தற்போதைய செய்தி :
நாடு தனது 77-வது குடியரசு தினத்தைக் கொண்டாடிய பிறகு, இந்த நாள் 2001-ஆம் ஆண்டு ஜனவரி 26 குஜராத்தில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவின் 25-வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், 77-வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் போது, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சார்பில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (National Disaster Response Force (NDRF)) ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும் அலங்கார ஊர்தி, 'புஜ் நிலநடுக்கம்: 25 ஆண்டுகால மீள்திறன்' (Bhuj Earthquake: 25 Years of Resilience) என்ற கருப்பொருளின்கீழ், புஜ் நிலநடுக்கத்தின் 25 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் கடமைப் பாதையில் அணிவகுத்துச் சென்றது. இந்தச் சூழலில், புஜ் நிலநடுக்கம் மற்றும் நிலநடுக்கங்கள் பற்றி இங்கே :
முக்கிய அம்சங்கள்:
1. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவான குஜராத்தின் நிலநடுக்கத்தின் காரணமாக 20,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். 166,000 பேர் காயமைடந்தனர். ஏறக்குறைய 400,000 வீடுகள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனது. இந்த அதிர்வலைகள் 700 கிலோமீட்டருக்கும் மேல் பரவின. 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மேலும், 600,000 மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். புஜ் நகரம் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக இருந்தது.
2. புஜ் நிலநடுக்கம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவதில் இருந்து, இன்றைய மீட்பு நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் ஒரு முன்னெச்சரிக்கையாக மாற்றியதுடன், இன்றைய பேரிடர் மேலாண்மை கட்டமைப்புக்கு அடிப்படையாகவும் அமைந்தது.
3. குஜராத் இயல்பு நிலைக்குத் திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால், அதிக அளவிலான புனரமைப்புப் பணிகள் அந்த மாநிலம் விரைவாக மீண்டுவர உதவியது.
நிலநடுக்கம் (earthquake) என்றால் என்ன?
1. பூமியின் இரண்டு பகுதிகள் பூமிக்கு அடியில் ஒன்றுக்கொன்று உரசி நகரும்போது ஏற்படும் மிகத் தீவிரமான நில அதிர்வே நிலநடுக்கம் ஆகும். பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து நழுவும்போது இது நிகழ்கிறது என்று USGS கூறுகிறது. இது நில அதிர்வு அலைகளின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட 'மீள் திரிபு' (elastic strain) ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமி முழுவதும் பரவி நில அதிர்வை ஏற்படுத்துகிறது.
2. பூமியின் வெளிப்புற மேற்பரப்பான மேலோடு, புவித்தட்டுத் தகடுகளாகப் பிளவுபட்டுள்ளது. இந்தத் தகடுகளின் விளிம்புகள் புவித்தட்டு எல்லைகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை பிளவுகளால் ஆனவை. இந்த புவித் தட்டுகள் தொடர்ந்து மெதுவான வேகத்தில் நகர்ந்து, ஒன்றுக்கொன்று மோதிக்கொள்கின்றன. இந்தத் தட்டுகளின் விளிம்புகள் மிகவும் கரடுமுரடாக இருப்பதால், தட்டின் மற்ற பகுதிகள் நகர்ந்துகொண்டிருந்தாலும், விளிம்புகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொள்கின்றன. அதே நேரத்தில் தட்டின் மற்ற பகுதிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. புவித் தட்டுகள் ஒரு பிளவுப் பகுதியில் போதுமான அளவு நகர்ந்து, அவற்றின் விளிம்புகள் விலகிச் செல்லும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.
3. பூமிக்குள் நிலநடுக்கம் தொடங்கும் புள்ளி நிலநடுக்கத்தின் மையப்பகுதி (hypocenter) என்றும், அதற்கு நேராக மேலே தரையில் உள்ள புள்ளி மேல்மையப்பகுதி (epicentre) என்றும் அழைக்கப்படுகிறது.
நிலநடுக்க அலைகள்
1. ஒரு நிலநடுக்கம் ஏற்படும்போது, அது நில அதிர்வு அலைகளை உருவாக்குகிறது. அவை நாம் அனுபவிக்கும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன. நிலநடுக்க அலைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: உட்புற அலைகள் (body waves) மற்றும் மேற்பரப்பு அலைகள் (surface waves) ஆகும்.
2. உட்புற அலைகள் P மற்றும் S அலைகளை உள்ளடக்கியது. மேலும், அவை பூமியின் மேற்பரப்பில் மட்டும் பயணிக்காமல், பூமிக்குள்ளும் பயணிப்பதால், அவை உட்புற அலைகள் (body waves) என்று அழைக்கப்படுகின்றன.
3. முதன்மையாக அல்லது ‘P’ அலை என்பது பாறைகள் வழியாகப் பயணிக்கும் ஒரு வகை ஒலி அலையாகும். ஒரு P அலையில், பாறைத் துகள்கள் மாறி மாறி சுருங்கி விரிவடைகின்றன. இந்தச் செயல்முறை சுருக்கங்கள் மற்றும் விரிவுகள் (compressions and dilatations) என்று அழைக்கப்படுகிறது. இதனால் P அலைகள் அழுத்த அலைகள் (compressional waves) என்றும் குறிப்பிடப்படுகின்றன. P அலைகள் திட, திரவ மற்றும் வாயுப் பொருட்கள் வழியாகப் பயணிக்கக்கூடியவை. குறிப்பிடத்தக்க வகையில், P அலைகள் பூமியின் திரவ நிலையில் உள்ள வெளிப்புற மையப்பகுதி வழியாகவும் பயணிக்க முடியும்.
4. இரண்டாம் நிலை அல்லது 'S' அலையில், பாறைத் துகள்கள் ஒன்றுக்கொன்று இணையாகச் சரிந்து செல்கின்றன. இது வெட்டு அலைகளை உருவாக்குகிறது (shear waves). எனவே, S அலைகள் வெட்டு அலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. S அலைகளால் திரவங்கள் அல்லது வாயுக்கள் வழியாகப் பயணிக்க முடியாது. S அலைகளால் கடல் அல்லது புவியின் வெளிப்புற மையப்பகுதி வழியாகப் பயணிக்க முடியாது என்பதாகும்.
5. மேற்பரப்பு அலைகள் (Surface waves), P மற்றும் S அலைகளைப் போல பூமியின் உட்பகுதி வழியாகப் பயணிக்காமல், பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலேயே கட்டுப்படுத்தப்படும் அவற்றின் தன்மை காரணமாக அந்தப் பெயரைப் பெறுகின்றன. மேற்பரப்பு அலைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஒன்று, மேற்பரப்பிற்கு அருகிலேயே இருக்கும் குறுக்கலைகளான லவ் அலைகள் (Love waves) மற்றொன்று, கடல் அலைகளில் உள்ள நீர் துகள்களைப் போல நகரும் ரேலே அலைகள் (Rayleigh waves) ஆகும்.
நிலநடுக்கங்களால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு
1. இந்தியாவிற்கு நிலநடுக்கங்களால் ஏற்படும் ஆபத்து, அது அமைந்துள்ள புவியியல் அமைவிடம்—அதாவது பல புவித்தட்டுகள் சந்திக்கும் இடம், அதன் சிக்கலான நிலவியல் அமைப்பு, வேகமாக வளர்ந்துவரும் மக்கள் தொகை மற்றும் பரவலாகக் காணப்படும் ஒழுங்குபடுத்தப்படாத கட்டுமானங்கள் போன்றவற்றின் காரணமாக ஏற்படுகிறது.
2. இதன் விளைவாக, நாடு நில அதிர்வுகளை சந்தித்து வருகிறது. இந்தியா உலகில் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நாடுகளில் 7-வது இடத்தில் உள்ளது.
3. ndma.gov.in-இணையதளத்தின்படி, இந்தியாவின் நிலப்பரப்பில் தோராயமாக 59 சதவீதம், மிதமான முதல் கடுமையான நிலநடுக்கங்களைச் சந்திக்கும் அபாயத்தில் உள்ளது. இது MSK அளவுகோலில் VII அல்லது அதற்கும் அதிகமான தீவிரத்தைக் கொண்டதாகும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA))
1. இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான அதிக அதிகாரங்களை கொண்ட அமைப்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளது.
2. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைப்பதும், மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைப்பிற்கான வழிமுறைகளுக்கான ஒரு நல்ல சூழலை உருவாக்குவது 2005-ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3. பேரிடர் மேலாண்மைக்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கடமைப்பட்டுள்ளது. பிரதமர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார். மேலும், இதில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 9 உறுப்பினர்களில் ஒருவர் துணைத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
4. பேரிடர் மேலாண்மைச் சட்டம், அந்தந்த முதலமைச்சர்கள் தலைமையிலான மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (State Disaster Management Authorities (SDMAs)) உருவாக்குவதையும், மாவட்ட ஆட்சியர்கள்/மாவட்ட நீதிபதி தலைமையிலான மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்களை (District Disaster Management Authorities (DDMA)) உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது.
5. பேரிடர் மேலாண்மைக்கான முதன்மைப் பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே உள்ளது. இருப்பினும், பேரிடர் மேலாண்மை குறித்த தேசியக் கொள்கையானது, ஒன்றிய, மாநில மற்றும் மாவட்ட அரசுகள் என அனைவருக்கும் ஒரு சாதகமான சூழலை உருவாக்குகிறது.
6. பேரழிவு அபாயக் குறைப்புக்கான சென்டாய் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் (Sendai Framework for Disaster Risk Reduction (SFDRR)) இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இது பேரழிவுகளை நிர்வகிப்பதற்கான இலக்குகளை நிர்ணயிக்கிறது.
Original Article : 25 years of Bhuj earthquake. -Roshni Yadav