இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என்று டிரம்ப் கூறுகிறார். அதைச் சொல்வது எளிது, செய்வது கடினம். -சுகல்ப் சர்மா

 ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்குப் பதிலாக அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து கச்சா எண்ணெயைப் பெறுவது என்பது வணிகரீதியாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பரீதியாகவும் கடினமானது. அதோடு, இந்தியா தனது 'தனித்துவமான இறையாண்மையையும்' கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தாமல், படிப்படியாகக் குறைக்கவே ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியானது 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தார். மேலும், தனது மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தரான ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாகவும், அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாகவும் அவர் கூறினார்.


இந்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர். இருப்பினும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவது குறித்த டொனால்ட் டிரம்பின் கருத்தை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை. இதுவரை, இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவுப்பும் தெரிவிக்கப்படவில்லை. 


இருப்பினும், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் அளவை கணிசமாகக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதாகத் தெரிகிறது. கடந்த வியாழக்கிழமை இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் மிக முக்கியமான முன்னுரிமை என்று தெரிவித்தது. மேலும், சந்தை நிலவரம் மற்றும் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியா தனது எரிசக்தி ஆதாரங்களை பல்வேறு நாடுகளிலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இருப்பினும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இப்போதைக்கு முழுமையாக நிறுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றாகத் தெரிகிறது. ரஷ்ய எண்ணெய் விநியோகத்தை பெருமளவு குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக அமெரிக்கா அல்லது வெனிசுலாவிலிருந்து எண்ணெயைப் பெறுவதற்கு மாறினாலும், அது அதிக நேரமெடுக்கும் மற்றும் சவாலான காரியமாக இருக்கும் என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.


தொழில்நுட்ப மற்றும் வர்த்தக ரீதியான சிக்கல்களுடன், எரிசக்தி வர்த்தகத்தில் இந்தியாவின் வர்த்தகம் சார்ந்த விஷயங்களில் 'சுயேச்சையான முடிவெடுக்கும் அதிகாரம்' பாதிக்கப்படுமோ என்ற கவலைகளும் உள்ளன. எனவே, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை உடனடியாக நிறுத்திவிடாமல், படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று தொழில்முறை ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இன்னும் சில மாதங்களுக்கு, இந்தியாவின் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் ஒரு பெரும் பங்கு வகிக்கும் 


இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே மார்ச் மாதம் மற்றும் ஏப்ரல் மாதத்தின் ஒரு பகுதி வரைக்கான ரஷ்ய எண்ணெய் விநியோகத்தை முன்பதிவு செய்துவிட்டன. எனவே, அவற்றை இப்போது ரத்து செய்வது சாத்தியமில்லை. ஒருவேளை இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை அதிரடியாகக் குறைத்துக்கொள்ள விரும்பினாலும், அதை முழுமையாக நிறுத்துவதற்கு சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும். குறிப்பாக, நயாரா எனர்ஜி (Nayara Energy) போன்ற ஒரு சில சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த கொள்முதலைக் குறைப்பது என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகக் கருதலாம். 


ரஷ்யாவின் ரோஸ்நேஃப்ட் (Rosneft) நிறுவனத்திற்குச் சொந்தமான நயாரா எனர்ஜி (Nayara Energy), கச்சா எண்ணெய்க்காக முழுமையாக ரஷ்யாவையே நம்பியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நயாரா நிறுவனத்தின்மீது தடைகளை விதித்துள்ளது. அதேபோல், ரோஸ்நேஃப்ட் நிறுவனத்தின்மீது அமெரிக்காவும் தடைகளை விதித்துள்ளது. 


இந்தத் தடைகள் காரணமாக, நயாரா நிறுவனத்தால் மற்ற நாடுகளிடமிருந்து எளிதாக எண்ணெய் வாங்க முடிவதில்லை. இந்த ஆலை ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் பேரல் எண்ணெயைச் சுத்திகரிக்கிறது. மாற்றுவழி எதுவும் இல்லாத நிலையில், ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய் நிறுத்தப்பட்டால், இந்த ஆலையை முழுமையாக மூட வேண்டிய சூழல் ஏற்படும் என்கின்றனர். 


இந்தியா, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை முழுமையாக குறைப்பதற்கு வாய்ப்பில்லை. கடந்த ஜூலை மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு ஆளான பிறகு, 'நயாரா' (Nayara) நிறுவனம் தனது தேவைகளுக்கு ரஷ்ய எண்ணெயையே முழுமையாக நம்பியுள்ளது. அதனால், அந்நிறுவனத்தின் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேரல் (400,000 bpd) தேவையைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, 2025-ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 லட்சம் பேரலாக இருந்த இறக்குமதி, 5 லட்சம் பேரலாக குறையக்கூடும் என்று சிங்கப்பூரைச் சேர்ந்த வண்டா இன்சைட்ஸ் (Vanda Insights) நிறுவனத்தின் எரிசக்தி நிபுணர் வந்தனா ஹரி தெரிவித்துள்ளார்.


இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சா எண்ணெய் முழுமையாக வந்து சேர்ந்த பிறகு, ரஷ்ய இறக்குமதியை ஒன்றிய அரசு குறைக்க நினைத்தால், இடைக்காலத்தில் அதன் அளவு நாளொன்றுக்கு 5 லட்சம் பேரல்களாகக் குறையக்கூடும் என்று மற்ற தொழில்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது, கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்த எண்ணெய அளவில் சரிபாதி என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


கடந்த சில மாதங்களாக, ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20.9 லட்சம் பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி, ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் 11.6 லட்சம் பேரல்களாகக் குறைந்துள்ளதாக ‘கெப்ளர்' (Kpler) என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்திருந்தாலும், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய்ப் பங்கு ஜனவரி மாதத்தில் 22%-ஆக இருந்தது. இது முன்பு இருந்த 35–40% உடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவுதான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் சில மாதங்களுக்கு எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவே முன்னிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 5 லட்சம் பேரல்கள் (500,000 bpd) என குறைந்தாலும், இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா சுமார் 10% பங்கைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். 


அடுத்த சில மாதங்களுக்கு ரஷ்யாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைய வாய்ப்பில்லை என்றும் அடுத்த 8 முதல் 10 வாரங்களுக்கான இறக்குமதி அளவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் 'ICE ப்ரெண்ட்' (Intercontinental Exchange Brent Crude Oil (ICE Brent)) விலையைவிட ரஷ்யாவின் 'யூரல்ஸ்' (Urals crude oil) கச்சா எண்ணெய் கணிசமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது இந்தியாவின் சிக்கலான எண்ணெய் சுத்திகரிப்பு முறைகளுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் லாபகரமானதாக உள்ளது. எனவே, இந்த ஆண்டின் முதல் காலாண்டிலும் (ஜனவரி-மார்ச்) மற்றும் இரண்டாம் காலாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல்-ஜூன்), இறக்குமதி அளவு தினசரி 11 முதல் 13 லட்சம் பேரல்கள் என்ற அளவில் நிலையாக இருக்கும் என்று கெப்ளர் (Kpler) நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சி ஆய்வாளர் சுமித் ரிடோலியா தெரிவித்துள்ளார்.


ரஷ்ய கச்சா எண்ணெய்க்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளின் எண்ணெயைப் பயன்படுத்துவது கடினமானது.


உக்ரைன் போருக்கு முன்பு இந்தியா இறக்குமதி செய்த மொத்த எண்ணெய்ப் பொருட்களில் ரஷ்யாவின் பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. எனவே, ரஷ்யக் கச்சா எண்ணெய்க்குப் பதிலாக மற்ற நாடுகளின் எண்ணெயைப் பயன்படுத்துவது கோட்பாட்டளவில் (Theory) பெரிய கடினமான காரியம் அல்ல என்றும் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், ரஷ்யக் கச்சா எண்ணெய்க்கு மாற்றாக இந்திய நாட்டின் எண்ணெய் தேவையை அமெரிக்கா மற்றும் வெனிசுலாவின் எண்ணெய் எந்தளவிற்கு பூர்த்தி செய்யும் என்பதே இப்போது முக்கிய சிக்கலாகப் பார்க்கபடுகிறது. 


இந்தியத் தொழில்துறை வல்லுநர்கள் கூறுவது என்னவென்றால், அமெரிக்காவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து வருகிறது. மேலும், விலை கட்டுப்படியாகக்கூடியதாக இருந்தால் அதைத் தொடர்ந்து செய்யவும் இந்தியா தயாராக உள்ளது. ஏனெனில், மேற்கு ஆசியாவிலிருந்து (West Asia) எண்ணெய் இறக்குமதி செய்வதைவிட, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கப்பல் மூலம் எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்வது தற்போது இரண்டு மடங்குக்கும் அதிகமாக செலவாகும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அமெரிக்கக் கச்சா எண்ணெய் வகைகள் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஏற்றதா என்பதுதான். ஒவ்வொரு வகை கச்சா எண்ணெயும் குறிப்பிட்ட பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிப்பதில் வெவ்வேறு அளவிலான செயல்திறனைக் கொண்டிருக்கும். இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் பெரும்பாலும் ரஷ்யா மற்றும் மேற்கு ஆசியாவிலிருந்து வரும் 'மீடியம்-சோர்' (medium-sour) வகை கச்சா எண்ணெயைப் பயன்படுத்தியே பழகிவிட்டன. இருப்பினும், அவர்களால் எல்லா வகைகளையும் சுத்திகரிக்க முடியும் என்றாலும் அமெரிக்கக் கச்சா எண்ணெய் பொதுவாக இலேசான மற்றும் குறைந்த (lighter and sweeter) கந்தக அளவு தன்மையைக் கொண்டுள்ளதால் தற்போது மேற்கொள்ளப்படும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு இவை பொருந்துமா என்கிற கேள்வி எழுப்பபடுகிறது. 


அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியா இதுவரை இறக்குமதி செய்யாமல் இருந்த வெனிசுலா நாட்டு எண்ணெய், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமையக்கூடும் என்றும்  இந்தியா வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கும் என்றும், அதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது குறைந்தபட்சம் அதற்கான ஒரு திட்டம், ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார். இதன் மூலம் புது தில்லி (இந்தியா), கராகஸ் (வெனிசுலா) நகரிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


இருப்பினும், வெனிசுலாவின் கச்சா எண்ணெய் அமெரிக்க எண்ணெயைவிட ரஷ்ய எண்ணெயுடன் அதிக ஒற்றுமையைக் கொண்டுள்ளது. மேலும், அதன் தற்போதைய உற்பத்தி ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் (1 million) பேரல்கள் என்கிற அளவிலயே உள்ளன. இந்த எண்ணெய்க்கு அமெரிக்காவிலும் அதிக தேவை இருப்பதால், இந்தியாவால் ரஷ்ய எண்ணெய்க்குப் பதிலாக இதை ஒரு பகுதி மட்டுமே பயன்படுத்த முடியும் என்கின்றனர். வெனிசுலாவின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க பல ஆண்டுகளும், கோடிக்கணக்கான டாலர் முதலீடுகளும் தேவைப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். 


இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் அமெரிக்க எண்ணெய் சுமார் 10% பங்கை வகிக்கக்கூடும் என்றும் இது முக்கியமாக மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வரும் லேசான வகை எண்ணெய்க்கு மாற்றாக இருக்குமே தவிர, ரஷ்யாவிலிருந்து வரும் எண்ணெய்க்குப் பதிலாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. வெனிசுலா நாட்டு எண்ணெய் அவ்வப்போது கிடைக்கலாம், ஆனால் பொருளாதாரக் காரணங்கள், பொருளாதாரத் தடைகள் மற்றும் கலப்புத் தேவைகள் காரணமாக அதன் அளவு நிலையற்றதாகவும் குறைவாகவுமே இருக்கும் என்றும் இது ஒரு நீண்ட கால மாற்றாக இல்லாமல், விலைச் சலுகைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று ரிடோலியா கூறியுள்ளார்.


இந்தியாவின் ராஜதந்திர மற்றும் வர்த்தக சுயாட்சி பற்றிய கேள்வி 


கடந்த ஆண்டில், ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 25% கூடுதல் வரியை விதித்து அழுத்தம் கொடுத்தது. இருப்பினும், இந்தியா தனது ராஜதந்திர வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக இருந்தது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர். அதே நேரத்தில், ரஷ்ய எண்ணெயால் பெரிய சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குக் கிடைத்த லாபமும் குறைவுதான் என்றபோதும் இவ்வளவு பொருளாதாரச் சவால்கள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.


இந்தியா ஒருவேளை ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க விரும்பியிருந்தால் கூட, டிரம்பின் பகிரங்கமான அணுகுமுறை அதை விரைவாகச் செய்வதைக் கடினமாக்கியது. தனது ராஜதந்திர ரீதியான கொள்கை முடிவுகளில் சுயநிர்ணய முடிவெடுக்கும்  உரிமையை விட்டுக்கொடுக்கவோ அல்லது யாரிடம் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தனக்கு உத்தரவிடுவதையோ இந்தியா விரும்பவில்லை. குறிப்பாக நீண்டகால நட்பு நாடான ரஷ்யா விஷயத்தில் இந்தியா உறுதியாக இருந்தது. சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி குறைந்ததற்கு, அமெரிக்கா 'ரோஸ்நெஃப்ட்' (Rosneft) மற்றும் 'லுகோயில்' (Lukoil) ஆகிய நிறுவனங்கள் மீது விதித்த பொருளாதாரத் தடைகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


வியாழக்கிழமை வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs (MEA)) அளித்த அறிக்கை, வர்த்தகம் சார்ந்த சுயநிர்ணய முடிவுகளில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அரசாங்கம் விரும்புவதில்லை என்பதைக் காட்டுகிறது. இந்தச் சூழலில், ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது இந்தியாவிற்குச் சாதகமாக இருக்கும் என்கின்றனர். ரஷ்யாவின் எண்ணெய் வருவாயைக் குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் இலக்கிற்கு, இந்தியா ஒரு நாளைக்கு 5,00,000 பேரல் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்தால் கூட அது தடையாக இருக்காது என்று தொழில் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.


இது ரஷ்யாவிற்கு ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏனெனில், சீனாவுக்கு (ரஷ்ய எண்ணெயை வாங்கும் மற்றொரு முக்கிய நாடு) நாளொன்றுக்கு மேலும் 10 லட்சம் பேரல் எண்ணெயை அனுப்புவது ரஷ்யாவிற்கு கடினமாக இருக்கும், மேலும் அதற்கான விலையில் தள்ளுபடியும் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்கின்றனர். இது படிப்படியாக விதிக்கப்படும் தடைகளைவிட, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடினுக்கு அழுத்தம் கொடுக்க டிரம்பிற்கு பெரிதும் உதவும் என்று ஹரி கூறினார்.


ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அளவை இன்னும் அதிகமாகக் குறைக்க வேண்டுமானால், இந்திய அரசு தனது கொள்கையில் ஒரு தெளிவான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். ஆனால், தற்போதைய சிக்கலான உலக அரசியல் சூழலில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பும்  பொருளாதாரமுமே முக்கிய இலக்குகளாக இருப்பதால், அத்தகைய கொள்கை மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்று ரித்தோலியா கூறியுள்ளார்.


Original article : Trump says India will stop buying Russian oil. That is easier said than done. -Sukalp Sharma

Share: