‘ஆபரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hardball) மற்றும் இன்டர்போல் (Interpol) அறிவிப்புகள் என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

FBI தலைமையிலான 'ஆபரேஷன் ஹார்ட்பால்' (Operation Hardball) நடவடிக்கையின் கீழ், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைக்கு உத்தரவிட்டதாக பிஷ்னோய் (Bishnoi) கும்பல் தலைவர் மீது குற்றம் சாட்டியுள்ளதுடன், ரவுடி கோல்டி பிராரைக் (Goldy Brar) கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களுக்கு 50,000 டாலர் வெகுமதியையும் அறிவித்துள்ளது.



FBI -  Federal Bureau of Investigation :  புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் - இது அமெரிக்க அரசின் நீதித்துறையின் கீழ் செயல்படும் ஒரு முதன்மைக் குற்றப் புலனாய்வு மற்றும் உளவு அமைப்பாகும். இது நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, மற்றும் கூட்டாட்சி சட்டங்களை மீறும் குற்றங்களை விசாரிப்பது இதன் முக்கியப் பணியாகும். 


தற்போதைய நிகழ்வு :


ஆபரேஷன் ஹார்ட்பால் (Operation Hardball) நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன், அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் இந்தியாவில் உள்ள பல மத்திய புலனாய்வு முகமைகளுடன் பல்வேறு கூட்டங்களை நடத்தினர். இக்கூட்டங்களின்போது, லாரன்ஸ் பிஷ்னோய், கோல்டி பிரார், ரோஹித் கோதாரா, ஜக்கு பகவான்பூரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள் போன்ற ரவுடிகள் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து சரிபார்த்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :



1. “ஆபரேஷன் ஹார்ட்பால்” (Operation Hardball) என அழைக்கப்படும், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் சட்ட அமலாக்கத் துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் விளைவாக, மூன்று இந்தியக் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள், மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்று அமெரிக்க நீதித்துறை (Department of Justice (DoJ)) தெரிவித்துள்ளது.


2. “இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்ட அமலாக்கத் துறையினர் சுமார் 1,000 கிலோகிராம் கொக்கைன், 1 கிலோகிராம் ஹெராயின், 40,000 டாலர் ரொக்கம் மற்றும் ஒரு டஜன் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்துள்ளனர். சாக்ரமெண்டோ (Sacramento) பகுதியில் மொத்தம் 23 தேடுதல் ஆணைகளும் (search warrants), லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) பகுதியில் 11 ஆணைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


3. காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசாங்க உளவாளிகளுக்கும் இடையே ஒரு "சாத்தியமான தொடர்பு" (potential link) இருப்பதாக அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டி, இந்தியா-கனடா இடையிலான இருதரப்பு உறவுகளை முடக்கிய கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 'ஆபரேஷன் ஹார்ட்பால்' நடவடிக்கைக்கு முன்னதாக, ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது உதவியாளர் கோல்டி பிரார் ஆகியோர் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.


4. நீதிமன்ற ஆவணங்களில் “HSN” எனக் குறிப்பிடப்பட்டுள்ள 45 வயதான நிஜ்ஜாரைக் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் உத்தரவிட்டதாக அமெரிக்கக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சதிந்தர் சிங் என்ற கோல்டி பிராரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு FBI 50,000 டாலர் வெகுமதியை அறிவித்துள்ளதுடன், லாரன்ஸ் பிஷ்னோயைத் தங்கள் நாட்டிற்குக் கொண்டுவர (நாடு கடத்தக் கோரி) அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.



இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்றவாளி ஒப்படைப்பு விதிகளை எது நிர்வகிக்கிறது?, மற்றும் அதற்கான செயல்முறை என்ன?

      1997-ம் ஆண்டின் இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தமும் (Extradition Treaty), இந்தியாவின் 1962-ம் ஆண்டு ஒப்படைப்புச் சட்டமும் (India’s Extradition Act) இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குற்றவாளி ஒப்படைப்புச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மையக்கருத்தாக இரட்டைக் குற்றத்தன்மை (dual criminality) என்ற கோட்பாடு உள்ளது. அதாவது, ஒரு குற்றத்திற்கு இரு நாடுகளிலும் ஓராண்டுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், அது ஒப்படைக்கப்படக்கூடிய குற்றமாகும்.

         பொதுவாக, ஒரு ஒப்படைப்பு கோரிக்கை அமெரிக்க நீதித் துறையால் தயாரிக்கப்படும். மேலும், இது அமெரிக்க வெளியுறவுத் துறையால் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு (MEA) அனுப்பப்படும். வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சிபிஐ போன்ற முகமைகளுடன் கலந்தாலோசித்து, இந்தக் கோரிக்கை ஒப்பந்தம் மற்றும் ஒப்படைப்புச் சட்டத்திற்கு இணங்குகிறதா என்பதை அவர்கள் சரிபார்க்கிறார்கள்.

            கோரிக்கை பரிசீலனைக்குத் தகுதியானது என மத்திய அரசு முடிவு செய்தால், அது ஒரு இந்திய நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும். அந்த நீதிமன்றம், ஒப்பந்தத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், குற்றம் இந்தியாவில் நடந்திருந்தால் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் சிறைத்தண்டனையை நியாயப்படுத்துமா என்பதையும் நீதிமன்றம் சரிபார்க்கிறது.

      நீதிமன்றம் திருப்தியடைந்தால், குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைக்கத் தகுதியானவர் எனச் சான்றளித்து, தனது முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. இருப்பினும், நாடு கடத்தி ஒப்படைப்பது குறித்த இறுதி முடிவு மத்திய அரசிடமே உள்ளது. இது, ஒப்புதல் அளிப்பதற்கு முன், அரசு சில நிபந்தனைகளை விதிக்கலாம் அல்லது இராஜதந்திரரீதியிலான உத்தரவாதங்களைக் கோரலாம். அரசு தனது உத்தரவை வெளியிட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் அதை உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் எதிர்த்து வழக்குத் தொடர முடியும் என்பதால், ஒப்படைப்பு நடவடிக்கைகள் இயல்பாகவே நீண்டதாக அமைகின்றன.


5. பிரான்சின் லியோனில் உள்ள இன்டர்போல் (Interpol) பொதுச் செயலகத்தால் கோல்டி பிராருக்கு (Goldy Brar) எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் (Red Corner Notice) வெளியிடப்பட்டது. இந்தியாவில், அவருக்கு எதிராக டிசம்பர் 12, 2022 அன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையும், ஜூன் 15, 2022 அன்று தேடப்படும் அறிவிப்பு (Look Out Circular(LOC)) பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) நான்காவது அட்டவணையில் கோல்டி பிராரை (Goldy Brar) ஒரு பயங்கரவாதியாகச் சேர்த்தது.


6.'எக்ஸ்பிரஸ் ஒப்பினியன்' கருத்துப்படி, "ஆபரேஷன் ஹார்ட்பால், கனடாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் இந்திய வம்சாவளியினரை குறிவைக்கும் குற்றக் கும்பல்களின் எல்லை கடந்த செயல்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு, பிரிவினைவாதக் குழுக்கள் தங்கள் செயல்திட்டங்களுக்கு நிதியளிக்கவும் அவற்றை நிலைநிறுத்தவும் உதவியதுடன், போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ஈடுபடும் கும்பல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு அமைப்புகளை நிர்பந்தித்தது."

இன்டர்போல் அறிவிப்புகள் (Notices) என்றால் என்ன?




1. 1923-ல் நிறுவப்பட்ட இன்டர்போல், அல்லது சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பு, 196 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது அனைத்து உறுப்பு நாடுகளின் காவல் படைகளும் தங்கள் நடவடிக்கைகளைச் சிறப்பாக ஒருங்கிணைக்க உதவுகிறது.

2. குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தரவுகளைப் பகிரவும் அணுகவும் உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் (Interpol) வழிவகை செய்கிறது. மேலும், பலதரப்பட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு ஆதரவையும் வழங்குகிறது. உறுப்பு நாடுகளின் கோரிக்கையின் பேரில், குற்றம் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக, அந்நாட்டுக் காவல்துறையினருக்கு ஒத்துழைப்புக்கான அறிவிப்புகளையோ அல்லது எச்சரிக்கைகளையோ இன்டர்போல் வெளியிடுகிறது.


3. சுவாரஸ்யமாக, இத்தகைய அறிவிப்புகளை ஐக்கிய நாடுகள் சபை (United Nations), சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்கள் (International Criminal Tribunals) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court) ஆகியவை தங்கள் அதிகார வரம்பிற்குள் குற்றங்களைச் செய்ததற்காகத் தேடப்படும் நபர்களைக் கண்டறியவும் பயன்படுத்தலாம்.


இன்டர்போல் அறிவிப்புகள் :


⇨சிவப்பு அறிவிப்பு (Red Notice) : ஒரு நபரை நாடு கடத்தும் நோக்கத்துடன், அவரைத் தேடவோ அல்லது கைது செய்யவோ நீதித்துறை அதிகார வரம்பு அல்லது சர்வதேச தீர்ப்பாயம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இது வெளியிடப்படுகிறது.


பசுமை அறிவிப்பு (Green Notice)) : ஒருவர் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டால், அவரது குற்றச் செயல்கள் குறித்து எச்சரிப்பது.


நீல அறிவிப்பு (Blue Notice) : ஒரு குற்றவியல் விசாரணையில் தொடர்புடைய நபரின் இருப்பிடத்தைக் கண்டறிதல், அடையாளம் காணுதல் அல்லது அவரைப் பற்றிய தகவல்களைப் பெறுதல்.


மஞ்சள் அறிவிப்பு (Yellow Notice) : காணாமல் போன ஒருவரைக் கண்டறியவோ அல்லது தன்னைத்தானே அடையாளம் கண்டுகொள்ள முடியாத ஒருவரை அடையாளம் காணவோ இது வெளியிடப்படுகிறது.


கருப்பு அறிவிப்பு (Black Notice) : அடையாளம் காணப்படாத உடல்கள் குறித்த தகவல்களைப் பெற இது வெளியிடப்படுகிறது.


ஆரஞ்சு அறிவிப்பு (Orange Notice) : மக்கள் அல்லது உடைமைகளுக்கு உடனடி அச்சுறுத்தல் மற்றும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு நிகழ்வு, நபர், பொருள் அல்லது செயல்முறை குறித்து எச்சரிக்க இது வெளியிடப்படுகிறது.


ஊதா நிற அறிவிப்பு (Purple Notice) : குற்றவாளிகள் பயன்படுத்தும் குற்றச் செயல்முறைகள் (modus operandi), நடைமுறைகள், பொருள்கள், சாதனங்கள் அல்லது மறைவிடங்கள் குறித்த தகவல்களை வழங்க இது வெளியிடப்படுகிறது.


இன்டர்போல் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு அறிவிப்பு (Interpol UNSC Special Notice) : ஒரு தனிநபர் அல்லது அமைப்பு ஐக்கியநாடுகள் சபையின் தடைகளுக்கு உட்பட்டது என்பதை இன்டர்போல் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க இது வெளியிடப்படுகிறது.

ஐந்து கண்கள் கூட்டணி (Five Eyes Alliance)  

1. ஜூலை 8 அன்று, கனடா குடிமகனும் சீக்கியப் பிரிவினைவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023-ல் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்குத் தொடர்பு இல்லை என்று கனடா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தச் சம்பவம் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகளைச் சீர்குலைத்திருந்தது.


2. இந்திய உளவாளிகளுக்கும், நிஜ்ஜாரின் கொலைக்கும் இடையே ஒரு “சாத்தியமான தொடர்பு” இருப்பதாகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளைப் பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருவதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதற்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், கனடாவிற்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன், “ஐந்து கண்கள் கூட்டாளிகளிடையே (Five Eyes Alliance)  பகிரப்பட்ட உளவுத் தகவல்களே” கனடா இந்தக் கூற்றை முன்வைக்க உதவியது என்று கூறியிருந்தார்.


3. “ஐந்து கண்கள்” என்பது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் உளவுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கூட்டணியைக் குறிக்கிறது. இது கண்காணிப்பு மற்றும் சிக்னல் உளவுத் தகவல்கள் ஆகிய இரண்டையும் பயன்படுத்துகிறது.


4. கனடா அரசாங்கத்தின் இணையதளத்தின்படி, “உலகின் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட பலதரப்பு ஏற்பாடுகளில் ஒன்றான இதில், இந்தக் கூட்டணி நாடுகள் தங்களுக்குள் பரந்த அளவிலான உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐந்து கண்கள் ஒப்பந்தம் (Five Eyes agreement) மற்ற ஏற்பாடுகளிலிருந்து தனித்து நிற்கிறது. ஏனெனில், இதில் ஈடுபட்டுள்ள தரப்பினர், சட்டத்தின் ஆட்சி மற்றும் வலுவான மனித உரிமைகளால் நிர்வகிக்கப்படும் பல்வேறுபட்ட சமூகங்களாகவும், ஒரு பொதுவான மொழியால் பிணைக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இந்தப் பொதுவான அம்சங்கள், கூட்டாளிகள் தகவல்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ளவும், தங்களின் பொதுவான தேசிய நலன்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.”


5. நாடுகள் பெரும்பாலும் உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் ஒன்றோடொன்று இணைந்து செயல்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் எழுச்சியைச் சமநிலைப்படுத்துவது போன்ற பொதுவான நலன்கள், ஐந்து கண்கள் (Five Eyes) நாடுகளிடையே ஒரு நெருக்கமான கூட்டணிக்கு வழிவகுத்துள்ளன. பல பத்தாண்டுகால நாடுகளின் நீடித்த உறவின் மூலம் கட்டமைக்கப்பட்ட பொதுவான மொழி மற்றும் பரஸ்பர நம்பிக்கையே அவற்றின் நெருக்கத்திற்குக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர்.


Original Link: What is Operation ‘Hardball’ and what are Interpol Notices?


Share: