இந்தியப் புள்ளியியல் நிறுவன (ISI) வரைவு மசோதா, 2025 குறித்து எழுந்துள்ள கவலைகள் என்னென்ன? -ஷிவ் சகாய் சிங்

இந்தியப் புள்ளியியல் நிறுவனம் சட்டம், 1959-ஐ ரத்து செய்து, இந்தியப் புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2025-ஐ புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) ஏன் வெளியிட்டது? மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஏன் போராடுகிறார்கள்? இது நிறுவனத்தின் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை எவ்வாறு பாதிக்கும்?


கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதா, 2025-ன் வரைவை வெளியிட்டது. இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், ஏனெனில் இந்த நடவடிக்கை அந்த நிறுவனத்தை ஒரு “பதிவுசெய்யப்பட்ட அமைப்பிலிருந்து சட்டப்பூர்வமான கார்ப்பரேட் அமைப்பாக” மாற்றுவதன்மூலம் அதன் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கம் கொண்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.


இந்தியப் புள்ளியியல் நிறுவன மசோதாவின் (ISI) முக்கியத்துவம் என்ன?


இந்தியப் புள்ளியியல் நிறுவனம் ((Indian Statistical Institute (ISI)) 1931-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் P.C. மஹலனோபிஸ் என்பவரால் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. அன்று முதல் இது இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த நிறுவனம் முதலில் 1860-ஆம் ஆண்டின் சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் 1932-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் 1961-ஆம் ஆண்டின் மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் மறுபதிவு செய்யப்பட்டது. ஒரு சங்கமாக இருப்பது நிறுவனத்திற்கு அதன் சொந்த அமைப்பு விதிகள், துணை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை வழங்கியது. பாராளுமன்றம் 1959-ஆம் ஆண்டின் இந்தியப் புள்ளியியல் நிறுவன சட்டத்தை இயற்றியது. பின்னர், இந்தியப் புள்ளியியல் நிறுவானத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பல அறிஞர்கள் இந்த நிறுவனத்தின் வேர்களை வங்காள மறுமலர்ச்சியுடன் தொடர்புபடுத்துகிறார்கள், மேலும் இது இந்தியாவின் திட்டமிடல் மற்றும் கொள்கை அமைப்பை வடிவமைக்க உதவியது என்று கூறுகிறார்கள். இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கான அடிப்படையாக விளங்கும் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organisation - NSSO) இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் (Indian Statistical Institute - ISI) உருவாக்கப்பட்டது. பி.சி. மஹாலனோபிஸ் தவிர, சி.ஆர். ராவ் மற்றும் எஸ்.ஆர்.எஸ். வரதன் போன்ற சிறந்த அறிஞர்களை இந்தியப் புள்ளியியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியா முழுவதும் சுமார் 1,200 மாணவர்களையும் ஆறு மையங்களையும் கொண்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில், புள்ளியியல், கணிதம், அளவு பொருளாதாரம், கணினி அறிவியல், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், குறியாக்கவியல் மற்றும் பாதுகாப்பு, தர மேலாண்மை அறிவியல் மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி ஆகியவற்றில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை வழங்குகிறது.


கல்வியாளர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?


வரைவு மசோதாவை எதிர்ப்பவர்களின் முதன்மையான கவலை என்னவென்றால், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் நிறுவன நிலை எவ்வாறு  "ஒரு பதிவுசெய்யப்பட்ட சங்கத்திலிருந்து ஒரு சட்டரீதியான பெருநிறுவன அமைப்பாக" மாறும் என்பதே ஆகும்.


சுமார் 1,500 கல்வியாளர்கள் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (MoSPI) இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ராவ் இந்தர்ஜித் சிங் அவர்களுக்கு எழுதிய சமீபத்திய கடிதத்தில் குறிப்பிட்டதாவது, 1959-ஆம் ஆண்டு சட்டத்தை நீக்கவும், சங்கத்தை கலைக்கவும், மற்றும் சங்கத்தின் பொதுக்குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அடிப்படை ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு புதிய மசோதாவைக் கொண்டு வரவும் தெளிவான காரணம் இல்லை என்று வாதிட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில், மேற்கு வங்க சங்கங்கள் பதிவுச் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்திலிருந்து ஒரு "சட்டரீதியான பெருநிறுவன அமைப்பாக" மாறுவது சங்கங்கள் பதிவுச்சட்டத்தின் அதிகார வரம்பை மீறுவதாகவும் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 28-ஆம் தேதி, நூற்றுக்கணக்கான இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஒரு மனித சங்கிலியை உருவாக்கி, வடக்கு கொல்கத்தாவில் உள்ள நிறுவனத்தின் பி.டி.சாலை வளாகத்திற்கு அருகில் ஒரு பொதுக் கூட்டத்தையும் நடத்தினர்.


தற்போதைய 1959 சட்டம் (current 1959 Act) கல்வித்துறையின் பிரதிநிதித்துவம் மற்றும் அரசின் அத்துமீறலைத்தடுக்கக்கூடிய பாதுகாப்புகள் உள்ள ஒரு குழுவிற்கு அதிகாரம் அளிக்கிறது என்று புதிய வரைவு மசோதா எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனால், முன்மொழியப்பட்டுள்ள 2025 மசோதா, பிரிவு 15-ன் கீழ் வரையறுக்கப்பட்ட ஆளுநர்கள் வாரியத்திடம் (Board of Governors - BoG) கட்டுப்பாட்டை வழங்குகிறது, அதில் அரசு பரிந்துரைத்தவர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மேலும், பேராசிரியர்கள் மற்றும் கல்விசார் பங்குதாரர்களின் பங்கைக் குறைக்கிறது. முன்னாள் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) பேராசிரியர் மற்றும் மேற்குவங்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிநிறுவனத்தின் தலைவருமான அபிரூப் சர்க்கார் கூறுகையில், இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) அடிப்படை ஆராய்ச்சியில் கவனம் செலுத்துகிறது. பெருநிறுவன நிதி மாதிரிக்கான (corporate funding model) வரைவு மசோதாவின் அழுத்தம், அடிப்படை ஆராய்ச்சிக்கான நிதியைப் பெறுவதை கடினமாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின் பிரிவு-29, மாணவர் கட்டணங்கள், ஆலோசனை மற்றும் நிதியுதவி பெறும் ஆராய்ச்சி திட்டங்கள் உட்பட "வருவாயை ஈட்டுவதற்கான" வழிகளைப் பட்டியலிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.


மசோதாவை எதிர்ப்பவர்களின் மற்றொரு முக்கியப் பிரச்சனை என்னவென்றால், அனைத்து நியமனங்களும் இனிமேல் ஆளுநர் குழுவின் (BoG) மூலம் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர். முன்னதாக, இந்தியப்  புள்ளியியல் நிறுவனத்தின் 33 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பில் 10 பிரதிநிதிகள் (எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஒருவர் பணியாளர் மற்றும் ஒருவர் அறிவியல்சார்ந்த பணியாளர்) — ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு இருந்தனர். இப்போது, ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஒன்றிய அரசு, நிறுவனம் சார்ந்த நியமனங்களில் அரசியல் ரீதியாகத் தலையிடக்கூடும் என்ற அச்சத்தை புதிய மசோதா எழுப்பியுள்ளது என்று பேராசிரியர் சர்க்கார் கூறினார்.


அரசாங்கம் என்ன சொல்கிறது?


2031-ஆம் ஆண்டில் அதன் 100-வது ஆண்டை நெருங்கும்போது, இந்தியப் புள்ளியியல் நிறுவனமானது (ISI) இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல், தலைமை தாங்கும் உலகளாவிய நிறுவனமாகவும் மாற உதவுவதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கம் கூறுகிறது. பல ஆண்டுகளாக நான்கு குழுக்கள் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஆய்வு செய்துள்ளன என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியீடு தெரிவித்தது. அவற்றில் கடைசியாக, 2020-ஆம் ஆண்டில் டாக்டர் ஆர்.ஏ. மாஷேல்கர் தலைமையில் அமைந்த குழு, நிர்வாகத்தை மேம்படுத்துதல், கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் போட்டித்தன்மை உடையதாக மாற்றுவது ஆகியவற்றிற்கு முக்கிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்ததாகத் தெரிவிக்கின்றனர்.


அடுத்து என்ன?


இந்தச் சட்டமசோதாவை எதிர்ப்பதற்காக மாணவர்களும் கல்வியாளர்களும் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெரும்பாலும் நம்பியுள்ளனர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார், வரைவு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் மசோதா, 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய (புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை) இணை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்களும் பகிரங்கமாக இந்த வரைவுச் சட்டமசோதாவை எதிர்த்ததோடு, இது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அதனை எதிர்ப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.


original link:

What are the concerns over the draft ISI Bill, 2025? 


Share: