முக்கிய அம்சங்கள்:
— தூய பெட்ரோல் மற்றும் பல்வேறு அளவுகளில் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் ஆகியவற்றில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நுகர்வோருக்கு வழங்கப்படாதது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு வகையான அடிப்படை எரிபொருள்களை வழங்குவது, எரிபொருள் சில்லறை விற்பனை வலையமைப்பில் செலவுகளை அதிகரிக்கும் மற்றும் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும் என்றும்; அதோடு, எரிபொருளைக் கொண்டு சேர்ப்பதில் பெரும் சிக்கலை (Enormous logistical challenge) உருவாக்கும் என்றும் அரசு கூறியுள்ளது.
— மேலும், 20% எத்தனால் கலப்பு இலக்கை அடைவதற்குப் பெருமளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே பல்வேறு காரணங்களால் மீண்டும் குறைந்த அளவிலான எத்தனால் கலப்பிற்குத் திரும்புவது புத்திசாலித்தனமாக இருக்காது என்றும் அரசு வாதிட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டே பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை அடைந்துவிட்டது; தற்போது நாடு முழுவதும் விற்கப்படும் நிலையான பெட்ரோல் வகையாக E20 (Ethanol 20%) எரிபொருள்தான் உள்ளது.
— இருப்பினும், E20 எரிபொருள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. குறிப்பாக, அதிக எத்தனால் கலவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் குறைதல் மற்றும் இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைதல் போன்ற புகார்கள் எழுந்துள்ளன.
— பழைய வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் குறைவது மிகக் குறைவாகவே இருக்கும் என்றும், அதற்குப் பதிலாக அதிக ஆக்டேன் அளவு (Higher octane rating), சிறந்த அதிர்வுத் தடுப்புத் திறன் (Superior anti-knock), வேகமான எரிபொருள் பயன்பாடு (Faster combustion), சிறந்த இயந்திரத் திறன் (Better pickup), சீரான வேகம் (Smoother acceleration) மற்றும் இயந்திர செயல்பாடு போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என்றும் கூறி, பொதுமக்களின் இத்தகைய அச்சங்களைப் போக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
— இருப்பினும், எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, பெட்ரோலில் அதிக அளவு எத்தனால் கலப்பதை அரசாங்கம் தாமதப்படுத்தக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. செவ்வாயன்று, E25 எரிபொருளுக்கு மாறும் முன்மொழியப்பட்ட திட்டத்தை அரசாங்கம் தள்ளிப்போட வாய்ப்புள்ளது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
— கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சகம் வெளியிட்ட விளக்கக் குறிப்பில், எத்தனால்-பெட்ரோல் கலப்புத் திட்டம் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், அமெரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் இது பயன்பாட்டில் இருப்பதால் எத்தனாலை ஒரு தகுதியான எரிபொருளாக யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
— அமைச்சகத்தின் கூற்றுப்படி, E20 ரப்பர் பாகங்கள், எரிபொருள் குழாய்கள் அல்லது இயந்திரங்களைச் சேதப்படுத்தியிருந்தால், வாகன உரிமையாளர்களிடமிருந்து வந்த லட்சக்கணக்கான உத்தரவாதக் கோரிக்கைகள், பாக செயலிழப்புகள் மற்றும் நாடு முழுவதும் புகார்கள் அதிக அளவில் வந்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் உண்மையில் நடக்கவில்லை.
— எத்தனால் விநியோகச் சங்கிலியானது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட ஒரு எரிபொருள் விநியோக அமைப்பாகும் என்றும், எத்தனால் மற்றும் கலப்பு பெட்ரோல் ஆகியவை இந்தியத் தர நிர்ணய அமைப்பின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டவை என்றும் அரசு உறுதியளித்துள்ளது. மேலும், வடிகட்டு ஆலை (distillery) முதல் சேமிப்புக் கிடங்கு (depot) மற்றும் விற்பனை நிலையம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவை தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் கூறியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
— எத்தனால், அல்லது எத்தில் ஆல்கஹால், பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு திரவமாகும். 95% தூய்மையுடன், இது சுத்திகரிக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால் (Rectified Spirit) என்று அழைக்கப்படுகிறது மற்றும் மதுபானங்களில் போதை தரும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 99%-க்கும் அதிகமான தூய்மையுடன், எத்தனால் பெட்ரோலுடன் கலப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
— எத்தனால் என்பது ஒரு பொதுவான வகை 'உயிரி எரிபொருள்' (Biofuel) ஆகும். இது தாவரங்கள், வேளாண் கழிவுகள், விலங்குப் பொருட்கள், வீட்டு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற 'உயிரிப் பொருட்களில்' (Biomass) இருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். இந்த உயிரி எரிபொருட்கள் வழக்கமான புதைபடிவ எரிபொருட்களைவிட (Fossil fuels) கணிசமான அளவு தூய்மையானவை; இருப்பினும், இவை தயாரிக்கப்படும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி முறைகளைப் பொறுத்து இவற்றின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் தாக்கம் மாறுபடலாம்.
— இந்த மூலங்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படும்போது, அது 'பயோ-எத்தனால்' (எத்தனாலின் ஒரு வகை) என்று அழைக்கப்படுகிறது. கரும்பு, பீட்ரூட் சாறு, சோளம், அரிசி அல்லது பிற தானியங்களிலிருந்து பயோ-எத்தனாலை எளிதாகத் தயாரிக்கலாம். இந்த வகையான எரிபொருட்கள் 'முதல் தலைமுறை உயிரி எரிபொருட்கள்' (first-generation biofuels) என்று அழைக்கப்படுகின்றன.
உயிரி எரிபொருட்களுக்கான தேசியக் கொள்கையின்படி, பல்வேறு தலைமுறை உயிரி எரிபொருட்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
(i) முதல் தலைமுறை (1G): இது சர்க்கரை ஆலைக் கழிவிலிருந்து (Molasses) உயிரி-எத்தனால் (Bio-ethanol) மற்றும் உண்ணத் தகாத எண்ணெய் வித்துக்களிலிருந்து (Non-edible oilseeds) உயிரி-டீசல் (Bio-diesel) ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது.
(ii) இரண்டாம் தலைமுறை (2G) நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும்.
(iii) மூன்றாம் தலைமுறை (3G) உயிரிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் அழுத்தப்பட்ட எரிவாயு (Bio-CNG) போன்ற எரிபொருட்கள் உற்பத்தி செய்ய முடியும்.