ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை : கூட்டமைப்பு, சீர்திருத்தத்தின் தேவை மற்றும் நிரந்தர உறுப்பினர் தகுதிக்கான இந்தியாவின் கோரிக்கை -ரோஷ்னி யாதவ்

 G20 மற்றும் BRICS போன்ற குழுக்களிடமிருந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) சீர்திருத்த வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், இந்த மாற்றத்திற்கு வலுவான ஆதரவாளர்களில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது.


என்ன பிரச்சினை?


சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரதிநிதித்துவத்திற்காக மதம் மற்றும் நம்பிக்கை போன்ற புதிய அளவுகோல்களை அறிமுகப்படுத்தும் முயற்சிகளை இந்தியா விமர்சித்துள்ளது. இது பிராந்திய பிரதிநிதித்துவக் கொள்கைக்கு எதிரானது என்று கூறியது.


ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் பி. ஹரிஷ், கவுன்சிலின் எதிர்கால அளவு மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் குறித்து அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் (IGN) கூட்டத்தில் பேசினார். உரை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளை எதிர்ப்பவர்கள் UNSC சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை விரும்பவில்லை என்று அவர் வாதிட்டார். ஒரு பெரிய, சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கவுன்சில் திறமையற்றதாக இருக்கும் என்ற கூற்று உண்மையான மாற்றங்களைத் தாமதப்படுத்தும் முயற்சி என்றும் அவர் கூறினார்.


UNSCயை சீர்திருத்துவது பலதரப்பு சீர்திருத்தங்களுக்கான முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாக, இந்தியா UNSC சீர்திருத்தங்களை வலுவாக ஆதரிக்கிறது மற்றும் உலகளாவிய முடிவெடுப்பதில் அதிக உள்ளடக்கத்தை ஊக்குவிக்க நிரந்தர இடத்தை நாடுகிறது. சீர்திருத்தத்திற்கான இந்த கோரிக்கைகளைப் புரிந்துகொள்வது பரந்த உலகளாவிய சூழலில் முக்கியமானது.


கேள்வி 1: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) அமைப்பு மற்றும் ஆணை என்ன?


ஐக்கிய நாடுகள் சபை (UN) அக்டோபர் 24, 1945 அன்று உருவாக்கப்பட்டது, அப்போது 51 நாடுகள் அதை அங்கீகரித்தன. இதில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் (P5) அடங்குவர்: பிரான்ஸ், சீனா, சோவியத் யூனியன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, மற்றும் 46 பிற நாடுகள் உள்ளன. ஐ.நா. பொதுச் சபையின் முதல் கூட்டம் ஜனவரி 10, 1946 அன்று நடைபெற்றது. இன்று, 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.


ஐ.நா. சாசனம் ஐ.நா.வின் ஆறு முக்கிய பகுதிகளை நிறுவியது. அவற்றில் ஒன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (UNSC). ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முதல் அமர்வு ஜனவரி 17, 1946 அன்று லண்டனில் உள்ள சர்ச் ஹவுஸில் நடைபெற்றது. அப்போதிருந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அமைந்துள்ளது.


சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கான முக்கிய பொறுப்பை ஐ.நா. சாசனம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு வழங்குகிறது. அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் அது கூடலாம். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சாசனம் பாதுகாப்பு கவுன்சிலின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை கோடிட்டுக் காட்டுகிறது. ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வ தளத்தின்படி, ஐக்கிய நாடுகள் சாசனத்தின்கீழ், பாதுகாப்பு கவுன்சிலின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளன. அவை:


• ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ப சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல்;


• சர்வதேச உராய்வுக்கு வழிவகுக்கும் எந்தவொரு சர்ச்சை அல்லது சூழ்நிலையையும் விசாரித்தல்;


• ஆயுதங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அமைப்பை நிறுவுவதற்கான திட்டங்களை உருவாக்குதல்;

• அமைதிக்கு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புச் செயலின் இருப்பைத் தீர்மானித்தல் மற்றும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைத்தல்;


• ஆக்கிரமிப்பைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு சக்தியைப் பயன்படுத்தாமல் பொருளாதாரத் தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளைப் பயன்படுத்த உறுப்பினர்களை அழைத்தல்;


• புதிய உறுப்பினர்களின் சேர்க்கையை பரிந்துரைத்ததல்;


• பொதுச் சபைக்கு பொதுச் செயலாளர் நியமனம் மற்றும், பேரவையுடன் இணைந்து செயல்படுதல்.


 • சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தல்.


ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) மட்டுமே ஐ.நா.வின் சாசனத்தின் கீழ் உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரே பகுதியாகும், மற்ற ஐ.நா. அமைப்புகள் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.


கூட்டமைவு :


UNSCயில் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அவை:


- 5 நிரந்தர உறுப்பினர்கள்: சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்.


- 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள்: இந்த உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் சபையால் இரண்டு ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், பொதுச் சபை ஐந்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.


10 நிரந்தரமற்ற இடங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன:


- ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு 5 இடங்கள் (ஆப்பிரிக்காவிற்கு 3, ஆசியாவிற்கு 2).


- கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1 இடம்.


- லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 இடங்கள்.


- மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளுக்கு 2 இடங்கள்.


ஆப்பிரிக்க அல்லது ஆசிய இடங்களில் ஒன்று அரபு நாட்டிற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற முறைசாரா விதியும் உள்ளது. இரண்டு குழுக்களும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு அரபு வேட்பாளரை மாறி மாறி  பரிந்துரைக்க வருகின்றன.


இரட்டைப்படை ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் இரண்டு ஆப்பிரிக்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கிழக்கு ஐரோப்பா, ஆசியா பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளிலிருந்து தலா ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒற்றைப்படை ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் மேற்கு ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளிலிருந்து இரண்டு உறுப்பினர்களும், ஆசியா பசிபிக், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளிலிருந்து தலா ஒருவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.


ஐ.நா.வில் உறுப்பினராக இருந்தாலும் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இல்லாத ஒரு நாடு, நாட்டின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கவுன்சில் நம்பினால், விவாதங்களில் சேரலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. ஐ.நா.வில் உறுப்பினர்களாக இல்லாத ஆனால் கவுன்சில் பரிசீலிக்கும் ஒரு சர்ச்சையில் உள்ள நாடுகளையும் விவாதங்களில் சேர அழைக்கலாம். இருப்பினும், அவர்கள் வாக்களிக்க முடியாது. உறுப்பினர் அல்லாத நாடுகள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதை கவுன்சில் தீர்மானிக்கிறது.


UNSC -ல் வீட்டோ அதிகாரம்


அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் பொதுச் சபையில் அங்கம் வகிக்கின்றன, அவை முக்கியமான பிரச்சினைகளில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியும். ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற எளிய பெரும்பான்மை, அதாவது பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவை. இதற்கு நேர்மாறாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மிகவும் பிரத்தியேகமானது.


பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் (P5) ஒரு வாக்கெடுப்பை வீட்டோ செய்யலாம். ஐ.நா. சாசனத்தின்படி, P5 உறுப்பினர்களில் யாராவது இல்லை என்று வாக்களித்தால், தீர்மானம் தோல்வியடையும். இருப்பினும், ஒரு உறுப்பினர் வாக்களிப்பதைத் தவிர்க்கலாம், குறைந்தது ஒன்பது வாக்குகளைப் பெற்றால் தீர்மானம் நிறைவேற்றப்படலாம்.


UNSC இன் நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் ஏன் வீட்டோ அதிகாரம் உள்ளது?

            ஐ.நா கூறுகிறது, "ஐக்கிய நாடுகளின் சாசனத்தை உருவாக்கியவர்கள் ஐந்து நாடுகள்... ஐக்கிய நாடுகள் சபையை ஸ்தாபிப்பதில் அவற்றின் முக்கியப் பாத்திரங்களின் காரணமாக, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பதில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று கருதினர்." இரண்டாம் உலகப் போர் 1945-ல் முடிவடைந்த பிறகு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானுக்கு எதிரான வெற்றியாளர்களில் P5 இருந்தது. அவற்றில், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் ஒன்றியம் (பின்னர் ரஷ்யா அதன் இடத்தைப் பிடிக்கும்) போர் முயற்சிகளில் முன்னணியில் இருந்தன. சர்வதேச அமைதியைப் பேணுவதற்காக ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கும் போது, ​​அவர்கள் தங்களுக்கு சில பிரத்யேக உரிமைகளை வழங்குவதில் ஆர்வமாக இருந்தனர்.


கேள்வி 2: UNSC-ஐ சீர்திருத்துவதற்கான தேவை ஏன் அதிகரித்து வருகிறது?


இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானதாக மாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை (UNSC) சீர்திருத்துவதாக G20 நாடுகள் உறுதியளித்துள்ளன. இதேபோல், BRICS நாடுகள் UNSC போன்ற முக்கிய நிறுவனங்களை சீர்திருத்துவதன் மூலம் உலகளாவிய நிர்வாகத்தை மேலும் உள்ளடக்கியதாக மாற்ற விரும்புகின்றன. பல குழுக்களும் நாடுகளும் காலப்போக்கில் UNSCயில் மாற்றங்களைக் கோரியுள்ளன. சீர்திருத்தத்திற்கான இந்த தொடர்ச்சியான கோரிக்கைக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. சில முக்கிய காரணங்களை ஆராய்வோம்:


1. UNSC அமைப்பை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுதல்: உலகளாவிய ஒழுங்கு விரைவாக மாறி வருகிறது. எனவே, UNSC சீர்திருத்தங்கள் மேலும் உள்ளடக்கியதாகவும் நியாயமாகவும் மாற வேண்டும். அதன் உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது வெறும் நடைமுறை மாற்றம் மட்டுமல்ல; அது ஜனநாயகத்திற்கும் அவசியம்.


2. தற்போதைய உலகளாவிய யதார்த்தங்களை பிரதிபலிக்கவில்லை: P5 உறுப்பினர்களின் (ஐந்து நிரந்தர உறுப்பினர்கள்) நலன்கள் சம்பந்தப்பட்ட மோதல்களைக் கையாள UNSC போராடுகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து வரையறுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்துடன், இன்றைய உலகளாவிய யதார்த்தங்களை இது பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.


3. UNSC-யின் நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல்: உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் நிலைமை போன்ற மோதல்களால் UNSC பிரிக்கப்பட்டுள்ளது, இதனால் அது குறைவான செயல்திறன் கொண்டது. அதன் நம்பகத்தன்மையை மீட்டெடுக்கவும் சர்வதேச நம்பிக்கையைப் பராமரிக்கவும் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது மிக முக்கியம்.


சுருக்கமாக, UNSC சீர்திருத்தங்கள் நியாயமற்ற தன்மை மற்றும் பிராந்தியங்களின் குறைவான பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஐக்கிய நாடுகள் சபை இந்தியா போன்ற அரசியல் சக்திகளின் எழுச்சியை பிரதிபலிக்கவும், உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பொருத்தமானதாக இருக்கவும் உதவும்.


கேள்வி 3: இந்தியா ஏன் UNSCயில் நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும்?


இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன உறுப்பினராக உள்ளது மற்றும் பல ஆண்டுகளாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த முயற்சிகளுக்கு தலைமை தாங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் வளர்ந்து வரும் உலகளாவிய சக்தியாகவும், பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்படும் மாற்றங்களை இந்தியா கடுமையாக ஆதரிக்கிறது. உலகளாவிய முடிவெடுப்பதை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்கு இந்தியா ஒரு நிரந்தர இடத்தை விரும்புகிறது.


பாதுகாப்பு கவுன்சில் விரிவடைந்து, நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற பிரிவுகளில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று இந்தியா நம்புகிறது. அதன் பெரிய மக்கள் தொகை, அளவு, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் ஐ.நா.விற்கு அதன் பங்களிப்புகள், குறிப்பாக அமைதி காக்கும் பணிகள் போன்ற நிரந்தர இடத்திற்கான அனைத்து முக்கிய அளவுகோல்களையும் அது பூர்த்தி செய்கிறது என்று அது வாதிடுகிறது.


மார்ச் 2024ஆம் ஆண்டில், G4 நாடுகளை (பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தன்னை) பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த ஒரு திட்டத்தை முன்மொழிந்தது. ஆறு நிரந்தர உறுப்பினர்களையும் நான்கு அல்லது ஐந்து நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் சேர்ப்பதன் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 25-26 ஆக அதிகரிக்க இந்த திட்டம் பரிந்துரைக்கிறது.


செப்டம்பர் 2024ஆம் ஆண்டில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால உச்சி மாநாட்டில், பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் அழைப்பை இந்தியா ஆதரித்தது. நியாயமான மற்றும் உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாக முறைக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதன் நிலைப்பாட்டை நன்கு புரிந்துகொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் பங்கை ஆராய்வோம்:


1. 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92, 2011-2012, மற்றும் 2021-22. போன்ற ஆண்டுகளில் இந்தியா இதுவரை 8 முறை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ளது: 


2. 1950-51 UNSC-ன் தலைவராக இருந்த இந்தியா, கொரியப் போரின் போது போர் நிறுத்தம் மற்றும் கொரியா குடியரசிற்கு உதவி கோரும் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது.


3. 1967-68-ஆம் ஆண்டில், சைப்ரஸில் ஐ.நா. பணியை விரிவுபடுத்துவதற்கான தீர்மானம் 238-ஐ இந்தியா ஆதரித்தது. 1972-73-ஆம் ஆண்டில், ஐ.நா.வில் பங்களாதேஷை அனுமதிப்பதை இந்தியா கடுமையாக ஆதரித்தது. இருப்பினும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரின் வீட்டோவால் தீர்மானம் தடுக்கப்பட்டது.


4. 1977-78-ஆம் ஆண்டில், இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) ஆப்பிரிக்காவை வலுவாக ஆதரித்தது மற்றும் நிறவெறியை எதிர்த்தது. வெளியுறவு அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், 1978-ஆம் ஆண்டில் நமீபியாவின் சுதந்திரத்திற்காக UNSC-ல் பேசினார். 1984-85-ஆம் ஆண்டில், மத்திய கிழக்கில், குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் லெபனானில் மோதல்களைத் தீர்க்க முயற்சிப்பதில் இந்தியா UNSC-ல் முக்கிய பங்கு வகித்தது.


5. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இந்தியா தீவிரமாகப் பங்கேற்று, ஆப்கானிஸ்தான், கோட் டி ஐவரி, ஈராக், லிபியா, தெற்கு சூடான், சிரியா மற்றும் ஏமன் போன்ற இடங்களில் புதிய சவால்களை எதிர்கொண்டது. சோமாலியா கடற்கரையில் கடற்கொள்ளையர் அச்சுறுத்தல் காரணமாக, கடற்கொள்ளையை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவிய ஒத்துழைப்பை இந்தியா ஊக்குவித்தது.


6. கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்க பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச ஒத்துழைப்பை இந்தியா வலியுறுத்தியது. பணயக்கைதிகளாகப் பிடிக்கும் கடற்கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்கு உதவுபவர்கள் இருவரையும் தண்டிக்க வேண்டும் என்றும் அது அழைப்பு விடுத்தது.


7. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அரசு சாரா குழுக்களுக்கு ஆபத்தான ஆயுதங்கள் பரவுவதைத் தடுத்தல் மற்றும் அமைதி காத்தல் மற்றும் மறுகட்டமைப்பு ஆகியவற்றில் ஐ.நா.வின் முயற்சிகளை ஆதரித்தல் ஆகியவற்றிலும் இந்தியா பணியாற்றியது.


இந்தியா தனது உறுப்பினர் பதவிக் காலத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (UNSC) தொடர்ந்து பங்களித்து வருகிறது. மேலும், ஐ.நா. கொள்கைகளுக்கு வலுவான ஆதரவைக் காட்டியுள்ளது. இது இந்தியாவை சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு தகுதியான வேட்பாளராக ஆக்குகிறது. இன்றைய மாறிவரும் உலகளாவிய சக்தி சூழலில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் இடத்தை அங்கீகரிப்பது 21-ஆம் நூற்றாண்டின் யதார்த்தங்களை பிரதிபலிக்கும், இது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மேலும் உள்ளடக்கியதாகவும் பிரதிநிதித்துவப்படுத்தும்.


முடிவில், இந்தியா, மற்ற நாடுகளுடன் சேர்ந்து, தற்போதைய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்று வாதிட்டு, நிரந்தர உறுப்பினர் பதவிக்கு அடிக்கடி அழுத்தம் கொடுத்து வருகிறது. இருப்பினும், இந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை, முக்கியமாக தற்போதைய அமைப்பிலிருந்து பயனடையும் தற்போதைய உறுப்பினர்களின் அதிகாரத்தை அவை சவால் செய்வதால்.


ஐ.நா. உருவாக்கப்பட்டதிலிருந்து இங்கிலாந்து மற்றும் பிரான்சின் செல்வாக்கு குறைந்துவிட்டாலும், அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா இன்னும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இந்த நாடுகளும் போட்டிகளிலும் ஈடுபட்டுள்ளன. எனவே, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது அவர்களின் போட்டியாளர்களை வலுப்படுத்துவதாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ கருதப்படலாம். இருப்பினும், உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது, மேலும் சிறந்த உலகளாவிய நிர்வாகத்திற்கு மிகவும் உள்ளடக்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசியம்.


Original article:
Share:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் (1960) பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? -என் ஸ்ரீவத்சவா

 தற்போதைய செய்தி:

 

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற மறுநாள், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை மாலை ஒரு அறிக்கையை வெளியிட்டார். 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்தி வைக்கும் என்று அவர் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தெளிவாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தும் வரை இந்த இடைநீக்கம் தொடரும்.


முக்கிய அம்சங்கள்:


புதன்கிழமை பாகிஸ்தான் தூதர் சாத் வாராய்ச்சை (Saad Warraich) அழைத்து, செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பாதுகாப்பு குழு (Cabinet Committee on Security (CCS)) எடுத்த நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ குறிப்பை இந்தியா அவருக்கு வழங்கியது.


இதற்கிடையில், இந்திய அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது. இதில் குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.


பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நிலைமை குறித்து தலைவர்களிடம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் தலைமை தாங்குவார். இந்தக் கூட்டத்தை நடத்துவது என்ற முடிவு புதன்கிழமை எடுக்கப்பட்டது. மேலும், இரு அமைச்சர்களும் இது குறித்து வெவ்வேறு அரசியல் கட்சிகளைத் தொடர்பு கொண்டுள்ளனர்.


அதிகரித்துவரும் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக நிலைமையை மறுஆய்வு செய்வதற்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து விவாதிப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழு (CCS) நடத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு இது நடந்தது.


பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தின் முடிவுகள்


பஹல்காமில் "பயங்கரவாத தாக்குதலின் எல்லை தாண்டிய தொடர்புகளை" அடிக்கோடிட்டுக் காட்டுகிறது:


1. இந்தியா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை "நிறுத்தியுள்ளது".


2. புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா தெரிவித்துள்ளது. அவர்கள் இப்போது விரும்பத்தகாத (persona non grata) நபராக கருதப்படுகிறார்கள். மேலும், ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும். இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் தூதரகத்தில் இருந்து இந்தியா தனது சொந்த பாதுகாப்பு, கடற்படை மற்றும் விமான ஆலோசகர்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ளது .


3. சார்க் (SAARC) நாடுகளின் விசா விலக்கு திட்டத்தின் (SAARC Visa Exemption Scheme (SVES)) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் இருக்கும் எந்தவொரு பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.


4. அட்டாரி எல்லைச் சோதனைச் சாவடியை உடனடியாக மூடவும், செல்லுபடியாகும் ஒப்புதல்களுடன் கடந்து சென்றவர்கள், மே 1, 2025-க்கு முன் அந்தப் பாதை வழியாகத் திரும்பலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


5. 2025 மே 1 ஆம் தேதிக்குள் உயர் தூதரகத்தில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 55 லிருந்து 30 ஆகக் குறைக்கப்படும்.


யார் பொறுப்பேற்றார்?


பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba (LeT)) உடன் தொடர்புடைய ஒரு மறைக்கப்பட்ட குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front (TRF)), தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள தொலைதூர புல்வெளியான பைசரனில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதலை நடத்தியதாகக் கூறியது.


ஜனவரி 2023ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் (MHA) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் TRF-ஐ "பயங்கரவாத அமைப்பு" (“terrorist organisation”) என்று அறிவித்தது. பயங்கரவாத செய்திகளைப் பரப்புதல், பயங்கரவாதிகளைச் சேர்ப்பது, அவர்கள் இந்தியாவிற்குள் நுழைய உதவுதல் மற்றும் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டதால் இது நிகழ்ந்தது. பிரிவு 370 நீக்கப்பட்டு, ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டில் ஜம்மு & காஷ்மீர் அதன் சிறப்பு அந்தஸ்தை இழந்த பிறகு TRF முதன்முதலில்  இனையதளத்தில் தோன்றியது.


சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இந்தியாவின் இடைநிறுத்தம்


இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒன்பது ஆண்டுகள் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, செப்டம்பர் 19, 1960 அன்று கராச்சியில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் (IWT) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் 12 முக்கியப் பகுதிகள் (கட்டுரைகள் என அழைக்கப்படுகின்றன) மற்றும் 8 விரிவான பிரிவுகள் (இணைப்புகள் என அழைக்கப்படுகின்றன, A முதல் H வரை பெயரிடப்பட்டுள்ளன) உள்ளன.


ஒப்பந்தத்தின்படி,


  • சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகிய கிழக்கு நதிகளிலிருந்து வரும் அனைத்து நீரையும் இந்தியா எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்தலாம்.


  • மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தான் தண்ணீரைப் பெறுகிறது.


இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் தாங்களாகவே அதை ரத்து செய்ய அனுமதிக்கும் விதி இல்லை. இதற்கு காலாவதி தேதியும் இல்லை, மேலும் அதில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளிடமிருந்தும் உடன்பாடு தேவை.


ஒப்பந்தத்தை ஒரு தரப்பினரால் மட்டும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றாலும், சர்ச்சைகளைக் கையாள ஒரு அமைப்பு இதில் அடங்கும். பிரிவு IX, இணைப்புகள் F மற்றும் G ஆனது, நிரந்தர சிந்து ஆணையம், நடுநிலை நிபுணர், நடுவர்கள் குழு போன்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பதை விளக்குகிறது.


ஜம்மு & காஷ்மீரில் இரண்டு நீர்மின் திட்டங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கிஷெங்கங்கா நதியில் (ஜீலத்தின் துணை நதி) கிஷெங்கங்கா திட்டம் மற்றும் செனாப் நதியில் ரேட்லே திட்டம். இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளன.


இதன் காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்கு இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை அனுப்பியது. ஒன்று ஜனவரி 2023ஆம் ஆண்டு (60 ஆண்டுகளில் முதல்) மற்றும் மற்றொன்று செப்டம்பர் 2024ஆம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (IWT) மாற்றக் கோரியது.


ஜனவரி 2023ஆம் ஆண்டு அறிவிப்பில், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை முறையாகப் பின்பற்ற மறுப்பதாக இந்தியா கூறியது.


இரண்டு அறிவிப்புகளும் ஒப்பந்தத்தின் பிரிவு XII(3)-ன் கீழ் அனுப்பப்பட்டன. இரு அரசாங்கங்களும் ஒப்புக்கொண்டு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஒப்பந்தத்தை மாற்ற இந்த பிரிவு அனுமதிக்கிறது.


பாகிஸ்தானின் ஆட்சேபனை: இவை ஆற்றின் ஓட்டத்தைத் தடுக்காமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் "நதி ஓடுதல்" ("run-of-the-river") திட்டங்களாக இருந்தாலும், பாகிஸ்தான் பலமுறை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ஏற்க மறுப்பதாக கூறி வருகிறது.


ஜனவரி 2025-ல், ஒப்பந்த விதிகளின் கீழ் உலக வங்கியால் 2022ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரு நடுநிலை நிபுணர், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வடிவமைப்பு தகராறுகள் குறித்து முடிவெடுக்க தனக்கு அனுமதி இருப்பதாகக் கூறினார்.


Original article:
Share:

BS-VI, CNG, LNG அல்லது EV (மின்சார வாகனம்) தரநிலைகள் பற்றி… -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய  அம்சங்கள்:


• காற்று தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) புதன்கிழமை மாசுபடுத்தும் வாகனங்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டதுடன், டெல்லி-NCR முழுவதும் ஆயுள் முடிந்த அல்லது அதிக வயதான வாகனங்களைப் பறிமுதல் செய்வதில் "வரையறுக்கப்பட்ட முன்னேற்றம்" இருப்பதாகவும் குறிப்பிட்டது.


• மாசுபடுத்தும் வாகனங்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த புதன்கிழமை CAQM புதிய உத்தரவுகளை வெளியிட்ட நிலையில், டெல்லி-NCR முழுவதும் ஆயுட்காலம் முடிந்த அல்லது அதிக காலாவதியான வாகனங்களை பறிமுதல் செய்வதில் "வரையறுக்கப்பட்ட முன்னேற்றம்" இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.


• இந்த உத்தரவின்படி, போக்குவரத்து வாகனங்களை கட்டுப்படுத்தும் முடிவு, "வணிக வாகனங்களிலிருந்து அதிக மாசுபாடு மற்றும் டெல்லிக்குள் நுழையும் அத்தகைய வாகனங்களால் ஏற்படும் உமிழ்வுகளின் தொடர்புடைய தீய விளைவுகளைக் கருத்தில் கொண்டு" எடுக்கப்பட்டது.


• ஜூலை 1 முதல், CAQM அறிவித்த பிற கடுமையான நடவடிக்கைகளுடன், நகரத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அடையாளம் காணப்பட்ட அதிக காலாவதியான வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவது தடை செய்யப்படும்.


• இந்தத் தடை நவம்பர் 1 முதல் குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத், கௌதம் புத்த நகர் மற்றும் சோனிபட் ஆகிய ஐந்து அதிக வாகன அடர்த்தி (high vehicle density (HVD)) மாவட்டங்களுக்கும், ஏப்ரல் 1, 2026 முதல் தலைநகர் டெல்லியின் மீதமுள்ள பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும். CAQM உத்தரவின்படி, 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களும் தலைநகரில் இயக்க அனுமதிக்கப்படாது.


• கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசாங்கம் இந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து, தேவைப்பட்டால் அவற்றை அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பல உத்தரவுகள் இருந்தபோதிலும், கள நடவடிக்கை மந்தமாகவே உள்ளது என்று ஆணையம் குறிப்பிட்டது.


• டெல்லி தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (Automated Number Plate Recognition (ANPR)) கேமரா அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு தீர்வை முன்னோடியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போது நகரத்தில் உள்ள 520 எரிபொருள் நிலையங்களிலும் இது நிறுவப்பட்டுள்ளது.


• இந்த அமைப்புகள் வாகனப் பதிவு விவரங்களை நிகழ்நேரத்தில் படம்பிடித்து காண்பிக்கின்றன. EoL வாகனங்கள் மற்றும் செல்லுபடியாகும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Under Control Certificate (PUCC)) இல்லாதவற்றை அடையாளம் காண இவை மையப்படுத்தப்பட்ட VAHAN தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், விதிமுறைகளுக்கு இணங்காத வாகனம் வாகனம் கண்டறியப்படும் போது ஆடியோ எச்சரிக்கைகளை வெளியிடுகின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


•  பாரத் ஸ்டேஜ் உமிழ்வு தரநிலைகள் என்பது மோட்டார் வாகனங்கள் உட்பட உள் எரி பொறி உபகரணங்களிலிருந்து மோட்டார் வாகனங்களிலிருந்து காற்று மாசுபடுத்திகளின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த அரசாங்கத்தால் நிறுவப்பட்ட தரநிலைகளாகும். ஐந்து வருட கால தாமதத்துடன், இந்தியா ஐரோப்பிய (யூரோ) உமிழ்வு விதிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. ஏப்ரல் 2017 முதல் நாடு முழுவதும் BS IV விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. 2016ஆம் ஆண்டில், நாடு BS-V விதிமுறைகளை முற்றிலுமாகத் தவிர்த்து, 2020ஆம் ஆண்டுக்குள் BS-VI விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இடைநிலை BS-V தரநிலையை செயல்படுத்துவது முதலில் 2019-ல் திட்டமிடப்பட்டது.


• தற்போதுள்ள BS-IV மற்றும் புதிய BS-VI ஆட்டோ எரிபொருள் விதிமுறைகளுக்கு இடையிலான தரநிலைகளில் உள்ள முக்கிய வேறுபாடு கந்தகத்தின் இருப்பு ஆகும். BS-VI எரிபொருள் கந்தகத்தை 80 சதவீதம் குறைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மில்லியனுக்கு 50 பாகங்களிலிருந்து 10 ppm ஆக இருக்கும். ஆய்வாளர்களின் கூற்றுப்படி, டீசல் கார்களில் இருந்து (நைட்ரஜன் ஆக்சைடுகள்) வெளியேற்றம் கிட்டத்தட்ட 70 சதவீதம் மற்றும் பெட்ரோல் எஞ்சின்கள் கொண்ட கார்களில் இருந்து 25 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Original article:
Share:

ஜல் ஜீவன் திட்டம்: ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு குறையலாம். அது மாநிலங்களை எவ்வாறு பாதிக்கும்? -ஹரிகிஷன் சர்மா

 பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை (Jal Jeevan Mission (JJM)) அறிவித்தார்.


அரசு திட்டங்களை மதிப்பிடும் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின நிதிக் குழு (Expenditure Finance Committee), ஜல் ஜீவன் திட்டத்திற்கு 2028 வரை ஒன்றிய அரசின் பங்காக ரூ.1.51 லட்சம் கோடியை பரிந்துரைத்துள்ளது. இது ஜல் சக்தி அமைச்சகம் கோரியதைவிட சுமார் 46 சதவீதம் குறைவான ஓதுக்கீட்டுத் தொகையாகும்.


ஜல் ஜீவன் திட்டம் என்றால் என்ன?


பிரதமர் நரேந்திர மோடி 2019ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தை (Jal Jeevan Mission (JJM)) அறிவித்தார்.


பிரதமரின் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒன்றிய அமைச்சரவை 2024க்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் செயல்படும் குடிநீர் குழாய் இணைப்புகளை (Functional Household Tap Connections) வழங்கும் நோக்கத்துடன் ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.


அப்போது, நாட்டில் உள்ள 17.87 கோடி கிராமப்புற வீடுகளில், சுமார் 14.6 கோடி (81.67%) வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் இல்லை என்று அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்காக, ஒன்றிய அரசின் பங்காக ரூ.3.60 லட்சம் கோடி—ரூ.2.08 லட்சம் கோடி மற்றும் மாநிலங்களின் பங்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.


நிதிப் பகிர்வு முறை இமயமலை மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், மற்ற மாநிலங்களுக்கு 50:50 என்ற விகிதத்திலும் நிர்ணயிக்கப்பட்டது.


BIS (IS: 10500) நிர்ணயித்த தரங்களைப் பூர்த்தி செய்யும், ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு 55 லிட்டர் சுத்தமான குடிநீரை தொடர்ந்து வழங்குவதே நோக்கமாக இருந்தது.


ஜல் ஜீவன் திட்டத்தின் முன்னேற்றம்


2019ல் ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலங்கள் கிராமப்புறங்களில் 12.83 கோடி வீடுகளுக்கு உதவ ரூ.8.07 லட்சம் கோடி மதிப்பிலான 6.31 லட்சம் குடிநீர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஒப்புதலுக்காக காத்திருக்கும் திட்டங்களின் செலவு ரூ.32,364 கோடி மற்றும் பிற கூறுகளையும் சேர்த்தால், மொத்த திட்ட ஒதுக்கீடு ரூ.9.10 லட்சம் கோடியை எட்டும்.


இந்தத் திட்டம் 2024-ல் முடிவடைந்தபோதிலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி 1-ஆம் தேதி தனது வரவு செலவு அறிக்கை உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது 2028 வரை தொடரும் என்று அறிவித்தார்.


ஜல் சக்தி அமைச்சகம் பின்னர் செலவு நிதிக் குழுவை (Expenditure Finance Committee (EFC)) அணுகி, ஒன்றிய அரசின் பங்காக ரூ.4.39 லட்சம் கோடி உட்பட ரூ.9.10 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கோரியது. 2019-24 காலகட்டத்தில் ஒன்றிய அரசு ஏற்கனவே ரூ.2.08 லட்சம் கோடியை விடுவித்துள்ளதால், அமைச்சகத்திற்கு இப்போது ரூ.2.79 லட்சம் கோடி தேவைப்படுகிறது என ஜல் சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், EFC கோரப்பட்ட தொகையைவிட 46 சதவீதம் குறைவான ரூ.1.51 லட்சம் கோடியை மட்டுமே பரிந்துரைத்துள்ளது.


செலவு நிதிக் குழு (Expenditure Finance Committee (EFC)) கோரப்பட்ட தொகையைவிட குறைவான நிதியை பரிந்துரைப்பது இதுவே முதல் முறையா?


இல்லை. 2019ஆம் ஆண்டிலும், ஜல் சக்தி அமைச்சகத்தின் ரூ.7.89 லட்சம் கோடி கோரிக்கைக்கு எதிராக, செலவு நிதிக் குழு, ஜல் ஜீவன் திட்டத்திற்கான செலவினத்தை ரூ.3.6 லட்சம் கோடியாக நிர்ணயித்தது. மொத்த செலவினமான ரூ.3.6 லட்சம் கோடியில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2.0865 லட்சம் கோடியாக இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் பங்கில், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.1.86 லட்சம் கோடி பயன்படுத்தப்பட்டது.


செலவு நிதிக் குழுவின் (Expenditure Finance Committee (EFC)) பரிந்துரைகள் மாநிலங்களை எவ்வாறு பாதிக்கும்?


ஒட்டுமொத்த செலவினத்தைக் குறைப்பதற்கான EFCயின் நடவடிக்கை, அசாம் ரூ.2,991 கோடி, பீகார் ரூ.7,500 கோடி, மகாராஷ்டிரா ரூ.641 கோடி மற்றும் தமிழ்நாடு ரூ.21,232 கோடி மதிப்புள்ள திட்டங்களை இழக்கும் என்று அறியப்படுகிறது. இந்த மாநிலங்கள் ஒன்றிய அரசின் பங்கான ரூ.17,378.40 கோடியை இழக்க நேரிடும். மேலும், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை சுமார் ரூ.50,000 கோடி அளவுக்கு பாதிப்பை சந்திக்க நேரிடும்.


இனி என்ன நடக்கும்?


செலவு நிதிக் குழுவின் (Expenditure Finance Committee (EFC)) முடிவு பரிந்துரைக்கும் தன்மை கொண்டது, கட்டாயமானது அல்ல. இறுதி முடிவை ஒன்றிய அமைச்சரவை எடுக்கும். எனவே ஜல் சக்தி அமைச்சகத்திற்கு இப்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.


முதலாவதாக, ஜல் சக்தி அமைச்சர் இந்த விவகாரத்தை நிதி அமைச்சரிடம் எடுத்துச் செல்லலாம். இரண்டாவதாக, ஜல் சக்தி அமைச்சக அதிகாரிகள் அமைச்சரவை செயலகத்தை அணுகி, வேறுபாடுகளைத் தீர்க்க அமைச்சரவை செயலாளரை கேட்டுக் கொள்ளலாம். மூன்றாவதாக, ஜல் சக்தி அமைச்சகம் நேரடியாக அமைச்சரவைக்குச் செல்லலாம். அமைச்சரவை ஒன்றிய அரசின் பங்கை அதிகரிக்கலாமா அல்லது செலவு நிதிக் குழு பரிந்துரைத்த அளவிலேயே வைக்கலாமா என்பதை முடிவு செய்யும்.


Original article:
Share:

முக்கியமான கனிமங்கள் : இந்தியா தனது உத்திகளை முடுக்கிவிட வேண்டும் -சலோனி சச்தேவா மைக்கேல்

 தூய்மையான எரிசக்தித் துறையில் இந்தியா முன்னணியில் இருக்க, உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி மற்றும் முக்கியமான கனிமங்களின் சுத்திகரிப்பு திறனையும் அதிகரிக்க வேண்டும்.


ஒரு காலத்தில் முக்கிய கனிமங்களின் தெளிவற்ற துறை புவிசார் அரசியல் பேச்சுவார்த்தைகளில் முக்கியமானதாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக, இந்தத் துறை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நாடுகள் சுத்தமான எரிசக்தி மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை நோக்கி வேகமாக நகரும்போது, ​​லித்தியம், கோபால்ட், நிக்கல், அரியவகை மண் தனிமங்கள் மற்றும் கிராஃபைட் போன்ற கனிமங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் சர்வதேச கூட்டாண்மைகள் மற்றும் வர்த்தகக் கொள்கைகளை மாற்றுகிறது.


இந்தியா இந்த சூழ்நிலையில் ஒரு சவாலையும் வாய்ப்பையும் எதிர்கொள்கிறது. கனிமங்களைப் பாதுகாப்பதற்கான அதன் உத்தியை நாடு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் இராஜதந்திர முயற்சிகளை மேம்படுத்தி அதன் உள்நாட்டு திறன்களை வலுப்படுத்த வேண்டும். தற்போது, ​​இந்தியா ஆற்றல் மாற்ற கனிமங்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களுக்கான இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது. லித்தியம், கோபால்ட் மற்றும் நிக்கல் போன்ற கனிமங்களுக்கு, இந்தியா முழுமையாக (100%) இறக்குமதியையே சார்ந்துள்ளது.


இந்தியாவில் முக்கியமான கனிமங்களின் பெரிய உள்நாட்டு இருப்பு உள்ளது. இதில் 44.9 மில்லியன் டன் கோபால்ட் தாது, 163.9 மில்லியன் டன் தாமிரம், 211.6 மில்லியன் டன் கிராஃபைட் மற்றும் 189 மில்லியன் டன் நிக்கல் ஆகியவை அடங்கும்.


இருப்பினும், இந்த கனிமங்களின் நிலையான விநியோகத்தை இந்தியா உறுதி செய்ய வேண்டும். இது இராஜதந்திரம் மற்றும் உள்ளூர் உற்பத்தியின் கலவையின் மூலம் செய்யப்படலாம். இல்லையெனில், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் ஆதிக்க சக்திகளின் செயல்களுக்கு இந்தியா பாதிக்கப்படும்.


புவிசார் அரசியல் சதுரங்க களம் (Geopolitical chessboard)


சீனா உலகின் சிறந்த அரியவகை பூமி தனிமங்களை முறைப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நாடாகும். இந்த சக்தியைப் பயன்படுத்த அது தயாராக இருப்பதாகக் காட்டியுள்ளது. சீனா ஏற்கனவே ஏழு முக்கியமான அரியவகை பூமி தனிமங்களின் ஏற்றுமதிக்கான வரம்புகளை நிர்ணயித்துள்ளது. அவை, சமாரியம் (samarium), காடோலினியம் (gadolinium), டெர்பியம் (terbium), டிஸ்ப்ரோசியம் (dysprosium), லுடீடியம் (lutetium), ஸ்காண்டியம் (scandium) மற்றும் யட்ரியம் (yttrium) ஆகும். இராணுவ மின்னணுவியல் மற்றும் பசுமை ஆற்றல் உபகரணங்கள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இந்த தனிமங்கள் தேவை.


சீனாவின் இந்த நடவடிக்கை, குறிப்பாக அமெரிக்காவுடனான அதிகரித்துவரும் வர்த்தக பதட்டங்களுடன், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகிறது. சமீபத்தில், அமெரிக்கா சுத்தமான சீன எரிசக்தி தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி, வரிவிதிப்புகளை அதிகரித்துள்ளது. ஜனவரி 2026-க்குள் லித்தியம்-அயன் மின்கலன்கள் மீதான வரிவிதிப்புகளை 7.5%-லிருந்து 25% ஆக உயர்த்தும் திட்டம் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது சீனாவிற்கு மாற்று வழிகளைத் தேட நாடுகளைத் தூண்டுகிறது. இது இந்தியா போன்ற இடங்கள் புதிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையங்களாக மாறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும்.


வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இரண்டும் சீனாவிற்கு மாற்றாக மாற முயற்சிக்கின்றன. உக்ரைன் அதன் பயன்படுத்தப்படாத முக்கியமான கனிம இருப்புக்களை அமெரிக்காவிலிருந்து கூட்டாண்மைகளை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் கனிம வளங்களில் அமெரிக்க முதலீட்டிற்கு ஒரு சாத்தியமான இடமாக மாறியுள்ளது.


இங்கிலாந்தில், ஒரு விநியோகச் சங்கிலி மதிப்பீடு தேசிய முக்கியமான கனிமக் கொள்கையை அவசரமாக புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. வளர்ந்த பொருளாதாரங்கள்கூட பாதிக்கப்படக்கூடியவை என்பதை இது காட்டுகிறது.


ஐரோப்பிய ஒன்றியம் (EU) மாற்று கனிம விநியோகச் சங்கிலிகளைக் கண்டறிய மத்திய ஆசியாவில் தனது கவனத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில், பிரஸ்ஸல்ஸ் €12 பில்லியன் ($13.253 பில்லியன்) உலகளாவிய நுழைவாயில் முதலீட்டுத் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்தத் தொகுப்பு போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதையும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே முக்கியமான பொருட்கள், டிஜிட்டல் இணைப்பு, நீர் மற்றும் ஆற்றல் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


அமெரிக்க மென்பொருள் உருவாக்குபவர்கள் (developers) சீனாவை ஆதாரமாகக் கொண்டிருப்பதைக் குறைக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் அதிக செலவுகளைத் தவிர்க்க விரும்புகிறார்கள். இதன் காரணமாக, இந்தியா பயனடைய வாய்ப்பு உள்ளது. இந்தியா தனது உள்ளூர் சுத்தமான எரிசக்தி உற்பத்தி முறையை மேம்படுத்துவதன் மூலம் இதைச் செய்யலாம். இந்த முயற்சி உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களால் ஆதரிக்கப்படுகிறது. இது மின்கலன்கள், சூரிய சக்தி மற்றும் மின்சார வாகன (EV) உதிரிபாகங்கள் உற்பத்தியில் இதன் இலக்குக்கான முதலீடுகளையும் உள்ளடக்கியது.


அதன் எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பாகவும் அதன் தொழில்களை வலுவாகவும் வைத்திருக்க, இந்தியா முக்கியமான கனிமங்களுக்கான அணுகலை மேம்படுத்த வேண்டும். இந்த கனிமங்கள் சுத்தமான எரிசக்தி தயாரிப்புகளுக்குத் தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் ஆகும்.


இந்தியாவின் நடவடிக்கைகள்


முக்கியமான கனிமங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்தியா அங்கீகரிக்கிறது. இதை நிவர்த்தி செய்ய, அது இராஜதந்திரம் மற்றும் உத்தியின் மூலம் ஒரு முன்னோக்கிய அணுகுமுறையை எடுத்துள்ளது. உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்புக்களைக் கொண்ட சிலி போன்ற வளங்கள் நிறைந்த நாடுகளுடன் இந்த நாடு ஈடுபட்டு வருகிறது. இது எரிசக்தி சேமிப்பு மற்றும் மின்சார வாகன (EV) மின்கலன்களுக்கான முக்கிய கனிமமான லித்தியத்தை நீண்டகாலமாக அணுகுவதில் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


கோல் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் லித்தியம் மற்றும் தாமிரத்தை நீண்டகாலமாக அணுகுவதைப் பெற சிலியின் சுரங்க சொத்துக்களில் முதலீடு செய்கின்றன.


இந்தியா ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆய்வு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மையமாகக் கொண்டுள்ளன. முக்கியமான கனிம உரையாடலின் கீழ் அமெரிக்காவுடனான கூட்டாண்மை, சுரங்கம் மற்றும் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பில் கூட்டு முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், இராஜதந்திர முயற்சிகள் மட்டும் போதாது. இந்தியா தனது உள்நாட்டு கனிம சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


நாட்டின் வளர்ச்சியடையாத சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கத் திறன், கணிசமான இருப்புக்களைக் கொண்ட கனிமங்களுக்குக்கூட ஒரு முக்கிய இடையூறாக உள்ளது. உதாரணமாக, மின்கல தர கோபால்ட்டை சுத்திகரிப்பதற்கான வசதிகள் இந்தியாவிடம் இல்லை மற்றும் முற்றிலும் இறக்குமதியை நம்பியுள்ளது. தாமிரம் மற்றும் கிராஃபைட் ஆகியவற்றிற்கும் இதேபோன்ற நிலைமை உள்ளது. அங்கு உருகுதல் கட்டுப்பாடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க இறக்குமதியைச் சார்ந்திருத்தல் ஆகியவை தொடர்கின்றன.


இந்தியா தனது கனிம விநியோக உத்தியின் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை இறக்குமதியின் மீதான இந்த பரவலான சார்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பொதுத்துறை முதலீட்டுடன் சேர்ந்து ஆய்வு மற்றும் வெளிநாட்டு கையகப்படுத்துதல்களுக்காக ₹16,300 கோடியுடன் ($1.88 பில்லியன்) தேசிய முக்கியமான கனிம திட்டம் (National Critical Mineral Mission (NCCM)) அரசாங்கம் தொடங்கியுள்ளது. நிலையான உள்ளூர் விநியோகத்தை உறுதி செய்வதில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் (Mines and Minerals (Development and Regulation) Act) திருத்தங்கள் சுரங்க அனுமதிகளை சீராக்க மற்றும் முக்கிய கனிமங்கள் மீதான சுங்க வரிகளை நீக்கவும் உள்நாட்டு செயலாக்கத்தை அதிகரிக்கவும் தனியார் பங்களிப்பை ஈர்க்கவும் முக்கியமான நடவடிக்கைகளாகும்.


நீண்டகால நடவடிக்கைகள்


1. உள்நாட்டு ஆய்வு மற்றும் நிலையான சுரங்கத்தை துரிதப்படுத்துதல் : இந்தியா புவியியல் வரைபடத்தில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், தனியார் நிறுவனங்களும் பங்கேற்கவும், அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் பராமரிக்கப்படவும், இந்தியா அதன் பயன்படுத்தப்படாத முக்கியமான கனிம இருப்புகளைப் பயன்படுத்த உதவும். இதனால், இந்தியா இறக்குமதிகளை நம்பியிருப்பதையும் குறைக்க உதவும்.


2. சுத்திகரிப்பு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல் : ஜப்பான், தென் கொரியா மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுடன் இந்தியா ஒத்துழைக்க முடியும். இது இந்தியாவின் சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க உதவும். கூட்டு முயற்சிகள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகலை இந்தக் கூட்டாண்மைகள் மூலம் அடைய முடியும்.


3. உத்தியின் இராஜதந்திரம் மூலம் விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்துதல் : இந்தியா மற்ற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களை விரிவுபடுத்த வேண்டும். QUAD மற்றும் MSP போன்ற பலதரப்பு தளங்களில் இணைவதும் முக்கியம். இது நம்பகமான கூட்டணி நாடுகளிடமிருந்து முக்கியமான மூலப்பொருட்களின் நிலையான விநியோகத்தைப் பெற உதவும்.


4. முழு மதிப்புச் சங்கிலியிலும் ஊக்கத்தொகைகளை விரிவுபடுத்துதல் : ஆய்வு, சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தியை உள்ளடக்கிய PLI போன்ற ஊக்கத் திட்டங்களை விரிவுபடுத்துவது முதலீட்டை ஈர்க்கும், உள்நாட்டுத் திறனை அதிகரிக்கும் மற்றும் இந்தியாவின் பசுமைத் தொழில்துறை லட்சியங்களை ஆதரிக்க உதவும்.


5. சுழற்சி பொருளாதாரம் மற்றும் உத்தியின் கையிருப்பை மேம்படுத்துதல் : மறுசுழற்சி உள்கட்டமைப்பில் முதலீடு செய்வது மற்றும் தேசிய இருப்புக்களை உருவாக்குவது வளத் திறனை மேம்படுத்தும், இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் உலகளாவிய விநியோக அதிர்ச்சிகளிலிருந்து இந்தியாவைத் தனிமைப்படுத்தும்.


இந்தியா ஒரு சுத்தமான எரிசக்தித் தலைவராகவும் சக்திவாய்ந்த டிஜிட்டல் பொருளாதாரமாகவும் மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை அடைய, முக்கியமான கனிமங்களுக்கான நம்பகமான அணுகல் தேவை. இந்த அணுகல் பன்முகப்படுத்தப்பட்ட, மீள்தன்மை மற்றும் நிலையானதாக இருக்க வேண்டும். இந்த கனிமங்களைப் பாதுகாப்பது ஒரு தேசிய முன்னுரிமை. இதற்கு ராஜதந்திரம், தொழில்துறை கொள்கை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இணைக்கும் ஒரு கவனம் செலுத்தும் உத்தி தேவை.


எழுத்தாளர் எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தில் (IEEFA) எரிசக்தி நிபுணர் ஆவார்.      

Original article:
Share: