உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ஏழை எளிய மக்களைப் பாதிக்கும். - ஜீன் டிரேஸ், முகமது ஜமீர்

 அந்த்யோதயா (Antyodaya) பிரிவுக்குள் நபர்வாரி உரிமைகளில் காணப்படும் வேறுபாடுகளைக் குறைப்பதே இதற்கான வாதமாக வைக்கப்படுகிறது. ஆனால், இது அலுவலக உதவியாளர்கள் (peons) மற்றும் காவலாளிகள் (chowkidars) ஆகியோருக்கு இடையிலான ஊதிய இடைவெளியைக் குறைப்பதற்காக, அலுவலக உதவியாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒப்பானதாகும்.


"அந்த்யோதயா" (Antyodaya) என்ற சொல்லுக்கு "ஏழைகளின் எழுச்சி" அல்லது "கடைக்கோடி மக்களின் முன்னேற்றம்" என்று பொருள். சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள கடைசி மனிதனுக்கும் அரசின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்ற தத்துவத்தை குறிக்கிறது.


சமூகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒருவரின் நலனை முன்னிறுத்தியே நமது செயல்களை மதிப்பிட வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அந்த வகையில் பார்க்கும்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் உணவு உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.


குறிப்பாக, இந்தத் திருத்தம் 'அந்த்யோதயா' பிரிவைச் (Antyodaya category) சேர்ந்த சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான குடும்பங்களின் உரிமைகளைப் பாதிக்கிறது. ஏழ்மையானவர்களுக்குச் சிறப்புப் பாதுகாப்பு அளிப்பதற்காக, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தால் 2000-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 'அந்த்யோதயா அன்ன யோஜனா' (Antyodaya Anna Yojana (AAY)) திட்டம் தொடங்கப்பட்டது. உள்ளூர் சமூகங்களின் மூலமாகவே மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இக்குடும்பங்களுக்கு ஆரம்பத்தில் பெயரளவிலான விலையில் மாதந்தோறும் 25 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. பின்னர் இது 35 கிலோவாக உயர்த்தப்பட்டது. தற்போது, ​​'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) திட்டத்தின்கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


தொடக்கத்தில், மிகவும் ஏழ்மையான அல்லது ஆதரவற்ற குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான குறிப்பிட்ட அளவுகோல்கள் எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய சில குழுக்களை உச்சநீதிமன்றம் தெளிவாக வரையறுத்தது. உதாரணமாக, 'குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள்' (Particularly Vulnerable Tribal Groups (PVTG)) எதிர்கொள்ளும் தீவிரமான பாதுகாப்பற்ற நிலையை நீதிமன்றம் அங்கீகரித்ததுடன், அவர்கள் அனைவரையும் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின்கீழ் கொண்டுவருமாறும் உத்தரவிட்டது. இது பெருமளவுக்குச் செயல்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்கள் (PVTG) குடும்பங்களுக்கு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) அட்டை ஒரு மிக முக்கியமான ஆதாரமாகத் திகழ்கிறது.



அதேபோல், வருமானம் ஈட்டும் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான குடும்பங்கள் வறுமையின் விளிம்பில் இருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. முதிய தம்பதிகள், சிறு குழந்தையோடு வாழும் விதவைகள், ஆதரவற்ற மாற்றத்திறனாளிகள் போன்றோர் இதற்குச் சில உதாரணங்களாவர். மே மாதம் 2-ஆம் தேதி, 2003-ஆம் ஆண்டு வெளியான உத்தரவில், இதுபோன்ற அனைத்துக் குடும்பங்களையும் அந்தியோதயா திட்டத்தின்கீழ் சேர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும், ஆதரவற்ற குடும்பங்களுக்குச் சிறப்பு உணவு உதவி வழங்குவதற்கான ஒரு பயனுள்ள வழிகாட்டுதலை இந்த உத்தரவு வழங்கியது.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act(NFSA)), பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்களைக் கொண்ட (ration-card holders) 'முன்னுரிமை' (priority) குடும்பங்களுக்கு, குடும்ப அடிப்படையிலான உரிமைகளிலிருந்து தனிநபர் அடிப்படையிலான உரிமைகளுக்கு மாறுவதை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், 'அந்த்யோதயா' (Antyodaya) குடும்பங்களுக்குக் குடும்ப அடிப்படையிலான முறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டது. இதற்குக் காரணம், வருமானம் ஈட்டும் உறுப்பினர் எவரும் இல்லாத குடும்பங்கள் (எ.கா., தனியாக வசிக்கும் விதவைகள் மற்றும் முதிய தம்பதிகள்) மீது அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டம் செலுத்தும் சிறப்பு கவனம் ஆகும். இத்தகைய சிறிய குடும்பங்கள், தனிநபர் அடிப்படையிலான முறைக்கு மாறும்போது தங்கள் பொருளாதாரப் பாதுகாப்பின் முக்கிய ஆதாரத்தை இழக்கும் அபாயத்தில் இருந்தன. அவர்களில் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் பொருட்களை பெரிதும் நம்பியிருந்தனர். எனவே, ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றாமல் இருப்பதே சிறந்தது எனக் கருதப்பட்டது.


வேறு விதமாகச் சொன்னால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NFSA) தனிநபர் பங்கீடு முறைக்கு மாறியது, பொருளாதார ரீதியாகப் பின்னடைவைத் தாங்கும் திறன் இல்லாத சிறிய குடும்பங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. ஆனால், அந்த்யோதயா திட்டத்தையும், அதன்கீழ் வழங்கப்படும் 'குடும்பத்திற்கான பங்கீடு' முறையையும் அப்படியே தக்கவைத்துக்கொண்டதால், அந்தச் சிறிய குடும்பங்களைப் பாதுகாக்க முடிந்தது.


இருப்பினும், முன்மொழியப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத் (NFSA) திருத்தத்தின்படி, அந்த்யோதயா குடும்பங்களுக்கான மாதந்தோறும் வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் பொருட்களுக்குப் பதிலாக, ஒரு நபருக்கு 7 கிலோ வீதம் (ஆனால் ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் 35 கிலோ வரை மட்டுமே) வழங்கப்படும் முறை கொண்டுவரப்படவுள்ளது. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால், சிறிய குடும்பங்கள் தங்கள் தற்போதைய உரிமைகளில் 20 முதல் 80 சதவீதம் வரை இழக்க நேரிடும். நாடு தழுவிய 'குடும்ப நுகர்வுச் செலவு ஆய்வு 2023-24'-ன்படி, பெரும்பாலான அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) குடும்பங்கள் (துல்லியமாகச் சொன்னால் 53 சதவீதம்) ஐந்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்டவை. எனவே, இந்த முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தால் யாருக்கும் எவ்விதப் பயனும் இல்லை; இழப்பு மட்டுமே மிஞ்சும் என்கின்றனர்.


தனியாக வசிக்கும் பெண்களே இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த்யோதயா (Antyodaya) பிரிவின்கீழ் இத்தகைய பெண்கள் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர். குடும்ப உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு (HCES) தரவுகளின்படி, இவர்களில் 85 சதவீதம் பேர் விதவைகள் மற்றும் 74 சதவீதம் பேர் கல்வியறிவு பெறாதவர்கள் ஆவர். எஸ்தர் டுஃப்லோ (Esther Duflo) மற்றும் பிறரின் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுவது போல, இவர்கள் வறுமையுடன் சேர்த்து மன உளைச்சலையும் சமூக அவமதிப்பையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட திருத்தத்தால், இவர்களின் மாதாந்திர உணவு தானிய ஒதுக்கீடு 35 கிலோவிலிருந்து 7 கிலோவாகக் குறையும் என்று கூறப்படுகிறது, அதாவது 80 சதவீத அளவிற்கு சரிவு ஏற்படும் என்கின்றனர்.


நிச்சயமாக, மாதத்திற்கு 35 கிலோ என்பது பல சிறிய குடும்பங்களின் உணவுத் தேவையைவிட அதிகமாக இருக்கலாம். இருப்பினும், அந்த உபரியான தானியத்தை பொதுவாக பணமாக மாற்றலாம் அல்லது பிற பொருட்களுடன் மாற்றிக் கொள்ளலாம். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) மாதாந்திர உணவுப் பங்கீட்டை வெறும் உணவு என்று மட்டும் கருதாமல், ஒரு பொருளாதார ஆதாரமாகவே கருத வேண்டும்.



மேலும், நாட்டின் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கான இந்தச் சலுகைக் குறைப்பு, 'சமத்துவம்' என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது. அந்த்யோதயா பிரிவுக்குள் தனிநபர் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அளவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்கவே இது உதவும் என்பது இதற்கான வாதம். இது, அலுவலக உதவியாளர்கள் (peons) மற்றும் காவலாளிகள் (chowkidars) இடையிலான ஊதிய வேறுபாட்டைக் குறைப்பதாகக் கூறி, அலுவலக உதவியாளர்களின் ஊதியத்தைக் குறைப்பதற்கு ஒப்பானதாகும்.


இந்தத் திருத்தத்தின் உண்மையான நோக்கம் பணத்தை மிச்சப்படுத்துவதாகவே இருக்கக்கூடும். ஆனால், இதன் மூலம் கிடைக்கக்கூடிய சேமிப்பு மிகக் குறைவுதான். 2023-24-ஆம் ஆண்டில், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்திற்கான உணவு தானிய ஒதுக்கீடு 10 மில்லியன் டன்களாக இருந்தது. அதில் 8.8 மில்லியன் டன்கள் விநியோகிக்கப்பட்டன. குடும்ப அளவு குறித்த குடும்ப உபயோகச் செலவுக் கணக்கெடுப்பு (HCES) தரவுகளைக் கொண்டு கணக்கிட்டால், முன்மொழியப்பட்ட முறையின்கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்திற்கான உணவு தானியத் தேவை 7.6 மில்லியன் டன்கள் மட்டுமே என்பது தெளிவாகிறது. அதிகபட்சமாக, இந்தத் திருத்தத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 2 மில்லியன் டன் உணவு தானியம் மட்டுமே மிச்சமாகும். ஏற்கனவே தன்னிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான தானியக் கையிருப்பைச் சமாளிக்கப் அரசாங்கம் போராடி வரும் நிலையில், இந்தச் சேமிப்பால் பெரிய பலன் எதுவுமில்லை. ஆனால் ஏழைகளுக்கு ஒவ்வொரு தானியமும் மிக முக்கியமானது.


ஏழைகளின் நலனைப் பாதிக்கும் வகையில் சிறிய அளவிலான சேமிப்பைத் தேடுவதற்குப் பதிலாக, அரசு அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தை முழுமையாகச் சீரமைக்க வேண்டும். அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தின் பயனாளிகளின் பட்டியல் மிகவும் பழையவை. இதில் தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், தகுதியுள்ளவர்கள் விடுபட்டிருப்பதும் போன்ற பிழைகள் ஏராளமாக இருக்கக்கூடும். எந்தவொரு ரேஷன் அட்டையையும் ரத்து செய்யாமலேயே, வசதி படைத்த குடும்பங்களை 'முன்னுரிமைப் பிரிவு'க்கு (priority category) மாற்றுவதன் மூலம், அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) திட்டத்தில் நியாயமற்ற முறையில் விடுபட்டவர்களுக்கு இடமளிக்க முடியும். வறுமையில் வாடும் அனைத்துக் குடும்பங்களையும் இத்திட்டத்தின்கீழ் முழுமையாகக் கொண்டுவர, அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் பயனுள்ளதாக இருக்கும். சில மாநிலங்கள் அவ்வப்போது செய்து வருவது போல, 'அந்த்யோதயா' குடும்பங்களுக்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்டப் (PDS) பொருட்களுடன் பருப்பு மற்றும் சமையல் எண்ணெயையும் சேர்ப்பது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NFSA) முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தைப் பொறுத்தவரை, அதை முழுமையாக நிராகரிப்பதே சிறந்தது.


டிரேஸ், ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் வருகைதரு பேராசிரியராக (பணியாற்றுகிறார். ஜமீர், ராஞ்சியைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார்.


Original articles: Food Security Act amendments will hurt the poorest -Jean Drèze, Mohammad Zameer

Share: