பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பு மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களில் பெருகி வரும் வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் பெண்கள் அறிவுசார் பொருளாதாரத்தின் முன்னணித் தலைவர்களாக உருவெடுக்கத் தயாராக உள்ளனர்.
இந்தியா தனது வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பெண்களுக்கான மேம்பாடு என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்பதை நோக்கி கவனம் தெளிவாகத் திரும்பியுள்ளது. பெண்கள் இனி நலத்திட்டங்களின் பயனாளிகளாக மட்டுமே பார்க்கப்படாமல், தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க தலைவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
நாட்டின் முன்னேற்றத்தை, குறிப்பாக அறிவுசார் துறைகளை, 'நாரி சக்தி' (பெண் சக்தி) முன்னெடுத்துச் செல்கிறது. இந்தியா வளர்ச்சியடைந்த பாரதம் (Viksit Bharat) என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் வேளையில், எதிர்கால அறிவுசார் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கப்போகும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (Science, Technology, Engineering, and Mathematics (STEM)) ஆகிய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவது ஒரு மிகப்பெரிய மாற்றமாக அமைந்துள்ளது.
அடித்தளத்தை உருவாக்குதல்
அறிவியல் துறையில் பெண்களின் பயணம் வகுப்பறைகளிலிருந்தே தொடங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்தியா தொடக்கக் கல்வி, ஆயத்தக் கல்வி மற்றும் நடுநிலைக் கல்வியில் 1.0 என்ற பாலினச் சமநிலை குறியீட்டை (Gender Parity Index) எட்டியுள்ளது. மேலும், உயர்நிலைக் கல்வியில் இது 1.1-ஆக உயர்ந்துள்ளது. இதன் பொருள் என்னவென்றால், சில நிலைகளில் பெண்களின் கல்விப் பங்கேற்பு ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அவர்களைவிட அதிகமாகவோ உள்ளது என்பதாகும். அத்துடன், பெரும்பாலான பள்ளி நிலைகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதால், மாணவர்கள் தொடர்ந்து கல்வியைத் தொடரும் நிலை மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் அணுகல் வசதிகளுடன், ஆரம்பக் கல்வியிலேயே "திறன் மேம்பாடு" முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் அடல் டிங்கரிங் ஆய்வகம் (Atal Tinkering Labs) போன்ற முன்னெடுப்புகள், மாணவர்களுக்குப் புதிய திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சி அனுபவத்தைப் பெற உதவுகின்றன. இது, சிறுமிகள் சிறுவயதிலிருந்தே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளை ஆர்வத்துடன் ஆராய்வதற்கும், அத்துறைகளில் தங்களுக்கு என ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்வதற்கும் பெரும் உறுதுணையாக இருக்கிறது.
உயர்கல்வியில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
இந்தியாவின் உயர்கல்வித் துறையானது நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கை ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey on Higher Education (AISHE)) தரவுகளின்படி, கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 51,534-லிருந்து 60,000-க்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதேபோல், 2014–15-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 3.42 கோடியிலிருந்து 4.46 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாணவிகளின் சேர்க்கை 1.57 கோடியிலிருந்து 2.18 கோடியாக உயர்ந்துள்ளதுடன், பெண்களுக்கான மொத்த சேர்க்கை விகிதம் (Female (Gross Enrolment Ratio) (GER)) 22.9-லிருந்து 30.2-ஆக முன்னேறி, கல்வித் துறையில் பெண்கள் நிலையான வளர்ச்சியை அடைந்து வருவதைக் காட்டுகிறது.
STEM துறைசார் கல்வியில் பெண்கள்
இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் பங்கேற்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது உயர்கல்வியில் சேர்ந்துள்ளவர்களில் 43% பெண்கள் ஆவர். இது உலகிலேயே அதிகப்படியான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித துறைகளில் பட்டதாரிப் பெண்களைக் கொண்ட விகிதங்களில் ஒன்றாகும். 'ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு புள்ளிவிவர அறிக்கை 2023'-ன்படி (Research and Development Statistics Report 2023), தேசிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாளர்களில் பெண்கள் 18.6% பங்களிக்கின்றனர். மேலும், கல்வியிலிருந்து ஆராய்ச்சித் துறைக்கு அவர்கள் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யப் பல சிறப்புத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. ஒரு முக்கியக் கொள்கை முடிவாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கெனக் கூடுதல் இடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு 10%-க்கும் குறைவாக இருந்த பெண்களின் பங்கு, சமீபத்திய ஆண்டுகளில் 20%-க்கும் மேலாக உயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆராய்ச்சித் துறைகளில் பெண்கள்
கல்விசார் ஆராய்ச்சிகளில் பெண்களின் பங்களிப்பு படிப்படியாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதுகலை படிப்புகளில் பெண்களின் சேர்க்கை 2014-15-ஆம் ஆண்டில் 19.8 லட்சமாக இருந்தது, இது 2022-23-ஆம் ஆண்டில் 32 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல், முனைவர் பட்டப் படிப்புகளில் (Doctoral/PhD) பெண்களின் சேர்க்கை சுமார் 47,000-லிருந்து 1.12 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது கடந்த சில ஆண்டுகளில் 135 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதைக் காட்டுகிறது.
பிரதம மந்திரி ஆராய்ச்சி உதவித்தொகை (Prime Minister’s Research Fellowship (PMRF)) திட்டமானது ஏற்கனவே 35% பெண்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 பேருக்கு இந்த உதவித்தொகையை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் ஆராய்ச்சிச் சூழலை விரிவுபடுத்துவதன் மூலம் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையும் (Anusandhan National Research Foundation (ANRF)) இந்த முயற்சிகளுக்குப் பெரும் ஊக்கமளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆராய்ச்சித் துறையில் பெண்களின் பங்கேற்பு நிலைகளைப் பார்க்கும்போது, 2024–25-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) தேசியத் தகுதித் தேர்வு - இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (National Eligibility Test–Junior Research Fellowship (NET-JRF)) திட்டத்தின்கீழ், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் 53%-க்கும் அதிகமானோர் பெண்கள் என்பது தெரியவருகிறது. இதில் மொத்தம் 13,727 உதவித்தொகை பெற்றவர்களில் 7,293 பெண்கள், முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் தொழில்நுட்பம் (Quantum Technology) மற்றும் தரவு அறிவியல் (Data Science) போன்ற வளர்ந்துவரும் துறைகள் உலகளாவிய பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைத்து வருகின்றன. இந்தச் சூழலில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பது இந்தியாவின் கண்டுபிடிப்புத் திறனுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் ஏற்கனவே நடைமுறையில் தெரிவதுடன், தேசிய அளவிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கட்டமைப்பில் 45.87% பெண் ஆராய்ச்சியாளர்கள் அரசு நிறுவனங்களிலும், 27.62% பேர் உயர்கல்வித் துறையிலும், 26.51% பேர் தொழில் துறையிலும் பணியாற்றி வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், மாணவிகள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் உயர்கல்வியைத் தொடர்வதை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பான மற்றும் மலிவு விலையிலான விடுதிகளை உருவாக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெண்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் பிற அரசுத் திட்டங்கள் மூலமாக இந்த முயற்சிக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இன்று நாட்டின் சிந்தனை என்பது வெறும் அறிவியல் துறைகளின் மூலமாகப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் இல்லை, மாறாக, பெண்களின் பங்களிப்பின் மூலம் அறிவியலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதே இத்திட்டங்களின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெண்களும் வளர்ச்சியடைந்த இந்தியா திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையும்
இந்தியா 2047-ஆம் ஆண்டிற்குள் விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற இலக்கை நோக்கி முன்னேறும்போது, அந்தப் பிரம்மாண்ட மாற்றத்திற்குப் பெண்களே தலைமை தாங்குவார்கள். பல்வேறு துறைகளில் அதிகரித்து வரும் அவர்களின் பங்களிப்பு மற்றும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களில் கிடைத்துவரும் மேம்பட்ட வாய்ப்புகளால், இந்தியப் பெண்கள் அறிவுசார் பொருளாதாரத்தில் தலைவர்களாக உருவெடுக்கத் தயாராக உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், வளர்ந்த இந்தியாவை நோக்கிய இந்தப் பயணம் உண்மையாகவே பெண் சக்தியால் (Nari shakti) மட்டுமே இயக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர் ஆவார்.
Original article : From women’s development to women-led development: The journey to Viksit Bharat. -Dharmendra Pradhan