கடன் தவணை செலுத்தத் தவறினால் வங்கிகள் உங்கள் தொலைபேசியை முடக்க முடியுமா? - இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் கூறுவது என்ன? - ஜார்ஜ் மேத்யூ

 திறன்பேசிகள் அல்லது மடிக்கணினிகளுக்குக் கடன் வழங்கும் வங்கிகள், கடன் தவணை செலுத்தப்படாத சூழலில் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப அடிப்படையிலான வழிமுறைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இதை மிகக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டும், படிப்படியாகவும் மட்டுமே மேற்கொள்ள முடியும்.


வணிக வங்கிகள் நிலுவையில் உள்ள கடன்களை எவ்வாறு வசூலிக்க வேண்டும் என்பது குறித்த விரிவான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இது வங்கிகள் மற்றும் வெளிமுகமை மூலம் செயல்படும் கடன் வசூல் முகவர்கள் (recovery agents) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கணிசமாக மாற்றியமைக்கிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி, 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கட்டமைப்பு, வங்கிக் கடன் மூலம் வாங்கப்பட்ட திறன்பேசிகளின் செயல்பாடுகளைத் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் முதல் விரிவான ஒழுங்குமுறை விதிகளையும் அறிமுகப்படுத்துகிறது.


கடன் வசூல் முகவர்களால் (recovery agents) ஏற்படும் துன்புறுத்தல், கடுமையான வசூல் முறைகள் மற்றும் கடன் அடிப்படையில் வாங்கப்பட்ட திறன்பேசிகளை டிஜிட்டல் கடன் வழங்குநர்கள் தொலைதூரத்திலிருந்தே முடக்குவது குறித்த புகார்கள் பல ஆண்டுகளாக எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அறிவுறுத்தல்களை நீக்கிவிட்டு ஒரே மாதிரியான விதிமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நிலுவைத் தொகையை வசூலிப்பதற்கான வங்கிகளின் உரிமையையும், கடன் வாங்கியவர்களின் கண்ணியம், தனியுரிமை மற்றும் நியாயமான நடத்தையைப் பெறும் உரிமையையும் சமநிலைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



இனி வங்கிகள் உங்கள் திறன்பேசியினை முடக்க முடியுமா?


ஆம், ஆனால் மிகக் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டும், படிப்படியாகவும் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். திறன்பேசிகள் மடிக்கணினிகளுக்குக் கடன் வழங்கும் வங்கிகள், கடன் வாங்கியவர் தவணை செலுத்தத் தவறினால் அந்தச் சாதனத்தின் சில செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த தொழில்நுட்ப வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முறைப்படி அங்கீகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் சாதனத்தை வாங்குவதற்காகவே கடன் வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


கடன் ஒப்பந்தத்தில் இந்த வாய்ப்பு, வசூல் செயல்முறை மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடிய நிலைகள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். கடன் வாங்கியவருக்கு அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்தாலும், கடன் தவணை செலுத்தும் காலம் முடிந்து 30 நாட்கள் கடக்கும் வரை எந்தக் கட்டுப்பாடுகளையும் செயல்படுத்த முடியாது. அதன்பிறகும் கூட, கட்டுப்பாடுகள் படிப்படியாகவே அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கூறுகிறது.


கடன் ஒப்பந்தத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட முழுமையான கட்டுப்பாடுகளை, கடன்தொகை செலுத்தப்படாமல் 60 நாட்கள் கடந்த பின்னரே விதிக்க முடியும். இந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பாக வெளிச்செல்லும் அழைப்புகளை (outgoing calls) கூடத் தடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


திறன்பேசியின் எந்தெந்த அம்சங்களை முடக்க முடியாது?


இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கிகளால் உள்வரும் அழைப்புகள் (incoming calls), குறுஞ்செய்தி (SMS) சேவைகள் அல்லது அவசரக்கால SOS செயல்பாடுகள் ஆகியவற்றை முடக்க முடியாது. கடன் வாங்கியவரின் வேலை அல்லது பணிக்குத் தேவையான செயல்பாடுகளில் இந்தக் கட்டுப்பாடுகள் இடையூறு விளைவிப்பதாகவும் இருக்கக்கூடாது.


கடன் வாங்கியவர்கள் தங்கள் சாதனத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் நிலையை எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கும் வசதி இருக்க வேண்டும். நிலுவைத் தொகை செலுத்தப்பட்டவுடன், வங்கிகள் ஒரு மணி நேரத்திற்குள் சாதனத்தின் செயல்பாடுகளை மீண்டும் முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். இந்தச் செயல்பாட்டை மீட்டெடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், சேவை மீண்டும் கிடைக்கும் வரை மணிக்கு ரூ. 250 வீதம் இழப்பீடு வங்கி தரப்பில் வழங்கப்பட வேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த மொத்த இழப்பீட்டுத் தொகையானது கடன் தொகையைவிட அதிகமாக இருக்கக் கூடாது என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த வழிகாட்டுதல்கள் கடுமையான தனியுரிமைப் பாதுகாப்புகளையும் விதிக்கின்றன. கடன் பெறுபவர்களின் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுகளை — அதாவது தொடர்புகள் (contacts), புகைப்படங்கள், குறுஞ்செய்திகள், அழைப்பு விவரங்கள் அல்லது இருப்பிட வரலாறு (location history) போன்றவற்றை — வங்கிகளோ அல்லது மூன்றாம் தரப்புத் தொழில்நுட்பச் சேவை வழங்குநர்களோ அணுகுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.


வங்கிகள் எவ்வாறு பொறுப்பாக்கப்படும்?


கடன் வசூல் தொடர்பான அழைப்புகளை வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு பதிவுகளை பராமரிக்க வேண்டும் மற்றும் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதை கடன் வாங்குபவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். வசூல் இலக்குகள் மற்றும் ஊக்கத்தொகை முறைகள் ஆகியவை கடுமையான அல்லது அத்துமீறிய நடத்தையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கக்கூடாது.


கடன் வசூல் தொடர்பான புகார்களைக் கையாள்வதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒரு பிரத்யேக குறைதீர்ப்பு அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும். குறைதீர்ப்பு அதிகாரியின் தொடர்பு விவரங்கள் கடன் ஆவணங்களிலும், வசூல் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளிலும் சேர்க்கப்பட வேண்டும். இதன்மூலம், ஒரு வெளிநிறுவனத்தின் மூலம் வசூல் செய்யும்போதுகூட, விதிமீறல்களுக்கு வங்கியே பொறுப்பாகிறது.

இப்போது ரிசர்வ் வங்கி ஏன் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது? 


டிஜிட்டல் கடன்கள், பிணையற்ற தனிநபர் கடன், இப்போதே வாங்கி பின்னர் செலுத்தும் (Buy Now Pay Later (BNPL)) திட்டங்கள் மற்றும் திறன்பேசிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணுப் பொருட்களுக்கான நிதியுதவி ஆகியவற்றால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சில்லறை கடன் சந்தை வேகமாக விரிவடைந்துள்ளது. இந்த வளர்ச்சியுடன், கடன் வசூல் நடைமுறைகள் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன.


கடனைத் திரும்பச் செலுத்தக் கோரி அடிக்கடி தொலைபேசியில் அழைப்பது, மிரட்டுவது, அநாவசிய நேரங்களில் நேரில் வந்து தொந்தரவு செய்வது, சமூக வலைத்தளங்கள் மூலம் அவமானப்படுத்துவது மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவது போன்ற செயல்களில் கடன் வழங்கியவர்கள் ஈடுபடுவதாகக் கடன் வாங்கியவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அதேநேரத்தில்,  திறன்பேசிகளுக்குக் கடன் வழங்கும் சில நிறுவனங்கள், கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும்போது, அந்த திறன்பேசியின் பயன்பாட்டைத் முடக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.


இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய திருத்தம்; கடன் வசூல் முகவர்கள், கடன் வசூல் முகமைகள், வங்கிகளின் உள்கொள்கைகள், குறைதீர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கடன் வசூலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான வழிகாட்டுதலின் மூலம் இந்த மாற்றங்களை முறைப்படுத்த முயல்கிறது. இந்த உத்தரவுகள் அனைத்து வணிக வங்கிகளுக்கும் பொருந்தும்.


முக்கியமாக, கடன் வசூல் முகமைகளுக்கான விளக்கத்தை  ரிசர்வ் வங்கி விரிவுபடுத்தியுள்ளது. இனி, கடன் நிலுவைகளை வசூலிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் எந்தவொரு வெளிநபர் அல்லது தனியார் நிறுவனம் — கடன் வசூல் பணிகளைச் செய்யும் 'வங்கித் தொடர்பாளர்கள்’ உட்பட — கடன் வசூல் முகமைகளாகவே கருதப்படுவர். கடன் வாங்கியவர்களிடம் நேரில் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அவர்களின் பிரதிநிதிகள் 'கடன் வசூல் முகவர்கள்' என வரையறுக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடன் வசூல் பணிகள் வெளிப்படைத்தன்மையின்றி ஒப்படைக்கப்பட்டு வந்த நீண்டகாலக் கட்டுப்பாட்டு இடைவெளியை இந்த நடவடிக்கை சரிசெய்கிறது.


வங்கிகளுக்கான மாற்றங்கள் என்ன?


இந்திய ரிசர்வ் வங்கி, கடன் வசூல் பணிகளை வெறும் செயல்பாட்டுப் பணியாகக் கருதாமல், இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படும் ஒரு செயல்முறையாக மாற்றியுள்ளது. வங்கிகள் ஒரு விரிவான கடன் வசூல் கொள்கையை வகுக்க வேண்டும். அது, கடன் வசூல்  நடவடிக்கைகள் எப்போது தொடங்கும், வசூல்  நடவடிக்கைகளின் வரிசைமுறை, மேல்நிலைப்படுத்தும் வழிமுறைகள், மற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிப்பணியமர்த்தப்பட்ட கடன் வசூல்  முகவர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.


உண்மையான நிதி நெருக்கடியில் இருக்கும் கடனாளிகளைக் கையாள்வதற்கான நடைமுறைகளை இந்தக் கொள்கை தெளிவாக வரையறுக்க வேண்டும். இதில், தீவிரமான கடன் வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பு கடனாளியுடன் முறையாகத் தொடர்புகொண்டு பேசியதற்கான ஆவணப் பதிவுகளும் அடங்கும். மேலும், கடனாளி இறந்துவிட்டால் கடனை எவ்வாறு திரும்பப் பெறுவது என்பது குறித்தும், வங்கி வசூல் நடவடிக்கைகள் ரிசர்வ் வங்கியின் (RBI) விதிகளை மீறும்பட்சத்தில் கடனாளிக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இக்கொள்கை குறிப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, வெளிமுகமை கடன் வசூல் முகவர்களைத் தேர்வு செய்யும்முன் முறையான தகுதிப் பரிசீலனை செய்வதும், அவர்களைத் தொடர் தணிக்கை மற்றும் செயல்முறை ஆய்வுகள் மூலம் கண்காணிப்பதையும் வங்கிகள் பலப்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

கடன்தாரர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் யாவை?


மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், மரியாதையான முறையில் கடனைத் திரும்பப் பெறும் நடைமுறைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்தான். கடன்தாரர் தனியாகக் கேட்டுக்கொண்டால் தவிர, கடன் வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே கடன்தாரர்களைத் தொடர்புகொள்ள முடியும். அவர்கள் தங்களின் அடையாள அட்டை (ID Card) மற்றும் அதிகாரப்பூர்வக் கடிதம் மூலமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வங்கி வழங்கிய அறிவிப்புகளின் நகல்களையும் கையோடு வைத்திருக்க வேண்டும்.


கடன் வசூல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடன் வாங்கியவர் அல்லது பிணையாளருடன் மட்டுமே நடத்தப்பட வேண்டும். நிலுவையில் உள்ள கடன் குறித்து அண்டை வீட்டாரோடோ, உடன் பணிபுரிபவர்களுடனோ அல்லது சம்பந்தமில்லாத நபர்களுடனோ வசூல் முகவர்கள் பேசுவதற்கு வங்கிகள் அனுமதிக்கக் கூடாது. ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படும் நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. இதில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துதல், அடையாளம் தெரியாத அல்லது மிரட்டும் அழைப்புகள், தொடர்ச்சியான குறுஞ்செய்திகள் அனுப்புதல், உறவினர்களைத் துன்புறுத்துதல், அச்சுறுத்தல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல், மற்றும் கடன் வாங்கியவரின் தகவல்கள் அல்லது பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுதல் ஆகியவை அடங்கும். துக்க நிகழ்வுகள், மருத்துவ அவசரநிலைகள், திருமண விழாக்கள் அல்லது அதுபோன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் சூழ்நிலைகளின்போது நேரில் சென்று சந்திப்பதைத் தவிர்க்குமாறு கடன் வசூல்  முகவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி கடன் வசூல் முகவர்கள் மீது கவனம் செலுத்துவது ஏன்?


வங்கிப் பணிகளைச் செய்யும் வெளிமுகமை கடன் வசூல் முகவர்களின் நடத்தைகளுக்கு, அந்தந்த வங்கிகளே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. கடன் வசூல் முகவர்களை நியமிப்பதற்கு முன்னரும், அதன் பிறகும் அவ்வப்போதும் வங்கிகள் அவர்களின் பின்னணியைச் சரிபார்க்க வேண்டும். இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் 'கடன் வசூல் முகவர்' பயிற்சித் திட்டத்திலோ அல்லது அதற்கு நிகரான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களிலோ சான்றிதழ் பெற்ற நபர்கள் மட்டுமே கடன் வசூல் பணியில் ஈடுபட முடியும்.


மேலும், தங்களின் பட்டியலில் உள்ள கடன் வசூல் முகமைகளின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை வங்கிகள் தங்களது வலைத்தளங்களில் வெளியிட வேண்டும். கடன் வாங்கியவரை முதன்முறையாக வசூலுக்காகச் சந்திப்பதற்கு முன்பு அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். முகமை மாற்றப்பட்டாலோ அல்லது முகமையின் சேவைகள் நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி அவருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்த யாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை கடன் வாங்கியவர்கள் எப்போதும் தெளிவாக அறிந்திருப்பதை உறுதிசெய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.


Original articles: Can banks lock your phone for loan default? What RBI’s new rules say -George Mathew

Share: