இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இடையிலான ஒத்துழைப்புக்கான துறைகள் யாவை? -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


— வான் டெர் லேயன் (von der Leyen) சனிக்கிழமை அன்றும், கோஸ்டா (Costa) ஞாயிற்றுக்கிழமை அன்றும் புது டெல்லி வந்தடைந்தனர். இந்தியாவுக்கான இந்த உயர்மட்டப் பயணத்தின் தொடக்கமாக, இருவருக்கும் சிறப்பான வரவேற்பும் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் செவ்வாயன்று நடைபெறவுள்ள 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்குத் தலைமை தாங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


— பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர்பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸ் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


— "இந்தக் கூட்டமைப்பானது கடல்சார் பாதுகாப்பு, இணையப் பிரச்சினைகள், கலப்பின அச்சுறுத்தல்கள், முக்கியமான உள்கட்டமைப்புகளின் மீள்தன்மை மற்றும் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஐநா சபை போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இணைந்து செயல்படுதல், அமைதி காப்பு, ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடுப்பு, அத்துடன் விண்வெளி பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஆகியவற்றிலும் இந்த ஒத்துழைப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


— இந்த ஒப்பந்தம் கூட்டு முயற்சிகளையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) பாதுகாப்புத் திட்டங்களில் இந்தியாவும் இணைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. பாதுகாப்பு மற்றும் உள்துறைச் செயலாளர்கள் போன்ற உயர்அதிகாரிகள் தலைமையில், ஆண்டுதோறும் நடைபெறும் உத்திசார் பேச்சுவார்த்தைகள் மற்றும் செயல்பாட்டு வழிமுறைகளையும் இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


— ஜப்பான் மற்றும் தென்கொரியாவைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மூன்றாவது ஆசிய நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு உத்திகள் சீனா மீதான தங்கள் கடுமையான போக்கைத் தளர்த்தி, மேற்கத்திய நாடுகளின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ள இந்தச் சூழலில், இந்தியாவின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.


— இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ரகசிய தகவல்களை இன்னும் விரிவாகப் பகிர்ந்து கொள்வதற்கான 'தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம்' குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவுள்ளன. இது இரு தரப்பிற்கும் இடையே வளர்ந்துவரும் பரஸ்பர நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


— இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவை இந்தியப் பெருங்கடல் (ஜூன் 2025), கினியா வளைகுடா (அக்டோபர் 2023) மற்றும் ஏடன் வளைகுடா (ஜூன் 2021) ஆகிய பகுதிகளில் கூட்டுக் கடற்படைப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன. மேலும், 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சோமாலியா கடற்கரைக்கு அருகில் மனிதநேய பாதுகாப்புப் பணிகளிலும் (Humanitarian escort missions) அவை இணைந்து பணியாற்றின.


— இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இடையிலான உறவு 1962-ஆம் ஆண்டில் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான 'ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்புடன்' (European Economic Community (EEC)) தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்ட முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இன்று அமெரிக்கா ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுத்துவரும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் ஒரு நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் மற்றும் கூட்டாளியாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.


— ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்கள் இந்தியக் குடியரசு தின விழாவில் முதன்மை விருந்தினர்களாகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து நடைபெறும் உச்சிமாநாட்டில் வர்த்தகம், பாதுகாப்பு, மற்றும் இடப்பெயர்வு ஆகிய மூன்று முக்கியத் துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.


— உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மற்றும் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கியப் பொருளாதாரம் என்ற ரீதியில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) இந்தியா மிகவும் முக்கியமானது. நூறு கோடிக்கும் அதிகமான உழைக்கும் வயதுடைய மக்கள் மற்றும் 31 என்ற சராசரி வயதைக் கொண்டுள்ள இந்தியா, 2030-ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா மிக வேகமாக வளர்ந்துவரும் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாகவும் திகழ்கிறது. உலகளாவிய திறன் மையங்களில் (Global Capability Centres) 45% இந்தியாவிலேயே உள்ளன; மேலும் இந்தியா மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது.


— இந்தியாவிற்கு, மேற்கத்திய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டமைப்பு நாடாக இருக்க முடியும். உக்ரைன் முதல் கிரீன்லாந்து வரை பல முக்கியப் பிரச்சனைகளில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரிய அளவிலான சிக்கல்களை ஏற்படுத்தாதவாறு அவரைத் திசைதிருப்பும் திறமையை ஐரோப்பியத் தலைவர்கள் நிரூபித்துள்ளனர். இந்தியத் தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை அமெரிக்கா கட்டுப்படுத்தும் அதே வேளையில் சில வாய்ப்புகளையும் அளிக்கின்றன. இதனால், சாதிக்கத் துடிக்கும் இந்தியர்களுக்கு ஐரோப்பா ஒரு சிறந்த மாற்று இடமாக உருவெடுத்து வருகிறது.


— வர்த்தகம் மற்றும் முதலீடு: இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான 'தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்' கையெழுத்தாவது, இந்தப் பயணத்தின் மிக முக்கியமான முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்குப் பல நன்மைகளையும் வழங்கும்.


— பாதுகாப்பு மற்றும் தற்காப்பு: இந்தப் பயணத்தின்போது, இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் (EU) ஒரு பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இருதரப்பு உறவின் அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


— இடம்பெயர்வு மற்றும் இடமாற்றம்: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையே 'இடமாற்ற கூட்டாண்மை ஒப்பந்தம்' கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியத் திறன்மிக்க பணியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பணியாற்றுவதற்கும், அங்கிருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கும் புதிய வழிவகைகளை உருவாக்கும் என்கின்றனர். 


—  ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் இந்தியர்கள்: ஐரோப்பிய ஒன்றியத்தில் சுமார் 13.6 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர். இதில் 8,84,718 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) மற்றும் 4,78,206 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (PIO) ஆவர். ஐரோப்பாவின் முக்கிய நிலப்பகுதிகளில் அதிகப்படியான இந்திய சமூகத்தினர் வசிக்கும் நாடுகள்: ஜெர்மனி (2,60,864 பேர்), நெதர்லாந்து (2,28,787 பேர்) இத்தாலி (2,06,503 பேர்) ஆகும்


— இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான உறவுகளில் சில சிக்கல்கள் உள்ளன: 


ரஷ்யா-உக்ரைன் போர்: இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஒரு முக்கியப் பிரச்சனையாக உள்ளது. 


மனித உரிமைகள்: இந்தியாவின் மனித உரிமைகள் குறித்த செயல்பாடுகள் கடினமான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. இருப்பினும், சமீப காலங்களில் இவை பெரும்பாலும் ரகசியமாகவே விவாதிக்கப்படுகின்றன. 


சீனா மற்றும் பாகிஸ்தான் மீதான எதிர்பார்ப்பு: சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் ஐரோப்பா இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. பொருளாதாரச் சார்பு: அதே நேரத்தில், ஐரோப்பா தனது பொருளாதாரத் தேவைகளுக்காக சீனாவைச் சார்ந்து இருப்பது முக்கிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.


வேளாண்மை மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள்:  இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இன்னும் முடிவடையாமல் இருக்கும் ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில்’ (Free Trade Agreement (FTA)), வேளாண்மைத் துறை ஒரு முக்கியத் தடையாக இருந்து வருகிறது. அரசியல்ரீதியாக மிகவும் முக்கியமான இந்தத் துறையை, இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே திட்டமிடப்பட்டுள்ள விரிவான வர்த்தக ஒப்பந்தத்திலிருந்தும் தவிர்ப்பதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.


வேளாண்மையை விலக்கி வைப்பதற்கான காரணங்கள்: இறக்குமதி வரி குறைப்பு மற்றும் வர்த்தகத் தடைகளை நீக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) இருந்து விவசாயத்தைத் தள்ளி வைக்க இந்தியா விரும்புவதற்கு வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் விவசாய மானியங்கள் என இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.


— சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)) கௌரவப் பேராசிரியர் அசோக் குலாட்டி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களால் ஏற்படும் அச்சுறுத்தல், அமெரிக்காவிலிருந்து வரும் அச்சுறுத்தலைவிடக் குறைவு என்று கருதுகிறார்.


— அமெரிக்காவுடனான ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), இந்தியாவிற்குள் அமெரிக்காவின் சோளம், சோயாபீன், எத்தனால் மற்றும் பருத்தி ஆகியவை பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவதற்கு வழிவகுக்கும். அதற்கு நேர்மாறாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) பெரும்பாலும் விவசாயப் பொருட்களில் விலை போட்டியை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். 


— ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) வேளாண்மையையும் உள்ளடக்கிய ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஏற்பட்டால், அது இந்தியாவுக்குப் பெரிய நன்மையை அளிக்கும். குறிப்பாக கடல் உணவுகள், பழங்கள், காய்கறிகள், பானங்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அரிசி போன்ற இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் துறைகளில் இது நல்ல வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


— சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதைவிட, ஐரோப்பிய ஒன்றியத்துடன்  ஒப்பந்தம் செய்துகொள்வதால் இந்திய வேளாண் தொழிலாளர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறைவுதான் என்றும் தெரிவிக்கின்றனர். 'தேவைப்பட்டால், அந்த நாட்டு வேளாண் தொழிலாளர்கள் பெறும் மானியங்களுக்கு ஈடாக, நாம் 15% கூடுதல் வரியை (Countervailing Duty) விதிக்க முடியும் என்றும் இது இறக்குமதியாகும் பொருட்களுக்கு எதிராகப் போதிய பாதுகாப்பை வழங்கும், என்றும் குலாத்தி தெரிவித்துள்ளார். 


உங்களுக்குத் தெரியுமா?


— அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய பாதுகாப்பு உத்திகளால், இந்தோ-பசிபிக் பகுதிகளில் அந்நாட்டின் ஈடுபாடு குறைந்து வருவதாகத் தெரிகிறது. இத்தகைய சூழலில், இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த ஒத்துழைப்பை பலப்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கையும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் (FTA) ஐரோப்பிய ஒன்றியப் பயணத்தின் முக்கிய முடிவுகளாக இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


— சரக்கு வர்த்தகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பு நாடாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) உள்ளது. 2024–25-ஆம் நிதியாண்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான மொத்த சரக்கு வர்த்தகம் சுமார் 136 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 76 பில்லியன் டாலராகவும், இறக்குமதி சுமார் 60 பில்லியன் டாலராகவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.


— ஐரோப்பிய ஒன்றியம் என்பது 27 ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பாகும். மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், பொதுவான நன்மை மற்றும் பாதுகாப்பிற்காக இந்த நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும் இந்த அமைப்பானது உருவாக்கப்பட்டது.


— ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான 'ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்புடன்' (European Economic Community (EEC)), இந்தியா 1962-ஆம் ஆண்டு தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. 1993-ஆம் ஆண்டில் கையெழுத்தான கூட்டு அரசியல் அறிக்கை மற்றும் 1994-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகியவை இந்தியா மற்றும் ஐரோப்பா இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவியதாகக் கூறப்படுகிறது. 


 Original Article : What are the areas of cooperation between India and the EU? -Roshni Yadav

Share: