விதை தொழில் 1966-ஆம் ஆண்டின் விதைச் சட்டத்தில் ஏன் சீர்திருத்தம் கோரி வருகிறது? இந்த மசோதாவின்கீழ் விதிகளை மீறுபவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனைகள் என்ன? புதிய வரைவு மசோதா குறித்து விவசாயிகள் குழுக்கள் ஏன் கவலை கொள்கின்றனர்? மத்திய மற்றும் மாநில விதை குழுக்களின் பங்குகள் என்னவாக இருக்கும்?
மத்திய வேளாண் அமைச்சகம் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வரைவு விதை மசோதாவை (Seeds Bill) வெளியிட்டது. மேலும், இது குறித்து டிசம்பர் மாதம் 11 வரை பொதுமக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்த விதை மசோதா, வேளாண் தொழிலாளர்களுக்கு விற்கப்படும் மற்றும் வழங்கப்படும் விதைகளின் தரத்தை உறுதி செய்வதற்கான ஒரு ஒழுங்குமுறை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இது "வணிகம் செய்வதை எளிதாக்குதல்" மற்றும் இணக்கச் சுமையைக் குறைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் கடுமையான விதிமீறல்களைத் தண்டிக்க வலுவான விதிகளைப் பேணுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது. 1966-ஆம் ஆண்டின் விதைச் சட்டம் (Seeds Act) மற்றும் 1983-ஆம் ஆண்டின் விதை (கட்டுப்பாடு) சட்டம் ஆணை ஆகியவற்றைத் திருத்துவதற்கான அதன் நோக்கம் குறித்து அரசு வெளிப்படையாக உள்ளது.
வரலாறு என்னவாக இருந்துள்ளது?
மத்திய வேளாண்மை அமைச்சகத்தின்படி, 2023-24-ஆம் ஆண்டில், பல்வேறு பயிர்களுக்கான மொத்த விதைத் தேவை 462.31 லட்சம் குவிண்டாலாக இருந்தது. அதே சமயம், 508.60 லட்சம் குவிண்டால் விதைகள் கிடைத்தன. இதன் காரணமாக 46.29 லட்சம் குவிண்டால் விதைகள் உபரியாக இருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட நவீன தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் வர்த்தக மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், 1966-ஆம் ஆண்டின் சட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று விதைக் கழகத்தின் தலைவர் அஜய் ராணா விரும்புகிறார். இந்தியாவின் விதைச் சட்டங்களை நவீனமயமாக்குவதற்கு வரைவு வெளியிடப்பட்டது ஒரு சரியான கால நடவடிக்கை என்றும் அவர் கூறினார். ஆனால், ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) என்ற விவசாயிகள் குழு, "விவசாயிகளுக்கு எதிரான" எந்தவொரு மாற்றத்தையும் தொடர்ந்து எதிர்ப்போம் என்று கூறியுள்ளது.
புதிய விதிகள் என்னென்ன?
தரமான விதைகளை இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வழங்குதல் ஆகிய துறைகளில் ஒழுங்குமுறை வழிமுறையை இந்த மசோதா வழங்குகிறது. ஒரு விவசாயி தனது பண்ணை விதைகளை வர்த்தகப் பெயரின் (brand name) கீழ் விற்கும்போது தவிர, அவற்றை வளர்க்கவோ, விதைக்கவோ, மீண்டும் விதைக்கவோ, சேமிக்கவோ, பயன்படுத்தவோ, பரிமாறிக்கொள்ளவோ, பகிரவோ அல்லது விற்கவோ உள்ள வேளாண் தொழிலாளர்களின் உரிமையை இந்த மசோதா கட்டுப்படுத்தாது என்றும் கூறப்படுகிறது. இந்த மசோதா வேளாண் தொழிலாளர், வியாபாரி, விநியோகஸ்தர் மற்றும் உற்பத்தியாளர் ஆகியோரை விதை உற்பத்தி, விநியோகம், வர்த்தகம் மற்றும் பயன்பாட்டைக் கையாளும் தனித்தனி அமைப்புகளாக வரையறுக்கிறது. மேலும், 27 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய விதைக் குழு மற்றும் 15 உறுப்பினர்களைக் கொண்ட மாநில விதைக் குழுவை நிறுவுவதற்கும் இது வழிவகை செய்கிறது. மத்திய விதைக் குழுவானது முளைப்புத்திறன் (germination), மரபணு (genetic) மற்றும் உருவத் தூய்மை (physical purity), பண்புகள் (traits), விதை ஆரோக்கியம் (seed health) மற்றும் கூடுதல் விதை தரங்களுக்கான குறைந்தபட்ச வரம்புகளை ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைக்கலாம். மாநில விதை குழுவானது விதை உற்பத்தியாளர்கள், விதை பதப்படுத்தும் அலகுகள் (seed processing units), விதை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நாற்றங்கால்கள் (plant nurseries) ஆகியவற்றின் பதிவு குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மசோதாவின்படி, முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள விதிகளின் அடிப்படையில், அனைத்து விதை பதப்படுத்தும் மையங்களும் மாநில அரசுகளிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இருப்பினும், பல மாநிலங்களில் இயங்கும் நிறுவனங்களுக்கு வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், ஒன்றிய அரசு, தகுதி அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான மத்திய அங்கீகார அமைப்பை (Central Accreditation System) நிறுவலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.
மத்திய விதைக் குழுவின்கீழ் விதை வகைகளுக்கான தேசியப் பதிவேட்டைப் பராமரிப்பதற்காக ஒரு பதிவாளர் அலுவலகத்தை உருவாக்க இந்த மசோதா பரிந்துரைக்கிறது. எந்தவொரு வகை அல்லது இரகத்தின் பயிர்செய்கை மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பை மதிப்பிடுவதற்கான களச்சோதனைகளை நடத்துவதற்கான நடைமுறையும் இந்த வரைவு மசோதாவில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா, எந்த வகையான விதைகளையும் பகுப்பாய்வு செய்ய, மத்திய மற்றும் மாநில விதை பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க வழிவகை செய்கிறது. இது, பாரதிய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Bharatiya Nagarik Suraksha Sanhita) கீழ் விதை தேடுதல் மற்றும் பறிமுதல் செய்யக்கூடிய ஆய்வாளர்களின் பங்கு மற்றும் அதிகாரங்களையும் வரையறுக்கிறது. இந்த மசோதா, சிறிய மற்றும் பெரிய விதிமீறல்களுக்கான தண்டனைகளைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இந்தத் தண்டனைகள் ₹50,000 முதல் ₹30 லட்சம் அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனைவரை விதிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
2019-ஆம் ஆண்டின் வரைவில் இருந்து என்னென்ன மாற்றங்கள்?
முக்கிய மாற்றங்களில் ஒன்று குற்றங்கள் மற்றும் தண்டனைகள் பிரிவில் உள்ளது. முந்தைய வரைவில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களின்கீழ் குற்றங்கள் இடம்பெற்றிருந்தன, மேலும் அபராதம் ₹25,000 முதல் ₹5 லட்சம் வரையிலும், ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போதைய புதிய வரைவில், இந்தப் பிரிவில் கணிசமான மாற்றங்கள் உள்ளன.
வேளாண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, புதிய வரைவு இந்த விஷயத்தை தாவர வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்துடன் இணைக்கிறது. தர நிர்ணயங்களைப் பொறுத்தவரை, தரநிலைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. புதிய மசோதா விதைகளின் இறக்குமதியை மிகவும் தாராளமாகப் பார்க்கிறது என்கின்றனர்.
விவசாயிகளின் கவலை என்ன?
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (Samyukt Kisan Morcha) ஓர் அங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha), நிறுவனங்கள் விதைகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய அனுமதிப்பதால், வேளாண் செலவுகளை இந்த மசோதா அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இந்த மசோதா, சிறு வேளாண் தொழிலாளர்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து, விதைகளின் கட்டுப்பாட்டை ஒரு சில பெரிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கான ஆர்.எஸ்.எஸ்-பாஜக-வின் திட்டத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் நம்புகிறார்கள்.
புதிய வரைவு, 2001-ஆம் ஆண்டின் பயிர் வகைகள் பாதுகாப்பு மற்றும் வேளாண் தொழிலாளர்கள் உரிமைகள் சட்டத்தின் கீழ் (Protection of Plant Varieties and Farmers’ Rights Act of 2001) இருக்கும் சட்டப் பாதுகாப்புகளுக்கும், அத்துடன் பல்லுயிர்த் தன்மை குறித்த இந்தியாவின் சர்வதேச கடமைகளுக்கும் முரண்படாமல், மாறாக ஆதரவாக இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த வரைவு விதை மசோதா (Draft Seeds Bill), மிகவும் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிறுவனங்களை மட்டுமே மையமாகக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குகிறது. இது விவசாயிகளின் பாதுகாப்பைக் குறைத்து, பல்லுயிர்த் தன்மை மற்றும் விவசாயிகளின் உரிமைகள் குறித்த இந்தியாவின் சட்டங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் சங்கம் (All India Kisan Sabha) தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Original Article: What does the draft Seeds Bill entail?