ஆங்கிலேயர் ஆட்சிக்காலச் சட்டங்கள் தொடங்கி, தற்போதைய நவீன தொழில்நுட்பம் சார்ந்த சீர்திருத்தங்கள் வரை, இந்த மாற்றங்கள் அனைத்தும் குற்ற விசாரணை, ஆதார மேலாண்மை மற்றும் பொதுமக்கள் நீதித்துறையை அணுகும் விதம் ஆகியவற்றை முற்றிலுமாக மாற்றி அமைத்து வருகின்றன.
150 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு, ஒரு ஜனநாயக நாட்டிற்காக அல்லாமல், நாட்டைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்வதற்காக ஆங்கிலேயர் காலத்தில் (Colonial laws) உருவாக்கப்பட்ட சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்கி வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டம் (Indian Penal Code (1860)), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Code of Criminal Procedure (1898)) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் (Indian Evidence Act (1872)) ஆகியவை சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடைமுறையில் இருந்தன. இருப்பினும், காலப்போக்கில் குற்றங்களின் தன்மை மாறிவிட்டது. பாரம்பரியமான குற்றங்களில் இருந்து தற்போது இணைய மோசடி, திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் ஏமாற்று வேலைகள் என குற்றங்கள் உருமாறியுள்ளன.
ஜூலை மாதம் 1-ஆம் தேதி, 2024-ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்துச் சட்டங்களுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா (Bharatiya Nyay Sanhita (BNS)), இந்திய தண்டனைச் சட்டம்), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா ((Bharatiya Nagarik Suraksha Sanhita (BNSS)), குற்றவியல் நடைமுறைச் சட்டம்), மற்றும் பாரதிய சக்ஷ்ய ஆதினியம் (Bharatiya Sakshya Adhiniyam (BSA)), இந்திய சாட்சியச் சட்டம்) ஆகிய புதிய சட்டங்களைக் கொண்டுவர இந்தியா ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய குற்றவியல் சட்ட சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது.
ஹரியானா மாநிலக் காவல் துறைத் தலைவராக (DGP), இந்த மிகப்பெரிய மாற்றத்தை ஒரு நிர்வாகியாக மட்டுமல்லாமல், களத்தில் எனது குழுவினருடன் நேரடியாகப் பணியாற்றிய ஒருவனாகவும் நான் பார்த்திருக்கிறேன். புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஹரியானா மாநிலம் தற்போது முன்னணியில் உள்ளது. மேலும், இந்த மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நான் நேரில் கண்டேன். நாங்கள் எங்களது புலனாய்வு அதிகாரிகளுக்கு மறுபயிற்சி அளித்தோம், பணி நடைமுறைகளை மாற்றினோம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டோம். இந்த மாற்றம் சவாலானதாக இருந்தது, ஆனால் இந்தச் சீர்திருத்தம் மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. உதாரணத்திற்கு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு-420 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-318-ஆக மாறியது. அதேபோல் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு-302 என்பது பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு-101-ஆக மாறியது. முறையான கல்வியும் பயிற்சியும் குறைவாகப் பெற்ற பல புலனாய்வு அதிகாரிகள், பல ஆண்டுகளாக தாங்கள் பின்பற்றி வந்த நடைமுறைகளை மறந்து, புதிய சட்ட விதிகளை மிக விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த மாற்றத்தின் அளவை முழுமையாகப் புரிந்துகொள்ள, முதலில் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் நீண்டகாலமாக இருந்துவரும் சவால்களையும், புதிய சட்டங்கள் அவற்றை எவ்வாறு தீர்க்க முயல்கின்றன என்பதையும் பார்ப்பது அவசியமாகும்.
முடிவற்ற காலதாமதங்களுக்குப் பதிலாக, பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துதல்
இந்தியாவின் மிக முக்கியமான குற்றவியல் நீதித்துறைப் பிரச்சினை, வழக்குகள் முடிவடைவதில் ஏற்படும் தாமதம் ஆகும். தற்போது, 5.58 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. ஆனால், இவற்றை விசாரிப்பதற்காக வெறும் 21,285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இதன் விளைவாக, நீதித்துறை தொடர்பான நடவடிக்கைகள் தாமதம் ஆகின்றன. இது பொதுமக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது. புகழ்பெற்ற இந்தித் திரைப்பட வசனமான "Tarikh pe Tarikh" (வாய்தாவுக்கு மேல் வாய்தா) என்பது வெறும் சினிமா மிகைப்படுத்தல் அல்ல, அந்த வசனம் உண்மைநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது.
பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டம், சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தக்கூடிய காலக்கெடுவை நிர்ணயிப்பதன் மூலம் வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க முயல்கிறது. இதன்படி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை விசாரணை அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேலும், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு, நீதிபதிகள் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் தீர்ப்பை வழங்க வேண்டும். இந்தச் சட்டம் தேவையில்லாத வழக்கு ஒத்திவைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. ஒருவேளை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சட்டப்பூர்வமாகத் தானாகவே பிணை (Statutory bail) பெற தகுதி கிடைத்துவிடும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
வழக்கு விவரம் சார்ந்த காலக்கெடுவை துல்லியமாகப் பின்பற்றுவதற்குத் தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. மின்னணு ஆதாரங்களை நிர்வகிக்கும் அமைப்பான 'e-Sakshya' போன்ற டிஜிட்டல் ஆதாரத் தளங்கள், குற்றக் காட்சிப் பதிவுகளை அவை பதிவு செய்யப்பட்ட நேரம் மற்றும் புவியியல் இருப்பிடம் ஆகிய விவரங்களுடன் உருவாக்குகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் பாதுகாக்கிறது, வழக்கைச் சரியாகக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் நீதித்துறை அமைப்பானது குறிப்பிட்ட காலத்திற்குள் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்கிறது.
விசாரணைக் கைதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காணுதல்
குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகளைச் சிறையில் கழிப்பதை ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் இந்தியாவின் ஒட்டுமொத்த கைதிகளில் ஏறக்குறைய 76% பேரின் உண்மை நிலைமையாகும். இவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருக்கும் 'விசாரணைக் கைதிகள்' ஆவர். இந்தியாவின் புதிய சட்டக் கட்டமைப்பு, காலக்கெடுவுக்குள் விசாரணையை முடிப்பதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பிட்ட அந்த காலக்கெடுவிற்குள் விசாரணை முடிக்கப்படாவிட்டால், கைதிகளுக்கு 'இயல்புநிலை பிணை' (Default bail) வழங்கப்படலாம். இப்போது காவல் நீட்டிப்பு விசாரணைகளுக்கு (Remand hearings) பொதுவாக காணொளி காட்சிமுறை பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஒரு குற்றத்திற்குரிய அதிகபட்ச தண்டனைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விசாரணைக் கைதி ஏற்கனவே சிறையில் கழித்திருந்தால், அவரை விடுதலை செய்வது குறித்தும் நீதிமன்றங்கள் பரிசீலிக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் ஒரு மனிதனின் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாப்பதுடன், நீதிமன்றத் தாமதங்களால் அந்த உரிமை பறிபோகாமல் இருப்பதையும் உறுதி செய்கின்றன.
சாட்சி வாக்குமூலத்திலிருந்து அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் வரை
நீதிமன்றத்தில் நீங்கள் அளிக்கும் சாட்சியமும், உங்களது நினைவாற்றலும் அல்லது பாதுகாப்பும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பையே மாற்றிவிடக்கூடும் என்பதை உணர்ந்து, நீங்கள் நீதிமன்றக் கூண்டில் சாட்சியம் அளிப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். முன்பு, நீதிமன்றங்கள் வாய்மொழி சாட்சியங்களை மட்டுமே பெருமளவில் நம்பியிருந்தன. இதனால், சாட்சிகள் மிரட்டப்படும்போதோ அல்லது அவர்கள் தங்களது சாட்சியத்தை மாற்றிப் பிறழ்சாட்சியாக (Hostile witness) மாறும்போதோ, வழக்குகள் பலவீனமடையும் சூழல் இருந்தது.
புதிய சட்டங்கள் தடய அறிவியல் (Forensic) மற்றும் மின்னணு (Electronic) ஆதாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. கடுமையான குற்றங்களுக்குத் தடயவியல் விசாரணை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் இப்போது நீதிமன்றங்களில் இன்னும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விசாரணையில் அறிவியல்பூர்வமான முறைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், சாட்சிகளின் மனித நினைவாற்றலை மட்டுமே நம்பியிருக்கும் நிலை குறைந்து, ஒட்டுமொத்த ஆதாரங்களும் மிகவும் வலுவடைகின்றன.
ஹரியானாவில், நடமாடும் தடய அறிவியல் குழுக்கள் நேரடியாகக் குற்றப் பின்னணி நடக்கும் இடங்களுக்கேச் சென்றடைகின்றன. குற்றக் களம் (Scene of Crime (SOC)) சார்ந்த நிபுணர்கள், யாருடைய தலையீடும் இன்றித் தனிச்சையாகச் சான்றுகளைச் சேகரிக்கின்றனர். கைரேகைகள், DNA மரபணுச் சோதனை, டிஜிட்டல் தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்கள் அழிந்து போவதற்கு முன்பாகவே அவை பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. இது ஆதாரங்களின் நம்பகத்தன்மையை மேலும் வலுவாக்குவதோடு, நீதிமன்றத்தில் உண்மையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்துகிறது.
21-ஆம் நூற்றாண்டின் குற்றங்களை அடையாளம் காணுதல்
ஆங்கிலேயர் காலத்து சட்டங்கள், தற்கால இணையவழிக் குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்ற அமைப்புகள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகள் அல்லது கும்பல் படுகொலைகள் போன்றவற்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை அல்ல. பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டம் இந்த நவீனகால குற்றங்களை நேரடியாகக் கையாள்கிறது. மேலும், இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது. கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தல் மற்றும் தன்னிச்சையான கைதுகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளால் கொண்டுவரப்பட்ட முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள் இப்போது இந்தச் சட்டத்திலேயே எழுதப்பட்டுள்ளன. இதனால், குடிமக்கள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல், இத்தகைய உரிமைகளைச் சட்டப்படியே நேரடியாகப் பெற முடிகிறது.
முதல் தகவல் அறிக்கையிலிருந்தே எளிதாக நீதி கிடைக்கச் செய்தல்
பலர் எந்தக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது என்று தெரியாத குழப்பத்தினால், தங்களுக்கு நடந்த குற்றங்களைப் புகாரளிக்காமல் தவிர்த்து வந்தனர். பல ஆண்டுகளாக, எல்லை வரம்புகள் தொடர்பாகக் காவல் நிலையங்களுக்கு இடையே நிலவி வந்த எல்லைத் தகராறுகள், மக்கள் தங்களுக்குரிய நீதியைத் தேடிச் செல்வதையே முடக்கி வைத்திருந்தன.
'Zero FIR' முறை என்பது, ஒரு குற்றம் எங்கு நடந்திருந்தாலும் சரி, அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் எந்தவொரு காவல் நிலையத்திலும் புகார் அளிக்க அனுமதிக்கிறது. 'மின்னணு முதல் தகவல் அறிக்கை' (e-FIR) முறை மூலம் மக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வழியாகப் புகார்களைப் பதிவு செய்ய முடியும். சாட்சிகளுக்கான பாதுகாப்பு, காணொளி காட்சி மூலம் சாட்சியம் அளிப்பது மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை ரகசியமாகப் பாதுகாப்பது போன்ற புதிய வசதிகள், மக்கள் அச்சமின்றி நீதி வழங்கும் செயல்பாட்டில் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்பதை உறுதி செய்கின்றன.
சிறிய தவறுகளைப் பெரிய குற்றமாகக் கருதாமல் சட்டத்தை மாற்றுவதும் (Decriminalisation) இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பெரிதும் துணையாக நிற்கிறது. சிறிய அளவிலான குற்றங்களுக்கு 'சமூக சேவை' (Community service) செய்வதைத் தண்டனையாக வழங்குவது, ஏற்கனவே கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகளின் சுமையைக் குறைக்கிறது. மேலும், சிறிய தவறுகளைச் செய்தவர்கள்மீது வாழ்நாள் முழுக்க 'குற்றவாளி' என்ற முத்திரை குத்தப்படுவதையும் இந்த முறை தடுக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மனிதநேயமிக்க மற்றும் நவீனகாலத்திற்கு ஏற்ற ஒரு நீதித்துறையை உருவாக்க உதவுகின்றன.
ஹரியானா மாநிலம் எவ்வாறு முதலிடத்தை பிடித்தது
சட்ட சீர்திருத்தங்கள் என்பது அவை மிகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது மட்டுமே அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. ஹரியானா மாநிலம் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி 94.42 புள்ளிகளைப் பெற்று, புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டின் முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்தச் சாதனை ஏதோ பெயரளவில் மட்டும் நடந்துவிடவில்லை. இது, தொடர்ந்து ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதிலும் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் முதலீடு செய்ததன் விளைவாகும்.
இந்தத் தரவரிசையானது நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படுகிறது: அவை நிர்வாகச் சீர்திருத்தங்கள், செயல்பாட்டுத் திறன், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் குற்றவியல் நீதி அமைப்புடன் (Interoperable Criminal Justice System (ICJS)) ஒருங்கிணைப்பு ஆகியவை ஆகும். தற்போது ஒவ்வொரு விசாரணை அதிகாரியும் இந்தப் புதிய அமைப்பின்கீழ் பணிபுரிவதோடு, இதற்கான சிறப்பு செயலியையும் (Investigating Officer Mobile Application (I.O. Mobile Application)) பயன்படுத்தி வருகின்றனர். நடமாடும் தடய அறிவியல் பிரிவுகள் (Mobile forensic units), பலப்படுத்தப்பட்ட சாட்சிகள் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் கருவிகள் ஆகியவை இப்போது களத்தில் இருக்கும் விசாரணை அதிகாரிகளுக்கு நேரடியாக உதவி புரிகின்றன.
இந்த மேம்பாடுகள் காவல் துறையின் பணிகளைத் தாண்டி பல நன்மைகளைத் தருகின்றன. மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (Electronic summons), டிஜிட்டல் வழக்கு மேலாண்மை மற்றும் காணொளி காட்சி மூலம் விசாரணை (Video conferencing) ஆகியவை நேரம், பணம் மற்றும் மனித உழைப்பை மிச்சப்படுத்துகின்றன. இவை காகிதப் பயன்பாட்டையும் பயணங்களையும் குறைக்கும் அதேவேளையில், செயல் திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.
ஹரியானா மாநிலத்தின் மின்னணு அபராதச் சீட்டு (e-Challan) முறை, வெறும் நான்கு மாதங்களில் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) உமிழ்வை 8,165 கிலோ வரை குறைத்துள்ளது. மேலும், மின்னணு நீதிமன்ற அழைப்பாணை (e-summons) மற்றும் காணொளி வாயிலாக விசாரணைகள் மூலம் ஆறு முதல் ஏழு மாதங்களுக்குள் 26 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வதிலும், காகித ஆவணங்களைக் கையாளுவதிலும் வீணான நேரம் இப்போது மிச்சப்படுத்தப்பட்டு, அந்த நேரம் குற்ற விசாரணை மற்றும் ரோந்துப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது
அறிவியல் பூர்வமான முறைகளும், ஆதாரங்களின் அடிப்படையிலான விசாரணைகளும் இப்போது மிகவும் வலுவடைந்துள்ளன. காவல்துறையைப் பொறுத்தவரை, இந்த மாற்றம் என்பது ஒரு சாதாரண நிர்வாக சீர்திருத்தம் மட்டுமல்ல. அது அவர்களின் நெறிமுறை சார்ந்த கடமையுமாகும். மொபைல் தடயவியல் பிரிவுகளைப் (Mobile forensic units) பயன்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்களின் ஆதாரங்கள் மிக முக்கியமானவை என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. நீதிமன்ற அழைப்பாணைகளை மின்னணு முறையில் (e-summons) அனுப்புவது சாட்சிகளின் நேரத்தை மதிக்கிறது. மேலும், DNA மரபணுச் சோதனை, குரல் மாதிரிகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளின் ஆதரவோடு மின்னணு குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்வது, காவல்துறை தங்களின் வசதியைவிட உண்மைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை நீதிமன்றங்களுக்குக் காட்டுகிறது.
புதிய குற்றவியல் சட்டங்கள் இதற்கான தேவையான வழிமுறைகளையும் கருவிகளையும் வழங்கியுள்ளன. இருப்பினும், இந்தச் சட்டங்கள் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினரும், அதாவது காவல்துறை, அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தடய அறிவியல் ஆய்வகங்கள், நீதித்துறை, அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் என அனைவரும், முழு அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அதேநேரத்தில் நீதியை வழங்குவதில் வேகமும் நியாயமும் சம அளவில் சீராக இருக்கக்கூடிய ஒரு நீதித்துறையை உருவாக்குவதே இறுதி இலக்காகும். நமக்குத் தேவை விரைவான வழக்கு விசாரணைகள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எந்தவொரு பயமும் இல்லாமல், முழு நம்பிக்கையோடு நீதிமன்றத்தை நாடி நீதிபெறும் நிலை உருவாக வேண்டும்.
அஜய் சிங்ஹால், ஹரியானா மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் ஆவார்.
Original article : New criminal laws overhauling policing and public trust. -Ajay Singhal