடுகளின் குழு ஆதரவு அளிக்கிறது. இதில் முந்தைய தலைமை நாடு, தற்போதைய தலைமை நாடு, அடுத்து வரவிருக்கும் தலைமை நாடு ஆகியவை அடங்கும். தென்னாப்பிரிக்காவின் தலைமை தாங்கிய போது, G20 உறுப்பினர்களாக பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா  போன்ற மூன்று நாடுகள் இடம் பெற்றிருந்தன.



Original Article: What happened at G20 Summit in South Africa? 


Share: