NCERT நிபுணர்களை தடை செய்வதன் மூலம், உச்சநீதிமன்றம் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறது.

நீதிமன்றத்தின் திறந்த மனப்பான்மை மற்றும் பரந்த சிந்தனை கொண்ட நீண்டகால நற்பெயருக்கு, ஒரு அதீத உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை முரணாக அமைகிறது. நீதித்துறையின் இத்தகைய நற்பெயர் என்பது பல நீதிபதிகள் அடங்கிய அமர்வுகளால் காலப்போக்கில் கட்டமைக்கப்பட்டதாகும்.


கடந்த மாதம், எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு பகுதியை இந்திய உச்சநீதிமன்றம் கடுமையாக எதிர்த்தது. குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட பல மாற்றங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக இருந்ததால், இந்த குறிப்பிட்ட பகுதியும் தவறான எண்ணத்துடன் சேர்க்கப்பட்டதாகக் கருதப்பட்டது. நீதித்துறை ஒரு முக்கியப் பங்காற்றுவதால், அதன் செயல்பாடுகள் குறித்த எந்தவொரு மதிப்பீடும், குறிப்பாக இளம் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களில், மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். நீதிமன்றத்தின் இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, அரசாங்கம் அந்தப் பாடப்புத்தகத்தைத் திரும்பப் பெற்றதுடன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (NCERT) அமைப்பைக் கண்டித்தது. இருப்பினும், இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்தாமல், வரலாற்றாசிரியர் மிஷல் டானினோ, சட்ட நிபுணர் அலோக் பிரசன்னா குமார் மற்றும் கல்வியாளர் சுபர்ணா திவாகர் ஆகிய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) உறுப்பினர்களுடன் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த புதன்கிழமை அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்தத் தடையும் கட்டுப்பாடுகளும் ஏமாற்றமளிப்பதாக உள்ளன. கருத்துச் சுதந்திரத்தின் எல்லையை விரிவுபடுத்திய பல தீர்ப்புகளின்மூலம் நீதித்துறை பெற்ற நற்பெயருக்கு எதிராக, இத்தகைய உணர்ச்சிகரமான அணுகுமுறை அமைந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். 


கடந்த பத்தாண்டுகளில், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (National Council of Educational Research and Training (NCERT)) பாடப்புத்தகங்கள் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, குஜராத் கலவரம் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது, இடைக்கால இந்திய வரலாறு தொடர்பான பாடங்கள் சுருக்கப்பட்டது, போராட்ட இயக்கங்கள் பற்றிய தகவல்கள் குறைக்கப்பட்டது மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்த வரிகள் நீக்கப்பட்டது போன்றவை குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் சமூகத்தின்  உண்மைநிலையை எளிமைப்படுத்துவதோடு, ஆளுங்கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அதே சமயம், மாறிவரும் அரசியல் சூழல்களுக்கு மத்தியிலும், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் உரிய சட்ட நடைமுறைகளில் உறுதியாக இருப்பதே தனது பலம் என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இந்த உறுதிப்பாடானது நீதித்துறை தன்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளவும் வழிவகுத்துள்ளது. அந்த சுயபரிசோதனை உணர்வின் வெளிப்பாடாகவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "வருந்தத்தக்க வகையில், நீதித்துறைக்குள்ளும் ஊழல் வழக்குகள் உள்ளன" என்று குறிப்பிட்டார். தற்போது திரும்பப் பெறப்பட்ட பாடப்புத்தகத்தில் நீதிபதி கவாயின் இந்த உரை இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.


நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் முயற்சியாகக் கருதி, உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய கோபம் தவறானது அல்ல என்றாலும் நீதிமன்றத்தின் அந்தக் கண்டனம் தற்போது கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கும் தணிக்கையாக மாறுமானால், விமர்சனங்களை பெருந்தன்மையுடன் எதிர்கொண்ட அதன் சொந்த வரலாற்றுப் பெருமைக்கே அது இழுக்காக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கின்றனர். 


Original Link: In blacklisting NCERT experts, SC does itself a disservice.


Share: