கோபர்தன் திட்டம் (GOBARdhan Scheme) என்பது கிராமப்புறங்களில் உள்ள கால்நடை சாணம் மற்றும் கசடு போன்ற மக்கும் கழிவுகளை பயனுள்ள உயிரிவாயு  (Biogas) மற்றும் இயற்கை உரங்களாக மாற்றும் ஒரு தேசியத் திட்டமாகும். இது கிராமங்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், வேளாண் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்தவும் உதவுகிறது.



தற்போதைய நிகழ்வு என்ன? : கோபர்தன் திட்டம் நாட்டில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (compressed biogas (CBG)) உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், மத்திய அமைச்சரவை வியாழக்கிழமையன்று ‘'கோபர்தன்' (GOBARdhan) எனும் தேசிய வட்டார உயிரி எரிசக்தி திட்டத்திற்கு (National Circular Bioenergy Scheme) ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் 2026-27-ஆம் ஆண்டு முதல் 2035-36-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 23,731 கோடியாகும்.


முக்கிய அம்சங்கள் :


நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் கொள்முதல் உத்தரவாதம், நிலையான நிர்ணயிக்கப்பட்ட விலை, மூலதன மானியங்கள், கடன் உதவி மற்றும் குழாய்வழி உள்கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம், உள்நாட்டு அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) உற்பத்தியை ஏறக்குறைய 10 மடங்கு அதிகரிப்பதையும், இத்துறையில் பெரிய அளவிலான தனியார் முதலீட்டை ஈர்ப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


உற்பத்தியாளர்களுக்கு நம்பகமான மற்றும் கணிக்கக்கூடிய சந்தையை வழங்க, ‘கோபர்தன்’ திட்டம் ஒரு பிரத்யேக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) கொள்முதல் உத்தரவாதக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) மற்றும் வீட்டு உபயோக குழாய்வழி இயற்கை எரிவாயு (piped natural gas (PNG)) பிரிவுகளில், அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) கலப்புக்கான கட்டாய இலக்குகளை (2026-27-ல் 3%, 2027-28-ல் 4% மற்றும் 2028-29 முதல் 5%) பூர்த்தி செய்ய நகர எரிவாயு விநியோக (city gas distribution (CGD)) நிறுவனங்கள் மூலம் இந்தக் கொள்முதல் மேற்கொள்ளப்படும். அரசின் கூற்றுப்படி, இந்தக் கட்டமைப்பு கலப்புக்கான கட்டாயத்தை "தொழில்துறைக்குத் தெளிவான, நீண்டகாலத் தேவைக்கான குறியீடாக" மாற்றுகிறது. மேலும், நகர எரிவாயு விநியோக (CGD) வலையமைப்புகள் முழுவதும் சீரான அமலாக்கம் திட்டங்களின் வங்கி நிதியுதவி பெறும் திறனை மேம்படுத்தி, உற்பத்தித் திறன் பயன்பாட்டை ஆதரிக்கும். இது நீண்டகால தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும்.



இத்திட்டத்தின்கீழ், தகுதியுள்ள புதிய அழுத்தப்பட்ட உயிரி-எரிவாயு (CBG) திட்டங்களுக்கு, உற்பத்தித் திறனில் ஒரு நாளைக்கு 1 டன் திறனுக்கு 2 கோடி ரூபாய் வரை மூலதன உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவி ஆலை இயந்திரங்களுக்கு மட்டுமின்றி, மூலப்பொருட்களைச் சேகரித்தல், இயற்கை உரத்தைச் பதப்படுத்துதல் மற்றும் கூடுதல் பயன்பாடுகளுக்கான உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்படும். மேலும், தங்கள் உற்பத்தித் திறனை விரிவாக்கும் பழைய திட்டங்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.


அரசாங்கத்தின் கூற்றுப்படி, இந்த நிதி உதவி புதிய திட்டங்களின் ஆரம்ப முதலீட்டுச் சுமையைக் குறைக்கும், கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும். மேலும், தனியார் அமைப்பாளர்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோரின் பங்கேற்பை அதிகரிக்கும்.


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலைகளை முக்கிய குழாய்வழிகள் மற்றும் நகர எரிவாயு விநியோக வலையமைப்புகளுடன் இணைக்கும் குழாய் வழித்தட திட்டங்களுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கும். இந்தக் குழாய் இணைப்பு வசதி எரிவாயுவை விநியோகிக்கும் செலவைக் கணிசமாகக் குறைக்கும், விநியோகத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா? 


அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் சுத்திகரிக்கப்பட்ட ஒரு வகை உயிர்வாயு ஆகும். இது வாகன மற்றும் தொழில்துறை எரிபொருளாகப் பயன்படுத்த உயர் அழுத்தங்களுக்கு உட்படுத்தப்படுகிறது. இது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (CNG) பண்புகளையும் ஆற்றல் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இதன் பொருள், இதை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) உடன் கலக்கலாம் அல்லது வாகன, தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தலாம். ஒழுங்கற்ற மூலப்பொருள் விநியோகச் சங்கிலிகள், அதிக ஆரம்ப மூலதனச் செலவு, போதுமான உள்ளூர் விநியோக உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் குறைந்த கொள்முதல் ஆகியவை அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) பிரிவில் உள்ள முக்கிய சவால்கள் மற்றும் தடைகளில் அடங்கும். இத்திட்டம் அவற்றைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவையில் சுமார் பாதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்ய வேண்டியுள்ள நிலையில், அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) உற்பத்தியையும் பயன்பாட்டையும் அதிகரிப்பது இறக்குமதியைக் குறைக்கவும், நாட்டின் தூய எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்தவும் உதவும். மேலும், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் தற்போதைய நெருக்கடி போன்ற சர்வதேச சந்தையின் விநியோகம் மற்றும் விலை தொடர்பான பெரும் பாதிப்புகளிலிருந்து உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்கவும் இது உதவும்.


அரசின் தகவலின்படி, 'பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படவுள்ள கோபர்தன் (GOBARdhan) திட்டம், நாட்டில் பெருமளவில் கிடைக்கும் வேளாண் கழிவுகள், மாட்டுச் சாணம், சர்க்கரை ஆலைக் கழிவுகள் (Press mud), நகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் இதர உயிரிப் பொருட்களைத் தூய்மையான எரிபொருளாகவும், இயற்கை உரமாகவும், கிராமப்புற வருமானமாகவும் மற்றும் நாட்டின் பொருளாதார மதிப்பாகவும் மாற்றும் திறனைக் கொண்டுள்ளது.


கோபர்தன் திட்டம், அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) மதிப்புச் சங்கிலி முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதன் மூலம் அழுத்தப்பட்ட உயிரி-வாயு (CBG) சார்ந்த சூழலமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும், வலுவான பொருளாதாரச் சாத்தியக்கூறுகளை உறுதிப்படுத்தவும், அத்துடன் முதலீட்டாளர்கள், கடன் வழங்குநர்கள் மற்றும் திட்ட உருவாக்குநர்களுக்கு அதிக நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்க உதவும்.


Original articles: What is the purpose of the GOBARdhan scheme? -Priya Kumari Shukla

Share: