Showing posts with label assets. Show all posts
Showing posts with label assets. Show all posts

ரிசர்வ் வங்கியின் புதிய குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்துகள் மற்றும் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச் சட்டம் குறித்து… -குஷ்பூ குமாரி

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க,  ரிசர்வ் வங்கி  குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துகள் (Specified Non-Financial Assets (SNFAs)) என்ற கருத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிதி அல்லாத சொத்துகள் என்றால் என்ன? ஒரு கடன் எப்போது செயல்பாடற்ற சொத்தாக (Non-Performing Asset (NPA)) மாறுகிறது? மேலும், வாராக்கடன்களை வங்கிகள் மீட்க நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்டம் எவ்வாறு உதவுகிறது?


தற்போதைய செய்தி


கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் சொத்துக்களை நிர்வகிக்க, ரிசர்வ் வங்கி "குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்கள்" (SNFA) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சொத்துக்கள் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்ட விதிகளின்படி பொது ஏலம் மூலம் விற்கப்பட வேண்டும். அந்தச் சொத்துகளை முதலில் கடன் பெற்றவருக்கோ அல்லது அவருடன் தொடர்புடைய தரப்பினருக்கோ மீண்டும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது


முக்கிய அம்சங்கள்:


1. குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்கள் (Specified Non-Financial Assets (SNFAs)) என்பவை, கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் போது வங்கிகள் கையகப்படுத்தும் அசையாச் சொத்துக்களைக் குறிக்கின்றன. நிலுவையில் உள்ள கடனைத் தீர்ப்பதற்காக வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதுபோன்ற சொத்துக்களில் குடியிருப்பு கட்டிடங்கள், வணிகச் சொத்துக்கள், தொழிற்சாலை நிலம் அல்லது பிற அசையாச் சொத்துக்கள் அடங்கும்.

2. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கடனாளிகளிடமிருந்து பெறப்பட்ட நிதி அல்லாத சொத்துக்களை வங்கிகள் எவ்வாறு கையகப்படுத்த வேண்டும், மதிப்பிட வேண்டும், நிர்வகிக்க வேண்டும் மற்றும் அகற்ற வேண்டும் என்பதற்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக,  ரிசர்வ் வங்கி 2026-ஆம் ஆண்டின் 3-வது திருத்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


3. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு கடனாளியின் கடன் அதிகாரப்பூர்வமாக செயல்பாடற்ற சொத்தாக (non-performing asset (NPA)) வகைப்படுத்தப்பட்ட பின்னரே வங்கிகள் ஒரு குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்தைக் கையகப்படுத்த முடியும். இந்தச் சொத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை, வங்கிக்கு வர வேண்டிய நிலுவைக் கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது ஒரு பகுதியளவுகவோ திரும்பப் பெறும் வகையில் இருக்க வேண்டும்.




4. இந்தத் திருத்தத்தின்படி, குறிப்பிட்ட நிதி அல்லாத சொத்துக்களை (SNFA) கையகப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான ஒரு விரிவான  கொள்கையை வகுக்க வேண்டும். அந்தக் கொள்கையானது, தகுதி அளவுகோல்கள், ஒப்புதல் நடைமுறைகள் மற்றும் சொத்தைக் கையகப்படுத்துவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்டெடுப்பு முயற்சிகளைக் குறிப்பிட வேண்டும்.

5. திருத்தப்பட்ட புதிய விதிமுறைகளின் கீழ், கைப்பற்றப்பட்ட சொத்துகள் பின்னர், குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்து என்ற வகைப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டாலும், அவற்றை முதலில் கடன் பெற்றவருக்கோ அல்லது அவருடன் தொடர்புடைய தரப்பினருக்கோ மீண்டும் விற்பனை செய்வது வங்கிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.


6. குறிப்பிடப்பட்ட நிதி அல்லாத சொத்துகள் (SNFAs) இனி மொத்த வாராக்கடன்கள், நிகர வாராக்கடன்கள் அல்லது நெருக்கடிக்குள்ளான சொத்துக்களின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படாது. அதற்குப் பதிலாக, வங்கிகளின் இருப்புநிலை அறிக்கைகளில், “கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காகப் பெறப்பட்ட வங்கி அல்லாத சொத்துகள்” (Non-banking assets acquired in satisfaction of claims) என்ற பிரிவின்கீழ் இவை தனியாகக் காட்டப்படும்.


ஒரு கடன் எப்போது செயல்பாடற்ற சொத்தாக (non-performing asset (NPA)) மாறுகிறது?


1. வங்கிகளால் வழங்கப்படும் அனைத்து முன்பணங்களும் "சொத்துக்கள்"  (assets) என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை வட்டி அல்லது தவணைகள் மூலம் வங்கிக்கு வருமானத்தை ஈட்டித் தருகின்றன. இருப்பினும், செலுத்த வேண்டிய தேதிக்குப் பிறகும் வட்டி அல்லது தவணை செலுத்தப்படாமல் இருந்தால், அது ஒரு கடன் வாராக்கடனாக மாறுகிறது. மேலும், 90 நாட்களுக்கும் மேலாக செலுத்தப்படாமல் இருந்தால், அது செயல்பாடற்ற சொத்தாக (NPA) மாறிவிடுகிறது.


2. ஜூலை 2014-ல் வெளியான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி, 90 நாட்களுக்கும் மேலாக வட்டி மற்றும்/அல்லது அசல் தவணை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அனைத்து முன்பணங்களும் “செயல்பாடற்ற சொத்து” (non-performing asset) என்று வகைப்படுத்தப்படும்.





3. ஒரு கடன் கணக்கு செயல்படாத சொத்தாக மாறுவதற்கு முன்பே, அந்தக் கணக்கில் ஏற்படும் ஆரம்பகட்ட நிதி அழுத்தத்தை (Incipient Stress) வங்கிகள் கண்டறிய வேண்டும். இதற்காக, சிறப்பு கவனக் கணக்குகள் (Special Mention Accounts (SMA)) எனப்படும் ஒரு துணைச் சொத்து வகை (Sub-Asset Category) உருவாக்கப்பட்டுள்ளது. கடன் செலுத்துவதில் சிக்கல் அல்லது முறைகேடு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தவுடன், அந்தக் கடன் கணக்கு சிறப்பு கவனக்கணக்குகள் பிரிவில் சேர்க்கப்படுகிறது.


சிறப்பு கவனக் (Special Mention Accounts (SMA)) கணக்குகளில் மூன்று வகைகள் உள்ளன:


• சிறப்பு கவனக் கணக்குகள்-0: என்பது அசல் அல்லது வட்டித் தொகையைச் செலுத்துவதில் 30 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஏற்படாத நிலையிலும், கணக்கில் ஆரம்பக்கட்ட நிதி நெருக்கடிக்கான அறிகுறிகள் தென்படும்போது உருவாகும் கணக்குகளாகும்.


• சிறப்பு கவனக் கணக்குகள்-1: என்பது அசல் அல்லது வட்டி செலுத்துதல் 31 முதல் 60 நாட்களுக்குள் தாமதமானால் உருவாகும் கணக்குகளாகும்.


• சிறப்பு கவனக் கணக்குகள்-2: அசல் அல்லது வட்டி செலுத்துதல் 61 முதல் 90 நாட்களுக்குள் தாமதமானால் உருவாகும் கணக்குகளாகும்.


4. ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, வங்கிகள் தங்களின் வாராக்கடன்களைப் பின்வரும் பரந்த குழுக்களாக வகைப்படுத்த வேண்டும்:


(i) தரம் குறைந்த நிலையில் இருக்கும் சொத்துக்கள்: ஒரு சொத்து 12 மாதங்கள் அல்லது அதற்குக் குறைவான காலம் செயல்படாத சொத்தாக இருந்தால், அது தரம் குறைந்த நிலையில் இருக்கும் சொத்து (Sub-standard Assets) என வகைப்படுத்தப்படும்.

 


(ii) சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் (Doubtful Assets): ஒரு சொத்து 12 மாதங்களுக்கு மேல் செயல்படாத சொத்தாக நீடித்தால், அது சந்தேகத்திற்குரிய சொத்து என வகைப்படுத்தப்படும்.


(iii) நட்டச் சொத்துக்கள் (Loss Assets): வசூலிக்க முடியாத மற்றும் மதிப்பு குறைந்த சொத்து, ஆனால் வங்கி அதை முழுமையாக கணக்கில் இருந்து நீக்காத நிலை, நட்டச் சொத்துக்கள் (Loss Asset) எனப்படும்.


நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கம் (Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest (Sarfaesi))) என்றால் என்பது என்ன?


1. கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய கடனாளிகளிடமிருந்து நிதி நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக, 2002-ஆம் ஆண்டின் நிதிச் சொத்துக்களைப் பத்திரமாக்குதல் மற்றும் மறுகட்டமைத்தல் மற்றும் பிணையப் பற்றுரிமையை அமல்படுத்துதல் (Sarfaesi) சட்டம்  அறிமுகபடுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தை முன்மொழிவதற்காக, மத்திய அரசு நரசிம்மம்  மற்றும் அந்தியருஜினா குழு போன்ற குழுக்களை அமைத்தது.


நரசிம்மம் குழு  மற்றும் அந்தியாருஜினா குழுக்கள் எது போன்ற பரிந்துரைகளை செய்தன ?


நரசிம்மம் குழு :


மத்திய அரசு 1991-ஆம் ஆண்டு முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எம். நரசிம்மம் தலைமையில் குழுவை அமைத்தது. சொத்து மறுசீரமைப்பு நிதியை உருவாக்குதல், வங்கிகளின் மூலதன விகிதத்தை (Capital Adequacy Ratio) அதிகரித்தல், வங்கிகளை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றம் செய்யவேண்டும் என்ற பரிந்துரைகளை வழங்கியது.


அந்தியாருஜினா குழு:


அந்தியாருஜினா குழு என்பது 1998-ஆம் ஆண்டு  மத்திய அரசாங்கத்தால் வங்கி சட்டங்களைச் சீரமைக்க அமைக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவாகும். இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் 'டி.ஆர். அந்தியாருஜினா'  இதன் தலைவராக இருந்தார். இந்தக் குழுவின் பரிந்துரைகள் நிதிச் சொத்துகளின் பத்திரமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்பு மற்றும் பிணைய உரிமை அமலாக்கச்  (SARFAESI)) சட்ட உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தன.




2. இந்தச் சட்டத்தின்கீழ், வங்கிகள் தங்களின் வாராக்கடன்களை வசூலிப்பதற்காக, கடனுக்கு ஈடாக அடமானம் வைக்கப்பட்டுள்ள சொத்துகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். மேலும், நீதிமன்ற தலையீடு இல்லாமல், அந்தச் சொத்துகளை நிர்வகிக்கவோ அல்லது விற்பனை செய்து நிலுவைத் தொகையை (Dues) மீட்டெடுக்கவோ முடியும். இந்தச் சட்டம் நாடு முழுவதும் பொருந்தும்.  மேலும், கடன் வழங்குநருக்குப் பிணையமாக (security) அளிக்கப்பட்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் அனைத்தும் இந்தச் சட்டத்தின்கீழ்  இடம்பெற்றிருக்கும்.


3. 2002-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தங்களது வாராக்கடன்களை மீட்டெடுக்க நீண்ட சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய சூழல் இருந்தது. திருப்பிச் செலுத்தப்படாத கடன்களை ஈடுசெய்யும் வகையில் பிணையச் சொத்துகளின் மீதான உரிமையைப் பெற, கடன் வழங்குநர்கள் உரிமையியல் நீதிமன்றங்களையோ அல்லது அதற்கென அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களையோ நாட வேண்டிய சூழல் இருந்தது. இதனால் கடன் வசூல் தாமதமானதுடன், கடன் வழங்குநர்களின் 'செயல்பாடற்ற சொத்துகளின்' (non-performing assets) பட்டியலும் அதிகரித்தது.


4. ஒரு கடன் வாங்கியவர் ஆறு மாதங்களுக்கு மேல் கடன் தொகையை செலுத்தத் தவறினால், SARFAESI சட்டம் நடைமுறைக்கு வரும். அப்போது, ​​கடன் வழங்குபவர், 60 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்துமாறு கடனாளிக்கு ஓர் அறிவிப்பை அனுப்பலாம். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த நிதி நிறுவனத்திற்கு பிணையமாக வைக்கப்பட்ட சொத்துகளை (Secured Assets) கைப்பற்றி, அவற்றை விற்பனை செய்யவோ, மாற்றம் செய்யவோ அல்லது நிர்வகிக்கவும் உரிமை கொண்டுள்ளது.


5. இதற்கிடையில், கடன்கட்ட தவறியவர், கடன் வழங்குபவரிடமிருந்து அறிவிப்பு பெற்ற 30 நாட்களுக்குள், இந்தச்சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்முறையீட்டு அமைப்பை (Appellate Authority) அணுகலாம். மேலும், 2020-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கூட்டுறவு வங்கிகளும் (SARFAESI) சட்டத்தைப் பயன்படுத்தலாம்.


Original Link: What is the RBI’s new Specified Non-Financial Assets (SNFAs) and SARFAESI Act?

Share: