தேசிய பேரிடர் தற்செயல் வரி (NCCD) என்றால் என்ன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


— சிகரெட் தயாரிப்பாளர்கள் கூடுதல் வரிகளின் அதிகரிப்பு 20-30 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர், ஆனால் அவர்கள் இந்தச் சுமையை உடனடியாகவோ அல்லது தவணைகளாகவோ நுகர்வோருக்கு மாற்றுவதா  என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. மறுபுறம், முதலீட்டு ஆய்வாளர்கள், வரி உயர்வுக்குப் பதிலளிக்கும் வகையில் விலைகள் 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை உயரக்கூடும் என்று தெரிவித்தனர்.


— தேசிய பங்குச் சந்தையில் (National Stock Exchange), சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களான ஐ.டி.சி (ITC) மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா (Godfrey Phillips India) ஆகியவற்றின் பங்கு விலைகள் முறையே ஏறக்குறைய 10 சதவீதம் மற்றும் 17 சதவீதம் வீழ்ச்சியடைந்ததன் மூலம், பங்குச் சந்தைகள் அதிக வரி தாக்கத்தை வெளிப்படையாகக் கண்டன.


— சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (GST) 2.0 40 சதவீத அடுக்குக்கு மேலாக விதிக்கப்படும் கூடுதல் வரிகள், அசல் ஜிஎஸ்டி ஆட்சியின்கீழ் இருந்த முந்தைய இழப்பீட்டு செஸ் விதிப்பில் இருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.


— சிகரெட்டுகளுக்கான வரி அமைப்பு சிக்கலானது. இப்போதுள்ளபடி, மொத்த வரிகளை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்: அடிப்படை கலால் வரி (basic excise duty) – 1,000 சிகரெட்களுக்கு ரூ. 5 முதல் 10 வரை. தேசிய இடர் தற்செயல் வரி (National Calamity Contingent Duty (NCCD)) – 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 230 முதல் 850 வரை. ஜிஎஸ்டி – 28 சதவீதம். மற்றும் ஒரு இழப்பீட்டு செஸ் வரி ஆகும்.


— இழப்பீட்டு செஸ் இரண்டு கூறுகளைக் கொண்டிருந்தது: மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படும் வரி (ad valorem levy) – 5 முதல் 36 சதவீதம் வரை. தட்டையான வரி (flat levy) – 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 2,076 முதல் 4,170 வரை.

பொதுவாக, ஃபில்டர்கள் (filters) மற்றும் நீளமான சிகரெட்டுகளுக்கு அதிக வரிகளும், சுருட்டுகள் (cigars), செரூட்ஸ் (cheroots) மற்றும் சிகாரில்லோஸ் (cigarillos) ஆகியவற்றுக்கு மிக அதிக வரிகளும் விதிக்கப்பட்டன.


— பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல், இழப்பீட்டு செஸ் கூறு நீக்கப்படும். இதனை ஈடுசெய்யும் வகையில், ஜிஎஸ்டி வரி விகிதம் 40 சதவீதமாகவும், கலால் வரிகள் 1,000 சிகரெட் குச்சிகளுக்கு ரூ. 2,050 முதல் 8,500 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.


— ஜூலை மாதம்  2025-ஆம் ஆண்டு வெளியான உலக வங்கியின் ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, சிகரெட்டுகளின் மொத்த வரிச் சுமை சில்லறை விலையில் சுமார் 53 சதவீதம் மட்டுமே உள்ளது என்றும், இது உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த 75 சதவீதத்தைவிட மிகக் குறைவாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.


— சிகரெட்டுகளைத் தவிர, பான் மசாலா மீதும் 40 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், அதனுடன் 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை செஸ் (Health Security se National Security Cess)' என்ற வரியும் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி குழுவானது, பான் மசாலா மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து அதிகபட்ச சட்ட வரம்பான 40 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. "எனவே, தற்போதுள்ள வரிச்சுமையின் மீதமுள்ள பகுதி, இயந்திர அடிப்படையிலான செஸ் (cess) ஆக, 'சுகாதாரப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை செஸ் சட்டம், 2025-ன் கீழ் மாற்றப்படுகிறது," என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.


— மேலும், மெல்லும் புகையிலை (chewing tobacco), ஜர்தா மணமூட்டிய புகையிலை (jarda scented tobacco), மற்றும் குட்கா ஆகியவற்றை அடைக்கும் இயந்திரங்களின் உதவியுடன் தயாரித்து, பைகளில் அடைக்கும்போது, பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் அதன் உற்பத்தித் திறனின் அடிப்படையில் மத்திய கலால் வரி விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


— பான் மசாலா மற்றும் புகையிலை இரண்டும் வரி ஏய்ப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள, இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் துறைகள் என்றும், அங்கு உண்மையான உற்பத்தியைக் கணக்கிடுவது கடினம் என்றும், எனவே உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட வரி விதிப்பு (capacity-linked levy) சிறந்தது என்றும் நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


— சரக்கு மற்றும் சேவை வரியானது (GST), எவ்வளவு விற்கப்பட்டது மற்றும் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்பதைக் காட்டும் மதிப்புக் கணக்கீட்டை அளிக்கிறது. அதேசமயம், செஸ் (cess) வரி, எவ்வளவு உற்பத்தி செய்யப்பட்டிருக்கமுடியும் என்று கூறும் உற்பத்தித் திறன் கணக்கீட்டை அளிக்கிறது என்றும் தெரிவிக்கின்றன.


— பிற புகையிலைப் பொருட்களுக்கு, ஹுக்கா (hookah) மீதான கலால் வரி 33 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஒரே மாதிரியாக்கப்பட்ட புகையிலை, மெல்லும் புகையிலை தயாரிப்புகள் மற்றும் சுருட்டுப் பொடி ஆகியவற்றுக்கு 60.5 சதவீதம் வரி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்லும் புகையிலை மற்றும் ஜர்தா வாசனை புகையிலைக்கு வரி விகிதம் 82 சதவீதம் என அதிகமாக உள்ளது. குழாய்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகைக்கும் கலவைகளுக்கு 279 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.


— கடந்த மாதம், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களின்மீது அதிக கலால்வரி விதிப்பதற்கும், பான் மசாலா மீது ‘ஆரோக்கியப் பாதுகாப்பு முதல் தேசியப் பாதுகாப்பு வரை வரி (Health Security se National Security Cess)’ விதிப்பதற்கும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இரண்டு சட்டங்களை அறிமுகப்படுத்தியது.


உங்களுக்குத் தெரியுமா?


— 2017-ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுச் சட்டப்படி, சரக்கு மற்றும் சேவை வரி அமலான முதல் 5 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இழப்பீட்டு செஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், கோவிட் பெருந்தொற்று காலத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்காக பெறப்பட்ட கடன்களின் வட்டியைத் திருப்பிச் செலுத்த, இந்த செஸ் வரி மார்ச் மாதம்  2026-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


— இழப்பீட்டு செஸ் கணக்கின்கீழ் உள்ள கடன் மற்றும் வட்டி செலுத்துதல் முழுமையாக முடிக்கப்படும் வரை பான் மசாலா, சிகரெட், குட்கா, மெல்லும் புகையிலை, ஜர்தா, பதப்படுத்தப்படாத புகையிலை மற்றும் பீடி போன்ற பிற புகையிலைப் பொருட்களுக்குப் பொருந்தக்கூடிய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை தற்போதுள்ள விகிதங்களிலேயே தொடரும் என்று நிதியமைச்சர் கூறினார்.


— உலக அளவில் மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான பொது சுகாதார அச்சுறுத்தல்களில் புகையிலை பயன்பாடு ஒன்றாக உள்ளது. இது ஆண்டுதோறும் எண்பது லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பலி கொள்கிறது.

சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (Institute for Health Metrics and Evaluation (IHME)) நடத்திய உலகளாவிய நோய்ச் சுமை (Global Burden of Disease) ஆய்வின்படி, இந்த இறப்புகளில் எழுபது லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் நேரடி புகையிலை பயன்பாட்டினால் ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Original Article : What is the National Calamity Contingent Duty (NCCD)? -Khushboo Kumari

Share: