உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation (WHO)) மற்றும் அதன்கீழ் இயங்கும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பு (International Agency for Research on Cancer (IARC)) வெளியிட்ட புதிய ஆய்வின்படி, உலகெங்கிலும் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் பத்தில் நான்கு பேருக்கு (40%) வரும் புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.
முக்கிய அம்சங்கள்:
— புகையிலை, மதுப்பழக்கம், அதிக உடல் எடை (BMI), உடற்பயிற்சியின்மை, காற்று மாசுபாடு, புற ஊதாக் கதிர்வீச்சு மற்றும் முதன்முறையாக ஒன்பது வகையான புற்றுநோயை உண்டாக்கும் கிருமித்தொற்றுகள் உள்ளிட்ட 30 தவிர்க்கக்கூடிய காரணங்கள் குறித்து இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
— உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையின்படி, 2022-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 37% (சுமார் 71 லட்சம் பாதிப்புகள்), தவிர்க்கக்கூடிய காரணங்களால் ஏற்பட்டவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
— உலகளாவிய நிலவரம்: 185 நாடுகள் மற்றும் 36 வகை புற்றுநோய்களை ஆய்வு செய்ததில், தடுக்கக்கூடிய புற்றுநோய் பாதிப்புகளுக்குப் புகையிலை மிக முக்கிய காரணமாக உள்ளது. உலகளவில் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 15% புகையிலையினால் ஏற்படுகின்றன. இதைத் தொடர்ந்து தொற்றுநோய்கள் (Infections - 10%) மற்றும் மது அருந்துதல் (Alcohol - 3%) ஆகியவை அடுத்தடுத்த காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன
— இந்தியாவில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 10-ல் 4 (37.1%) புற்றுநோய்களை முன்கூட்டியே தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ஆண்டொன்றுக்கு சுமார் 5,20,000 பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
— தொற்றுநோய்கள் (13.4%), புகையிலை புகைத்தல் (10.5%), மற்றும் பாக்கு உபயோகித்தல் (5%) ஆகியவை புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கக்கூடிய முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
— இந்தியாவில், முன்கூட்டியே தவிர்க்கக்கூடிய புற்றுநோய் பாதிப்புகள் ஆண்களிடையே தான் அதிகமாகக் காணப்படுகின்றன. 10 ஆண்களில் 4 பேருக்கும் அதிகமானோருக்கு (44.7%, அதாவது 3,05,000-க்கும் மேற்பட்டோர்) நாம் மாற்றிக்கொள்ளக்கூடிய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களாலேயே புற்றுநோய் ஏற்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 10-ல் சுமார் 3 பேருக்கு (30.5%, அதாவது 2,18,000 பேர்) புற்றுநோய் ஏற்படுவதைத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுக்க முடியும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
— ஆய்வு முடிவுகளின்படி, ஆண்களிடையே புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கும் தவிர்க்கக்கூடிய முக்கிய காரணிகளில் புகையிலை முதலிடத்தில் உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நபர்களில் 18.5% பேருக்கு 'புகைபிடிக்கும்' பழக்கமே காரணமாக இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக, புகையிலை மற்றும் பாக்கு பயன்பாட்டினால் 7.7% பேருக்கும், கிருமித் தொற்றுகளினால் 7.6% பேருக்கும் புதிய புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
— ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், தவிர்க்கக்கூடிய வாய்ப்புள்ள முக்கிய வகைகள் - உதடு மற்றும் வாய்க்குழி புற்றுநோய்களாகும். முக்கியமாகப் புகையிலை இல்லாத மெல்லும் பொருட்கள், பாக்கு பயன்பாடு மற்றும் புகைப்பிடித்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம், சுமார் 85,000-க்கும் அதிகமான வாய் புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கமுடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
— பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான காரணங்களில், நாம் தவிர்க்கக்கூடிய மிக முக்கியமான காரணிகள் பின்வருமாறு:
பெண்களுக்கு ஏற்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகளில் 20.2% தொற்று நோய்களாலேயே ஏற்படுகின்றன.
போதுமான உடற்பயிற்சி அல்லது உடல் இயக்கம் இல்லாதது 2.7% புற்றுநோய் பாதிப்புகளுக்குக் காரணமாகிறது.
புகையிலை பொருட்கள் மற்றும் பாக்கு போடும் பழக்கம் 2.4% புற்றுநோய் பாதிப்புகளுக்குக் காரணமாகிறது.
— டாக்டர் பாசுவின் கூற்றுப்படி, இந்தியாவில் தொற்றினால் ஏற்படக்கூடிய புற்றுநோய்களில், தடுக்கக்கூடிய மிக முக்கியமான இரண்டு வகைகள்: கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer) மற்றும் இரைப்பை புற்றுநோய் (Gastric cancer) ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
— இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 84.8 என்ற அளவில் இருந்தது. இது 2023-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 107.2 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், புற்றுநோய் இறப்பு விகிதமும் 1990-ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 71.7 என்பதில் இருந்து, 2023-ஆம் ஆண்டில் 86.9 ஆக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஆண்டுக்கு சுமார் 12.1 லட்சம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
— இந்தியாவில் புற்றுநோயின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவாக, நோய் தாமதமாகக் கண்டறியப்படுதல், அனைவருக்கும் சரிசமமான சிகிச்சை கிடைக்காத நிலை மற்றும் சில நேரங்களில் தவிர்க்கக்கூடிய உடல்நலச் சிக்கல்கள் என மருத்துவக் கட்டமைப்பு பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
— இந்த புற்றுநோய் பாதிப்புச் சங்கிலியை உடைக்க, இந்தியா தனது புற்றுநோய் கொள்கையின் மையப்புள்ளியாக 'முன்னெச்சரிக்கை' நடவடிக்கைகளை மாற்ற வேண்டும். அதாவது, சுத்தமான காற்று மற்றும் குடிநீருக்காக முதலீடு செய்வது, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி (Human Papillomavirus (HPV)) மற்றும் கல்லீரல் அழற்சி வகை B (hepatitis-B) தடுப்பூசிகளை விரிவுபடுத்துவது மற்றும் புற்றுநோயைத் தூண்டும் காரணிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகக் கருதப்படுகிறது.