பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையாக வினையாற்றுகிறது : விசாக்கள் ரத்து, எல்லையை மூடுதல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு

 பாகிஸ்தானின் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபராக (persona non grata) அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள், அவர்கள் இனி நாட்டில் வரவேற்கப்படுவதில்லை என்பதாகும்.


பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானை இராஜதந்திர ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்த இந்தியா வலுவான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து செவ்வாயன்று, இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்ததுள்ளது. அவை,


1. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.

2. அட்டாரி எல்லை (Attari border) மூடப்பட்டது.

3. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையத்தில் உள்ள பாதுகாப்பு 

   ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களாக (persona non grata)  

   அறிவிக்கப்பட்டனர்.

4. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து இந்தியா 

    தனது பாதுகாப்பு ஆலோசகர்களையும் திரும்பப் பெற்றது.


கூடுதலாக, உயர் ஆணையங்களின் மொத்த எண்ணிக்கை தற்போதைய 55 இலிருந்து 30 ஆகக் குறைக்கப்படும். அதனைத் தொடர்ந்து, மே 1-ஆம் தேதிக்குள் மேலும் குறைப்புகள் மூலம் இது செய்யப்படும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் (SAARC Visa Exemption Scheme (SVES)) கீழ் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் இந்தியா ரத்து செய்துள்ளது. SVES விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்.


பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (Cabinet Committee on Security (CCS)) கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அவர் தனது சவுதி அரேபியா பயணத்தை குறைத்துக் கொண்டார். இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.


கூட்டத்திற்குப் பிறகு, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்கள் இரவு தாமதமாக ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். "ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமையை CCS மதிப்பாய்வு செய்தது. அனைத்துப் படைகளும் விழிப்புடன் இருக்குமாறு அவர்கள் அறிவுறுத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று குழு முடிவு செய்தது. தாக்குதல் நடத்தியவர்களை ஆதரித்தவர்களும் பொறுப்புக்கூறப்படுவார்கள். சமீபத்தில் தஹாவூர் ராணாவை நாடு கடத்தியதைப் போலவே, பயங்கரவாதிகளை நீதியின்முன் நிறுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தொடரும்" என்று அவர் கூறினார்.


தெளிவான எச்சரிக்கை


CCS கூட்டத்திற்கு முன்பு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையை விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது, "பொறுப்பானவர்கள் விரைவில் உரத்த மற்றும் தெளிவான பதிலடியைக் காண்பார்கள்... இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் இருப்பவர்களையும் நாங்கள் குறிவைப்போம்."


குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தலைவர் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படைத் தலைவர் மார்ஷல் ஏ.கே. சிங், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் உள்ளிட்டோருடன் அவர் ஒரு சந்திப்பை நடத்திய பிறகு பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை வெளியிடப்பட்டது.


பழிவாங்கும் நடவடிக்கை


இராணுவத் தளபதியின் காட்சிப்படுத்தலைக் கண்ட இந்த மூன்று மணி நேரக் கூட்டத்தில், பழிவாங்கும் நடவடிக்கைக்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.


ஸ்ரீநகர் மற்றும் பஹல்காம் இரவு நேர கண்காணிப்புப் பயணத்திலிருந்து டெல்லி திரும்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஐந்து பேர் கொண்ட சி.சி.எஸ்-க்கு கள நிலைமையை விளக்கினார்.


அதே நேரத்தில், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு நிறுவனங்கள் ஆறு லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba) உறுப்பினர்களைக் கொண்ட குழுவைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்தன. அந்தக் குழு, அதன் துணை அமைப்பான எதிர்ப்புப் படையுடன் (Resistance Force) சேர்ந்து, தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.


மூன்று பயங்கரவாதிகளின் புகைப்பட ஓவியங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் அடில் குரி (Adil Guri) என்றும் அழைக்கப்படும் அடில் தோகர் (Adil Thokar) ஆவர். அவர் அனந்த்நாக்கில் உள்ள கூரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். அவர் 2018-ல் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றார். உள்ளூர் காவல்துறை வட்டாரங்களின்படி, அவர் லஷ்கர்-இ-தொய்பாவில் சேர்ந்து கடந்த ஆண்டு திரும்பி வந்தார்.


இந்தத் தாக்குதலில் புலனாய்வுப் பிரிவு, இந்திய கடற்படை மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்காக NIA-விடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. வியாழக்கிழமை தலைநகரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளிப்பார்.


Original article:
Share:

சர்வதேச நாணய நிதியத்தின் கண்ணோட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல செய்தி

 இந்தியாவின் 6%-க்கும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள், வலுவான உள்நாட்டு வளர்ச்சியின் காரணமாக அமையும் விளைவாகும்.


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF), சமீபத்திய உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (World Economic Outlook (WEO)) படி, இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இருக்கும். இருப்பினும், டொனால்ட் டிரம்பின் வர்த்தகப் போரினால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதாரச் சிக்கல் (global economic turmoil) காரணமாக, 2025-26-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரியில் கணிக்கப்பட்ட 6.5% வளர்ச்சியை விடக் குறைவு. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.5 சதவீத புள்ளிகள் குறைந்து 2.8% ஆக இருக்க வாய்ப்புள்ள போதிலும், இந்தியாவின் வளர்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. இந்தியாவின் 6%-க்கும் அதிகமான வளர்ச்சிக்கு வலுவான உள்நாட்டு காரணிகளே காரணம் என்று IMF கூறுகிறது.


இந்தியாவின் செயல்திறன் இருந்தபோதிலும், உலகப் பொருளாதாரம் மற்றும் தற்போதுள்ள பொருளாதார அமைப்பு பெரும் சிக்கலான காலகட்டத்தை கடந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. உலகமயமாக்கல் மற்றும் வர்த்தகத்தால் லாபம் ஈட்டியவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் இடையிலான சமச்சீரற்றத் தன்மை, அவர்களின் நாடுகள் வர்த்தகப் பற்றாக்குறையை சந்தித்தனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், உலகளாவிய ஒழுங்கின் மாற்றத்திற்கு வழிவகுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கவலை, அதன் இரண்டு பெரிய பொருளாதாரங்களான அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரில் உலகம் பாதிக்கப்படுவதைக் காண்பதற்குப் பதிலாக, இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கையை உருவாக்குவதாகத் தெரிகிறது.


இதை சர்வதேச நாணய நிதியம் நிறைவேற்ற முடியுமா? உலக பொருளாதாரக் கண்ணோட்டத்தின் (WEO) அறிக்கைக்குப் பிறகு, டிரம்ப் நிர்வாகத்தின் சமரசக் கொள்கைகள், அமெரிக்க கூட்டாட்சி ரிசர்வ் தலைவரை (US federal reserve chairman) பதவி நீக்கம் செய்ய மாட்டேன் என்று டிரம்ப் கூறுவதும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தற்போதைய வரிவிதிப்புகள் நீடிக்க முடியாதவை என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் கூறுவதும், அனைத்து நம்பிக்கையும் இழக்கப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. இந்தியா சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும் மற்றும் மோசமானவற்றுக்குத் தயாராக வேண்டும்.


Original article:
Share:

உணவு கலப்பட அச்சுறுத்தல் மற்றும் அதை எவ்வாறு எதிர்கொள்வது? -ரிதுபர்ண பத்கிரி

 அரசு சவாலை எதிர்கொள்ள வேண்டும். குடிமக்கள் மீது பொறுப்பை சுமத்தக்கூடாது.


உணவு நமது சமூக மற்றும் கலாச்சார வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் தொடர்பான கொள்கைகளை நிர்ணயிப்பதில் அரசும் சமூகமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பள்ளிகளில் மதிய உணவு முதல் அரசு நிதியுதவியுடன் நடைபெறும் நிகழ்வுகள் வரை உணவு தொடர்பான முடிவுகள் பெரும்பாலும் ஊட்டச்சத்து தேவைகளைவிட சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன. பெரும்பாலான சூழல்களில் உடல்நலம் பற்றிய கேள்வி பின்னணியில் தள்ளப்படுகிறது.


சமீபத்திய தேசிய குடும்ப உடல்நல ஆய்வின்படி (National Family Health Survey - NFHS-5, 2019-21), ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், வளர்ச்சிக் குறைபாடு (stunting) 35.5 சதவீதமாகவும், மெலிந்த விகிதம் (wasting) 19.3 சதவீதமாகவும், குறைந்த எடை (underweight) 32.1 சதவீதமாகவும் உள்ளது. இத்தகைய ஆதாரங்கள் இருந்தும், ஊட்டச்சத்து மற்றும் பொது உடல்நலம் புறக்கணிக்கப்படுகின்றன. உணவுத் தரம் குறித்த இதேபோன்ற அக்கறையின்மை, உணவு கலப்படம் குறித்து எந்த சீற்றமும் இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம். இது பொது சுகாதாரத்திற்கு பெரும் கவலையாக இருக்க வேண்டும்.


1990களில், கலப்படம் செய்யப்பட்ட பால் பற்றிய கதைகளைக் கேட்பது பொதுவானதாக இருந்தது. 2025-ல், பால் உட்பட உணவு கலப்படம் (food adulteration) ஒரு பிரச்சினையாகவே உள்ளது. உதாரணமாக, 2011-ல் தேசிய பால் கலப்பட ஆய்வு (National Survey on Milk Adulteration) இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட பால் மாதிரிகளில் 70 சதவீதம் உணவு பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தியது. பாலில் உள்ள முக்கிய கலப்படப் பொருள் தண்ணீர் ஆகும். உப்பு, சவர்க்காரம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை பிற கலப்படப் பொருள்களாகும்.


சமீபகாலங்களில், பனீர், தர்பூசணி, மசாலாப் பொருட்கள் போன்ற அன்றாட நுகர்வுக்கான பல பொருட்களில் உணவுக் கலப்படம் குறித்த அச்சுறுத்தும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. டெல்லி, மும்பை மற்றும் நொய்டா போன்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியான செய்தி அறிக்கைகள், சந்தை "போலி பனீர் பொருட்கள்" (fake paneer) நிறைந்திருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. பொதுவான கலப்பட பொருட்களில் கஞ்சிப்பசை (starch), டிடர்ஜென்ட்கள், செயற்கை பால், அசெட்டிக் அமிலம் (acetic acid) போன்றவை அடங்கும். கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உண்பது உணவு நச்சு (food poisoning), சில நேரங்களில் மரணம் போன்ற கடுமையான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தும்.


தொற்று மற்றும் தொற்று அல்லாத உடல்நல பிரச்சினைகளுடன் போராடும் ஒரு நாட்டில் கலப்படம் செய்யப்பட்ட உணவின் பரவல் எச்சரிக்கை மணிகளை ஒலிக்க வைக்க வேண்டும். இந்தியா பெரும்பாலும் உலகின் நீரிழிவு தலைநகரம் (diabetes capital) என்று அழைக்கப்படுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 மில்லியன் மக்கள் இந்த தொற்று அல்லாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) மற்றும் மெட்ராஸ் டயபடிஸ் ஆராய்ச்சி அறக்கட்டளை (Madras Diabetes Research Foundation), சென்னை ஆகியவற்றால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இதற்கு இந்தியர்கள் உண்ணும் உணவு வகையை காரணமாக கூறியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நீரிழிவு நோயாளிகள் பொரித்த மற்றும் அதீத பதப்படுத்தப்பட்ட (ultra-processed) உணவுகளை சாப்பிடுவதாலும், தரம் குறைந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதாலும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மிகவும் பொதுவாக கலப்படம் செய்யப்படும் உணவுப் பொருட்களில் சமையல் எண்ணெய் ஒன்றாகும். அரிசி தவிடு எண்ணெய், ஆர்கமோன் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெயில் செயற்கை இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.


இந்தியாவில் மசாலாப் பொருட்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. ஏப்ரல் 2024ல், ஹாங்காங் (Hong Kong) சில எம்டிஎச் (MDH) மற்றும் எவரெஸ்ட் (Everest) மசாலா கலவைகளின் விற்பனையை, புற்றுநோய் உண்டாக்கும் பூச்சிக்கொல்லியான எத்திலீன் ஆக்சைடு (ethylene oxide) அதிக அளவில் இருப்பதால் நிறுத்தியது. இந்தியாவின் மென்மையான சக்தி (soft power), குறிப்பாக அதன் சமையல் மூலதனம் (culinary capital), அதன் மசாலாப் பொருட்களுடன் ஒத்ததாக உள்ளது என்பது மிகையான கூற்று அல்ல. முக்கிய ஏற்றுமதி பொருட்களில் ஒன்றாக கருதப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மசாலா பொருட்கள் (Made-in-India spices) உலகம் முழுவதும் விற்கப்படுகின்றன. உடல்நலப் பாதிப்புகளைத் தவிர, இத்தகைய வழக்குகள் எழும்போது நாட்டின் சர்வதேச நற்பெயர் பாதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே இந்தியாவில் இருந்து வரும் மிளகாய் மற்றும் மிளகு விதைகளில் எத்திலீன் ஆக்சைடு இருப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. 2019 மற்றும் 2024-க்கு இடையில் கடுமையான மாசுபாட்டிற்காக அது 400 பொருட்களை தடை செய்தது.


இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (Food Safety and Standards Authority of India (FSSAI)) சோதனைகளை நடத்தி, மாதிரிகளை பரிசோதித்து பல உற்பத்தியாளர்களின் உற்பத்தி உரிமங்களை ரத்து செய்து வருகிறது. கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கவும், கவனமாக சரிபார்க்கவும், முடிந்தால் பனீர் போன்ற பொருட்களை வீட்டிலேயே சாப்பிடவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. உணவு பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் கடமை அரசிடமிருந்து தனிநபருக்கு மாற்றப்படுகிறது. குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வீட்டில் சாப்பிட வேண்டும் என்றும் கூறுவதால் இது இன்னும் பெரிய அளவில் ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் அடைவது கடினம். இந்த பிரச்சினை சிறந்த விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் பொதியிடுதல் முறைகளின் தேவையைக் குறிக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் உற்பத்தியாளர்களுக்கு பாதுகாப்பான உணவு நடைமுறைகளைப் பற்றிய சிறந்த பயிற்சியும் அறிவும் தேவை. பல மாநிலங்களுக்கு அவ்வாறு செய்ய உட்கட்டமைப்பு இல்லாததால், FSSAI இந்தியா முழுவதும் கடுமையான அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும். உணவில் அனுமதிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவையும் பார்க்க வேண்டியுள்ளது. மேலும், உணவின் தரம் மற்றும் உடல்நலத்துடனான அதன் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊட்டச்சத்து மற்றும் உடல்நல ஆபத்துகளை எதிர்த்துப் போராட உணவு படிப்பறிவு (food literacy) என்ற கருத்தை நாம் வளர்க்க வேண்டும்.


எழுத்தாளர் கவுகாத்தி இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் சமூகவியல் பேராசிரியர்.


Original article:
Share:

உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் பங்கு -அகில் குமார்

 பஞ்சாயத்து ராஜ் அமைப்பை (Panchayati Raj System) நிறுவுவது உள்ளூர் நிர்வாகத்தை ஆழப்படுத்துவதற்கான ஒரு முக்கிய வளர்ச்சியாகும். ஆனால், இந்த அமைப்பு காலப்போக்கில் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது. அதன் பயனுள்ள செயல்பாட்டைத் தடுக்கும் சவால்கள் எவை?


உள்ளாட்சி ஆட்சியில் பஞ்சாயத்துகளின் முக்கிய பங்கை அங்கீகரித்து, அரசாங்கம் ஏப்ரல் 9அன்று பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டை (Panchayat Advancement Index (PAI)) அறிமுகப்படுத்தியது. "அடிமட்ட முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஒரு முக்கிய அளவீடு மற்றும் உள்ளடங்கிய கிராமப்புற வளர்ச்சிக்கான உள்ளூர் உத்திகள் மற்றும் இலக்குகளை உருவாக்க உதவும் ஒரு கருவியாகும்”.


கூடுதலாக, ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டு குறியீடு மற்றும் பிரதான் பதி (Pradhan Pati) அல்லது முக்கியா பதி (Mukhiya Pati) நடைமுறையை சரிசெய்வதற்கான முயற்சிகள், உள்ளடக்கிய அடிமட்ட ஆளுமையை வலுப்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றன. ஆனால், இந்த அமைப்பு பாரம்பரிய பஞ்சாயத்துகளிலிருந்து அரசியலமைப்பு உள்ளாட்சி அமைப்புகளாக காலப்போக்கில் எவ்வாறு வளர்ந்தது? ஆராய்வோம்.


பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் பரிணாமம்


இந்தியாவின் கிராமப்புறங்களில், அதிகாரம் மற்றும் ஆளுமையை அடிமட்டத்திற்கு பரவலாக்குவதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. 1992ஆம் ஆண்டு 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் இந்த உள்ளூர் சுயராஜ்ய அமைப்புகள் முறையாக அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டன. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்துகள்) மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (நகராட்சிகள்) ஆகியவற்றிற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கின. அவற்றின் தோற்றம் பழங்காலத்திலிருந்தே தொடங்குகிறது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் ஆரம்ப வடிவங்களின் தடயங்களை வேதங்கள், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், மௌரியப் பேரரசு மற்றும் பிற வரலாற்று ஆதாரங்களில் காணலாம்.


பல ஆண்டுகளாக, பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் நிறுவனங்கள் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சந்தித்துள்ளன. ஆங்கிலேய ஆட்சியின் போது, லார்ட் மேயோவின் 1870ஆம் ஆண்டின் தீர்மானம் அதிகாரப் பரவலாக்கத்தை கொண்டு வந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை மேம்படுத்த நிதி பகிர்வை ஆதரித்தது.


லார்ட் ரிப்பனின் 1882ஆம் ஆண்டு சீர்திருத்தங்கள் ஆங்கிலேய இந்தியாவில் உள்ளூர் ஆளுமைக்கான “முன்னோடி” கட்டமைப்பாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை மிகச் சிறிய நிர்வாக அலகுகள் உள்ளூர் குழுக்களின் ஆதரவின்கீழ் வைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தன. பின்னர், 1909ஆம் ஆண்டில், சர் ஹென்றி வில்லியம் தலைமையிலான அரச ஆணையம் (Royal Commission) பரவலாக்கல் (Decentralisation) குறித்து இந்த உள்ளூர் குழுக்களின் செயல்பாட்டை ஆய்வுசெய்து போதிய பிரதிநிதித்துவம் இல்லாமை மற்றும் போதுமான அதிகாரங்கள் இல்லாமை ஆகியவை அவற்றின் திறன்மிக்க செயல்பாட்டில் பெரும் தடைகளாக இருப்பதைக் கண்டறிந்தது. ஆணையம் சில பரிந்துரைகளை செய்தது அவை பின்னர் இந்திய அரசாங்கச் சட்டம், 1919-ல் சேர்க்கப்பட்டன.


சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா தனது கிராமங்களில் உள்ளூர் சுய ஆளுமையை ஊக்குவிக்க நிர்வாகத்தை பரவலாக்குவதில் அதிகக் கவனம் செலுத்தியது. நவம்பர் 25, 1948 அன்று, காந்தியவாதியும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினருமான கே. சந்தானம், இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவாக ஒரு திருத்தத்தைச் சேர்க்குமாறு வரைவுக் குழுவின் தலைவரை வலியுறுத்தினார்.


இதன் விளைவாக, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ​​பிரிவு 40-ல் பகுதி IV-ன் கீழ், மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் பரவலாக்கம் குறித்த ஒரு சிறப்பு விதி சேர்க்கப்பட்டது. அந்த விதி "கிராம பஞ்சாயத்துகளை ஒழுங்கமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவை சுயராஜ்யத்தின் அலகுகளாகச் செயல்படத் தேவையான அதிகாரங்களையும் அதிகாரத்தையும் அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறியது.


பஞ்சாயத்துகளுக்கு முன்னோடியான சமூக மேம்பாட்டுத் திட்டம்


பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு (Panchayati Raj Institutions) முன்னோடியாக, சமுதாய மேம்பாட்டுத் திட்டம் 1951-55 வரை தொடங்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின்போது அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா உணவுப் பற்றாக்குறை, வறுமை, வேலையின்மை போன்ற பல சவால்களை எதிர்கொண்டது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சமூகங்களையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு தீர்வு நடவடிக்கையாக சமூக மேம்பாட்டுத் திட்டம்  (community development programme) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டம் தொடங்குவதற்கு முன்பு, இந்தியா சில சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டது. 1922-ல் ரவீந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீநிகேதன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் ரீகன்ஸ்ட்ரக்ஷன்; தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் உள்ள இளைஞர்கள் கிறிஸ்தவ சங்கம் (Young Men’s Christian Association (YMCA)) மூலம் டாக்டர். ஸ்பென்சர் ஹட்ச் மூலம் மார்த்தாண்டம் பரிசோதனை மற்றும் 1946ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியில் டி. பிரகாசத்தின் ஃபிர்கா மேம்பாட்டுத் திட்டம் சிலவற்றைக் குறிப்பிடலாம். 


சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாய மேம்பாடு (நில மேம்பாடு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் வழங்கல் உட்பட) நீர்ப்பாசனம் (கிணறுகள் தோண்டுதல்) சாலைகள் அமைத்தல், தொற்றுநோய்களைத் தடுப்பது போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. மக்கள் பங்கேற்பு இல்லாமை, அதிகார சிவப்பு நாடாத்துவம் (bureaucratic red-tapism) மற்றும் ஊழல் போன்ற சவால்களை இந்த திட்டம் எதிர்கொண்டது. திட்டக் குழுவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கைவினைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், ஏற்கனவே உள்ள நீர்ப்பாசன வசதிகள் மற்றும் பெரிய நில உடைமைகளைக் கொண்ட பகுதிகள் மட்டுமே பயனடைவதாகவும் கண்டறியப்பட்டது.


மூன்று அடுக்கு அமைப்பு


எனவே, அரசாங்கம் 1957ஆம் ஆண்டில் பல்வந்த் ராய் மேத்தா (Balwant Rai Mehta) தலைமையில் முன்னேற்றங்களைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அமைத்தது. தனது அறிக்கையில், குழு கிராமத்திலிருந்து மாவட்ட அளவிலான ஆட்சி அதிகாரப் பரவலாக்கத்தைப் பரிந்துரைத்தது. இது மூன்றடுக்கு அமைப்பை முன்மொழிந்தது கீழ் மட்டத்தில் கிராம பஞ்சாயத்துகள் (Village Panchayats), இடைநிலையில் (தாலுகா அல்லது வட்டம்) பஞ்சாயத்து சமிதிகள் (Panchayat Samitis), மற்றும் உயர் மட்டத்தில் ஜில்லா பரிஷத்கள் (Zilla Parishads) போன்றவற்றை பரிந்துரைத்தது. அக்டோபர் 2, 1959 அன்று முன்மொழியப்பட்ட மாதிரியை செயல்படுத்திய முதல் மாநிலமாக ராஜஸ்தான் உருவானது. அதைத் தொடர்ந்து நவம்பர் 1959-ல் ஆந்திரப் பிரதேசம் உருவானது.


முன்மொழியப்பட்ட மூன்றடுக்கு கட்டமைப்பை செயலிழக்கச் செய்வதற்கும், இந்த பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிவதற்கும், ஜனதா கட்சியின் தலைமையிலான முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 1977-ல் அசோக் மேத்தா (Ashok Mehta) தலைமையில் ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. மூன்று அடுக்கு முறையை இரண்டு அடுக்கு முறையாக மாற்றவும், கீழ் மட்டத்தில் மண்டல் பஞ்சாயத்துகள் மற்றும் உயர் மட்டத்தில் ஜில்லா பரிஷத்கள் (Zilla Parishads) என மாற்றவும் குழு பரிந்துரைத்தது.


பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்றும் வாதிட்டது. மிக முக்கியமாக, பஞ்சாயத்து ராஜ் விவகாரங்களில் அரசியல் கட்சிகளின் பங்கேற்பை அது அங்கீகரித்தது. எவ்வாறாயினும், பலதரப்பட்ட தேசத்தில் சீரான தன்மையைப் பேணுதல் மற்றும் நிதி மற்றும் பிற தடைகள் போன்ற காரணிகளால் இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவது குறைவாகவே இருந்தது.


அதன்பின், ஹனுமந்த ராவ் கமிட்டி (1983), ஜிவிகே ராவ் கமிட்டி (1985), எல்எம் சிங்வி கமிட்டி (1986), பிகே துங்கன் கமிட்டி (1989) போன்ற பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டை அவ்வப்போது மதிப்பாய்வு செய்ய பல குழுக்கள் பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டன.


உள்ளூர் நிர்வாகத்தை மதிப்பீடு செய்தல்


1980களின் பிற்பகுதியிலிருந்து, அரசாங்கம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கி அவற்றை அதிகாரப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டது. 1989, 1990 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில் பல்வேறு திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் டிசம்பர் 1992-ல் இலக்கு இறுதியாக அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திருத்தத்தை நிறைவேற்றின. இது 17 மாநில சட்டமன்றங்களால் உறுதிப்படுத்தப்பட்டது.


அதன் பிறகு, அரசியலமைப்பில் “பஞ்சாயத்துகள்” என்ற பகுதி IX மற்றும் 'நகராட்சிகள்' என்ற பகுதி IXA போன்ற இரண்டு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டன. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் (Ministry of Panchayati Raj) 2024-25 ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் 2,55,397 கிராம பஞ்சாயத்துகள் (gram panchayats), 6,742 இடைநிலை பஞ்சாயத்துகள் (intermediary panchayats), மற்றும் 665 மாவட்ட பஞ்சாயத்துகள் (district panchayats) உள்ளன.


பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கு, நிதி, பொறுப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் பிற பரிமாணங்களில் ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு அரசாங்கம் பஞ்சாயத்து அதிகாரப் பரவலாக்க குறியீட்டை (Panchayat Devolution Index) உருவாக்கியது. இந்தக் குறியீடு 2004-ல் வி.என். அலோக் மற்றும் லவீஷ் பண்டாரி (V N Alok and Laveesh Bhandari) வழங்கிய கருத்துக் கட்டுரையின் அடிப்படையில் அமைந்தது. இது செயல்பாடுகள், நிதி மற்றும் அலுவலர்கள் (Functions, Finances, and Functionaries - 3Fs) போன்ற மூன்று பரிமாணங்களை வரையறுத்தது. பின்னர், குறியீட்டில் மூன்று கூடுதல் அளவுருக்களான - திறன் மேம்பாடு, பொறுப்புணர்வு மற்றும் கட்டமைப்பு (Capacity Building, Accountability, and Framework)  போன்றவை சேர்க்கப்பட்டன.


சமீபத்தில் வெளியிடப்பட்ட பஞ்சாயத்து அதிகாரப் பரவலாக்க குறியீட்டில், கர்நாடகா முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து கேரளா தமிழ்நாடு  மற்றும் பிற மாநிலங்கள் உள்ளன. இந்திய பொது நிர்வாக நிறுவனம் (Indian Institute of Public Administration (IIPA)) நடத்திய ஆய்வின் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் இந்தக் குறியீட்டை வெளியிட்டது. நிதி சுயாட்சி இல்லாமை, நிதி கட்டுப்பாடுகள், வெளிப்படைத்தன்மை, போதுமான மனித வளங்கள் இல்லாமை, தேர்தல்களை நடத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பித்தல் போன்ற பல சவால்களையும் இந்த குறியீடு அடையாளம் கண்டுள்ளது.


பஞ்சாயத்து செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்த அமைச்சகம் இ-கிராம் ஸ்வராஜ் (e-Gram Swaraj) பயன்பாட்டையும் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், டிஜிட்டல் கல்வியறிவின்மை (lack of digital literacy) ஒரு முக்கிய தடையாக வெளிப்பட்டது. இது நிறுவனங்களை வலுப்படுத்தும் அதன் திறனை வரம்புக்குட்படுத்துகிறது. இத்தகைய காரணிகள் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் திறம்பட செயல்படுவதையும், அடிமட்ட ஆளுமையை வலுப்படுத்த அரசாங்கங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சமூக-பொருளாதார நல திட்டங்களை (socio-economic welfare programmes) நிறைவேற்றுவதையும் தடுக்கின்றன.


(டாக்டர் அகில் குமார் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.)


Original article:
Share:

சர்வதேச நாணய நிதியம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund  (IMF)) தனது சமீபத்திய பொருளாதார கண்ணோட்டத்தில் அமெரிக்கா விதித்த வர்த்தகக் கட்டணங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை காரணமாக இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளின் வளர்ச்சி கணிப்புகளை குறைத்துள்ளது.


முக்கிய அம்சங்கள் :


• இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு 2025-26 நிதியாண்டிற்கு 6.5 சதவீதத்திலிருந்து 0.3 சதவீத புள்ளிகள் குறைத்து 6.2 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டான 2026-27க்கு 6.1 சதவீதத்திலிருந்து 0.2 சதவீத புள்ளிகள் குறைத்து 6.3 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.


• "இந்தியாவைப் பொறுத்தவரை, 2025ல் வளர்ச்சி கண்ணோட்டம் ஒப்பீட்டளவில் 6.2 சதவீதமாக நிலையாக உள்ளது. இது தனியார் நுகர்வால், குறிப்பாக கிராமப்புறங்களில் ஆதரிக்கப்படுகிறது. ஆனால், இந்த விகிதம் ஜனவரி 2025 உலக பொருளாதாரக் கண்ணோட்டம் (World Economic Outlook (WEO)) புதுப்பிப்பைவிட 0.3 சதவீத புள்ளி குறைவாக உள்ளது. இது அதிகரித்த வர்த்தக பதற்றங்கள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை காரணமாக" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


• ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2025-26-க்கான இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.7 சதவீதம் என்ற முந்தைய கணிப்பைவிட குறைவாக 6.5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டு வளர்ச்சி 6.5 சதவீதமாகவும்; இரண்டாம் காலாண்டு 6.7 சதவீதமாகவும்; மூன்றாம் காலாண்டு 6.6 சதவீதமாகவும் மற்றும் நான்காம் காலாண்டு 6.3 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


• IMF தனது ஜனவரி மாத கணிப்பிலிருந்து 2025ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 0.5 சதவீத புள்ளி குறைத்து 2.8 சதவீதமாகவும், 2026ஆம் ஆண்டிற்கு 0.3 சதவீத புள்ளி குறைத்து 3 சதவீதமாகவும் மாற்றியுள்ளது. "வர்த்தக பதற்றங்களின் விரைவான அதிகரிப்பு மற்றும் மிக அதிகமான கொள்கை நிச்சயமற்ற தன்மை உலகளாவிய பொருளாதார செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளாவிய வர்த்தக வளர்ச்சிக்கான கணிப்பும் 1.5 சதவீத புள்ளி குறைத்து 1.7 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.


•  அதிக கொள்கை நிச்சயமற்றத் தன்மை, வர்த்தக பதற்றங்கள் மற்றும் மென்மையான தேவை வேகம் காரணமாக அமெரிக்காவில் வளர்ச்சி 1.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜனவரி கணிப்பைவிட 0.9 சதவீத புள்ளி குறைவாகும். அதே, சமயம் யூரோ பகுதியில் 0.8 சதவீத வளர்ச்சி 0.2 சதவீத புள்ளி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?


• உலக பொருளாதார கண்ணோட்டம் (World Economic Outlook (WEO)) என்பது IMF ஊழியர்களால் பொதுவாக ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடப்படும் வாய்ப்புகள் மற்றும் கொள்கைகளின் ஆய்வாகும். இடையில் சில புதுப்பிப்புகளுடன் கொள்கைகள் வெளியிடப்படுகின்றன. இது அருகில் உள்ள மற்றும் நடுத்தர காலத்தில் உலக பொருளாதாரத்தின் பகுப்பாய்வுகள் மற்றும் கணிப்புகளை வழங்குகிறது. இவை சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund  (IMF)) உறுப்பு நாடுகளில் உள்ள பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கைகள் மற்றும் உலகளாவிய பொருளாதார அமைப்பின் கண்காணிப்பின் முக்கிய அம்சங்களாகும். அவை முன்னேறிய, வளர்ந்துவரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களை பாதிக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்கின்றன மற்றும் தற்போதைய அவசரத் தேவையுள்ள தலைப்புகளை எடுத்துரைக்கின்றன.


Original article:
Share:

பூமி தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள் :


• எதிர்கால சந்ததியினருக்காக பூமியின் வளங்களை பாதுகாப்பதில் மனிதகுலத்தின் பொறுப்பை நினைவூட்டும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதியை பூமி தினமாக (Earth Day) கடைபிடிக்கிறோம். 


• இது பூமியின் ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கவும், முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து சமூகங்களுக்கு கல்வி கற்பிக்கவும், நிலையான நடைமுறைகளுக்காக பரிந்துரைக்கவும் ஒரு நாளாகும்.


• 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, பூமி தினம் உலகளாவிய சுற்றுச்சூழல் முயற்சிகளை வடிவமைக்கவும், நாடுகளை ஒன்றிணைக்கவும் உதவியுள்ளது. ஆனால், இன்று இது பெரும்பாலும் ஒரு சமூக ஊடக இடுகை அல்லது ஒரு முறை நிகழ்வு போன்ற ஒரு அடையாளமாக மட்டுமே கருதப்படுகிறது. விழிப்புணர்வு முக்கியமானது என்றாலும், இந்த நாள் ஒளியியல் (optics) பற்றியது மட்டுமல்ல. சுயபரிசோதனை செய்து, செயல்படவும், சுரண்டலில் இருந்து தலைமைப் பொறுப்பிற்கு மாறவும் இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாகும்.


• உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியா, நிலைத்தன்மையை நோக்கி ஒரு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 2021ஆம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடைபெற்ற 26-வது காலநிலை உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாம்ரித் (Panchamrit) ஐந்து அம்ச கொள்கையை அறிவித்தார். இதில் 2070ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு (net-zero emissions) அடைதல், 2030ஆம் ஆண்டுக்குள் ஆற்றல் தேவைகளில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து பெறுதல் மற்றும் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தை 45 சதவீதம் குறைத்தல் ஆகியவை அடங்கும். இவை துணிச்சலான இலக்குகள் மற்றும் சொல்லாட்சிக் கலையிலிருந்து பொறுப்புக்கு தெளிவான மாற்றத்தைக் குறிக்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?


• ஏப்ரல் 22 அன்று, உலகம் முழுவதும் உள்ள நாடுகள் உலக பூமி தினத்தை (World Earth Day) அனுசரிக்க ஒன்றிணைகின்றன. இது 2025ஆம் ஆண்டில் 55வது முறையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டின் கருப்பொருள் "நமது சக்தி, நமது கிரகம்" (Our Power, Our Planet) இது புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் (renewable energy) பயன்படுத்தி 2030ஆம் ஆண்டுக்குள் "மும்முறை தூய மின்சாரம்" (triple clean electricity) இலக்கை அடைவதாகும்.


பூமி தினம் 1970ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் செனட்டர் கேலார்ட் நெல்சனால் (Senator Gaylord Nelson) நிறுவப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது.


• பூமி தினம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; இது உலகளாவிய காலநிலை பேரழிவை (global climate catastrophe) எதிர்கொள்வதற்கும், சுற்றுச்சூழல் வாழ்க்கை முறை மாற்றங்களை ஆதரிப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பரிந்துரைத்தல் மற்றும் மக்களை செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான நாளாகும்.


• earthday.org-ன் கூற்றுப்படி, பூமி தினம் "மக்கள் மற்றும் கிரகத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்த உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கத்தை உருவாக்குவதை" நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த இயக்கத்தின் நோக்கம் "உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை பல்வகைப்படுத்துதல், கல்வி புகட்டுதல் மற்றும் செயல்படுத்துதல்" ஆகும்.


• பூமியும் அதன் சுற்றுச்சூழல் அமைப்புகளும் நமக்கு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன என்பதை நமக்கு நினைவூட்டுவதற்காக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1992ஆம் ஆண்டில் ரியோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயற்கையுடனும் பூமியுடனும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கு இடையில் ஒரு நியாயமான சமநிலையை அடைவதற்கும் இந்த நாள் ஒரு கூட்டுப் பொறுப்பை அங்கீகரிக்கிறது.


Original article:
Share:

இந்திய சட்டப்படி தீவிரவாதம் என்றால் என்ன? -பிரியா குமாரி சுக்லா

 தற்போதைய செய்தி : 


மும்பை 26/11 தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலில், செவ்வாய்க்கிழமை குறைந்தது 25 சுற்றுலாப் பயணிகளும் ஒரு உள்ளூர் நபரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே ஒரு புல்வெளியில் இந்தத் தாக்குதல் நடந்தது.


முக்கிய அம்சங்கள்:


  • சவூதி அரேபியாவிற்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஜெட்டா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு நாடு திரும்ப முடிவு செய்தார். அவர் புதன்கிழமை அதிகாலை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  • தாக்குதலைக் கண்டிப்பதில் உலகத் தலைவர்கள் இந்தியாவுடன் இணைந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோடிக்கு அழைப்பு விடுத்து,, "இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக நிற்கின்றன என்றார்".


  • பைசரன் பள்ளத்தாக்கில் மதியம் தாக்குதல் நடந்தது. இது பஹல்காமில் இருந்து 6 கிமீ தொலைவில் உள்ள ஒரு சாலைக்கு அருகில் உள்ள ஒரு புல்வெளி. இது சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.


  • மூன்று நான்கு துப்பாக்கி ஏந்திய நபர்கள் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பைசரானில் உள்ள கடைக்காரர்கள் தன்னிடம் கூறியதாக பெயர் வெளியிட விரும்பாத உள்ளூர் வர்த்தகத் தலைவர் ஒருவர் கூறினார்.


  • முதலமைச்சர் உமர் அப்துல்லா, "சமீப ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நாங்கள் பார்த்ததை விட மிகப் பெரிய தாக்குதல்" என்றார்.


  • தடை செய்யப்பட்ட பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா (Lashkar-e-Taiba (LeT)) பயங்கரவாத அமைப்பின்  குழுவான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front (TRF)) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.


உங்களுக்குத் தெரியுமா?:


  • 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு முன்னணி (The Resistance Front (TRF)) பொறுப்பேற்றுள்ளது என்று மத்திய ஏஜென்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)) என்பது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) கிளை ஆகும்.


  • உள்துறை அமைச்சகம் (MHA) ஜனவரி 2023ஆம் ஆண்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் TRF-ஐ "பயங்கரவாத அமைப்பாக" (“terrorist organisation”) அறிவித்தது. பயங்கரவாத நடவடிக்கைகள், பயங்கரவாதிகளை ஆட்சேர்ப்பு செய்தல், பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் காஷ்மீரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் அது ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் கூறியது.


  • ஆனால் TRF முதன்முதலில் 2020ஆம் ஆண்டில் தலைப்புச் செய்திகளை உருவாக்கத் தொடங்கியது. அந்த ஆண்டு மே மாதம், கெரானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து இராணுவ கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து TRF போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் ஹந்த்வாரா மற்றும் சோபோரில் இதே போன்ற மோதல்கள் நிகழ்ந்தன.  இதில் பாதுகாப்புப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.


  • முதலாவது, ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டில், சட்டப்பிரிவு 370-ன் கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது, 2018ஆம் ஆண்டில் காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) தலைமை துண்டிக்கப்பட்டது.


  • லஷ்கர்-இ-தொய்பா 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும், அதன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று முழு காஷ்மீரையும் பாகிஸ்தானுடன் இணைப்பதாகும். இருப்பினும், 2018ஆம் ஆண்டின் இறுதியில், அது இந்திய பாதுகாப்புப் படைகளின் கைகளில் குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்தித்தது.


Original article:
Share:

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்வினையாற்றுதல் -அமிதாப் மட்டூ

 இந்தியா தேவையான தருணத்தில் வலுவாக பதிலளிக்கத் தயாராகவும் மற்றும் திறமையாகவும் இருப்பதைக் காட்டும் ஒரு தெளிவான உத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். இது பதற்றத்தை அதிகரிக்க எதிர்வினையாற்றுவதைக் குறிக்காது, மாறாக ராஜதந்திரம், பொருளாதார அழுத்தம் அல்லது இரகசிய நடவடிக்கைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மற்றவர்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளச் செய்வதைக் குறிக்கிறது.


ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வெறும் வன்முறைச் செயல் மட்டுமல்ல. இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் செய்தி.  தாக்குதல் நடத்தியவர்கள் உயிர் இழப்பு மற்றும் கடுமையான இடையூறுகளை ஏற்படுத்த நேரத்தையும் இடத்தையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தொடங்கியிருந்தபோதும், அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவுக்கு பயணம் செய்தபோதும் இந்தத் தாக்குதல் நடந்தது.  இந்தத் தாக்குதல் தற்செயலானதோ அல்லது விரக்தியின் காரணமாகவோ அல்ல என்பதை இது காட்டுகிறது. இது பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகளால் ஆதரிக்கப்படும் நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியபோது, ​​அது இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் அமைதி மதிப்புகளை சீர்குலைக்கும் நோக்கில் அச்சுறுத்தலாகத் திரும்பியுள்ளது.


‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் அழகிய மலைப் புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்தது. இந்த இடம் பொதுவாக சுற்றுலா, குதிரை சவாரி மற்றும் பள்ளிப் பயணங்களை விரும்பும் மக்களால் நிறைந்திருக்கும். இதன் காரணமாக, தாக்குதல் இன்னும் அதிர்ச்சியளிப்பதாக உணர்கிறது. அமைதிக்கு பெயர்பெற்ற இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பயத்திலும் இரத்தக்களரியிலும் தரையில் ஓடுவதை வீடியோக்கள் காட்டுகின்றன. இது சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிறப்பு வாய்ந்த இடம் எனும் காஷ்மீர் பிம்பத்தின் மீதான தாக்குதலாகும்.


இந்தத் தாக்குதல் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பில் கடுமையான தோல்வியைக் காட்டுகிறது. பைசரனுக்கு அருகில் உள்ள பஹல்காம், ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகவும், அமர்நாத் யாத்திரைக்கான தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது. பாதுகாப்புப் படையினரும் நிறுவனங்களும் இன்னும் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். இந்தியாவில் ட்ரோன்கள் மற்றும் மின்னணு கண்காணிப்பு அமைப்புகள் இருந்தபோதிலும், அவை இங்கு பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. கார்கில் மோதலின்போது ஏற்பட்டதைப் போல உளவுத்துறை தோல்வி பெரியதாக இல்லாவிட்டாலும், அது இன்னும் சமூகத்தில் ஆழமான மற்றும் நீடித்த விளைவை ஏற்படுத்தக்கூடும்.


Lashkar-e-Taiba தொடர்புடைய மற்றும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ISI ஆதரிக்கப்படும் Resistance Front, பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

இந்தியாவை காயப்படுத்துதல், காஷ்மீரில் அச்சத்தை உருவாக்குதல் மற்றும் பதிலடி கொடுக்க முயற்சித்தல் போன்றவற்றில் நேரடியாக ஈடுபடவில்லை என்று பாசாங்கு செய்து கொண்டு இதுபோன்ற தாக்குதல்களை நடத்துகின்றன. பாகிஸ்தானில் இதை அனுமதிக்கும் சூழ்நிலைகள் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மாற வேண்டும்.

ஒரு பதிலை உருவாக்குதல்


இந்தியா ராவல்பிண்டியில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால், அது பல்வேறு அரசாங்கங்களில் செயல்படும் வலுவான, நிலையான அணுகுமுறையை உருவாக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒரே ஒரு பிரச்சினையாகக் கையாளக்கூடாது, ஆனால் ஒரு தொடர்ச்சியான சவாலாகக் கையாள வேண்டும். பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நீண்டகாலத் திட்டத்திற்கு அரசியல் கட்சிகளிடையே உடன்பாடு, வலுவான உளவுத்துறை அமைப்புகள் மற்றும் புதிய தாக்குதல்கள் இல்லாதபோதும் இராஜதந்திர அழுத்தத்தைத் தொடரும் திறன் ஆகியவை தேவை. மெதுவான, நிலையான அழுத்தத்தைச் சமாளிக்க பாகிஸ்தான் நன்கு தயாராக இல்லை. அது குறுகிய, உணர்ச்சிபூர்வமான பதில்களுக்கு அதிகம் பழகி வருகிறது.


பஹல்காம் படுகொலைக்கு இந்தியாவின் எதிர்வினை கோபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது. உத்தியின் அளவும் முக்கியமானது. தாக்குதலைக் கண்டனம் செய்வது மட்டும் போதாது. எதிர்காலத் தாக்குதல்களை நிறுத்துவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். உண்மையான கொள்கை நடவடிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உன்னதமான இராஜதந்திர சிந்தனையில், தடுப்பு என்பது தண்டிப்பது மற்றும் அச்சுறுத்துவது மட்டுமல்ல. எதிரியை உண்மையான விலையை செலுத்தச் செய்வதும், காலப்போக்கில் செலவுகளை அதிகரிப்பதும், அதனால் அவர்கள் தங்கள் நடத்தையை மாற்றுவதும் இதன் பொருள்.


சவால் என்னவென்றால், அச்சுறுத்தல்களை ஊக்கப்படுத்தாமல், அதிக சிக்கல்களை உருவாக்காமல் பதிலளிப்பதுதான். உரி மற்றும் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகான வலுவான பதில்களைத் தவிர, இந்தியா பெரும்பாலும் நிதானத்தைக் காட்டியுள்ளது. இருப்பினும், இந்த பொறுமையை ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தானின் இராணுவத் தலைவர்கள் பெரும்பாலும் பலவீனத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டத்தை மாற்ற, இந்தியா பழிவாங்குவதற்கு மட்டுமல்ல, கடுமையான வரம்புகள் மீறப்படும்போது இராஜதந்திர, பொருளாதார மற்றும் ரகசிய முறைகளைப் பயன்படுத்தி தெளிவான செய்தியை அனுப்பவும் தயாராக உள்ளது மற்றும் உறுதியாக பதிலளிக்க முடியும் என்பதைக் காட்ட வேண்டும்.


பாகிஸ்தானை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் அடங்கும். அங்கு அது சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கிறது. பாகிஸ்தான் நம்பியிருக்கும் வர்த்தகம் மற்றும் நீர் பகிர்வு ஒப்பந்தங்களை கவனமாக மதிப்பாய்வு செய்வதும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (Line of Control (LoC)) பயங்கரவாத நடவடிக்கைகளை சீர்குலைக்க இரகசிய மற்றும் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை அதிகரிப்பதும் இதில் அடங்கும். இந்த உத்திகள் பொறுப்பற்றவை அல்லது புதியவை அல்ல. இந்தியா விகிதாசாரமாக செயல்படுவதாக விமர்சிப்பவர்கள் உட்பட மற்றவர்களால் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட முறைகள் அவை.


பாகிஸ்தானில் உறுதியற்ற தன்மை


பாகிஸ்தான் ஏன் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அதன் உள்நாட்டு நிலைமையைப் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் இப்போது மிகவும் நிலையற்றதாக உள்ளது. அதன் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. அதன் அரசியல் நிலை மாற்றப்படவில்லை.  இந்த சூழ்நிலையில், காஷ்மீரில் ஆபத்தான நடவடிக்கைகளை எடுப்பது இராணுவம் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும், உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பவும் ஒரு வழியாகிறது.


தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அவருக்கு முன்பிருந்த ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவைவிட வித்தியாசமானவர். அவர் மிகவும் நடைமுறைக்கு ஏற்றவராக இருந்தார். முனீர் மிகவும் ஆக்ரோஷமானவராகவும், ஆபத்துக்களை எடுக்கத் தயாராகவும் இருப்பதற்காக அறியப்படுகிறார். அணுசக்தி மட்டத்திற்குக் கீழே கவனமாக திட்டமிடப்பட்ட வன்முறைச் செயல்களை உள்ளடக்கிய 'நிர்வகிக்கப்பட்ட விரிவாக்கம்' ('managed escalation,') என்ற உத்தியை அவர் மீண்டும் கொண்டு வருவதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் உளவுத்துறையுடன் வலுவான உறவுகளைக் கொண்ட முன்னாள் ஐஎஸ்ஐ தலைவரான முனீர், சித்தாந்த கவலைகளை இராஜதந்திர இலக்குகளுடன் கலக்கும் மொழியைப் பயன்படுத்துகிறார். அவர் அடிக்கடி இந்து-முஸ்லீம் உறவுகளைப் பற்றி மிகவும் பிளவுபட்ட முறையில் பேசுகிறார், மேலும் சமீபத்தில் காஷ்மீரை பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு" என்று அழைத்தார், இது காஷ்மீர் எப்போதும் ஒரு போர்க்களம், அமைதிக்கான இடம் அல்ல என்ற பழைய நம்பிக்கையை ஆதரிக்கிறது. பிப்ரவரி 2021 முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் LOC-யில் போர் நிறுத்த மீறல்களின் சமீபத்திய அதிகரிப்பு, அவரது அணுகுமுறை பொறுப்பற்றது என்பதைக் காட்டுகிறது.


பாகிஸ்தானில், உள்நாட்டு அமைதியின்மை அல்லது இராணுவ நிலைத்தன்மை பெரும்பாலும் இந்தியாவுடன், குறிப்பாக காஷ்மீர் தொடர்பாக, பதட்டங்களை அதிகரிக்க வழிவகுக்கிறது. ஒரு தெளிவான உதாரணம் 1999ஆம் ஆண்டில் கார்கில் மோதல், இது ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் தலைமையில் நடந்தது.  அதே நேரத்தில் நவாஸ் ஷெரீப் சிவில் தலைவராக இருந்தார். மோதலைத் தொடங்க இராணுவம் சில நேரங்களில் சிவில் அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. 2001ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தாக்குதல், 2008ஆம் ஆண்டில் மும்பை தாக்குதல்கள், 2016ஆம் ஆண்டில் உரி தாக்குதல் மற்றும் 2019ஆம் ஆண்டில் புல்வாமா குண்டுவெடிப்பு போன்ற பிற சம்பவங்களும் பாகிஸ்தானின் ஈடுபாட்டை மறுக்கும் அதே வேளையில் இந்தியாவைத் தூண்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தெரிகிறது. இவை தனிமைப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் மட்டுமல்ல; அவை தொடர்ச்சியான சமச்சீரற்ற போர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.


தடுப்பை மீண்டும் நிறுவுதல்


இந்தியா தனது எதிரி, கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து தாக்க முடியும் என்று நினைக்க அனுமதிக்கக் கூடாது என்பதால் தடுப்பு மீண்டும் நிலைநிறுத்தப்பட வேண்டும். இது வெறும் மரியாதை அல்லது பொதுக் கருத்தைப் பற்றியது மட்டுமல்ல; நீண்டகால இராஜதந்திர நிலைத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது.


பஹல்காமில் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா காஷ்மீரில் மீட்சியின் அடையாளமாக மாறியுள்ளது. இது உள்ளூர் மக்களுக்கு வேலைகளை வழங்குகிறது மற்றும் பள்ளத்தாக்குக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை மீண்டும் உருவாக்க உதவுகிறது. சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது பயங்கரவாதம் மட்டுமல்ல; அது சாதாரண வாழ்க்கையின் கருத்தை அழிக்கும் முயற்சியாகும். பள்ளத்தாக்கிலிருந்து பார்வையாளர்களைத் துண்டிப்பது பயங்கரவாதக் குழுக்கள் சார்ந்திருக்கும் தனிமைப்படுத்தலை மட்டுமே அதிகரிக்கிறது.


காஷ்மீர் மக்கள் வன்முறைக்கு பொறுப்பல்ல என்பதை தெளிவாகக் கூறுவது முக்கியம். உண்மையில், அவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள். காஷ்மீரில் உள்ள இளைய தலைமுறையினர் வன்முறையை அல்ல, வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். அவர்கள் சிறந்த கல்வி, சிறந்த வேலைகள் மற்றும் மோதல்கள் இல்லாத எதிர்காலத்தை விரும்புகிறார்கள். காஷ்மீரிகள் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள் என்ற கருத்து பொய்யானது மற்றும் தீங்கு விளைவிக்கும். எந்தவொரு நீடித்த அமைதியிலும் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய மக்களை இது தள்ளிவிடுகிறது. இந்தியாவின் பதில் வலுவாக இருக்க வேண்டும், ஆனால், அவை பலத்தால் அல்ல. மாறாக, அது பொருளாதாரத்தில் முதலீடு செய்வதிலும், அரசியல் ரீதியாக ஈடுபடுவதிலும், சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த அணுகுமுறை சரியானது மட்டுமல்ல, புத்திசாலித்தனமான தேர்வாகும்.


வான்ஸின் இந்திய வருகை சிறந்த ராஜதந்திரத்திற்கான வாய்ப்பை வழங்குகிறது. அரசு ஆதரவு பயங்கரவாதம் ஜனநாயகங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அமெரிக்கா புரிந்துகொள்கிறது. பாகிஸ்தானின் ஆதரவு அமைப்புகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதோடு, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வலுவான அறிக்கைகளை இந்தியா வலியுறுத்த வேண்டும். தாக்குதல்களுக்குப் பிறகு ஆதரவு பாராட்டப்பட்டாலும், முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது.


எளிமையான பதில்கள் எதுவும் இல்லை. ஆனால், நடவடிக்கை எடுப்பதற்கு முன் நாம் தெளிவாக இருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் என்பது வன்முறையின் நீண்ட பட்டியலில் உள்ள மற்றொரு சம்பவம் என்பதைத் தாண்டி, தெளிவற்ற பதில்கள் தாக்குதலை ஊக்குவிக்கின்றன என்பதை இது நினைவூட்டுகிறது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான ஒரே வழி தெளிவான மற்றும் வலுவான கொள்கைகளை பின்பற்றுவதே ஆகும். இப்போது அந்த அணுகுமுறையை மீண்டும் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.


அமிதாப் மட்டூ, டீன், சர்வதேச ஆய்வுகள் பள்ளி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் முன்னாள் துணைவேந்தர், ஜம்மு பல்கலைக்கழகம்.


Original article:
Share: