இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள, மூன்று வெவ்வேறு உத்திசார் பணிகளைக் கொண்ட மூன்று போர்க்கப்பல்கள் யாவை? -சுஷாந்த் குல்கர்னி

இந்திய கடற்படை ஜூன் மாதம் 21-ஆம் தேதி மூன்று புதிய போர்க்கப்பல்களைத் தங்களது படையில் இணைத்துள்ளது. இதில் ஒன்று கடலுக்கு நடுவே வெகுதூரம் சென்று எதிரிகளுடன் போரிடக்கூடியது, மற்றொன்று கடல் பரப்பை ஆராய்ச்சி செய்யக்கூடியது, மற்றும் இன்னொன்று கடற்கரைக்கு அருகில் நீர்மூழ்கி கப்பல்களைத் தேடி அழிக்கும் திறன் கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த 'ஐ.என்.எஸ் துனகிரி' (INS Dunagiri), 'ஐ.என்.எஸ் சன்ஷோதக்' (INS Sanshodhak) மற்றும் 'ஐ.என்.எஸ் அக்ரே' (INS Agray) ஆகிய கப்பல்களின் அர்ப்பணிப்பு விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இதன் மூலம், கடந்த ஜனவரி மாதம் 2025-ஆம் ஆண்டு முதல் இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பல்கள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன.


இந்த மூன்று கப்பல்களும், பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்பட்ட அதிநவீன 'ஐ.என்.எஸ் துனகிரி', ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலான 'ஐ.என்.எஸ் சன்ஷோதக்' மற்றும் ஆழமற்ற கடல் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்க்கும் 'ஐ.என்.எஸ் அக்ரே' ஆகியவை கொல்கத்தாவில் உள்ள ‘Garden Reach Shipbuilders & Engineers’ (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவல்படி, இந்த மூன்று கப்பல்களும் 75 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.                   மேலும், இவற்றை உருவாக்குவதில் 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSMEs)) பங்களித்துள்ளன.


ஜூன் 21-ஆம் தேதி இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட அந்த மூன்று போர்க்கப்பல்கள் எவை?



ஐஎன்எஸ் துனகிரி (INS Dunagiri): இந்த மூன்றில் மிகப்பாரிய மற்றும் அதிக ஆயுதங்கள் ஏந்திய போர்க்கப்பல் 'ஐஎன்எஸ் துனகிரி' ஆகும். இது ஒரு 'நடுத்தரப் போர்க்கப்பல்' (Frigate) வகையைச் சேர்ந்தது. இது 'Destroyer' எனப்படும் பிரம்மாண்ட அழிப்புவகை கப்பல்களைவிடச் சிறியது, ஆனால் கடற்கரையிலிருந்து வெகுதூரம் சென்று கடலில் போரிடக்கூடிய அளவுக்குப் பெரியது ஆகும்.


இது இந்திய கடற்படையின் 'திட்டம் 17A' (Project 17A) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின்கீழ், நவீன தலைமுறைக்கான 'எதிரி ரேடார்களில் எளிதில் சிக்காத' (Stealth) வழிகாட்டப்பட்ட ஏவுகணை நடுத்தரப் போர்க்கப்பல்கள் இந்தியாவில் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு 'Stealth' என்பது முற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுவது அல்ல, மாறாக எதிரிகளின் ரேடார் (Radar) மற்றும் பிற சென்சார்களில் (Sensors) இது மிகக் கடினமாகவே புலப்படும் என்பதாகும். துனகிரி கப்பலில் பிரம்மோஸ் (BrahMos) நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர நிலப்பரப்பிலிருந்து வான்பரப்பைத் தாக்கும் ஏவுகணை (Medium-Range Surface-to-Air Missile (MRSAM)) அமைப்பு போன்ற ஆயுதங்கள் உள்ளன. இவற்றுடன் பன்னோக்குக் கண்காணிப்பு, கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் ரேடார் (MFSTAR), சோனார் (Sonar - நீருக்கடி ஒலி அலைக்கருவி), மின்னணுப் போர் முறைகள் (Multi-Function Surveillance, Track And Guidance Radar (Electronic warfare systems)) மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் போன்ற அதிநவீன சென்சார்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன.


பாதுகாப்பு சார்ந்து, பலவிதமான பணிகளைச் செய்யக்கூடிய இந்த 'நடுத்தரப் போர்க்கப்பல்' (Frigate) ரகக் கப்பல்கள், கரையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சர்வதேச ஆழ்கடல் பகுதிகளில் (Blue water) பகுதியில் தங்கிச் செயல்படும் திறன் கொண்டவை. இவை வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அச்சுறுத்தல்கள் ஆகிய இரண்டையுமே எதிர்கொள்ளக் கூடியவை, என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தொடரில் உள்ள மற்ற போர்க்கப்பல்கள் ஐ.என்.எஸ் நீலகிரி (INS Nilgiri), ஹிமகிரி (Himgiri), தாராகிரி (Taragiri), உதயகிரி (Udaygiri) மற்றும் விந்தியகிரி (Vindhyagiri) ஆகியவை ஆகும்.


ஐ.என்.எஸ் சன்ஷோதக் (INS Sanshodhak): இது ஒரு பெரிய அளவிலான ஆய்வுக்கப்பல் (Survey Vessel Large (SVL)) ஆகும். கடல் நீரின் ஆழம், கடற்படுகையின் அமைப்புகள், துறைமுகங்களுக்கான அணுகுமுறைப் பாதைகள், கப்பல் போக்குவரத்து வழிகள் மற்றும் கடல்சார் தரவுகள் ஆகியவற்றை அளவிடுவதும் ஆராய்ச்சி மேற்கொள்வதும்தான் இதன் முக்கியப் பணியாகும். இக்கப்பலில் தானியங்கி நீரடி வாகனங்கள் (Autonomous Underwater Vehicle (AUV)), தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனங்கள் (Remotely Operated Vehicle (ROV)) மற்றும் ஒலி அலைகள் மூலம் கடலின் ஆழத்தையும், கடற்படுகையின் வடிவத்தையும் துல்லியமாக அளவிடும் நவீன ரேடார் (Multi-beam echo sounders) போன்ற நவீன அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை கடல் மட்டத்திலிருந்தும், நீருக்கு அடியிலிருந்தும் துல்லியமான தரவுகளைச் சேகரிக்க இக்கப்பலுக்கு உதவுகின்றன.


தானியங்கி நீரடி வாகனம் (Autonomous Underwater Vehicle): மனிதர்கள் இல்லாமல் கடலுக்கு அடியில் தானாகவே சென்று தரவுகளைச் சேகரிக்கும் சிறிய நீர்மூழ்கி போன்ற சாதனம். 


போர்க்கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களும் வெறும் வெற்று நீலப் பரப்பில் மட்டும் செயல்படுவதில்லை. அவை நீரின் ஆழம், கடற்படுகையின் வடிவங்கள், நீரோட்டங்கள், பவளப்பாறைகள், குறுகிய கடல் பாதைகள், துறைமுகங்கள், நீருக்கடியில் உள்ள சரிவுகள் மற்றும் கடற்கரையோரத் தடைகள் நிறைந்த நீர்நிலைகள் வழியாகவே பயணிக்கின்றன. இந்தச் சூழலைத் துல்லியமாக அறிந்துகொள்வது போர்க்கப்பல்கள் பாதுகாப்பாக நகரவும், நீர்மூழ்கிக் கப்பல்கள் தங்களின் பாதைகளைத் திட்டமிடவும், துறைமுகங்கள் தங்களின் வரைபடங்களைப் புதுப்பிக்கவும், பாதுகாப்புப் படைகள் தங்களின் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்கவும் உதவுகிறது. மேலும், இது பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து, பேரிடர் நிவாரணம், கடல் ஆராய்ச்சி மற்றும் கடற்கரை மேம்பாடு போன்ற பொதுமக்களின் தேவைகளுக்கும் ஆதரவளிக்கிறது, என்று ஆய்வுக்கப்பல்களில் பணியாற்றிய கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


'சன்ஷோதக்' என்பது பெரிய அளவிலான ஆய்வுக்கப்பல்களின் (SVL) 'சந்தாயக்' (Sandhayak-class) பிரிவைச் சேர்ந்த கடைசி கப்பலாகும். நான்கு பெரிய ஆய்வுக்கப்பல்களுக்கான ஒப்பந்தம் அக்டோபர் மாதம் 2018-ஆம் ஆண்டில் கையெழுத்தானது. இப்பிரிவைச் சேர்ந்த மற்ற கப்பல்களான ஐ.என்.எஸ் சந்தாயக் (INS Sandhayak), ஐ.என்.எஸ் நிர்தேஷக் (INS Nirdeshak) மற்றும் ஐ.என்.எஸ் இக்ஷக் (INS Ikshak) ஆகியவை முறையே பிப்ரவரி மாதம் 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2024-ஆம் ஆண்டு மற்றும் நவம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டு ஆகிய மாதங்களில் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.


ஐ.என்.எஸ் அக்ரே (INS Agray): இந்த மூன்றாவது போர்க்கப்பல்,                       மற்ற மூன்றில் மிகச் சிறியதாக இருந்தாலும், மிகவும் பிரத்யேகமான மற்றும் தனித்துவமான ஒரு பணியைச் செய்யக்கூடியது. இது கடற்கரைப் பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிப்பதற்காக (Submarine-hunter) வடிவமைக்கப்பட்ட ஒரு கப்பலாகும். 'அக்ரே' என்பது 'அர்னாலா' (Arnala-class) வகையைச் சேர்ந்தது. கடற்கரை, துறைமுகங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் முக்கியமான கடல் வழிப்பாதைகளுக்கு அருகிலுள்ள ஆழமற்ற நீர்நிலைகளில் இருக்கும் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து தாக்குவதற்காகவே இந்த சிறியரகப் போர்க்கப்பல்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளன.                           ஐ.என்.எஸ் அக்ரே கப்பலில் இலகுரக நீரில் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் (Torpedoes), உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் சோனார் (Sonar) ஒலி அலை அமைப்புகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

INS induction

கடற்கரையை ஒட்டிய நீர்நிலைகளைக் குறிக்க 'Littoral' என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, இதன் எளிமையான பொருள் 'கரைக்கு அருகில் உள்ள நீர்நிலை' என்பதாகும். "கடற்கரைப் பகுதிகள் நீர்மூழ்கிக் கப்பல்களைக்  கண்டுபிடிப்பதற்குக் கடினமான இடங்களாகும். ஏனெனில், அவை அதிக சத்தம் நிறைந்ததாகவும், பரபரப்பானதாகவும், பல்வேறு தடைகள் நிறைந்ததாகவும் இருக்கும். மீன்பிடிப் படகுகள், வணிகக் கப்பல்கள், கடலடி அமைப்புகள் மற்றும் கடலோரச் செயல்பாடுகள் ஆகியவை திறந்தவெளிக் கடலைவிட இங்கு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதைக் கடினமாக்குகின்றன. அந்த இடத்தில்தான் அக்ரே (Agray) போன்ற ஆழமற்ற நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பல் (Anti-Submarine Warfare Shallow Water Craft (ASW-SWC)) ரகக் கப்பல்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


நீர்முழ்கிக் கப்பல்கள் என்பவை ராணுவத் தளவாடங்களிலேயே கண்டறிவதற்கு மிகக் கடினமான அமைப்புகளில் ஒன்று என்பதால் இந்த விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் கடற்படையில் சேர்ப்பதற்குப் பின்னால் உள்ள முக்கியமான செய்தி என்ன?


ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த விழாவின் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த மூன்று கப்பல்களும் ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு விதமான பாதுகாப்புத் திறன்களை இந்தியக் கடற்படையில் சேர்க்கின்றன.                    இவை அனைத்தும் இணைந்து, கடற்படையின் சமநிலையான பாதுகாப்புத் திறன் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. மேலும் இவை ஆழ்கடல் செயல்பாடுகளை (Blue-water operations) வலுப்படுத்துவதோடு, கடல்சார் பகுதி விழிப்புணர்வையும் (Maritime Domain Awareness) அதிகரித்து, வளர்ந்துவரும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்கின்றன, என்று கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் தங்களின் கடற்படை வலிமையைப் பெருக்கி வருவதால் இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகப் போட்டி நிறைந்ததாக மாறி வருகிறது. அதேநேரத்தில், இந்தியாவின் கடல்சார் பொறுப்புகளும் அரபிக்கடல், வங்காள விரிகுடா, தீவுப் பகுதிகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இத்தகைய சூழலில், இந்த மூன்று கப்பல்களும் ஒரே நேரத்தில் கடற்படையில் சேர்க்கப்படுவது என்பது, இந்தியக் கடற்படை தனது திறன்களைப் பல அடுக்குளாக எவ்வாறு கட்டமைத்து வருகிறது என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும். அதாவது, தொலைதூரப் பணிகளுக்கான பெரிய போர்க்கப்பல்கள், கடலைப் பற்றி ஆராய்வதற்கான ஆய்வுக் கப்பல்கள் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான சிறிய நீர்மூழ்கி-தாக்குதல் (Submarine-hunters) கப்பல்கள் எனப் பல பிரிவுகளில் கடற்படை பலமடைந்து வருகிறது, என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


மேலும், இது நாட்டின் உற்பத்தித் தொழில்துறை சார்ந்த ஒரு முக்கியச் சமிக்ஞையுமாகும். வெவ்வேறு பணிகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்ட மூன்று வேறுபட்ட போர்க்கப்பல்களை, உள்நாட்டிலேயே தயாரித்து ஒரே நேரத்தில் கடற்படையில் இணைக்க முடியும் என்பது, இந்தியாவின் கடற்படைக் கப்பல் கட்டும் சூழல் அமைப்பின் வளர்ந்த முதிர்ச்சியைக் காட்டுகிறது.


Original Link: What are the three ships with three different strategic roles that Navy inducted


Share: