ஆசியான் அமைப்பு : விரிவாக்கம், இந்திய உறவுகள் மற்றும் முக்கிய அம்சங்கள் -ரோஷ்ணி யாதவ்

 

ASEAN : Association of Southeast Asian Nations -  தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு


பிரதமர் நரேந்திர மோடி 2026-ம் ஆண்டை 'ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக' (ASEAN-India Year of Maritime Cooperation) அறிவித்தார். ஆனால், ஆசியான் என்றால் என்ன?, இந்தியா அதனுடன் எவ்வாறு தொடர்புடையது? 1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அதன் முதல் விரிவாக்கத்தைக் குறிக்கும் வகையில், சமீபத்தில் எந்த நாடு ஆசியானில் இணைந்துள்ளது? 


தற்போதைய நிகழ்வு : 


கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான்-இந்தியா தலைவர்கள் உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் (virtual mode) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “21-ம் நூற்றாண்டு நமது நூற்றாண்டு, இந்தியா மற்றும் ஆசியானின் நூற்றாண்டு” (The 21st century is our century, the century of India and ASEAN) என்று குறிப்பிட்டிருந்தார். 2026-ம் ஆண்டை ‘ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு’ (ASEAN-India Year of Maritime Cooperation) என்றும் அவர் அறிவித்தார். இந்த சூழலில், ஆசியான் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமீபத்திய முன்னேற்றங்களைப் பற்றி விரிவாக கீழே குறிப்பிட்டுள்ளது.


முக்கிய அம்சங்கள் :


1. தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations (ASEAN)) அக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை அன்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் அதன் உச்சிமாநாட்டில் கிழக்கு திமோரை அதன் புதிய உறுப்பினராக வரவேற்றது.


2. திமோர்-லெஸ்டே என்றும் அழைக்கப்படும் கிழக்கு திமோர், நீண்ட காலமாக ஆசியானில் சேர முயற்சித்து வந்தது. ஏனெனில், ஆசியான் பிராந்தியத்தில் பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதால், அந்த நாடு இந்த அமைப்பின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்க விரும்பியது.


3. 1999-ம் ஆண்டு கம்போடியா கடைசியாக இணைந்த பிறகு, கிழக்கு திமோர் ஆசியானில் நுழைவது பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்த கூட்டமைப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.


ஆசியான் (ASEAN) பற்றி


1. ASEAN வலைத்தளத்தின்படி, ஆகஸ்ட் 8, 1967 அன்று, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பாங்காக்கில் சந்தித்தனர். மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையேயான சில சர்ச்சைகளைத் தீர்க்க தாய்லாந்து உதவியது. இந்த முயற்சி ஆசியான் பிரகடனம் (ASEAN Declaration) என்ற ஆவணத்தில் கையெழுத்திட வழிவகுத்தது.


2. அடுத்த சில காலகட்டங்களில், புருனே தாருஸ்ஸலாம், லாவோஸ் பி.டி.ஆர், கம்போடியா, மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய ஐந்து நாடுகள் இணைந்தன. சமீபத்தில், கிழக்கு திமோர் அதன் புதிய உறுப்பினராக இந்தத் தொகுதியில் இணைந்ததால், ஆசியான் உறுப்பு நாடுகளின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.


3. ஆசியான் அதன் சொந்த கீதம் மற்றும் கொடியைக் கொண்டுள்ளது. இது வருடத்திற்கு இரண்டு முறை உச்சிமாநாடுகளையும் நடத்துகிறது. தலைவர் பதவி உறுப்பு நாடுகளிடையே சுழற்சி முறையில் நடைபெறுகிறது. அதன் அதிகாரப்பூர்வ குறிக்கோள் "ஒரு பார்வை, ஒரு அடையாளம், ஒரு சமூகம்" (One Vision, One Identity, One Community) ஆகும்.


4. ஆசியான் பிரகடனம் பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிற துறைகளில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இலக்கை வெளிப்படுத்தியது. இது, பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகளைப் பின்பற்றவும் விருப்பத்தை வெளிப்படுத்தியது.


5. ஆசியான் மூன்று முக்கிய தூண்களாக, ஆசியான் அரசியல்-பாதுகாப்பு அமைப்பு (Political-Security Community (APSC)), ஆசியான் பொருளாதார அமைப்பு (Economic Community (AEC)) மற்றும் ஆசியான் சமூக-கலாச்சார அமைப்பு (Socio-Cultural Community (ASCC)) உள்ளது.


6. 2025-ம் ஆண்டிற்கான ஆசியானின் தலைமைப் பொறுப்பை மலேசியா கொண்டுள்ளது. 2026-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் தலைமை தாங்கும். இந்த ஆண்டு ஆசியான் உச்சிமாநாட்டின் கருப்பொருள் 'உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மை' (Inclusivity and Sustainability) ஆகும்.


இந்தியா மற்றும் ஆசியான்


1. இந்தியாவின் ”கிழக்கு நோக்கிய கொள்கையில்” (Act East Policy) ஆசியான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் கொள்கை ”ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில்” (Asia-Pacific region) உள்ள நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது இந்தியாவின் நீட்டிக்கப்பட்ட அண்டை நாடுகளின் ஒரு பகுதியாகும்.


2. இந்தியா ”ஆசியான் பிளஸ் சிக்ஸ்” (ASEAN Plus Six) குழுவில் உறுப்பினராக உள்ளது. இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் சீனா, ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.


3. 2010-ம் ஆண்டில், இந்தியாவிற்கும் ஆசியானுக்கும் இடையே ஒரு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement (FTA)) கையெழுத்தாகி நடைமுறைக்கு வந்தது. 2020-ம் ஆண்டில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் இந்தியா ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இறுதியில் இந்த ஒப்பந்தத்தில் சேர வேண்டாம் என்று முடிவு செய்தது.


4. இந்தியாவும் ஆசியானும் இணைந்து உச்சிமாநாட்டை 2002-ல் நடத்தத் தொடங்கின. இந்தியா அதிகாரப்பூர்வமாக அந்தக் குழுவுடன் தனது கூட்டாண்மையைத் தொடங்கிய பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.


‘உலகளாவிய தெற்கு’ (Global South) மற்றும் ‘உலகளாவிய வடக்கு’ (Global North) என்றால் என்ன?


1. உலகளாவிய தெற்கு (Global South) என்பது ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஓசியானியா நாடுகளை உள்ளடக்கியது. இந்த நாடுகளில் பெரும்பாலானவை ஒரு காலத்தில் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தன. அவை மற்ற நாடுகளை விட மிகவும் தாமதமாக தொழில்துறை ரீதியாகவும் வளர்ந்தன. அவை உலக மக்கள்தொகையில் சுமார் 88% ஆகும்.


2. மறுபுறம், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வளர்ந்த நாடுகள் பெரும்பாலும் உலகளாவிய வடக்கு (Global North) என்று குறிப்பிடப்படுகின்றன.


3. ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UN Conference on Trade and Development (UNCTAD)) படி, உலகளாவிய தெற்கு நாடுகள் பொதுவாக குறைந்த அளவிலான வளர்ச்சி, அதிக வருமான சமத்துவமின்மை, விரைவான மக்கள்தொகை வளர்ச்சி, வேளாண் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதாரங்கள், குறைந்த வாழ்க்கைத் தரம், குறைந்த ஆயுட்காலம் மற்றும் குறிப்பிடத்தக்க பிற நாடுகளை அதிகமாகச் சார்ந்திருப்பது ஆகியவற்றைக் கொண்டுள்ளன.


4. எனவே, உலகளாவிய தெற்கு (Global South) என்ற சொல் நாடுகளுக்கு இடையிலான அரசியல், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒற்றுமைகளைக் குறிக்கிறது. எனவே, இதை கடுமையான புவியியல் அர்த்தங்களுடன் இணைக்கக்கூடாது. உதாரணமாக, பெரும்பாலான ஆசிய நாடுகள் உலகளாவிய தெற்கின் கீழ் வருகின்றன. இருப்பினும், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அவற்றின் உயர்ந்த அளவிலான வளர்ச்சியின் காரணமாக உலகளாவிய வடக்கின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.



Original article:

Share:

மேக விதைப்பு எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் மூலம் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது குறித்து…

 மேக விதைப்புக்கு (cloud seeding) என்ன நிபந்தனைகள் தேவை?, அதற்கான முந்தைய திட்டங்கள் ஏன் விமர்சனங்களை எதிர்கொண்டன?  என்பதைப் பற்றி கீழே குறிப்பிட்டுள்ளன.


அக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், செஸ்னா 206H (Cessna) எனப்படும் ஒரு சிறிய விமானம் டெல்லியில் மேக விதைப்பு சோதனையை நடத்தியது. இந்த விமானம் IIT-கான்பூரில் உள்ள ஒரு விமானப் பாதையில் இருந்து புறப்பட்டு மீரட்டில் தரையிறங்கியது. பின்னர், அது டெல்லியின் மீது பறந்து புராரி, மயூர் விஹார் மற்றும் வடக்கு கரோல் பாக் உள்ளிட்ட பகுதிகளை சோதனைக்காக உள்ளடக்கியது.


டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, X வலைதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில், இந்த முறையில் "அறிவியல் ரீதியாக" மாசுபாட்டைக் குறைப்பதற்கான இந்தியாவில் முதல் பெரிய முயற்சி இதுவாக இருக்கலாம் என்று கூறினார். சோதனைக்குப் பிறகு நான்கு மணி நேரத்திற்குள் லேசான மழை பெய்யும் என்று அவர் கூறினார். சோதனை வெற்றியடைந்து வானிலை பொருத்தமானதாக இருந்தால், பிப்ரவரி வரை குளிர்காலம் முழுவதும் டெல்லி முழுவதும் இதேபோன்ற சோதனைகள் தொடரும்.


மேக விதைப்பு (cloud seeding) என்றால் என்ன?


புனேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) 2024-ம் ஆண்டு  அறிக்கை, மழைப்பொழிவை அதிகரிக்க பொருத்தமான மேகங்களில் விதை துகள்களைச் சேர்க்கும் ஒரு முறையை விவரித்தது. இந்த நுட்பம் முதன்முதலில் 1940ஆம் ஆண்டுகளில் உலகளவில் சோதிக்கப்பட்டது.


பொதுவாக, நீராவி காற்றில் உள்ள சிறிய துகள்களைச் சுற்றி உறைந்து மேகத்தை உருவாக்கும் நீர்த்துளிகளை உருவாக்குகிறது. இந்த நீர்த்துளிகள் மோதி பெரிதாகின்றன.  பின்பு, மேகம் நிறைவுற்றவுடன், மழை பெய்யத் தொடங்குகிறது.


மேக விதைப்பில், விதைத் துகள்கள் மேக நீராவி கருக்கள் (cloud condensation nuclei (CCN)), அவை நீராவி உறையும் துகள்கள்” அல்லது “நீர் உறையும் துகள்களான பனி கரு துகள்கள்” என்று அழைக்கப்படுவதாக 2024 ஆவணம் கூறுகிறது. மேக நீராவி கருக்கள் (CCN) முறையே மேகத் துளிகள் அல்லது பனித் துகள்களை உருவாக்க நீராவிக்கு ஒரு ஈர்ப்பைக் கொண்டுள்ளன. பனிக்கட்டி படிகங்கள் நீர் துளிகளை விட வேகமாக வளரும். அவை பெரிதாகும்போது, ​​அவை கனமாகி மழைப்பொழிவாக விழுகின்றன.




மேக விதைப்பு (cloud seeding) எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?


செயற்கையாக மழையைத் தூண்டுவதற்கு, மேகங்களுக்கு பொதுவாக வெள்ளி அயோடைடு (silver iodide), பொட்டாசியம் அயோடைடு (potassium iodide) அல்லது சோடியம் குளோரைடு (sodium chloride) போன்ற சில உப்புகள் செலுத்தப்படுகின்றன. இந்த உப்புகள் "விதை"யாக செயல்படுகின்றன. இந்த உப்புகள் கூடுதல் கருக்களை வழங்குவதன் மூலம் அதிக மேகத் துளிகளை உருவாக்க உதவுகின்றன. அதைச் சுற்றி அதிக மேகத் துளிகள் உருவாகலாம். அவை விமானங்களைப் பயன்படுத்தி அல்லது தரையில் உள்ள மின்னியற்றிகள் (Generators) மூலம் மேகத்திற்குள் சிதறடிக்கப்படுகின்றன.


ஏவூர்திகள் (rockets), ஆளில்லா விமானங்கள் (drones) அல்லது எரிப்புகளைப் (flares) பரவலுக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Institute of Tropical Meteorology (IITM)) குறிப்பிட்டது. டெல்லியின் சோதனைக்கு, எரிப்புப் பொருட்கள் (flares) பயன்படுத்தப்பட்டன. அவை, எரிப்பு என்பது வானவேடிக்கை பொருள் (pyrotechnic material) மற்றும் எரியும் துகள்களைக் கொண்ட குழாய்களில் சுருக்கப்பட்டு, இவை ஒரு விமானத்தின் இறக்கைகளுடன் இணைக்கப்பட்டு விதைப்புப் பொருளை மேகங்களுக்குள் வெளியிடுகின்றன.


எட்டு எரிப்புப் பொருட்கள் (eight flares) பயன்படுத்தப்பட்டதாகவும், ஒவ்வொன்றும் சுமார் 2 முதல் 2.5 கிலோ எடையுள்ளதாகவும் சிர்சா தனது காணொலில் கூறினார். ஒவ்வொரு எரிப்பையும் 15 முதல் 20% ஈரப்பதம் கொண்ட மேகங்களில் விடுவதற்கு சுமார் இரண்டு முதல் இரண்டரை நிமிடங்கள் ஆனது.


மேக விதைப்புக்கு என்னென்ன நிபந்தனைகள் தேவை?


முதலாவதாக, மேக விதைப்புக்கு மேகமூட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட வகை மேகங்கள் அவசியம். புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் எம்.ராஜீவன் முன்னதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் குறிப்பிட்டதாவது, “ஒரு குறிப்பிட்ட ஆழத்துடன் போதுமான மேகங்கள் இருக்கும்போது மட்டுமே மேக விதைப்பு சாத்தியமாகும் என்று விளக்கினார். இந்த மேகங்களுக்குள், போதுமான எண்ணிக்கையிலான நீர்த்துளிகள் இருக்க வேண்டும். மேக விதைப்பின் நோக்கமானது இந்த நீர்த்துளிகளின் அளவை அதிகரிப்பதாகும். நீர்த்துளிகள் பெரிதாகும்போது, ​​ஈர்ப்பு விசையால் மழை பெய்யும். வானம் தெளிவாக இருக்கும்போது மேக விதைப்பு செய்ய முடியாது என்று ராஜீவன் மேலும் கூறினார்.”


குளிர்காலத்தில், மேற்கத்திய இடையூறுகள் டெல்லியின் மீது உருவாகின்றன. இந்த இடையூறுகள் காஸ்பியன் அல்லது மத்தியதரைக் கடலில் உருவாகும் புயல்கள் ஆகும். அவை, வடமேற்கு இந்தியாவிற்கு பருவமழை அல்லாத மழையைக் கொண்டு வருகின்றன.


இருப்பினும், அத்தகைய மேகங்கள் எப்போதும் மேக விதைப்புக்கு ஏற்றதாக இருக்காது. IIT கான்பூரின் பேராசிரியர் சச்சிதா நந்த் திரிபாதி, "விதைப்புக்குத் தேவையான மேகங்கள் பொதுவாக குளிர்காலத்தில் காணப்படுவதில்லை. மேற்கத்திய இடையூறுகள் மேகங்களை உருவாக்குகின்றன. ஆனால், அவற்றின் பண்புகளை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். விதைப்பதற்கு முன் விஞ்ஞானிகள் மேகங்களின் உயரம் என்ன, அவற்றின் திரவ நீர் உள்ளடக்கம் என்ன என்பதை சரிபார்க்க வேண்டும்" என்று அவர் விளக்கினார். மேகங்களின் ஈரப்பதம் உட்பட, அவற்றின் பண்புகளைப் புரிந்துகொள்ள பல கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.


இறுதியாக, காற்றின் தரத்தை மேம்படுத்த மேக விதைப்பைப் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன?


இந்தியாவில், வறட்சி போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்க மேக விதைப்பு முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த முயற்சிகளின் மாறுபட்ட முடிவுகளின் அடிப்படையில் உள்ளன. பல ஆண்டுகளாக இந்தியாவின் மேற்கு கடற்கரையிலிருந்து 100 கி.மீ.க்கு மேல் உள்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளை இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (Indian Institute of Tropical Meteorology (IITM)) ஆவணம் குறிப்பிட்டுள்ளது (மூர்த்தி மற்றும் பலர், 2000). சில சூழ்நிலைகளில், மழைப்பொழிவு 4% முக்கியத்துவ அளவில் 24% அதிகரித்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.


பொதுவாக, மழையானது PM 2.5 மற்றும் PM 10 போன்ற சில மாசுபாடுகளை அகற்ற உதவுகிறது. மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology (MIT)) முந்தைய ஆவணமானது இந்த செயல்முறையை இவ்வாறு விளக்கியது. இதில், "ஒரு மழைத்துளி வளிமண்டலத்தில் விழும்போது, ​​அது தரையில் விழுவதற்கு முன்பு பல்லாயிரக்கணக்கான சிறிய பனிப்படலத் துகள்களை (aerosol particles) அதன் மேற்பரப்புக்கு ஈர்க்கும்." இது, உறைதல் (coagulation) என்று அழைக்கப்படும் இந்த செயல்முறை, நீர்த்துளிகள் மற்றும் பனிப்படலங்கள் ஒன்றிணைக்கும் ஒரு இயற்கையான வழியாகும். இது சூட், சல்பேட்டுகள் மற்றும் கரிம துகள்கள் போன்ற மாசுபடுத்திகளின் காற்றை அழிக்க உதவுகிறது.


அரசாங்கத்தின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் (System of Air Quality and Weather Forecasting And Research (SAFAR)) நிறுவனர் திட்ட இயக்குனர் குஃப்ரான் பெய்க், முன்னதாக, “கணிசமான அளவு மழை பெய்ய வேண்டும். அதனால் அது மாசுபாடுகளை நீக்குகிறது. இந்த விளைவு தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்று அவர் விளக்கினார். இருப்பினும், இது வேலை செய்தால், அது மாசுபாடுகளின் அளவை குறைக்க உதவும்.


இந்த அணுகுமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற சந்தேகங்களைத் தவிர, நிபுணர்கள் சில உத்தியையும் கேள்வி எழுப்பியுள்ளனர். காற்று மாசுபாட்டின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அதன் விளைவுகளைக் கையாள்வதில் இது கவனம் செலுத்துகிறது என்று அவர்கள் வாதிடுகின்றனர். வாகன உமிழ்வு, தொழில்துறை மாசுபாடு மற்றும்  தூசி ஆகியவை இந்தக் காரணங்களில் அடங்கும். குளிர்கால மாதங்களில், பயிர்க் கழிவுகளை எரித்தல், வானிலை நிலைமைகள் மற்றும் பட்டாசு வெடித்தல் ஆகியவை டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.



Original article:

Share:

இந்திய தலைமை நீதிபதியை (CJI) நியமிக்கும் செயல்முறை என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள் : 


அரசாங்கம் அறிவிப்பை வெளியிட்ட பிறகு, நவம்பர் 23 அன்று தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது நீதிபதி சூர்யா காந்த் இந்தியாவின் 53 வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார். நீதிபதி காந்த் அவர்கள் பிப்ரவரி 9, 2027 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றுவார். தலைமை நீதிபதி கவாய் ஏற்கனவே தனது பரிந்துரை கடிதத்தின் நகலை நீதிபதி சூர்யா காந்திடம் ஒப்படைத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.


அக்டோபர் 23 அன்று, அரசானது தலைமை நீதிபதி கவாயிடம் தனது பரிந்துரை கடிதத்தை அனுப்புமாறு வலியுறுத்தியது. பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதி அடுத்த தலைமை நீதிபதியை அரசாங்கத்திற்கு பரிந்துரைப்பது நீண்டகாலமாக பின்பற்றப்படும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.


நீதிபதி சூர்யா காந்த் பிப்ரவரி 23, 2007 அன்று தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority) நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இரண்டு முறை தொடர்ச்சியாகப் பரிந்துரைக்கப்பட்டார். இந்த நிலையில், பிப்ரவரி 22, 2011 அன்று அவரது உறுப்பினர் பதவி முடிவடைந்தது. பின்னர், அவர் அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். மேலும், மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டார்.


உங்களுக்குத் தெரியுமா? :


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 124 இன் பிரிவு (2) இன் கீழ் இந்திய தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அரசியலைப்புப் பிரிவு 124 ஆனது, குடியரசுத் தலைவர் "தேவை என்று கருதினால்", உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் "கலந்துரையாடிய பிறகு" குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியலமைப்புப் பிரிவு 217, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறையை விளக்குகிறது. குடியரசுத் தலைவர் இந்திய தலைமை நீதிபதி, மாநில ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோரை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுகிறது. மேலும், ஒரு தலைமை நீதிபதியின் பதவிக்காலம் அவர்கள் 65 வயதை அடையும் வரை இருக்கும். அதே நேரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 62 வயதில் ஓய்வு பெறுவார்கள்.


வழக்கமாக, தலைமை நீதிபதிக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, அடுத்த தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்படுவார். இவர்கள் பணியாற்றிய ஆண்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூத்த நீதிபதி பதவி தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த மரபை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஒரு காலத்தில் புறக்கணித்தார். அவர் 1973-ம் ஆண்டு தனது ஆட்சிக்கு சாதகமான ஏ.என். ரேவை தலைமை நீதிபதியாக நியமித்தார்.


உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான அரசாங்கத்தின் நடைமுறை குறிப்பாணையின்படி (Memorandum of Procedure), பணி மூப்பு என்பது பொதுவாக விதிமுறையாக பின்பற்றப்பட வேண்டும். ஒன்றிய சட்டம், சட்டத்துறை அமைச்சர் பதவி விலகும் இந்திய தலைமை நீதிபதியின் பரிந்துரையை கோருகிறார் என்று அது கூறுகிறது.


கொலீஜியத்தின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டு இந்தியத் தலைமை நீதிபதியால் அனுப்பப்பட்ட பிறகு, சட்ட அமைச்சர் அவற்றை பிரதமருக்கு அனுப்புகிறார். அவர் நியமனம் குறித்து குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்குவார்.



Original article:

Share:

இந்தியாவில் நகர்ப்புறத் திட்டமிடல் என்பது நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலாக குறுகிவிட்டது. இது மாற வேண்டும். -பிவி ஆர் சுப்ரமணியம், ஓபி அகர்வால்

 2047ஆம் ஆண்டிற்குள் $30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் நமது "வளர்ந்த இந்தியா" (Viksit Bharat) இலக்கு, இந்த வளர்ச்சியின் பெரும்பகுதியை நகரங்கள் தங்கவைக்கவும் முன்கூட்டியே செயல்படுத்தவும் தேவைப்படும்.


இன்று இந்தியாவிற்கு நகரங்கள் முக்கியமானவை. 2047ஆம் ஆண்டிற்குள் $30 டிரில்லியன் பொருளாதாரமாக மாறும் நமது "வளர்ந்த இந்தியா" இலக்கு, இந்த வளர்ச்சியின் பெரும்பகுதியை நகரங்கள் தங்கவைக்கவும் முன்கூட்டியே செயல்படுத்தவும் தேவைப்படும். நாம் 2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தை (net zero) அடைவது மற்றும் 2030ஆம் ஆண்டிற்குள் குறிப்பிடத்தக்க பசுமை இல்ல வாயு (greenhouse gas (GHG)) குறைப்புகளை மேற்கொள்வது என்ற நமது காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமானால், தேவையான நடவடிக்கைகளில் நகரங்கள் முன்னணியில் இருக்க வேண்டும். 


நமது மக்கள்தொகை ஈவுத்தொகையை (demographic dividend) கருத்தில் கொண்டு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பெரும்பாலான வேலைவாய்ப்புகள் நகரங்களில் இருக்கும். இறுதியாக, புவியானது அனைத்து வகையான பேரழிவுகளுக்கும் பாதிக்கப்படக்கூடியது. மேலும், அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நகரங்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. இது தொற்றுநோய் காலத்தில் மிகவும் தெளிவாக இருந்தது. இதன் பொருள் நகரங்கள் முன்னெப்போதையும் விட தாங்குதிறன் (resilient) கொண்டதாக இருக்க வேண்டும்.


இது போன்ற சூழலில்தான், இந்தியா தனது நகரங்களை எவ்வாறு திட்டமிட்டு நிர்வகித்து வருகிறது என்பதை மறுபரிசீலனை செய்து, என்ன மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். நமது நகரங்களுக்கு வேறு அணுகுமுறை தேவையா? பொருளாதார இயக்கிகளில் நாம் போதுமான அளவு கவனம் செலுத்துகிறோமா அல்லது நில பயன்பாட்டுத் திட்டமிடலுக்கு நம்மை குறைத்துக்கொள்கிறமோ? இயற்கை வளங்கள் மற்றும் அவை விதிக்கும் வரம்புகள் பற்றி நாம் போதுமான அளவு சிந்திக்கிறோமா? நமது நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் கவனம் செலுத்துகிறோமா அல்லது சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துகிறோமா? போன்றவை பதிலளிக்கப்பட வேண்டிய சில கேள்விகள் ஆகும்.


நமது திட்டமிடல் செயல்முறையுடன் தொடங்கலாம். தற்போதைய திட்டமிடல் அமைப்புகள் முதன்மையாக 1800ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டன. அப்போது பல நகரங்களில் பிளேக் தாக்கியது. சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய அவசியம் சிறந்த நகரத் திட்டமிடலுக்கு வழிவகுத்தது. எனவே, பொது சுகாதாரப் பிரச்சினைகளுக்கான பதிலாக திட்டமிடல் தொடங்கியது. இதன் அடிப்படையில் இன்றும் திட்டமிடல் பெரும்பாலும் நிலப் பயன்பாட்டில் கவனம் செலுத்துகிறது. மேலும், நிலத்தின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்தத் திட்டங்களிலிருந்து எந்தவொரு மாற்றத்திற்கும் பொதுவாக நீண்ட மற்றும் சிக்கலான ஒப்புதல் செயல்முறை தேவைப்படுகிறது.


 சிறந்த வாழ்க்கைச் சூழலுக்காக மட்டுமல்லாமல், மக்கள் முக்கியமாக வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்காக அங்கு செல்வதால், நகரங்கள் "வளர்ச்சி இயந்திரங்கள்" என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், நகர மேம்பாட்டிற்கு வழிகாட்டும் முக்கிய சட்ட ஆவணங்களான பெரிய திட்டங்கள் பொதுவாக கடந்த கால போக்குகளின் அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சியைத் திட்டமிடுகின்றன. பின்னர் அந்த எண்களின்படி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளைத் திட்டமிடுகின்றன. நகர்ப்புற திட்டமிடல் செயல்பாட்டில் நாட்டின் தற்போதைய விரைவான வளர்ச்சி இலக்குகளைச் சேர்க்க எந்த அமைப்பும் இல்லை. மேலும், இந்தத் திட்டங்களில் தெளிவான பொருளாதார பார்வை எதுவும் அமைக்கப்படவில்லை.


இது சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பெரிய பிரச்சனை. நகர திட்டமிடல் என்பது அடுத்த 20-50 ஆண்டுகளில் நகரத்தின் வளர்ச்சியை எது இயக்கும் என்பதைக் காட்டும் தெளிவான பொருளாதார தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்க வேண்டும். பின்னர், திட்டமிடுபவர்கள் எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் அடிப்படையில் மக்கள்தொகை வளர்ச்சியை மதிப்பிட வேண்டும். இது என்ன உள்கட்டமைப்பு மற்றும் நிலம் தேவை என்பதை தீர்மானிக்க உதவுகிறது. அத்தகைய பயிற்சி இல்லாத நிலையில், நில பயன்பாட்டுத் திட்டங்களுக்கு நம்பகமான அடிப்படை இல்லை.


இது மட்டும் அல்ல. வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள்தொகையுடன், நகரங்கள் இயற்கை வளங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. திட்டமிடல் இயற்கை வள பட்ஜெட் (natural resources budgeting) பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான விநியோகம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாற்றாக, வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படும் வகையில் தேவையை நிர்வகிக்க நகரங்களும் திட்டமிட வேண்டும். ஒவ்வொரு நகரமும் எவ்வளவு ஆதரிக்க முடியும் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. மேலும், திட்டமிடல் இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


அதேபோல, காலநிலை மாற்றத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவம் மற்றும் நமது உறுதிமொழிகளை பூர்த்தி செய்வதில் நகரங்கள் முன்னணியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நகரமும் குறைந்த உமிழ்வுகளுடன் வளர்ச்சியை செயல்படுத்துவதற்கான அதன் பாதைகளை விவரிக்கும் காலநிலை நடவடிக்கை திட்டத்தை (climate action plan) கொண்டிருக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான திட்டங்களும் அதில் இருக்க வேண்டும்.


பல இந்திய நகரங்கள் காற்று மாசுபாட்டின் தீவிர பிரச்சினைகளையும் எதிர்கொள்கின்றன. எனவே, நகரத் திட்டங்களில் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், குறிப்பாக காற்று மாசு மேலாண்மைத் திட்டம் ஆகியவை இருக்க வேண்டும். காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்துத் துறை பெரும் பங்களிப்பை அளிக்கிறது. தேசிய கொள்கைகள், நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கையாள்வதற்கான வழியாக பொது போக்குவரத்து மற்றும் மோட்டார் இல்லாத முறைகளின் அதிக பயன்பாட்டை பரிந்துரைத்துள்ளன. எனவே, ஒவ்வொரு நகரமும் ஒரு "விரிவான இயக்கத் திட்டத்தை" (comprehensive mobility plan) உருவாக்குவது முக்கியம். இது மிகவும் நிலையான பயண முறைகளை நோக்கி ஒரு மாற்றத்தை எவ்வாறு முன்மொழிகிறது என்பதைக் காட்டுகிறது.


எளிமையான நகர திட்டமிடல் பெரும்பாலும் நகர எல்லைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெரும்பாலான நகர்ப்புற வளர்ச்சி அதற்கு வெளியே நிகழ்கிறது. எனவே, பொருளாதார திட்டமிடல் நகரத்தை விட மிகப் பெரிய பகுதியை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எந்தவொரு நகர்ப்புறப் பகுதியின் பொருளாதாரமும் சுற்றியுள்ள கிராமப்புறங்களின் பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. இந்த தொடர்புகள் அங்கீகரிக்கப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதேபோல, இந்தியாவின் "வளர்ந்த இந்தியா" (Viksit Bharat) லட்சியங்களில் சிறிய நகரங்கள் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஏனெனில், பெரிய உற்பத்தி நடவடிக்கைகள் பெரிய நில தேவைகள் மிகவும் மலிவாக இருக்கும் சிறிய நகரங்களில் மட்டுமே வர முடியும். திட்டமிடல் செயல்முறை சிறிய நகரங்கள் ஒரு பெரிய பிராந்திய திட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் அங்கீகரிக்க வேண்டும்.


இன்று, நமது நகர திட்டமிடல் மிகவும் கால வாதியானதாக உள்ளது. பெரும்பாலும் நகரங்களின் நிர்வாக எல்லைக்குள் நில பயன்பாட்டு திட்டமிடலுக்கு மட்டும் தன்னை குறைத்து கொள்கிறது. தற்போதைய, சூழலில் இந்த நடவடிக்கை போதுமானதாக இருக்காது. குறிப்பாக, நமது தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்ட வளர்ச்சி இலக்குகள் மற்றும் உடனடி காலநிலை அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவை நவீன அணுகுமுறையை நோக்கி மாற வேண்டும். இதற்கு நமது தற்போதைய திட்டமிடல் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளில் மாற்றங்கள் தேவைப்படும். வரவிருக்கும் ஆண்டுகளில் நாட்டிற்கு தேவைப்படும் வகையான திறமையை உருவாக்க வேண்டிய நமது கல்வித் திட்டங்களில் மாற்றமும் தேவைப்படும். இவ்வாறு, வளர்நத் இந்தியாவிற்கான "பொருளாதார வளர்ச்சி மையங்களாக" (economic growth hubs) நமது நகரங்களை மறுபரிசீலனை செய்வதற்கான தெளிவான காரணமும் உள்ளது.


சுப்பிரமணியம் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், அகர்வால் நிதி ஆயோக்கின் புகழ்பெற்ற உறுப்பினராகவும், ISPPயின் பயிற்சிப் பேராசிரியராகவும் உள்ளார்.



Original article:

Share:

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா எவ்வாறு அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய ஒற்றுமையை அடைந்தது? -திலீப் பி சந்திரன்

 சுதந்திரத்திற்குப் பிறகு, ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்பி தேசிய ஒருங்கிணைப்பை நிறைவு செய்தல், இறையாண்மை கொண்ட அரசியலமைப்பை உருவாக்குதல், கல்வியை மறுவடிவமைத்தல் மற்றும் வெளிநாட்டு உறவுகளை மறுவரையறை செய்தல் வரை இந்தியா நீண்ட தூரம் வந்துவிட்டது. ஆனால் இந்தப் பயணம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது, சுதந்திர இந்தியா வழியில் என்ன தடைகளைத் தாண்டி வந்தது?


1947ஆம் ஆண்டு, பல நூற்றாண்டுகளாக பொருளாதார தேக்கநிலை, பலவீனமான அரசியல் அமைப்புகள், ஜனநாயகமின்மை, பிளவுபட்ட அரசியல், பரவலான கல்வியறிவின்மை, மேற்கத்தியமயமாக்கப்பட்ட கல்வி, சமூக சமத்துவமின்மை மற்றும் பரவலான வறுமை போன்ற காலனித்துவ ஆட்சியின் மரபுகளை வெல்ல இந்தியா தனது நீண்ட பயணத்தைத் தொடங்கியது.

கூடுதலாக, பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினை மற்றும் காலனித்துவ நீக்கத்துடன் ஏற்பட்ட வகுப்புவாத பதட்டங்கள், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்களை மேலும் அதிகப்படுத்தியது. அத்துடன் சுதந்திரப் போராட்டத்தின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்தியது.


சுதந்திர இந்தியாவின் தலைவர்களின் முதல் மற்றும் முக்கிய பணி, அதன் பரந்த மக்கள்தொகையின் பிராந்திய, மொழி, கலாச்சார மற்றும் சமூக பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதன் மூலமும், சமூக மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் ஒற்றுமைக்கு நாட்டை தயார்படுத்துவதன் மூலமும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்துவதாகும்.


அவ்வாறு செய்வதன் மூலம், தேசிய ஒருங்கிணைப்புக்கான வலுவான நிறுவனங்களுடன் கூடிய ஜனநாயகக் கட்டமைப்பைக் கட்டியெழுப்புவது அவசர கவனம் செலுத்த வேண்டியிருந்தது. சுதந்திர இந்தியா விரைவில் அல்லது பின்னர் சரிந்து சிதைந்துவிடும் என்று கணித்த சந்தேகவாதிகளின் அவநம்பிக்கையை இது நிராகரித்தது.


ஒரு இறையாண்மை கொண்ட அரசியலமைப்பை (sovereign Constitution) உருவாக்குதல்

சுதந்திர இந்தியாவிற்கு அதன் மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க, வெளிப்புறத் தலையீடு இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு அரசியலமைப்பு தேவைப்பட்டது. காலனித்துவ காலத்தில் கூட இந்தியத் தலைவர்கள் இதை ஆங்கிலேயர்களிடமிருந்து கோரினர். 1921ஆம் ஆண்டிலேயே, மகாத்மா காந்தி உண்மையான சுயராஜ்யம் மக்களின் விருப்பத்திலிருந்து வர வேண்டும், அது அவர்களின் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

1934-ல், M N. ராய் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை வரைவதற்கு ஒரு அரசியலமைப்புச் சபை (Constituent Assembly) தேவை என்று கோரிய முதல் தேசிய தலைவர் ஆவார். அடுத்த ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் இதை தனது அதிகாரப்பூர்வ கோரிக்கைகளில் சேர்த்தது. விவரங்கள் குறித்து கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அமைச்சரவை திட்டத்தின் (Cabinet Mission Plan) கீழ் 1946-ல் அரசியலமைப்பு சபை உருவாக்கப்பட்டது. சில உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், சிலர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த சபை தனது முதல் கூட்டத்தை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது. இதில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட 389 உறுப்பினர்களில் 207 பேர் கலந்து கொண்டனர். அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறை இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் வரை நீடித்தது. பி.ஆர் அம்பேத்கர் தலைமையில் தயாரிக்கப்பட்ட வரைவு அரசியலமைப்பு, இறுதியாக நவம்பர் 26, 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு அரசியலமைப்புச் சபையில் 114 நாட்கள் விவாதிக்கப்பட்டது.

முகவுரை (Preamble) மற்றும் 395 விதிகளை கொண்ட உண்மையான அரசியலமைப்பு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. இது ஜனவரி 26, 1930 அன்று முதன்முதலாகக் கடைபிடிக்கப்பட்ட முழுமையான சுதந்திரம்  (Purna Swaraj) நாளை நினைவுகூரும் வகையில் அமைந்தது. இந்த நீண்ட மற்றும் நுணுக்கமான செயல்முறையின் மூலம், அரசியலமைப்பின் வடிவமைப்பாளர்கள் இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட, ஜனநாயக குடியரசாக கற்பனை செய்தனர். கூட்டாட்சி கட்டமைப்பிற்குள் (federal structure) ஒரு நாடாளுமன்ற அரசாங்க மாதிரியை ஏற்றுக்கொண்டனர்.

துண்டு துண்டாக இருந்த இந்தியாவை படேலும் மேனனும் எவ்வாறு ஒருங்கிணைத்தனர்


அரசியலமைப்பு வரைவோடு சேர்த்து, பிரிட்டிஷ் இந்தியா பிரிக்கப்பட்ட பின்னர் 500 மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய சுதேச அரசுகளை (princely states) கொண்ட பகுதி பகுதியாக பிளவுபட்டு இருந்த  அரசியல் அமைப்பை ஒன்றிணைப்பது சுதந்திர இந்தியா தலைவர்களின் அரசியல் ஞானத்தின் மற்றொரு சோதனையாக இருந்தது.


பல பெரிய மாகணங்கள் சுதந்திரமாக இருக்க விரும்பின. சுதந்திரத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கீழ் இருந்த தங்கள் ஆட்சியை இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ மாற்ற முடியாது என்று அவர்கள் வாதிட்டனர். பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி இந்த யோசனையை ஆதரித்து, சுதந்திர நாடுகளாக மாற அனுமதித்தார். இந்தப் பகுதிகள் அனைத்தையும் இந்திய ஒன்றியத்திற்குள் கொண்டுவரும் பொறுப்பு சர்தார் வல்லபாய் படேலுக்கும் வி.பி. மேனனுக்கும் வழங்கப்பட்டது.


நிலைமை ஆபத்தானது என்றும், விரைவாகவும் சிறப்பாகவும் கையாளப்படாவிட்டால், இந்தியாவின் கடின உழைப்பால் வென்ற சுதந்திரம் மாநிலங்களால் இழக்கப்படலாம் என்றும் படேல் மேனனை எச்சரித்தார். மேலும், சுதேச அரசுகளின் ஆட்சியாளர்கள் ஒன்றியத்துடன் இணைந்தால் அவர்களுக்குப் பணம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.


பட்டேல் மற்றும் மேனனின் அரசியல் உத்திகளும் இராஜதந்திரமும் ஹைதராபாத், ஜுனாகத் மற்றும் ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்தையும் ஆகஸ்ட் 14, 1947ஆம் ஆண்டுக்குள் இந்திய ஒன்றியத்துடன் இணைய ஒப்புக்கொள்ள செய்தனர். அதன் பின்னர், ஜுனாகத் மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) மூலம் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. ஹைதராபாத் இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் இணைப்புக் கருவி (Instrument of Accession) மூலம் இந்தியாவுடன் இணைந்தது.


இந்தியாவின் பிராந்திய ஒருங்கிணைப்பு முடிந்தது.


1954ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிகாரிகள் பாண்டிச்சேரியை ஒப்படைத்தபோது பிராந்திய ஒருங்கிணைப்பு செயல்முறை (territorial integration) நிறைவடைந்தது. மேலும், 1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவிட்ட இராணுவத் தலையீட்டைத் தொடர்ந்து கோவா போர்ச்சுகலிடமிருந்து விடுவிக்கப்பட்டது.


ஒருங்கிணைப்பு செயல்முறையைச் சுற்றியுள்ள அரசியல் கொந்தளிப்பு, தேசிய சுதந்திரப் போராட்டத்தின் போது வாக்களிக்கப்பட்ட மொழிவாரி மாநிலங்களை (linguistic states) உருவாக்குவதை ஒதுக்கி வைக்க சுதந்திர இந்தியாவின் தலைவர்களை கட்டாயப்படுத்தியது. இருப்பினும், தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 58 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு பொட்டி ஸ்ரீராமுலு உயிரிழப்பு பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில் 1952-ல் ஆந்திரப் பிரதேசம் உருவாக்கத்தை அறிவிக்க நேருவை நிர்பந்தித்தது.


பசல் அலி ஆணையத்தின் (Fazl Ali Commission) பரிந்துரைகளைத் தொடர்ந்து, அரசாங்கம் 1956ஆம் ஆண்டு மாநில அமைப்புச் சட்டத்தை (State Organisation Act) இயற்றியது. இது 14 மாநிலங்களையும் 6 யூனியன் பிரதேசங்களையும் (Union Territories) நிறுவியது. இந்த மறுசீரமைப்பு நாடு பிளவுபடுவதைத் தடுக்கவும், அதை ஒற்றுமையாக வைத்திருக்கவும் உதவியது.


அரசியல் அறிஞர் ரஜினி கோத்தாரி, தலைவர்களுக்கு சந்தேகங்கள் இருந்தபோதிலும், சிலர் இது பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கவலைப்பட்டாலும், மறுசீரமைப்பு இந்தியாவின் அரசியல் வரைபடத்தை அதன் ஒற்றுமைக்கு பெரிய அளவில் தீங்கு விளைவிக்காமல் காலத்திற்கு ஏற்றதாக மாறியதை கவனித்தார்.


எதிர்கால கல்வியின் அடித்தளத்தை உருவாக்குதல்


அரசியலமைப்பு வரைவு மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு செயல்முறையோடு சேர்த்து, இந்தியாவின் கல்வி முறையிலும் கவனம் செலுத்தப்பட்டது. காலனித்துவக் கல்வி இந்தியாவின் பாரம்பரியக் கற்றலைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், இது முதன்மையாக கிழக்கிந்திய கம்பெனியின் வணிக நலன்களையும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மதகுருமார்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.


காலனித்துவக் கல்வி பெரும்பாலும் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளித்தது. எழுத்தாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்தியது. இது பொது மக்களுக்கு பலவீனமடைந்த கல்வியாக இருந்தது மற்றும் ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சியை புறக்கணித்தது.


கல்வி மற்றும் ஆராய்ச்சியில் போதுமான முதலீடு செய்யாததற்காக ஆங்கிலேயர்களை இந்தியத் தலைவர்கள் விமர்சித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா வலுவான தலைமையை உருவாக்குவதன்மூலம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முயன்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் 45வது பிரிவின் கீழ், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை சீர்திருத்துதல்


1948-49ஆம் ஆண்டில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான பல்கலைக்கழகக் கல்வி ஆணையம் (University Education Commission) சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி ஆணையம் ஆகும். இது பல்கலைக்கழகக் கல்வி முறையின் விரிவான மறுகட்டமைப்பை பரிந்துரைத்தது. அதேபோல, 1952ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலியார் ஆணையம் (Mudaliar Commission) இடைநிலைக் கல்வி முறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்களைப் பரிந்துரைத்தது.


1953ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (University Grants Commission (UGC)) நிறுவப்பட்டது.  இந்த விவகாரத்தில் இது முக்கிய சாதனையாக அமைந்தது. 1956ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அமைப்பாக மாறியதிலிருந்து, இந்தியா முழுவதும் பல்கலைக்கழகக் கல்வியின் ஒருங்கிணைப்பு, தீர்மானித்தல் மற்றும் தரங்களைப் பராமரித்தல் ஆகியவற்றிற்கு பல்கலைக்கழக மானியக் குழு பொறுப்பு வகித்து வருகிறது.


தொழில்நுட்பக் கல்வியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்ய, நேரு இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (Indian Institutes of Technology (IIT)) நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தார். 1950-ல் கரக்பூரில் இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கி வைக்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் நான்கு நிறுவப்பட்டன. அவை, 1958ஆம் ஆண்டில் பம்பாய் இந்திய தொழில்நுட்பக் கழகம், 1959ஆம் ஆண்டில் மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கழகம், 1959ஆம் ஆண்டில் கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் 1961ஆம் ஆண்டில் டெல்லியில் இந்திய தொழில்நுட்பக் கழகம் தொடங்கப்பட்டது. இந்த கழகங்கள் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டன.


வெளிநாட்டு உறவுகளின் உருவாக்க கட்டம்


வலுவான உள்நாட்டு அடித்தளங்களை உருவாக்குவதோடு, இந்தியத் தலைவர்கள் சர்வதேச உறவுகளிலும் கவனம் செலுத்தினர். குறிப்பாக, முதலாம் உலகப் போரின் போது, ​​பிரிட்டிஷ் இந்தியாவின் பிற நாடுகளுடனான உறவுகளில் இந்தியா தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது.  உலக நாடுகளின் சங்க (League of Nations) உறுப்பினராக இருந்தது மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labor Organisation (ILO)) நிர்வாகக் குழுவில் தீவிரப் பங்காற்றியது. 1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு தீர்மானத்தின் மூலம் சர்வதேச உறவுகளுக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. இது பின்னர் சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகளாக மாறியது.


1920ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், நேரு தலைமையில் காங்கிரசுக்கு ஒரு தனி வெளியுறவுக் கொள்கைத் துறை (foreign policy department) இருந்தது. அவரது விரிவான வெளிநாட்டுப் பயணங்களும் சர்வதேச அரசியலில் மிகுந்த ஆர்வமும் இந்தியாவின் எதிர்கால வெளி உறவுகளின் போக்கை கணிசமாக வடிவமைத்தன. ஆப்பிரிக்க-ஆசிய மாநாடுகளிலும், அணிசேரா இயக்கத்திலும் (Non-Aligned Movement (NAM)) அவர் ஆற்றிய பங்கு, உலக அரசியலில் இந்தியாவை ஒரு முக்கியக் குரலாக மாற்றியது.


இந்த வரலாற்று மரபின் மீது கட்டமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கொள்கைகள், காலனித்துவ எதிர்ப்பு, இனவெறி எதிர்ப்பு, அணிசேராமை, ஆப்பிரிக்க-ஆசிய ஒற்றுமை, அமைதி, அகிம்சை, ஆயுதக் குறைப்பு, ஜனநாயக உரையாடல், சர்வதேச அமைப்புகளுடனான ஒத்துழைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான முக்கியத்துவம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டன.


இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51, அரசாங்கம் மற்ற நாடுகளுடன் அமைதி, பாதுகாப்பு மற்றும் நியாயமான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று கூறுகிறது. 1954ஆம் ஆண்டு சீனாவுடனான பஞ்சசீல ஒப்பந்தமும் (Panchsheel Agreement) இந்தியா மற்ற நாடுகளுடன் அமைதியாக வாழ வழிகாட்டியது.



Original article:

Share:

சிறப்பு தீவிரத் திருத்தமுறை (SIR) செயல்படுத்தப்படுவதன் நோக்கம் என்ன? -ரோஷ்னி யாதவ், குஷ்பு குமாரி

 முக்கிய அம்சங்கள்: 


- 2002 - 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இருந்து கண்டுபிடிக்க முடியாத அனைவரும், இறுதிப் பட்டியலில் தொடர்ந்து இருப்பதற்கான தகுதியை நிரூபிக்க ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.


— தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, இந்த செயல்முறை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவுகள், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்படவுள்ளது.  அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.


— இந்த செயல்முறையின் இரண்டாம் கட்டத்தில், வாக்காளர்கள் சமர்ப்பிக்கக்கூடிய 11 ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் 13-ஆக விரிவுபடுத்தியுள்ளது. அதில் ஆதார் மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியலின் ஒரு பகுதியைச் சேர்த்துள்ளனர். ஜூலை 1, 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த அனைத்து நபரும் தங்களுக்கும் தங்கள் பெற்றோருக்குமான தகுதி ஆவணங்களை வழங்க வேண்டும். பீகார் சிறப்பு தீவிரத்திருத்த பதிவேட்டை பெற்றோரின் விவரங்களைக் காட்டப் பயன்படுத்தலாம். தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, அடையாளத்தை நிரூபிக்க ஆதாரைப் பயன்படுத்தலாம். ஆனால், அது குடியுரிமைக்கான சான்று அல்ல.


— பீகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்ததால், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத்திருத்தத்தை வெளியிட ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து திங்கட்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.


— சிறப்பு தீவிரத்திருத்ததின் இரண்டாம் கட்டத்திற்கு, கணக்கெடுப்பு காலம் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும். 5.33 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (booth level officers (BLOs)) வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புகிறார்கள். டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடப்படும் வரைவுப் பட்டியலில், படிவங்கள் பெறப்பட்ட அனைவரும் இடம்பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


UPSC Key: Special Intensive Revision, CJI successor, and PM-SHRI scheme



- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம் ஏன் இன்னும் சேர்க்கப்படவில்லை என்று கேட்டபோது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சிறப்பு விதிகள் உள்ளன என்றார். அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஏறக்குறைய முடிந்துவிட்டது. அசாமில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தனியாக நடத்த உத்தரவிடப்படும் என்று ​​தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.


— மாநிலங்கள் எவ்வளவு தயாராக உள்ளன என்பதன் அடிப்படையில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு தேர்தல்கள் நடைபெறும் மூன்று மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியைக் கணக்கிடாமல், கடந்த வாரம் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் கூட்டத்தின் போது இந்த செயல்முறை சரிபார்க்கப்பட்டது.


- பல ஆண்டுகளாக, கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்காளர் பட்டியல் துல்லியமாக இல்லை என்று புகார் கூறி வருகின்றன. இப்போது சிறப்பு தீவிரத்திருத்ததின் அவசியத்தை விளக்கினார்.


1951 முதல் 2004ஆம் ஆண்டு வரை எட்டு முறை சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) செய்யப்பட்டதாக அவர் கூறினார். கடைசி திருத்தத்திற்குப் பிறகு, மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்ததாலும், சில வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டதாலும், இறந்த வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்பதாலும், சில வெளிநாட்டினர் தவறாக சேர்க்கப்பட்டதாலும் வாக்காளர் பட்டியல் அதிக மாற்றங்கள் இருந்தன.

— பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களின் குடியுரிமையையும் சரிபார்க்க தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும், பீகாரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல்முறையையும் கேள்விக்குட்படுத்தும் ஒரு தொகுதி மனுக்கள் மூலம் தேர்தல் ஆணையம் வழங்கிய ஜூன் 24 உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா:?


— அரசியலமைப்பின் பிரிவு 324(1) இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதையும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதையும் மேற்பார்வையிடவும், வழிகாட்டவும், கட்டுப்படுத்தவும் அதிகாரம் அளிக்கிறது.



— 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act) பிரிவு 21(3)இன் கீழ், தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஒரு தொகுதிக்கோ அல்லது தொகுதியில் உள்ள  ஒரு பகுதிக்கோ வாக்காளர் பட்டியலை சிறப்பு முறையில் புதுப்பிக்க உத்தரவிடலாம்.


— 1960ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளின்படி, தேர்தல் ஆணையத்தால் தீர்மானிக்கப்பட்டபடி, தீவிரமாகவோ அல்லது பகுதியளவு அல்லது சிறிய மாற்றங்களுடன், புதுப்பிக்க முடியும். ஒரு தீவிர திருத்தத்தில், வாக்காளர் பட்டியல் முழுமையாக மீண்டும் செய்யப்படுகிறது. சுருக்க திருத்தத்தில், ஏற்கனவே உள்ள பட்டியலில் புதுப்பிப்புகள் அல்லது மாற்றங்கள் மட்டுமே செய்யப்படுகின்றன.


Original article:

Share:

கணிதம், கலாச்சார தேசியவாதத்திற்கான கருவி அல்ல -சி.பி. ராஜேந்திரன்

 `பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) இளங்கலை கணித பாடத்திட்ட வரைவு தேசியவாத சித்தாந்தத்தை மேலிருந்து கீழாக மாற்றுவதாகத் தோன்றுகிறது.


ஆகஸ்ட் மாதத்தில், பல்கலைக்கழக மானியக் குழு தேசிய கல்விக் கொள்கையின் (National Education Policy (NEP)) ஒரு பகுதியாக கணிதம் உள்ளிட்ட ஒன்பது பாடங்களுக்கான இளங்கலை பாடத்திட்ட வரைவை வெளியிட்டது. செப்டம்பர் மாதம், 900 இந்திய கணிதவியலாளர்கள் வரைவு கணிதப் பாடத்திட்டத்தை திரும்பப் பெறுமாறு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் கையெழுத்ததிட்ட மனுவை அளித்துள்ளனர்.


கவலைகள்


இந்த வரைவில் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கக்கூடிய கடுமையான குறைபாடுகள் இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். இது போதுமான முக்கிய தலைப்புகளை உள்ளடக்கவில்லை, அனைவரும் பயன்படுத்தும்  கணிதத்தை புறக்கணித்தது மற்றும் மோசமாக வடிவமைக்கப்பட்ட தேர்வுப் பாடங்களைக் கொண்டிருந்தது குறித்து அவர்கள் கவலைகளை எழுப்பினர். பண்டைய இந்திய அறிவு அமைப்புகள் தொடர்பான அரசியல் கொள்கைகளை ஊக்குவிப்பது குறித்தும் அவர்கள் முன்பதிவுகளை தெரிவித்தனர். பாடத்திட்ட வரைவில் பாரம்பரிய இந்திய நேரக் கணக்கீடு (Kala Ganpana, இந்திய இயற்கணிதம் (Bharatiya Bijganit), அக்னி வேள்வி அளவீட்டின் சூத்திரங்கள் (Shulba Sutra) போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.


புதிய கல்விக் கொள்கை மற்றும் வரைவு பாடத்திட்டத்தின் முக்கிய ஊக்குவிப்பாளர்களில் ஒருவரான மஞ்சுள் பார்கவா, 2014ஆம் ஆண்டு ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்றார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். செப்டம்பர் 4ஆம் தேதி அன்று புது டெல்லியில் நடந்த ஒரு உரையில் அவர் இது மற்ற கலாச்சாரங்களை குறைத்து மதிப்பிடுவது அல்லது உங்கள் சொந்த கலாச்சாரம் சிறந்தது என்பது பற்றியது அல்ல. ஒவ்வொரு நாகரிகமும் கணிதத்திற்கு முக்கியமான பங்களிப்புகளைச் செய்துள்ளது. மேலும், நாம் அவற்றைப் பற்றி பெருமைப்பட வேண்டும். நமது சொந்த சாதனைகளைக் கொண்டாடுவது இன்றைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும். "மேற்கத்திய கணிதத்தை" (western math) ஆதரிக்கும் சிலர் பெரும்பாலும் பிற கலாச்சாரங்களின் பெரிய கணித பங்களிப்புகளைப் புறக்கணிக்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்கள் கணிதத்தை  உலகளாவியதாகவும் வேறுபட்டதாகவும் கருதுகின்றனர். மேலும், மற்ற கலாச்சாரங்களின் முக்கிய பங்களிப்புகளைக் குறைத்து மதிப்பிடுவதற்கான ஒரு கருவியாக இதைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினார்.


இந்த விமர்சனத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும், அது ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது: கணிதத்தை ஒரு தேசியவாதக் கருத்தாக மாற்றுவதன் மூலம் நாம் இதேபோன்ற தவறைச் செய்கிறோமா? பாடத்திட்டத்தில் கணிதத்தின் "இந்திய" தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது அதன் உலகளாவிய தன்மையை சிதைக்கிறது. அதே நேரத்தில் மற்றவர்களின் முக்கிய பாத்திரங்களை புறக்கணிக்கிறது. இது காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட அதே சார்புடைய சிந்தனையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறது.


கணிதம் ஒரு கலாச்சார பின்னணியைக் கொண்டுள்ளது, ஆனால் அதன் உண்மைகள் உலகளாவியவை. 2 + 2 = 4 என்ற முன்மொழிவு ஒரு "மேற்கத்திய" சார்ந்த உண்மை அல்ல; அது ஒரு கணித கண்டுபிடிப்பாகும். அது யார் கண்டுபிடித்தாலும் பயன்படுத்தினாலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்தியாவில் உள்ள கலாச்சார தேசியவாதிகள் (cultural superiority) கணிதக் கண்டுபிடிப்புகள் தங்கள் சொந்த நாகரிகத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதைக் காட்ட முயற்சிக்கிறார்கள்.  மேலும், அவர்களின் கலாச்சாரம் சிறந்தது என்பதை நிரூபிக்க இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இது அவர்கள் விமர்சிக்கும் மேற்கத்திய காலனித்துவவாதிகள் செய்த அதே தவறை மீண்டும் செய்வதாகும். இரண்டு முயற்சிகளும் கணிதத்தை தங்கள் சொந்த கலாச்சாரத்திற்காக உரிமை கோர முயற்சிக்கிறார்கள். இது கணிதம் என்பது உண்மைக்கான ஒரு புறநிலை மற்றும் உலகளாவிய தேடல் என்ற கருத்தை பலவீனப்படுத்துகிறது.


தேசியப் பெருமையில் அதிக கவனம் செலுத்துவது உண்மைகளையும் கவனமாகப் படிப்பையும் புறக்கணிக்கக்கூடும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். "இந்தியாதான் எல்லாவற்றையும் முதலில் கண்டுபிடித்தது" என்று மக்கள் நம்பத் தொடங்குவார்களோ என்ற கவலை உள்ளது. இது உண்மையல்ல, அறிவியல் சிந்தனைக்கு எதிரானது. அரசியல்வாதிகள் சில நேரங்களில் இந்தப் பிரச்சினையை பற்றி பேசி இதன் வீரியத்தை அதிகரிக்கிறார்கள். உதாரணமாக, ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் சமீபத்தில் ஒரு பள்ளியில் ஒர் இந்து கடவுள் தான் விண்வெளிக்கு முதன்முதலில் பயணித்ததாக கூறினார். இது தவறான அறிவியல் அறிவிப்புகளின் தொடர்ச்சியான தொடரின் ஒரு பகுதியாகும்.


ஒரு கூட்டு முயற்சி


கணித சிந்தனையின் அடித்தளங்கள் பல கண்டங்களை கடந்து உருவானவை. இது பாபிலோனியன், எகிப்தியன், இந்திய, சீன, அரபிக், பெர்சிய மற்றும் கிரேக்க கலாச்சாரங்களுக்கிடையேயான பரிமாற்றங்களாலும் வடிவமைக்கப்பட்டது. வேதங்கள் உருவாவதற்கு முன்பே வாழ்ந்த ஹரப்பா குடியிருப்பாளர்களால் (Harappan settlers) கட்டப்பட்ட கட்டிடங்கள், நீர் வசதிகள் மற்றும் நீர்ப்பாதைகளில் (Aqueducts), பொறியியல் கணிதத்தின் தெளிவான வடிவங்களை காணலாம். எனவே, கல்லூரி பாடங்களில் கணிதத்தை வெறும் "வேத" வகைக்குள் மட்டும் கட்டுப்படுத்துவது வரலாற்றுக்கு எதிரானது மற்றும் கற்பித்தல் ரீதியாக பொருத்தமற்றதாகும். ஆரம்பகால கருத்துக்கள் பெரும்பாலும் முழுமையடையாமல் இருந்தன. இருப்பினும், அவர்கள் நவீன அறிவியல் முறைகளைப் பின்பற்றவில்லை. கணித வரலாற்றை சமூக அல்லது மதக் கோணங்களில் படிப்பது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், எந்தவொரு பாடமும் அனைத்து முக்கிய பண்டைய கணித மரபுகளையும் உள்ளடக்கி, அவை எவ்வாறு ஒன்றையொன்று பாதித்தன என்பதைக் காட்ட வேண்டும். இதை நவீன கணிதப் பாடத்திட்டங்களுடன் இணைக்கக்கூடாது.


பெரும்பாலான கணித ஆசிரியர்கள் இந்திய முறையில் அல்லாமல், பாரம்பரிய முறைகள் மற்றும் உள்ளடக்கத்தில் பயிற்சி பெற்றவர்கள். எனவே, ஆர்யபட்டா மற்றும் பிரம்மகுப்தா போன்ற பண்டைய இந்திய கணித நூல்களை நடுநிலை மற்றும் புறநிலை முறையில் கற்பிக்கத் தேவையான திறன்கள் போன்றவை அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.  வகுப்பறைக்குள் கருத்தியல் சார்புகளை கொண்டு வராமல் அவர்களால் கற்பிக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது. 


கலாச்சார பெருமையை ஊக்குவிக்க, மாணவர்களுக்கு கணிதத்தின் ஒரு வரலாற்றுப் பதிப்பை மட்டுமே அதன் அனைத்து குறைபாடுகளுடன் கற்பித்தால், அது அவர்களுக்கு நியாயமற்றது. அத்தகைய அணுகுமுறை கணிதம் என்பது உலகளாவிய மனித சாதனை என்ற பெரிய உண்மையை மறைக்கிறது. இது பல நூற்றாண்டுகளாக பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உருவாக்கப்பட்டது.


இந்த பண்டைய நூல்களைப் படிப்பதன் மூலம் மாணவர்கள் ஏற்கனவே ஒரு சாதாரண கணித பாடத்திட்டத்திலிருந்து கற்றுக்கொள்ளாத குறிப்பிட்ட கணிதத் திறன்களைப் பெறுவார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இது அவர்களின் சிக்கல் தீர்க்கும் திறன், தர்க்கரீதியான பகுத்தறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை மேம்படுத்த உதவுமா? அல்லது செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் தரவு அறிவியலால் இயக்கப்படும் உலகத்திற்கு அவர்களை சிறப்பாக தயார்படுத்த உதவுமா? போன்ற கேள்விகளை எழுப்புகிறது.


இந்த முயற்சி கல்வி முறையின் மீது ஒரு தேசியவாத சித்தாந்தத்தை மேலிருந்து கீழாக மாற்றுவதாகத் தோன்றுகிறது. இந்த விவாதம் என்ன கற்பிக்கப்படுகிறது என்பதைச் சார்ந்தது இல்லாமல், மாறாக கல்வியின் உண்மையான நோக்கம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படை தூணாக அறிவியல் சிந்தனையைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றியது ஆகும்.


C.P. ராஜேந்திரன் பெங்களூருவில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் துணைப் பேராசிரியராக உள்ளார்.



Original article:

Share: