அகில இந்தியப் பணிகளுக்கான பணிநிலை ஒதுக்கீட்டுக் கொள்கை என்ன? -ரோஷ்னி யாதவ்

முக்கிய அம்சங்கள்:


மாநில அரசாங்கங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (Department of Personnel and Training (DoPT)) அறிவிக்கப்பட்ட இந்த புதிய கட்டமைப்பு, 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த அமைப்பை மாற்றியமைக்கிறது. இது குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணிப் பிரிவுகளை ஒதுக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்ட முந்தைய மண்டல அடிப்படையிலான முறைக்கு மாற்றாக, ஒரு புதிய குழும அமைப்பை (new grouping structure) அறிமுகப்படுத்துகிறது.


நியாயமான மற்றும் வெளிப்படையான அமைப்பை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் அனைத்து மாநில மற்றும் கூட்டுப் பணிப்பிரிவுகளையும் அகர வரிசைப்படி பட்டியலிட்டு, அவற்றை நான்கு குழுக்களாகப் பிரித்துள்ளது என்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீடு இப்போது இந்த நான்கு குழுக்களின் அடிப்படையில் இருக்கும். விண்ணப்பதாரர்கள்  தங்களுக்கு விருப்பமான குழுக்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


புதிய குழு அமைப்பின் கீழ்:


• குழு I-ல், அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (Arunachal Pradesh-Goa-Mizoram and Union Territories (AGMUT)) ஆந்திரப் பிரதேசம், அசாம்-மேகாலயா, பீகார் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


• குழு II-ல், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


• குழு III-ல், மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


• குழு IV-ல், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.


முன்னதாக, மண்டலம்-1 ஏழு பிரிவுகளைக் கொண்டிருந்தது: அதன்படி அருணாச்சலப் பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் இடம் பெற்றிருந்தன. மண்டலம்-II-ல், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவை போன்ற மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. மண்டலம்-III-ல், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. மண்டலம்-IV-ல், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம்-மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. மண்டலம்-V-ல், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன.


மறுசீரமைக்கப்பட்ட கட்டமைப்பானது, முந்தைய கொள்கையின் கீழ் சமமற்ற காலியிடப் பகிர்வு (uneven vacancy distribution) குறித்து பல மாநில அரசுகள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில், குடிமை சேவைகளுக்குள் தேசிய ஒருங்கிணைப்பைப் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய ஒதுக்கீட்டு முறை நிர்வாகத்தை மேலும் சீராக மாற்றுவதற்கும், இளம் அதிகாரிகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான அனுபவத்தை அதிகமாக வழங்குவதற்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இது அகில இந்திய கொள்கைகளுக்கு ஏற்ப இருப்பதாகவும் என்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்கீழ், இந்திய ஆட்சிப் பணிக்கு (IAS) பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), இந்திய காவல் பணிக்கு (IPS) உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் இந்திய வனப் பணிக்கு (IFoS) சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEF&CC) ஆகிய பணியாளர் கட்டுப்பாட்டு அதிகார அமைப்புகள், ஒவ்வொரு சேவையிலும் உள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் நிர்ணயிக்கும். இந்தக் காலிப் பணியிடங்கள் பொதுப் பிரிவு (UR), பட்டியல் சாதிகள் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (OBC) போன்ற பல்வேறு பிரிவுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) வெளியிடப்பட்ட இந்த புதிய கட்டமைப்பு, காலிப் பணியிடங்கள் குறித்த முடிவுகளையும், பணிப்பிரிவு ஒதுக்கீடுகளையும் மேலும் வெளிப்படையானதாகவும் சீரானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


புதிய கொள்கையின்படி, வகை வாரியான இடஒதுக்கீடு மற்றும் உள்/வெளி ஒதுக்கீட்டுப் பங்கீட்டிற்கான காலியிடங்களைத் தீர்மானிப்பதற்கான பதிவேடுகளைப் பராமரிக்கும் கொள்கைகள், ஏற்கனவே உருவாக்கப்பட்ட நடைமுறையின்படியே இருக்கும்.


குடிமைப் பணித் தேர்வு முடிந்த பிறகு, ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதைப் பொறுத்து காலிப் பணியிடங்கள் தீர்மானிக்கப்படும். மாநிலங்கள் தங்களின் காலிப் பணியிட விவரங்களை அந்த ஆண்டின் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பிரிவினருக்காக (Economically Weaker Sections (EWS)) ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள், பொதுப் பிரிவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு, அதற்கேற்பப் பணிப் பட்டியல் பதிவேட்டில் பிரதிபலிக்கப்படும் என்றும் புதிய விதிமுறைகள் தெளிவுபடுத்துகின்றன என்று ஒரு அதிகாரி கூறினார்.


சொந்தமாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு – அதாவது, , தங்கள் சொந்த மாநிலத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள்—திறமையின் அடிப்படையிலும் காலியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று இந்தக் கொள்கை மீண்டும் வலியுறுத்துகிறது. ஒரு விண்ணப்பதாரர் தனது சொந்த மாநிலத்தில் பணியாற்றத் தயாராக இருப்பது இப்போது ஒரு கட்டாய நிபந்தனையாகும் என்று அதிகாரி கூறினார்.


புதிய கொள்கையின் கீழ், 25 மாநிலங்கள் மற்றும் கூட்டுப் பணிப்பிரிவுகளுக்கு ஏற்ப, சுழற்சி முறை அமைப்பு மூலம் இனி பணிப்பிரிவு ஒதுக்கீடு நடைபெறும் என்றும், ஒவ்வொரு சுழற்சியும் தகுதி வரிசையில் உள்ள 25 விண்ணப்பதாரர்களை கொண்டிருக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "ஒரே சுழற்சிக்குள் பல விண்ணப்பதாரர்கள் இடம்பெற்றிருந்தால், அதிக தரவரிசை பெற்றவருக்கு ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும், மற்றவர்கள் அடுத்தடுத்த சுழற்சிகளுக்குச் செல்வார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.


சொந்தமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டபிறகு, வெளி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான ஒதுக்கீடு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதலில் வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் (Persons with Benchmark Disabilities (PwBD)), பின்னர் மற்றவர்களுக்கும், இட ஒதுக்கீட்டு முறைப்படி செய்யப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். “இந்த நடவடிக்கை, தேர்வர்கள் மற்றும் மாநில அரசுகள் மத்தியில் நீண்ட காலமாக ஒரு முக்கியமான விவகாரமாக இருந்துவரும் பணி ஒதுக்கீட்டுச் செயல்முறைக்கு அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட இந்த அமைப்பு, அகில இந்திய சேவைகளில் நேர்மை மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று அந்த அதிகாரி கூறினார்.


உங்களுக்குத் தெரியுமா?


 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ​​புதிதாக உருவான ஜனநாயக நாட்டின் அடித்தளத்தை அமைத்த சில அமைப்புகளும் தொடங்கப்பட்டன. அத்தகைய அமைப்புகளில் ஒன்று, புது டெல்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் உள்ள தோல்பூர் மாளிகையில் அமைந்துள்ள ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission (UPSC)) ஆகும்.


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்களில் குறைந்தபட்சம் பாதி பேர் அரசுப் பணியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு 65 வயது ஆகும் வரை பதவியில் நீடிப்பார்கள். இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவே பொருந்தும்.


தேர்வாணையத்தின் பணிக்கு அதன் செயலகம் ஆதரவளிக்கிறது. இதில் தேர்வுகள் மற்றும் நேரடி ஆட்சேர்ப்புக்காக பிரத்யேகப் பிரிவுகள் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புகழ்பெற்ற ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி (IAS) அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான டாக்டர் அஜய் குமார் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.


ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வப் பணிகள், அரசியலமைப்பின் 315 முதல் 323 வரையிலான பிரிவுகளில்  குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் பிரிவு 320 அதன் முக்கியப் பணிகளை விரிவாகக் கூறுகிறது. மூன்று அகில இந்திய சேவைகள் இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, மத்திய சேவைகள் மற்றும் பல்வேறு முக்கிய அரசுப் பதவிகளுக்கான நியமனங்களுக்குத் தேர்வுகளை நடத்தும் இந்தியாவின் முதன்மை அமைப்பு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும். இது பல்வேறு சேவைகள் மற்றும் பதவிகளில் ஆட்களை நியமிப்பதற்கான விதிகளையும் புதுப்பிக்கிறது.


 Original Article : What is the cadre allocation policy for All India Services? -Roshni Yadav

Share: