இந்தியாவின் சீரற்ற காலநிலை உத்தி. -ஷிஃபாலி கோயல், தேபாஷிஸ் சக்ரவர்த்தி

ஒருபுறம் தொழில்துறை வளர்ச்சியையும் மற்றும் மறுபுறம் மக்கள்தொகை சார்ந்த பயன்பாட்டுத் தேவையையும், தேசிய மாசுக்கட்டுப்பாட்டு இலக்குகளுடன் சமநிலைப்படுத்துவதற்கு, மிகவும் இலக்கு சார்ந்த கொள்கைகள் தேவைப்படுகின்றன.


அரசின் 'இந்தியாவில் தயாரிப்போம்' (Make-in-India), 'வளர்ந்த இந்தியா-2047' (Viksit Bharat) மற்றும் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு-2070 (net-zero emissions) ஆகிய திட்டங்களின்கீழ் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட லட்சிய இலக்குகளிலிருந்து வெளிப்படும் தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், இந்தியாவின் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைவதற்குத் தொழில்துறையில் கார்பன் உமிழ்வைக் குறைப்பது அவசியமாகும்.


பொருளாதாரம் வளரும்போது, ​​தற்போதுள்ள மற்றும் புதிதாக உருவாகும் உற்பத்தித் துறைகள் விரிவடைந்து, எரிசக்தித் தேவையில் ஒரு நிலையான உயர்வுக்கு வழிவகுக்கின்றன. ஒருபுறம் இந்தத் தொழில்துறை வளர்ச்சியையும்,                          மறுபுறம் மக்கள்தொகை சார்ந்த பயன்பாட்டுத் தேவையையும், தேசிய உமிழ்வுக் குறைப்பு இலக்குகளுடன் சமநிலைப்படுத்துவதற்கு மிகவும் இலக்கு சார்ந்த கொள்கைகள் தேவைப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டிற்கு இந்தியா சமீபத்தில் சமர்ப்பித்த முதல் இருதரப்பு வெளிப்படைத்தன்மை அறிக்கை (Biennial Transparency Report (BTR1)), தேசிய உமிழ்வுகள் குறித்த ஒரு விரிவான கணக்கை வழங்குகிறது. 2022-ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உமிழ்வுகளில் 20%-க்கும் அதிகமானவை நேரடியாகத் தொழில்துறையிலிருந்து உருவானவை என்று அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, உற்பத்தித் தொழில்கள் மற்றும் கட்டுமானத் துறைகளில் எரிபொருள் நுகர்வு மொத்த உமிழ்வுகளில் 13%-ஆகவும், தொழில்துறை செயல்முறைகள் மற்றும் உற்பத்திப் பயன்பாடு மேலும் 9%-ஆகவும் பங்களிப்பை அளித்துள்ளன என்று சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்விற்கு (carbon footprint) உற்பத்தி நடவடிக்கைகள் எவ்வளவு பங்களிக்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இந்த நிலைத்தன்மை மாறாமல் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டம்


தொழில்துறை உமிழ்வுகள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைப்பதற்காக, அரசாங்கம் இரண்டு முக்கிய சந்தை அடிப்படையிலான வழிமுறைகளைச் சார்ந்திருக்கிறது. ஆற்றல் அதிகம் தேவைப்படும் 13 தொழில்துறைகளில், குறிப்பிட்ட ஆற்றல் நுகர்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (Perform, Achieve and Trade (PAT)) திட்டத்தை முதல் இருதரப்பு வெளிப்படைத்தன்மை அறிக்கை (BTR1) ஒரு முதன்மை முயற்சியாக அங்கீகரிக்கிறது. 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) திட்டம் இப்போது 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டமாக’ (Carbon Credit Trading Scheme (CCTS)) மாறி வருகிறது. இது அலுமினியம், சிமெண்ட், உரங்கள், இரும்பு மற்றும் எஃகு, பெட்ரோலிய வேதிப்பொருட்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, காகிதக்கூழ் மற்றும் காகிதம், ஜவுளி மற்றும் குளோார்-அல்காலி (chlor-alkali) உள்ளிட்ட ஒன்பது தொழில்துறைத் துறைகளின் உமிழ்வுச் செறிவைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. அனல் மின் நிலையங்கள், இரயில்வே, மின் விநியோக நிறுவனங்கள் (DISCOMs) மற்றும் வணிகக் கட்டிடங்கள் ஆகிய மற்ற நான்கு தொழில்கள் 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) திட்டத்தின்கீழ் தொடர்ந்து செயல்படும்.


இந்தத் திட்டங்கள் அளவுகோல்களை நிர்ணயித்து, ஆற்றல் திறனை ஊக்குவித்து, கார்பன் உமிழ்வு அடர்த்தியைக் குறைத்தாலும்,                                           இந்தியத் தொழில்துறைகள் முழுவதும் உமிழ்வு குறைப்புத் திட்டமிடல் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில் ஒரு தெளிவான இடைவெளி உள்ளது.                            இந்தக் கொள்கைகள், சிமெண்ட், எஃகு, உரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஜவுளி போன்ற நன்கு வரையறுக்கப்பட்ட, பாரம்பரிய அதிக உமிழ்வுத் துறைகளுக்காகவே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.                                 இருப்பினும், அவை நடைமுறையில் தொழில்துறை உமிழ்வுகளின் ஒரு பெரும் பகுதியை, குறிப்பாக இந்தியாவின் உமிழ்வுப் பட்டியலில் "குறிப்பிட்ட வகைப்படுத்தப்படாத தொழில்துறைகள்" (non-specific industries) என வகைப்படுத்தப்படும் எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பெருமளவிலான தொழில்துறை உமிழ்வுகளை இக்கொள்கைகள் நடைமுறையில் கவனிக்காமல் விட்டுவிடுகின்றன.


இந்தியாவின் உற்பத்தித் தொழில்கள் மற்றும் கட்டுமானத் துறையின் அண்மைக்கால அறிக்கையான 2020-ஆம் ஆண்டின் உமிழ்வுத் தரவை ஆய்வு செய்யும் போது, உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான சிக்கலை வெளிப்படுத்துகிறது. உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் இருந்து வெளிவரும் மொத்த உமிழ்வில், நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியத் தொழில் துறைகளின் பங்கு 55%-க்கும் சற்று அதிகமாகும். அதேநேரத்தில், அந்தத் துறையின் எஞ்சிய உமிழ்வில் 40%-க்கும் அதிகமானவை "குறிப்பிடப்படாத தொழில்கள்" என்ற ஒரே ஒரு பொதுவான பிரிவின் மூலமாக மட்டுமே ஏற்பட்டுள்ளன. நிதி ஆயோக்கின் (NITI Aayog) 'இந்திய காலநிலை மற்றும் ஆற்றல் தகவல் பலகையில்' (India Climate and Energy Dashboard (ICED)) உள்ள விரிவான உமிழ்வுப் பட்டியலின்படி, இதே போன்ற ஒரு நிலைதான் 2014, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் காணப்பட்டது. இந்தியாவின் உமிழ்வுப் பட்டியலில் உள்ள துறைகளின் வகைப்பாடானது, வியப்பூட்டும் வகையில் மிகப் பெருமளவிலான உமிழ்வு "குறிப்பிடப்படாத தொழில்கள்" என்ற ஒற்றை, தெளிவற்ற தலைப்பின்கீழ் வருவதைக் காட்டுகிறது.


கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் உமிழ்வு குறைப்பு திட்டமிடல் நடவடிக்கைகளின் வரம்பானது, குறிப்பிட்ட அடையாளம் காணக்கூடிய துறைகளைச் சுற்றி திட்ட அமலாக்கம் மற்றும் ஊக்கத்தொகை அடிப்படையிலான கட்டமைப்பைச் சார்ந்துள்ளது. உதாரணமாக, கார்பன் உமிழ்வுப் பட்டியலில் வெளிப்படையாக அடையாளம் காணப்பட்ட மின்சாரம், சிமெண்ட், இரும்பு அல்லாத உலோகங்கள், இரசாயனங்கள் மற்றும் ஜவுளி போன்ற சில துறைகள், 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) மற்றும் 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டம்' (CCTS) போன்ற உமிழ்வு குறைப்பு திட்டமிடல் நடவடிக்கைகளின்கீழ் வருகின்றன. இருப்பினும், தொழில்துறை உமிழ்வுகளின் ஒரு பெரும்பகுதி நிர்வாக ரீதியான தெளிவற்ற நிலையில் உள்ளது. இது இந்தியாவின் பரந்த தொழில்துறை காலநிலை உத்திசார்ந்த தீவிர தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த 40% உமிழ்வுப் பங்கிற்குத் தெளிவான உட்பிரிவுத் துறை வரையறைகள் இல்லாததால், அதில் அடங்கியுள்ள பல்வேறு தொழில்கள் 'செயல்படுத்துதல், அடைதல் மற்றும் வர்த்தகம் செய்தல்' (PAT) மற்றும் 'கார்பன் கடன் வர்த்தகத் திட்டம்' (CCTS) ஆகிய இரண்டின் முதன்மை வரம்பிற்கு வெளியே இருக்கின்றன. இத்தொழில்கள் தொழில்துறை உமிழ்விற்குப் பெருமளவில் பங்களித்தாலும்,               எஃகு அல்லது சிமெண்ட் போன்ற தொழில்களைப் போல அதே ஆற்றல் திறன் தேவைகள் அல்லது உமிழ்வுக் குறைப்பு இலக்குகளுக்கு அவை உட்பட்டவை அல்ல. இந்தக் கொள்கை இடைவெளி, நாட்டின் தொழில்துறை அடித்தளத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை பசுமை மாற்றத்திலிருந்து (green transition) விலக்கி வைக்கிறது.


தொழில்துறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம்


பசுமை இல்ல வாயு உமிழ்வை அதிகரிக்காமல், இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியைத் தனியாகக் கொண்டு செல்வதில் இந்தியா வெற்றி பெற வேண்டுமானால், அதன் தேசியப் பருவநிலை உத்தியின் அடுத்த கட்டத்திற்கு மிகவும் வெளிப்படையான, தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட தரவுகள் தேவைப்படுகின்றன. உமிழ்வுப் பட்டியலில் தற்போது இருக்கும் "வகைப்படுத்தப்படாத தொழில்துறைகள்" என்ற பிரிவை உடைத்து ஆராய்வதிலிருந்து தொடங்க வேண்டும். பூஜ்ஜிய உமிழ்வு (Net-zero emissions) என்ற இலக்கை உரிய நேரத்தில் அடைவதற்கு, இந்த 40% உமிழ்வுக்கு எந்தெந்த உட்பிரிவுத் துறைகள் துல்லியமாகக் காரணமாக இருக்கின்றன, அவற்றின் குறிப்பிட்ட ஆற்றல் நுகர்வு முறைகள் எவ்வாறு மாறி வருகின்றன, மற்றும் உற்பத்திச் சங்கிலியின் எந்தப் பகுதியில் உமிழ்வுகள் முதன்மையாக அதிகரிக்கின்றன என்பதைக் கண்டறிவதில் கொள்கை வகுப்பாளர்கள் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.


காலநிலை தொடர்பான அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை என்பது, ஒரு நாடு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் பாதையில் திறம்படச் செயல்படுகிறது என்பதை உலகிற்கு நிரூபிக்கும் ஒரு வழியாக, பெரும்பாலும் ஒரு சர்வதேசக் கடமையாகவே கருதப்படுகிறது. ஆனால், வெளிப்படைத்தன்மையின் உண்மையான மதிப்பு உள்நாட்டு அளவிலேயே உள்ளது. கொள்கை வகுப்பாளர்களுக்கு, நடவடிக்கைகள் எங்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்த தெளிவான புரிதலை வெளிப்படைத்தன்மை வழங்குகிறது.                     மேலும், இந்த நடவடிக்கைகள் பலனளிக்கின்றனவா என்பதை மதிப்பிடவும், கொள்கை திருத்தங்கள் தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணவும் உதவுகிறது. எனவே, இந்தியா ஒரு குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க விரும்பினால், கவனிக்கப்படாத இந்தத் தொழில்துறை விதிவிலக்குகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவது இன்றியமையாதது மற்றும் தவிர்க்க முடியாதது ஆகும்.


ஷிஃபாலி கோயல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தில் (Centre for Social and Economic Progress) ஒரு ஆராய்ச்சி உதவியாளராகவும், இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) முனைவர் பட்ட ஆய்வாளராகவும் உள்ளார். தேபாஷிஸ் சக்ரவர்த்தி, வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் (IIFT) பேராசிரியராக உள்ளார்.


Original Link: India’s patchy industrial climate strategy.

Share: