அமெரிக்கா பல காலநிலை அமைப்புகளிலிருந்து வெளியேறுவது இந்தியாவுக்கு நிவாரணத்தையும், சவால்களையும் ஒருசேர ஏற்படுத்தலாம். -அமிதாப் சின்ஹா

த்திற்கான கட்டமைப்பு மாநாடு (UN Framework Convention on Climate Change (UNFCCC)) மற்றும் 60-க்கும் மேற்பட்ட பிற சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்தது. இவை இனி அமெரிக்க நலன்களுக்குப் பயன்படவில்லை என்று அந்நாடு கூறியது. இந்தப் பட்டியலில், காலநிலை தொடர்பான பல அமைப்புகளான காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)), சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Alliance (ISA)) மற்றும் சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் (nternational Renewable Energy Agency (IRENA)) ஆகியவை அடங்கும்.


கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக் காலத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இந்த முடிவானது, ஒரு வருட அறிவிப்புக் காலம் முடிந்த பிறகு, ஜனவரி மாதம் 20-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முழுவதும், ட்ரம்ப் நிர்வாகம் காலநிலை ஆராய்ச்சி தொடர்பான தேசிய நிறுவனங்களுக்கான நிதி மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது. 


வியாழக்கிழமை எடுக்கப்பட்ட முடிவு, சர்வதேச காலநிலை கட்டமைப்பிலிருந்து   அமெரிக்கா அதன் தொடர்பை முழுமையாகத் துண்டிப்பதைக் குறிக்கிறது. மேலும் தற்போதைய பலதரப்பு அமைப்பு காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் எவ்வளவு திறம்பட செயல்படும் என்பது குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறது.



காலநிலை மாற்றத்தின் மீதான விருப்பு வெறுப்புப் பிணைப்பு


அமெரிக்காவின் சர்வதேச காலநிலை அமைப்பின் மீதான அதிருப்தி புதிதல்ல. காலநிலை மாற்றம் ஒரு பிரச்சனை என்பதை ஏற்றுக்கொண்ட மற்றும் உலகளாவிய நடவடிக்கைக்கான அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை அமைத்த  ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு (UNFCCC) இறுதி செய்வதில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்தது. இருப்பினும், நாடுகளுக்கு குறிப்பிட்ட உமிழ்வு குறைப்பு இலக்குகளை நிர்ணயித்த ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின்கீழ் உள்ள ஒப்பந்தமான, 1997-ஆம் ஆண்டு கியோட்டோ (Kyoto) நெறிமுறையில் அமெரிக்கா ஒருபோதும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


பின்பு, கியோட்டோ நெறிமுறைக்கு (Kyoto Protocol) மாற்றாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா முயற்சிகளை முன்னெடுத்தது, அதன் விளைவாக 2015-ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தம் (Paris Agreement) உருவானது. அப்படியிருந்தும், பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் அதன் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. ஐக்கியநாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் இவை கட்டாய கடமைகள் என்ற போதிலும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கோ அல்லது நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கோ அமெரிக்கா மிகவும் குறைந்த அளவிலான முயற்சியை மட்டுமே மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும், காலநிலை மாற்றத்தின் பிரச்சனைகளை அமெரிக்கா ஒருபோதும் மறுக்கவில்லை. அது உலகளாவிய காலநிலை விவாதங்களில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு, வலுவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது காலநிலை அறிவியல் மற்றும் தூய்மையான தொழில்நுட்ப மேம்பாட்டில் பெரும் முதலீடு செய்தது, மேலும் நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் பசுமை முதலீடுகளை ஊக்குவித்தது. முன்னேற்றம் மெதுவாக இருந்தபோதிலும், எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.


இதற்கு மாறாக, டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக காலநிலை மாற்றத்தை மறுப்பவர் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கான உலகளாவிய முயற்சிகளை அடிக்கடி கேலி செய்பவர் ஆவார். அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தில், முன்னதாகச் செய்யப்பட்ட முன்னேற்றத்தைப் பலவீனப்படுத்தும் தெளிவான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. உதாரணமாக, காலநிலை ஆராய்ச்சிக்கான நிதியைக் குறைத்தது கடுமையான நீண்டகால விளைவுகளை முழு உலகிற்கும் ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் காலநிலைத் தரவுகளைச் சேகரித்து கண்காணிப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


பின்விளைவு


ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டிலிருந்தும் (UNFCCC) மற்றும் பிற நிறுவனங்களிலிருந்தும் அமெரிக்கா விலகிய முடிவு முழுமையாக எதிர்பார்க்கப்படாவிட்டாலும், அது ஆச்சரியமளிக்கவில்லை. பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதும், காலநிலை ஆராய்ச்சிக்கான நிதியைக் குறைத்ததும் ஏற்கெனவே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதன் விளைவாக, 2030-ஆம் ஆண்டுக்கான கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை உலகம் தவறவிட நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. டிரம்ப் பதவி ஏற்பதற்கு முன்பும்கூட, அமெரிக்கா இந்தக் கார்பன் வெளியேற்றத்தை நிவர்த்தி செய்வதற்கு ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 


குறுகியகாலத்தில், அமெரிக்காவின் இந்தக் கொள்கை முடிவுகள் உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவாகவே இருக்கலாம். ஆனால், அதன் நீண்டகால விளைவுகள், வெள்ளை மாளிகையில் டிரம்ப்பை அடுத்து பதவியேற்கும் அதிபரின் நிலைப்பாட்டைப் பொறுத்தே அமையும் என்கின்றனர்.


ஆனால், உலகளாவிய காலநிலை கட்டமைப்பிலிருந்து தன்னை முழுமையாக விலக்கிக் கொள்வதன் மூலம், அமெரிக்கா தனது சொந்த நீண்டகால நலன்களைத் தானே பாதித்துக் கொள்ளலாம். இந்தத் துறையில் அதன் முக்கிய போட்டியாளரான சீனாவிடம் தலைமைத்துவத்தைக் கைவிட நேரிடும் என்ற அபாயம் உள்ளது. பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழிகளுக்கு உறுதியளித்துள்ளன. சூரிய மற்றும் காற்றின் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள் எரிசக்தி அணுகலை மட்டுமல்ல, எரிசக்தி பாதுகாப்பையும் வழங்குகின்றன. அவை மிகவும் மலிவானதாகவும் மாறிவிட்டன. உலகின் பல பகுதிகளுக்கு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இப்போது பொருளாதாரரீதியாகவும் ராஜதந்திரரீதியாகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.


வெனிசுலா அல்லது பிற நடவடிக்கைகள் மூலம் எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம், இந்த உலகளாவிய போக்குக்கு எதிராகச் செயல்பட டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் எரிசக்தி மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அதை மாற்ற வாய்ப்பில்லை என்கின்றனர். 


இந்த நிலைமை சீனாவிற்கு அதன் பலத்தை அதிகரிக்க ஒரு வாய்ப்பை அளிக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை விரிவுபடுத்துவதற்கு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு தேவை, மேலும் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளில் சீனா முதன்மை வகிக்கிறது. இந்தத் துறையிலிருந்து விலகுவதன் மூலம், அமெரிக்கா அதன் பொருளாதார நலன்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும் அபாயத்தை எதிர்கொள்கிறது.


இந்தியா மீதான தாக்கம்


இந்தியாவைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் முடிவுகள் விரைவில் கார்பன் வாயு வெளியேற்றத்தைக் (decarbonise) குறைக்கவேண்டிய அழுத்தத்தைக் குறைக்கலாம். இருப்பினும், இது தூய்மையான தொழில்நுட்பங்களில் முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் திட்டங்களையும் பாதிக்கக்கூடும். டிரம்ப் மீண்டும் அதிபராவதற்கு முன்பு, பருவநிலை மற்றும் தூய்மையான எரிசக்தி குறித்த விஷயங்களில் அமெரிக்காவுடன் இந்தியா நீண்டகால இராஜதந்திரக் கூட்டாண்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்கா பல எரிசக்தி துறைகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தது. இந்தக் ஒத்துழைப்பு இப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியா தனது எரிசக்தி மாற்றத் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கலாம் என்கின்றனர். 


அமெரிக்கா விலகிக்கொண்ட ஒரு அமைப்பு சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி (International Solar Alliance (ISA)) ஆகும். இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து 2015 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த COP21 காலநிலை மாநாட்டின்போது சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை அமைக்க உதவின. அமெரிக்கா 2021-ஆம் ஆண்டில்தான் அதன் 101-வது உறுப்பினராக சர்வதேச சூரிய சக்திக் கூட்டணியில் இணைந்தது. அது சர்வதேச சூரிய சக்திக் கூட்டணிக்கு எந்தவொரு நிதி உதவியையும் வழங்கவில்லை. 2025-ஆம் ஆண்டின் அதன் பொதுச் சபைக் கூட்டத்தில், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு ஆண்டு உறுப்பினர் கட்டணமாக USD 50,000 என்றும், வளரும் நாடுகளுக்கு USD 25,000 என்றும் அறிமுகப்படுத்த சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி முடிவு செய்தது, ஆனால் இந்த முடிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 Original Article : US exit from several climate bodies can mean both relief, challenges for India. -Amitabh Sinha

Share: