வறண்ட வானிலை

எல் நினோ (El Nino) காலநிலை மாற்றம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)), உண்மையான மதிப்பீட்டை வழங்க வேண்டியது அவசியமாகிறது. 


2024-ஆம் ஆண்டு முதல் நீடித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பொருளாதாரத் தாக்கத்தை ஆய்வாளர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில், வரவிருக்கும் பருவமழை குறித்த புதிய கவலை எழுந்துள்ளது. உலகளாவிய வானிலை நிபுணர்கள் இந்த ஆண்டு மீண்டும் எல் நினோ (El Niño) ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளனர். உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization (WMO)) மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிட்ட தகவலின்படி, பலவீனமடைந்து வரும் லா நினா (La Niña) சூழல், மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 40% வாய்ப்புடன் வெப்பமயமான எல் நினோவாக மாறக்கூடும் என்று கூறியுள்ளது. மேலும், ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையம் (European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF)) இந்த ஆண்டு "சூப்பர்" எல் நினோ ஏற்பட 22% வாய்ப்பும், ஒரு வலுவான நிகழ்விற்கு 80% வாய்ப்பும், மிதமான நிகழ்விற்கு 98% வாய்ப்பும் இருப்பதாக நேரடி முன்னறிவிப்பை வழங்கியுள்ளது. ஒருவேளை இந்த கணிப்புகள் உண்மையானால், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகிய இரண்டிலும் சவால்களைச் சந்திக்க நேரிடும் எனவும் இதனால் மிகவும் கவனமான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


சமீபத்திய ஆண்டுகளில் எல் நினோ (El Nino) குறித்த எச்சரிக்கைகள் சில நேரங்களில் தவறாக முடிந்துள்ளன. மேலும், அதன் தீவிரம் மாறுபடும் என்பதால் ஒவ்வொரு எல் நினோவும் இந்திய வேளாண் சாகுபடியை மோசமாகப் பாதிப்பதில்லை. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole (IOD)) போன்ற பிற காரணிகள் பருவமழை மீதான அதன் தாக்கத்தைக் குறைக்கக்கூடும் என்கின்றனர். இருப்பினும், 1950-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட 15 வறட்சி ஆண்டுகளில் 10 ஆண்டுகள் எல் நினோவுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. மிதமான முதல் வலுவான எல் நினோ காலங்களில், மழையளவானது நீண்டகால சராசரியைவிட (Long-Period Average (LPA)) 14–15% வரை குறைந்துள்ளது. இதன் விளைவாக, அந்த ஆண்டுகளில் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (Gross Value Added (GVA)) பொருளாதாரத்தில் வேளாண்மையின் பங்கு 1–2 சதவீத புள்ளிகள் சரிந்தது. தற்போதைய அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 2026-ஆம் நிதியாண்டில் விவசாய மொத்த மதிப்பு கூட்டப்பட்ட (GVA) வளர்ச்சி 2.4% மட்டுமே உள்ளது. இந்த மந்தநிலை தொடர்ந்தால் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் குறையக்கூடும் என்கின்றனர். மேலும், மிதமான அல்லது வலுவான எல் நினோ காலங்களில் காரிஃப் (Kharif) பயிர் உற்பத்தி 6–12% வரை சரிந்ததால் உணவுப் பணவீக்கமும் ஏற்பட்டுள்ளது. எல் நினோவின் தாக்கத்தைக் கணக்கில் கொள்ளாமலேயே, 2027-ஆம் நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நுகர்வோர் விலை பணவீக்கம் 4–4.2%-ஆக உயரும் என இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India (RBI)) ஏற்கனவே கணித்துள்ளது. 

சமீபத்திய ஆண்டுகளில், எல் நினோ (El Niño) விளைவுகளால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, பிரச்சனை ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் முறையையே அரசாங்கம் பின்பற்றி வருகிறது. இதற்காக மத்திய கையிருப்புத் தொகுப்பிலிருந்து உணவு தானியங்களை விடுவித்தல், ஏற்றுமதிக்குத் தடை விதித்தல் மற்றும் தட்டுப்பாடு நிலவும் வேளாண் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்ய அனுமதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இத்தகைய உடனடித் தீர்வுகள் ஒரு பின்னடைவையும் கொண்டுள்ளன. திடீர் ஏற்றுமதித் தடைகள் மற்றும் இறக்குமதி வரிக் குறைப்பு போன்ற செயல்கள், ஏற்கனவே அதிக சிக்கல்கள் நிறைந்த தொழிலாக இருக்கும் வேளாண் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வருமானத்தைக் கணிசமாகக் குறைக்கின்றன.


காரீஃப் (Kharif) பயிர் சாகுபடி காலத்திற்கு முன்னதாகவே, வரவிருக்கும் எல் நினோ (El Nino) காலநிலையின் வலிமை மற்றும் அது தொடங்கும் நேரம் குறித்து தெளிவான புரிதலைப் பெறுவது மிகவும் அவசியமாகிறது. இது வர்த்தகம், பயிர் விதைப்பு மற்றும் நீர் சேமிப்பு குறித்து அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) தனது ஏப்ரல் மாத பருவமழை கணிப்பில், எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதன் தீவிரம் குறித்த ஒரு உண்மையான மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கடந்த கால அனுபவங்கள், எல் நினோவின் பாதிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுவதைக் காட்டுகின்றன. உதாரணமாக, 2018-ஆம் ஆண்டு மற்றும் 2023-ஆம் ஆண்டு ஆகிய எல் நினோ ஆண்டுகளில், பருவமழை இயல்பாக இருக்கும் என்றும், நீண்டகால சராசரியில் (LPA) முறையே 97% மற்றும் 96% மழை பொழியும் என்றும் கணிக்கப்பட்டது. இருப்பினும், உண்மையான மழைப்பொழிவு 91% மற்றும் 94% என மிகக் குறைவாகவே இருந்தது. எனவே, வேளாண் திட்டமிடலுக்கு மிகவும் துல்லியமான வானிலை கணிப்புகள் அவசியமாகின்றன.


Original Link: Dry run 

Share: