நலிவடைந்துவரும் புலிகள் காப்பகங்களை மீட்டெடுப்பதில் அரசு ஏன் கவனம் செலுத்த விரும்புகிறது?. -நிகில் கனேகர்

 இந்தியாவின் புலிகள் எண்ணிக்கை 3,682-ஐ எட்டியுள்ள நிலையில், மத்திய அரசு நாடு முழுவதும் பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் வகையில் 25 முன்னுரிமை காப்பகங்களை வாழிட மீட்பு, இரை உயிரினங்கள் மீட்டெடுப்பு மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மறு அறிமுகங்களுக்காக அடையாளம் கண்டுள்ளது.


கடந்த வாரம், சுற்றுச்சூழல் அமைச்சகமும் இராஜஸ்தான் வனத்துறையும் இணைந்து, அல்வாரில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் (Sariska Tiger Reserve) புலிகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதன் 18-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடின. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள இந்தப் புலிகள் காப்பகம், இதற்கு முன்னர் தனது அனைத்துப் புலிகளையும் இழந்திருந்தது.


இது புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த ஒரு எதிர்வினையைத் தூண்டியது மட்டுமல்லாமல், புலிப் பாதுகாப்பு, அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறைகள் மற்றும் மேலாண்மை நடைமுறைகள் ஆகியவற்றில் நாடுதழுவிய முழுமையான சீரமைப்பையும் ஏற்படுத்தியது.


இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு இரண்டு புதிய மதிப்பீட்டு அறிக்கைகளை வெளியிட்டது. முதலாவது, வரும் ஆண்டுகளில் புலிகளை நிர்வகிப்பதற்கான ஒரு செயல்திட்டமாகும். இரண்டாவது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 12 புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சிகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விவரிக்கிறது. புலிகளின் எண்ணிக்கையை வெறுமனே கணக்கிடுவதைத் தாண்டி, குறைந்த புலிகளைக் கொண்ட தேசியப் பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்த மதிப்பீடுகள் வலியுறுத்துகின்றன.

புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மோசமான வாழ்விடங்கள் மற்றும் குறைந்த அளவு இரையை மட்டுமே கொண்ட பூங்காக்களையும் மத்திய அரசு இதில் சேர்த்துள்ளது. இத்தகைய பூங்காக்களை மேம்படுத்துவது, அதிகபட்ச புலிகளைத் தாங்கும் திறனை எட்டிய காப்பகங்களிலிருந்து, புதிய மற்றும் சிறந்த வசதிகள் கொண்ட வாழ்விடங்களுக்குப் புலிகள் பரவிச் செல்ல உதவும் என்று அது கூறியுள்ளது.


புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், அவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே குவிந்துள்ளன.


இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. 2006-ல் 1,411-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 3,682-ஆக உயர்ந்துள்ளது. இப்புலிகள் சுமார் 85,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 58 புலிகள் காப்பகங்களில் பரவியுள்ளன. இருப்பினும், இந்த எண்கள் முழுமையான நிலவரத்தை வெளிப்படுத்தவில்லை.


மொத்தமுள்ள 58 புலிகள் காப்பகங்களில், வெறும் 10 முதல் 12 காப்பகங்களிலேயே மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளது. முக்கியமாக, மூன்றுக்கும் குறைவான புலிகளைக் கொண்ட 12 புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் கவல்(Kawal), கம்லாங் (Kamlang) மற்றும் டம்பா (Dampa) ஆகிய மூன்று காப்பகங்களில் புலிகளே இல்லை. புலிகளின் அடர்த்தி அதிகரிக்கும்போது, ​​அவை இடையகப் பகுதிகள் (buffer areas), பிராந்தியப் பிரிவுகள் மற்றும் கலப்புப் பயன்பாட்டு நிலங்களுக்கு இடம்பெயர்கின்றன.


இருப்பினும், புலிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள பூங்காக்களில், காடுகள் வளமாக இருக்கலாம். ஆனால், இங்கு புலிகளுக்கான இரையின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த இரண்டு சூழ்நிலைகளுமே உகந்தவையாக இல்லை.





அதிக புலிகள் உள்ள காப்பகங்களில், அவை வன விளிம்பு நிலைகளுக்கோ அல்லது விவசாய நிலங்களுக்கோ பரவுவது, மனிதர்களுடன் அவற்றுக்கு மோதலை ஏற்படுத்துவதோடு, அந்த விளிம்பு நிலைகளில் உள்ள கால்நடைகளை அவை சார்ந்திருப்பதையும் அதிகரிக்கிறது. மேலும், இது இரயில் பாதைகள், சாலைகள் மற்றும் கால்வாய்களைக் கடக்கும்போது இறக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.


புலிகளின் எண்ணிக்கையில் காணப்படும் இந்தச் சீரற்ற பரவல், அவற்றின் நீண்டகாலப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக அமைகிறது. மூல எண்ணிக்கைகள் (Source populations) என்பவை, வாழ்விடத் தரம் சிறப்பாகவும், இரைகள் தாராளமாகவும், புலிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் உள்ள இடங்களாகும். சிங்க் பகுதிகள் (Sink populations) என்பவை, இனப்பெருக்கம் செய்யும் புலிகள் இல்லாத அல்லது ஆரோக்கியமான காடுகளுடன் தொடர்பு இல்லாத இடங்களாகும். மூலப் பகுதிகள் மற்றும் சிங்க் பகுதிகளுக்கு இடையிலான இந்த வேறுபாடானது, பாதுகாப்பில் ஒரு முக்கிய சவாலை உருவாக்குகிறது.


மத்திய அரசின் சமீபத்திய மதிப்பீடு, கார்பெட் (Corbett), பந்திப்பூர் (Bandipur) மற்றும் கசிரங்கா (Kaziranga) போன்ற 13 புலிகள் காப்பகங்களில் ‘மூல எண்ணிக்கைகள்’ (Source populations) ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கிறது. மேலும், ஐந்துக்கும் குறைவான புலிகள் எஞ்சியிருக்கும் இடங்களில் அவற்றை மீண்டும் அறிமுகப்படுத்துவது உட்பட, குறைந்தபட்சம் 25 புலிகள் காப்பகங்களில் முன்னுரிமை அடிப்படையிலான தலையீடுகள் தேவை என்பதையும் அது பரிந்துரைத்துள்ளது.


'புலிகளைப் பெற்றுக்கொள்ளும் இடங்களை' (recipient sites) அடையாளம் காணுதல் மற்றும் அது ஏன் தேவைப்படுகிறது?


புலிகளின் எண்ணிக்கை வளர்ச்சி ஆண்டுக்கு ஆறு சதவீதம் என்ற அளவில் சீராக இருந்து வருகிறது. இருப்பினும், இந்த சீரற்ற வளர்ச்சியின் காரணமாக, அதிக அடர்த்தி கொண்ட பிராந்தியங்கள், காடுகளுக்கு வெளியே பரவும் புலிகளை நிர்வகித்தல், மனித-வனவிலங்கு மோதல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. அதே வேளையில், பரந்த காடுகள் புலிகள் இல்லாமலே காணப்படுகின்றன.


வனப்பகுதிகள் துண்டாக்கப்படுவதால், புலிகள் நீண்டதூரம் இடம்பெயர்வதற்கு பாதிப்படைகிறது. மேலும், நெருக்கடிப் பகுதிகளில் இரையின் இருப்பு குறைவாக இருப்பதால், புலிகள் இப்பகுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றன. மற்றும் மனித நடவடிக்கைகளும் புலிகளின் வாழ்விடங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. புலிகள் காப்பகங்கள், பிராந்தியக் காடுகள், கலப்புப் பயன்பாட்டுப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய, நன்கு இணைக்கப்பட்ட வன நிலப்பரப்பானது, ஒரு பெருங்கூட்டத்தை நிறுவுவதற்கும், மரபணுப் பரிமாற்றத்திற்கு உதவுவதற்கும், நீண்டகாலத்தில் அழிவின் அபாயத்தைக் குறைப்பதற்கும் முக்கியமானது.


புலி இனங்களின் நீண்டகால மீட்சியானது, இரையின் மிகுதி, வாழ்விடத்தின் தரம் மற்றும் மிக முக்கியமாக, புலிகளே அங்கு குடியேறுதல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைச் சார்ந்துள்ளது என்று அரசாங்க மதிப்பீடு குறிப்பிடுகிறது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் (National Tiger Conservation Authority), இந்திய வனவிலங்கு நிறுவனமும் (Wildlife Institute of India), 58 காப்பகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள வாழ்விடம், இரை மற்றும் புலி இனங்களின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மதிப்பீட்டுக் கட்டமைப்பை அல்லது குறியீட்டை உருவாக்கியுள்ளன.


இவற்றில் மோசமான வாழ்விடம், குறைந்த இரையின் இருப்பு மற்றும் பிற வன நிலப்பரப்புகளுடன் பலவீனமான இணைப்பு போன்ற அவை எதிர்கொண்ட தடைகளை இது கணக்கில் கொள்கிறது. இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், இரையின் இருப்பு, வாழ்விடத்தின் தரம் அல்லது புலிகளின் இருப்பு ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஒன்று நெருக்கடியில் உள்ள 25 புலிகள் காப்பகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


மத்திய இந்திய மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்தான், முன்னுரிமைத் தலையீடுகளுக்காக அடையாளம் காணப்பட்ட மிக அதிக எண்ணிக்கையிலான புலிகள் காப்பகங்கள் அமைந்துள்ளன.




புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதும், பிற பிராந்தியங்களிலிருந்து புலிகளின் எண்ணிக்கை பரவுவதற்கு உதவுவதுமே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கு மாறாக, வடகிழக்கு மலைப்பகுதிகளும் பிரம்மபுத்திரா வெள்ளச் சமவெளிகளும் பரந்த வன வாழ்விடங்களைக் கொண்டுள்ளன. இரையை மீட்டெடுத்தல், பாதுகாப்பு மற்றும் நிலப்பரப்பு இணைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட்டால், அங்கு புலிகளின் எண்ணிக்கையை மீட்டெடுப்பதற்கான நல்ல சாத்தியக்கூறுகள் உள்ளன என்று அது குறிப்பிட்டது.


கடந்தகால மீள் அறிமுகத்திலிருந்து கிடைத்த பாடங்கள்


ரஷ்யாவில் இதற்கு முந்தைய முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில்,  சரிஸ்கா மீள் அறிமுகத் திட்டமானது (Sariska reintroduction programme), உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் வெற்றிகரமான அறிவியல் பூர்வமான புலி மீள் அறிமுகமாகக் கருதப்படுகிறது.


2000-களின் மத்தியில் தொடங்கி இறுதிப் பகுதி வரை தனது அனைத்துப் புலிகளையும் இழந்திருந்த பன்னா (Panna) பகுதியிலும், சரிஸ்கா (Sariska) பெற்ற வெற்றி மீண்டும் பெறப்பட்டது. 2009-ல் பன்னாவில் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, இது போன்ற பத்து இடமாற்ற நடவடிக்கைகள் கலவையான வெற்றியுடனும் சில முழுமையான தோல்விகளுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


உள்ளூர் சமூகத்தினரின் நிராகரிப்பால், ஒடிசாவின் சட்கோசியாவில் (Satkosia) புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் தோல்வியடைந்ததை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், இத்திட்டம் கால்நடைகளை வேட்டையாடும் வடிவத்தில் ஆரம்பகட்ட பின்னடைவுகளைச் சந்தித்தது, இது உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. 2018-ல் கன்ஹாவிலிருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் புலி சட்கோசியாவிற்கு கொண்டுவரப்பட்டன. இருப்பினும், அந்த ஆண் புலி பின்னர் ஒரு பொறியில் சிக்கி உயிரிழந்தது.




குறைந்த இனப்பெருக்க வெற்றி காரணமாக, ராஜஸ்தானின் முகுந்தரா மலைகள் காப்பகத்தில் (Mukundara Hills Reserve) புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணி மெதுவாகவும் மந்தமாகவும் முன்னேறி வருவதாக மத்திய அரசின் மதிப்பீடு குறிப்பிட்டது. வாழ்விடம், இரைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றின் கடுமையான அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில், மீண்டும் அறிமுகப்படுத்துவது கண்டிப்பாக ஒரு கடைசி முயற்சியாகவே இருக்க வேண்டும் என்று மதிப்பீடு கூறியது.


Original article : Why the government wants to focus on restoring struggling tiger reserves?. -Nikhil Ghanekar

Share: