சஞ்சார் சாத்தி, SIM-இணைப்பு மற்றும் இந்தியாவின் இணையப் பாதுகாப்பு முன்னெடுப்பு. -குஷ்பூ குமாரி

     சமீபத்தில், தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)), இணைய குற்றங்கள், நிதி மோசடி மற்றும் தொலைத்தொடர்பு வளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் என்ன, நாட்டில் அதிகரித்துவரும் இணைய மோசடி நிகழ்வுகள் குறித்து சமீபத்திய தரவுகள் எதை வெளிப்படுத்துகின்றன?


தற்போதைய செய்தி?


தொலைபேசி தயாரிப்பாளர்கள் அரசுக்குச் சொந்தமான சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை தொலைத்தொடர்புத் துறை (DoT) புதன்கிழமை ரத்து செய்தது. 2025ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு திருத்த விதிகளின் (Telecommunication Cybersecurity Amendment Rules) கீழ் வெளியிடப்பட்ட நவம்பர் 28 ரகசிய உத்தரவு, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் உட்பட இந்தியாவில் உள்ள திறன்பேசி நிறுவனங்களுக்கு, அரசு உருவாக்கிய சஞ்சார் சாத்தி எனப்படும் இணைய பாதுகாப்பு செயலியை முன்கூட்டியே நிறுவுமாறு உத்தரவிட்டது. இது டிஜிட்டல் உரிமைக் குழுக்களின் சாத்தியமான கண்காணிப்பு குறித்து மட்டுமல்லாமல், பெரிய மொபைல் போன் தயாரிப்பாளர்களின் வணிகங்களில் அதன் தாக்கம் குறித்தும் கவலைகளை அதிகரிக்க செய்தது.


எதிர்ப்பைத் தொடர்ந்து, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இந்த செயலி "விருப்பத்தேர்வு" என்றும், பயனர்கள் அதை நீக்கலாம் என்றும், இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் கூறியுள்ளார்.



சஞ்சார் சாத்தி செயலி பற்றி


ஜனவரியில் தொடங்கப்பட்ட சஞ்சார் சாத்தி செயலி, சந்தேகத்திற்குரிய மோசடி தொடர்பு மற்றும் தொலைந்து போன/திருடப்பட்ட மொபைல் போன்களைப் பற்றி புகாரளிக்கவும், வங்கிகள்/நிதி நிறுவனங்களின் நம்பகமான தொடர்பு விவரங்களைச் சரிபார்க்கவும் பயனர்களை அனுமதிக்கிறது.


செயலி பின்வரும் சேவைகளைச் செய்கிறது:


இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளை சர்வதேச மொபைல் கருவி அடையாளங்களின் (International Mobile Equipment Identity (IMEI)) அடிப்படையில் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.


 தொலைபேசிகளின் IMEI அடிப்படையில், இந்தியாவில் எங்கும் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட தொலைபேசிகளைக் கண்காணித்துத் தடுக்க அனுமதிக்கிறது.


 தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட மொபைல் போன்களைத் தடுக்கும் விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குகிறது.


திருடப்பட்ட அல்லது தொலைந்து போன சாதனங்களைக் கண்டுபிடிப்பதில் காவல் அதிகாரிகளுக்கு உதவ முடியும். இது கள்ளச் சந்தையில் போலி தொலைபேசிகள் (counterfeit phones) நுழைவதைத் தடுக்கக்கூடும்.


 சாக்சு (Chakshu) விருப்பத்தேர்வு பயனர்கள் சந்தேகிக்கப்படும் மோசடி தகவல்தொடர்புகளை அழைப்புகள், குறுஞ்செய்தி அல்லது வாட்சாப் போன்ற தளங்கள் வழியாகப் புகாரளிக்க அனுமதிக்கிறது. இருப்பினும், இணைய குற்றங்களைப் புகாரளிக்க சாக்சு-வைப் பயன்படுத்த முடியாது என்று எச்சரிக்கிறது.


இன்றைய கட்டுரையில், நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோசடி வழக்குகளைத் தீர்க்க அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

முக்கிய அம்சங்கள்:


1. சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி: சமீபத்தில், பயன்பாட்டிற்கு பதிவுசெய்ய பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லாமல் பயனர்கள் தங்கள் சேவைகளை அணுகுவதைத் தடுக்க இணையவழி செய்தித் தளங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வழி இந்த உத்தரவு என்று துறை கூறியுள்ளது.


இந்த உத்தரவுகள் வாட்ஸாப், டெலிகிறாம், சிக்னல், அரட்டை, ஸ்னாப்சாட், ஷேர்சாட், ஜியோசாட் மற்றும் ஜோஷ் போன்ற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த தளங்கள் இப்போது 90 நாட்களுக்குள், அவற்றின் சேவைகள் தங்களுடன் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் சந்தாதாரர் அடையாள தொகுதியுடன் "தொடர்ந்து" இணைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சாதனத்தில் சந்தாதாரர் அடையாள தொகுதி இல்லையென்றால் அவர்கள் அதை பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது. தொழில்நுட்ப ரீதியாக, இது சிம் சந்தாதாரர் அடையாள தொகுதி (Subscriber Identification Module (SIM)) பிணைப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. WhatsApp வலை போன்ற இணைக்கப்பட்ட சேவைகள் குறைந்தது ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே வெளியேற வேண்டும்.


2. மொபைல் எண் சரிபார்ப்பு (Mobile Number Validation (MNV)) தளம்: தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பைப் புதுப்பித்துள்ளது. தொலைத்தொடர்பு இணைய பாதுகாப்பு (Telecommunication Cyber Security (TCS)) திருத்த விதிகள், 2024 மூலம், மொபைல் எண் சரிபார்ப்பு (MNV) தளத்தை முறைப்படுத்தியது. இது அடையாள மோசடி மற்றும் நிதி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் "சட்டவிரோதமான ஆள்மாறாட்டக் கணக்குகளின்" (Mule accounts) பெருக்கத்தை சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு மொபைல் எண் உண்மையிலேயே கொடுக்கப்பட்ட சேவையின் பயனருக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த சேவை வழங்குநர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான, பரவலாக்கப்பட்ட மற்றும் தனியுரிமை உணர்வுள்ள வழிமுறையை வழங்குகிறது.



சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (International Mobile Equipment Identity (IMEI))

சர்வதேச மொபைல் உபகரண அடையாளம் (IMEI) என்பது ஒரு தனித்துவமான 15 இலக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் தொலைபேசியின் தனித்துவமான அடையாளத்தைப் போன்றது. நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது அல்லது உங்கள் செல்லுலார் சேவை வழங்குநர் மூலம் அழைக்கும்போது, ​​இந்த எண் உங்கள் சாதனத்தின் அடையாளத்தைச் சரிபார்க்கப் பயன்படுகிறது. உங்களிடம் இரட்டை SIM தொலைபேசி இருந்தால், ஒவ்வொரு ஸ்லாட்டுக்கும் தனித்தனியே இரண்டு IMEI எண்கள் இருக்கும்.

3. மறுவிற்பனை சாதனங்களில் IMEI-ஐ கட்டாயமாக சரிபார்ப்பு செய்தல்: மறுவிற்பனை அல்லது புதுப்பிக்கப்பட்ட சாதனங்களில் கையாளும் நிறுவனங்கள், மறுவிற்பனை செய்வதற்குமுன், ஒவ்வொரு சாதனத்தின் சர்வதேச மொபைல் உபகரண அடையாள (International Mobile Equipment Identity (IMEI)) எண்ணையும் கருப்புப் பட்டியலில் உள்ள IMEI-களின் மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்று திருத்த விதிகள் கோருகின்றன. இது வாங்குபவர்களை கவனக்குறைவாக சட்டவிரோத அல்லது சமரசம் செய்யப்பட்ட சாதனங்களை வாங்குவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் திருடப்பட்ட மொபைல் உபகரணங்களைக் கண்காணிப்பதில் சட்ட அமலாக்கத்தை ஆதரிக்கிறது.


4. தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் (Telecom Identifier User Entity (TIUE)): தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனங்கள் (TIUEs) என்ற புதிய இணக்கப் பிரிவை தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications (DoT)) சேர்த்துள்ளது. இதில் மொபைல் எண்கள், IP முகவரிகள் மற்றும் IMEI எண் போன்ற தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை நம்பியிருக்கும் நிறுவனங்கள் அங்கீகாரத்திற்காகவோ அல்லது வங்கிகள், நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், மின்வணிகத் தளங்கள் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவோ அடங்கும். இணைய மோசடிகளைச் சமாளிப்பதில் அதிக வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, தொலைத்தொடர்பு-அடையாளங்காட்டி தரவை அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது.


5. இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)): 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம், நாட்டில் இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும், இணையக் குற்றங்களுக்கு எதிராகப் போராட ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 2024-ல், நான்கு இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மைய தளங்கள் —இணைய மோசடி குறைப்பு மையம் (Cyber Fraud Mitigation Centre (CFMC)), ‘Samanvaya’ தளம், ஒரு இணைய கமாண்டோஸ் திட்டமும் சந்தேகப் பதிவேடும் (Suspect Registry) தொடங்கப்பட்டன. இது இணைய குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.


6. வங்கிகளுக்கான ‘bank.in’ டொமைன்: அதிகரித்து வரும் டிஜிட்டல் கட்டண மோசடியை எதிர்த்துப் போராட, இந்திய ரிசர்வ் வங்கி பிப்ரவரியில் இந்திய வங்கிகளுக்காக ‘bank.in’ என்ற சிறப்பு இணைய டொமைனை அறிமுகப்படுத்தியது. இணைய அச்சுறுத்தல்களைக் குறைப்பதும், இந்தியாவின் டிஜிட்டல் வங்கியில் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


7. புதிய e-Zero FOR: இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் (Indian Cyber Crime Coordination Centre (I4C)) அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மின்னணு பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (Electronic Zero First Information Report) 1930 என்ற உதவி எண் அல்லது தேசிய இணையக் குற்ற அறிக்கையிடல் தளம் (National Cybercrime Reporting Portal (NCRP)) பதிவு செய்யப்படும் ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி மதிப்புள்ள இணைய நிதி குற்ற புகார்களை தானாகவே முதல் தகவல் அறிக்கைகளாக மாற்றும் முயற்சி இது.


டிஜிட்டல் இந்தியா திட்டம்மற்றும் பிற முயற்சிகள் தொடங்கப்பட்டதன் மூலம், 86%-க்கும் மேற்பட்ட இந்திய குடும்பங்கள் இப்போது இணைய இணைப்பை பெற்றுள்ளன. ஆனால், ஆன்லைனில் அதிகமான மக்கள் இருப்பதால், டிஜிட்டல் மோசடி மற்றும் இணைய குற்றங்களும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் அதிகரித்துவரும் இந்த இணைய குற்றங்கள் குறித்த சமீபத்திய எண்கள் இங்கே.


நாட்டில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்


1. வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் இணைய குற்றங்கள் 31.2% அதிகரித்துள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் மோசடி, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளது.


2. ‘இந்தியாவில் குற்றம்’ என்ற அறிக்கையின்படி, இணைய குற்றப் பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2022-ல் பதிவு செய்யப்பட்ட 65,893 வழக்குகளிலிருந்து 2023-ல் 86,420-ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பிரிவின் கீழ் குற்ற விகிதம் 2022-ல் 4.8%-லிருந்து 2023-ல் 6.2%-ஆக அதிகரித்துள்ளது.


3. உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் (NCRP) தொகுத்த தரவுகளின்படி, இந்தியாவில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி ரூ.33,165 கோடி மோசடி செய்துள்ளனர். இதில் 2024ஆம் ஆண்டில் ரூ.22,812 கோடியும் அடங்கும்.


4. 2021ஆம் ஆண்டில் ரூ.551 கோடியும், 2022ஆம் ஆண்டில் ரூ.2,306 கோடியும், 2023ஆம் ஆண்டில் ரூ.7,496 கோடியும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாக தரவு காட்டுகிறது. 2 அடுக்கு மற்றும் 3 அடுக்கு நகரங்கள் இணைய குற்றங்களின் முக்கியப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


5. பிப்ரவரி 2025-ல் காஸ்பெர்ஸ்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மூன்று இணைய பயனர்களில் ஒருவர் கடந்த ஆண்டு ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கண்டறியப்பட்டது. ஜனவரி மற்றும் டிசம்பர் 2024-க்கு இடையில், இந்தியாவில் உள்ள பயனர்களின் கணினிகளில் 4,43,72, 823 இணையம் வழியாக இணைய அச்சுறுத்தல்களை நிறுவனம் கண்டறிந்துள்ளது.


Original link:

Sanchar Saathi, SIM-Binding and India’s Cybersecurity push.


Share:

நாடாளுமன்றத்தில் தேர்தல் சீர்திருத்த விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் தேர்தல் செயல்முறை குறித்த ஒரு பார்வை - திலீப் பி சந்திரன்

 டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் மக்களவையில் நடைபெறும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம், சில முக்கியமான கேள்விகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்கள் பல்வேறு சட்ட நிறுவனங்களிடையே தேர்தல் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை எவ்வாறு வழங்குகின்றன? பல அடுக்கு தேர்தல் நிர்வாக அமைப்பு தேர்தல் நம்பகத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதா?


இரண்டு நாட்கள் கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் அரசாங்கமும், எதிர்க்கட்சியும் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்க ஒப்புக்கொண்டன. ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் (EC) நடத்திவரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) குறித்து எதிர்க்கட்சிகள் அவையில் கவனத்தைக் கொண்டுவரும்.


டிசம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் மக்களவையில் நடைபெறும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம், சில முக்கியமான கேள்விகளுக்கு கவனத்தை ஈர்க்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்கள் பல்வேறு சட்ட நிறுவனங்களிடையே தேர்தல் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை எவ்வாறு வழங்குகின்றன? தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் செயல்முறைகள் யாவை? அரசியலமைப்பு வடிவமைப்பு, சட்டப்பூர்வ ஆணைகள் மற்றும் நடைமுறை பாதுகாப்புகளை ஒருங்கிணைக்கும் பல அடுக்கு தேர்தல் நிர்வாக அமைப்பு, தேர்தல் நம்பகத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்யும் அளவுக்கு வலுவாக உள்ளதா?


பீகாரில் சமீபத்தில் நடந்த தேர்தல், வலுவான நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற ஆயத்த பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தியாவின் தேர்தல் முறை அதன் அரசியலமைப்பு கட்டமைப்பை மட்டுமல்ல, வலுவான நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கள அளவிலான நடவடிக்கைகளையும் சார்ந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.


இந்திய அரசியலமைப்புச் சட்டம், அனைத்துத் தேர்தல்களையும் மேற்பார்வையிட, இயக்க மற்றும் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு (Election Commission (EC)) அதிகாரத்தை வழங்குகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் 1951, தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தேர்தல் கடமைகளை ஒதுக்குகின்றன. இந்த அதிகாரிகள் வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல், வாக்குப்பதிவு நடத்துதல் மற்றும் வாக்குகளை எண்ணுதல் உள்ளிட்ட தேர்தல்களை நிர்வகிக்கின்றனர்.


அரசியலமைப்பு மற்றும் அடிப்படைச் சட்டம்


அரசியலமைப்பின் பகுதி XV-ல் உள்ள பிரிவு 324, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலகங்களுக்கு தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. இருப்பினும், அரசியலமைப்புச் சட்டம் தேர்தல் நிர்வாகிகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கவில்லை. மேலும், தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை கோடிட்டுக் காட்டவில்லை.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்


இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, பிரிவு 327, தேர்தல்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி மறுவரையறை மற்றும் தேர்தல் நிர்வாகத்தின் பிற தேவையான அம்சங்கள் போன்றவற்றிலும், அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு சட்டங்களை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. அதன்படி, நாடாளுமன்றம் 1950 மற்றும் 1951-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தை இயற்றியது.


1950-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவை இட ஒதுக்கீடு, வாக்காளர்களின் தகுதி, வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் பராமரித்தல், தேர்தல்களை நடத்துதல், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி மற்றும் தகுதி நீக்கம், தேர்தல் குற்றங்கள், தேர்தல் தகராறுகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை வழங்குகிறது.


தேர்தல்களை நடத்துவதை நிர்வகிக்கும் நடைமுறைகள், கட்டங்கள் மற்றும் நிர்வாக வழிமுறைகள் பற்றிய விரிவான விளக்கத்தை இந்தச் சட்டம் வழங்குகிறது. இதன்மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் என்ற அரசியலமைப்புரீதியான பார்வையை செயல்படுத்துகிறது.


தேர்தல் அதிகாரிகளின் கடமைகள்


1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பகுதி IV, தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கடமைகளை வகுக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை துணைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் போன்ற மூத்த அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன.


தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (Chief Electoral Officers (CEO)) : தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கிறது. தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, மாநிலங்களுக்குள் தேர்தல்களை நடத்துவதற்கு தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பொறுப்பு வகிப்பர்.


மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (District Election Officers (DEO)) : மாவட்ட அளவில், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEO) தங்கள் அதிகார வரம்பிற்குள் தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுவதற்கு பொறுப்பாவார். இது மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் (CEO) மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.


தேர்தல் அதிகாரிகள் (Returning Officers (RO)) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் (Assistant Returning Officers (ARO)) : தேர்தல் ஆணையம், அந்தந்த மாநிலத்துடன் கலந்தாலோசித்து, ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் அதிகாரிகள் (RO) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளை (ARO) நியமிக்கிறது. வேட்புமனு தாக்கல் முதல் முடிவுகள் அறிவிப்புவரை தங்கள் தொகுதிகளில் முழு தேர்தல் செயல்முறையையும் அவர்கள் நிர்வகிக்கிறார்கள்.


1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட முறையில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது தேர்தல் அதிகாரியின் (RO) பொதுவான கடமையாகும்.

மேற்பார்வையாளர்கள் (Observers) : கூடுதலாக, ஒரு தொகுதி அல்லது தொகுதிகளின் குழுவில் தேர்தல்களை நடத்துவதை மேற்பார்வையிடவும் அறிக்கை செய்யவும் தேர்தல் ஆணையம் மேற்பார்வையாளர்களை நியமிக்கிறது. கள ஆய்வில் அவர்களின் இருப்பு தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் உறுதி செய்கிறது.


தலைமை அதிகாரிகள் (Presiding Officers (PO)) : ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச் சாவடிகளை நியமிப்பது மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் (DEO) கடமையாகும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் நியாயமான மற்றும் ஒழுங்கான வாக்குச் சாவடியை நடத்துவதற்கு தலைமை அதிகாரிகளின் (PO) பொறுப்பு. வாக்குச் சாவடியில் மிக முக்கியமான அதிகாரியாக, வாக்குச் சாவடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தலைமை அதிகாரிகள் (PO) முழு சட்டப்பூர்வ அதிகாரங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும், வாக்குச் சாவடியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாவார்கள் ஆவர்.


வாக்குச் சாவடிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறை அதிகாரியுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தலைமை அதிகாரிகள் (PO) மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) இடையேயான இணைப்பாக துறை அலுவலர் செயல்படுகிறார். இது தேர்தல் நாளில் வாக்குப்பதிவு சீராக நடைபெறுவதை உறுதி செய்கிறது.


வாக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஏன் பயிற்சி அவசியம்?


வாக்குச்சாவடியை அமைத்தல், உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்களுக்கு வாக்களிப்பு செயல்முறையை நிரூபித்தல், மாதிரி வாக்குப்பதிவு நடத்துதல், வாக்குச்சாவடியின் இரகசியத்தன்மை மற்றும் அமைதியான நடத்தையை உறுதிசெய்தல், வாக்குச்சாவடியின் முடிவில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் கணக்கைத் தயாரித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic Voting Machine (EVM)) மற்றும் பிற பொருட்களை சீல் வைத்து பாதுகாத்தல், வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுப் பொருட்களை சேகரித்து தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) திருப்பி அனுப்புதல், வாக்குச்சாவடிகளில் அறிவிப்புகளைச் செய்தல் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு (RO) சம்பவங்களை அறிவித்தல் ஆகியவை தலைமை அதிகாரிகளின் (PO) கடமைகளில் அடங்கும்.

தேர்தல்களின் சமீபத்திய விதிகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM), வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (Voter verifiable paper audit trail (VVPAT)) மற்றும் பிற தேர்தல் பொருட்களின் செயல்பாடு குறித்து தலைமை அதிகாரிகள் (PO) அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், சிறிதளவு தவறும் முழு நடைமுறையையும் சீர்குலைக்கக்கூடும். இந்த காரணத்திற்காக, தலைமை அதிகாரிகள் (PO) பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது கட்டாயமாகும்.


தேர்தல் ஆணையம், வரவிருக்கும் தேர்தல்களுக்குத் தயாராவதற்கு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களையும், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் ஆணையர்களுக்கான இணையவழியில் விளக்க அமர்வுகளையும் நடத்துகிறது. பணியாளர்கள் கட்டாயப் பயிற்சியில் கலந்து கொள்ளத் தவறுவது தேர்தல் கடமையை மீறும் ஒரு கடுமையான செயலாகக் கருதுகிறது.


நியாயமான தேர்தலுக்கு வாக்குச் சாவடி அதிகாரிகள் ஏன் ஒருங்கிணைந்தவர்களாவர்?


வாக்கெடுப்பு அதிகாரி வாக்குச்சாவடியை நிர்வகிக்க உதவுவதற்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEO) போதுமான வாக்குச்சாவடி அதிகாரிகளை நியமிக்கிறார்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வாக்குச்சாவடி அலுவலர் இல்லாவிட்டால், வாக்குச்சாவடி அலுவலர்கள் தலைமை அலுவலரின் கடமைகளை ஏற்க வேண்டும்.


ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலருக்கும் தெளிவான பொறுப்புகள் உள்ளன. அவை,


  • முதல் வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் பட்டியலின் குறிக்கப்பட்ட நகலை நிர்வகிக்கிறார்;

  • இரண்டாவது வாக்குச்சாவடி அலுவலர் அழியாத மை பூசுவதற்கும் வாக்காளர் பதிவேட்டைப் பராமரிப்பதற்கும் பொறுப்பு;

  • மூன்றாவது வாக்குச்சாவடி அலுவலர் வாக்காளர் சீட்டை வழங்குகிறார்;

  • நான்காவது வாக்குச்சாவடி அலுவலர் மின்னணு வாக்குச்சாவடி இயந்திரத்தின் கட்டுப்பாட்டு அலகை இயக்குகிறார்.


தேர்தல் அதிகாரிகள் (RO) மற்றும் உதவித் தேர்தல் அதிகாரிகள் (ARO) தலைமை அதிகாரிகள் (Presiding Officers), வாக்குச்சாவடி அலுவலர்கள் (Polling Officers) மற்றும் நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட வேறு எந்த அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்திற்குப் பணியமர்த்தப்பட்டதாகக் கருதப்படுவார்கள். இந்தப் பணியமர்த்தம் தேர்தல் அறிவிப்பிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படும்வரை நீடிக்கும்.


திலீப் பி. சந்திரன், கேரளாவின் சாலக்குடியில் உள்ள பி.எம். அரசு கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.


original link:

Amid electoral reforms debate in Parliament, a look at India’s election process


Share:

புடினின் தீவிர அணு மின் விற்பனை முயற்சி : சிறிய மட்டு உலைகள் (SMR), புதிய தலைமுறை பெரிய அணு உலைகள், இந்தியாவில் தொடர் உற்பத்தி -அனில் சசி

 இரஷ்ய அணுசக்தித் துறையைச் சேர்ந்த ஒரு பெரிய குழுவானது, அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையின்போது வர உள்ளது. ரஷ்யா என்ன வழங்குகிறது?, இந்தியாவுக்கு என்ன தேவை? என்பதை கீழே குறிப்பிட்டுள்ளது


ரஷ்ய அணுசக்தி நிறுவனமான, ரோசாட்டம் அரசு நிறுவனம் (Rosatom State Corporation), இந்தியாவில் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்காக அதன் சிறிய மட்டு உலைகளை (small modular reactors (SMR)) வலுவாக வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் முக்கிய பகுதியாக, அதன் பெரிய புதிய தலைமுறை அணுசக்தி உலை அடிப்படையிலான திட்டங்களை (large new-generation atomic power reactor-based projects) நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும்.


இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் இந்திய வருகையின்போது கணிசமான அளவில் அணுசக்தித் தொழில்துறை குழு ஒன்று வர உள்ளது. மேலும், இந்திய அணுசக்தித் துறையின் தலைவர் அஜித் குமார் மொஹந்தி மற்றும் மாஸ்கோவை தளமாகக் கொண்ட ரோசாட்டம் அரசு நிறுவனத்தின் (Rosatom State Corporation) இயக்குநர் ஜெனரல் அலெக்ஸி லிகாச்சேவ் இடையே நவம்பர் 10 அன்று மும்பையில் நடைபெற்ற பணிக் கூட்டத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரஷ்யாவின் சிறிய மட்டு உலைகள் (small modular reactors (SMR)) முன்மொழிவு


சிறிய மட்டு உலைகளின் (SMR) புதிய துறையில் ரஷ்யா முன்னணியில் உள்ளது. இவை பெரும்பாலான பாரம்பரிய அணுசக்தி உலைகளின் உற்பத்தித் திறனில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்ட மேம்பட்ட அணு உலைகளாகும். இந்த சிறிய அளவுடன் கூட, அவை இன்னும் அதிக அளவு குறைந்த கார்பன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, ​​இரண்டு சிறிய மட்டு உலைகள் (SMR) திட்டங்கள் உலகளவில் செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளன. அவற்றில் ஒன்று சிறிய மட்டு உலைகள் (SMR) ‘அகாடெமிக் லோமோனோசோவ் மிதக்கும் மின் அலகு’ (Akademik Lomonosov floating power unit) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 35 மெகாவாட் (மெகாவாட் மின்சாரம்) இரண்டு தொகுதிகளைக் கொண்டுள்ளது மற்றும் மே 2020-ல் வணிக ரீதியான செயல்பாட்டைத் தொடங்கியது. லோமோனோசோவ் (Lomonosov) என்பது தானாகவே நகர முடியாத ஒரு மின்படகு ஆகும். இது மிதக்கும் அணுமின் நிலையமாகவும் செயல்படுகிறது. இது பெவெக் துறைமுகத்தில் (Pevek harbour) நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆர்க்டிக் துறைமுக நகரமான பெவெக்கிற்கு வெப்பத்தை வழங்குகிறது. இது பிராந்திய சௌன்-பிலிபினோ மின் அமைப்புக்கும் (Chaun-Bilibino power system) மின்சாரத்தை வழங்குகிறது. இது உலகின் வடக்கே உள்ள அணு மின் நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது.


மற்றொரு செயல்பாட்டு சிறிய மட்டு உலைகள் (SMR) என்பது சீனாவில் HTR-PM எனப்படும் ஒரு செயல் விளக்கத் திட்டமாகும். இது டிசம்பர் 2021-ல் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு டிசம்பர் 2023-ல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சிறிய மட்டு உலைகள் (SMR) தலைமைத்துவத்திற்கான போட்டியில் உள்ள பிற உலகளாவிய நிறுவனங்களில் நியூ ஜெர்சியை தளமாகக் கொண்ட ஹோல்டெக் இன்டர்நேஷனல் (Holtec International), ரோல்ஸ் ராய்ஸ் SMR, நுஸ்கேலின் VOYGR SMR, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக்கின் AP300 SMR மற்றும் GE-ஹிட்டாச்சியின் BWRX-300 ஆகியவை அடங்கும்.


கூடங்குளம் திட்ட விரிவாக்கம்


நவம்பர் மாதம் சந்திப்பின் போது, ​​இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமும், இரஷ்யா-இந்தியா எரிசக்தி ஒத்துழைப்பின் முதன்மைத் திட்டமான தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் திட்டத்தின் (Kudankulam nuclear power project (KKNPP)) முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். இரஷ்யாவின் முந்தைய தலைமுறை 'VVER-1000' உலை அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் திட்ட (KKNPP) அலகுகள் 1 மற்றும் 2 முறையே 2013 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு தற்போது இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு மின்சாரம் வழங்குகின்றன. அலகு-3-ல், முன்-ஆணையிடும் நடவடிக்கைகள் (pre-commissioning activities) நடைபெற்று வருகின்றன. இதில், திறந்த அணு உலையில் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிப்பது போன்ற முக்கியமான மைல்கற்களுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மேலும், அலகு-4-ல் கட்டுமானம் மற்றும் நிறுவுவதன் பணிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், மூன்றாம் கட்டமானது அலகு-5 மற்றும் 6 கட்டுமானத்தில் தீவிரமாக உள்ளன. இந்தத் திட்டம் மொத்தம் ஆறு மின் அலகுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அனைத்திலும் ‘VVER-1000’ அணு உலைகளைக் கொண்டிருக்கும். ஒருங்கிணைந்த நிறுவப்பட்ட திறன் 6000 MWe-ஆக இருக்கும்.

மாஸ்கோவிற்கான முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஒன்று, புதிய தலைமுறை 'VVER-1200' உலை மாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட, இந்தியாவில் ரஷ்ய வடிவமைப்பின் உயர்திறன் கொண்ட அணுமின் நிலையங்களின் தொடர் கட்டுமானத்திற்கான வாக்குறுதியாகும். 'VVER-1200' உலை அலகுகளைக் கொண்ட இந்தியாவில் ஒரு புதிய அணுமின் நிலையத்திற்கான தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் ரஷ்ய அதிகாரிகள் தரப்பால் முன்மொழியப்பட்டு வருகின்றனர். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமெரிக்காவிலிருந்து ஒரு குழு அடுத்த வாரம் வருவதால், புதிய பெரிய ஒப்பந்தங்கள் உடனடியாக கையெழுத்தாகாமல் போகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.


வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள், பெரிய மற்றும் சிறிய அளவிலான அணுமின் நிலையங்களுக்கான திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அணு எரிபொருள் சுழற்சியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இந்த கூட்டாண்மையின் விரிவாக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும். அரசாங்கத்தின் இந்தியாவில் தயாரிப்போம் முன்முயற்சியின் (Make-in-India initiative) உந்துதலுக்கு ஏற்ப, இந்தியாவில் கருவிகள் உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Ltd (RVNL)) போன்ற பயன்பாடுகள், ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் பாதை (Rishikesh-Karnaprayag line) உட்பட அதன் நான்கு செயல்பட்டுவரும் இரயில் திட்டங்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறிய மட்டு உலைகளை (SMR) பயன்படுத்த ரோசாட்டோனுடன் (Rosatom) ஏற்கனவே விவாதித்து வருகின்றன.


மிதக்கும் N-ஆற்றல் திட்டம்


இந்தியாவில் ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட சிறிய மட்டு உலைகளை (SMR) உருவாக்குவது குறித்து, இரு நாடுகளும் ஒத்துழைப்பின் புதிய பகுதியைப் பற்றி விவாதிக்கின்றன. ஏப்ரல் 2024-ல், ரோசாட்டம் அதன் இந்தியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு நிறுவனத்தின் மிதக்கும் அணுசக்தி தீர்வுகள் பற்றிய தகவல்களை வழங்கியது. இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற உலகின் ஒரே நாடு ரஷ்யா ஆகும்.


சிறிய மட்டு உலைகள் (SMR) தொழில்நுட்பங்கள் வரையறுக்கப்பட்ட கட்ட உள்கட்டமைப்புடன் (grid networks) தொலைதூரப் பகுதிகளுக்கும், தனிப்பட்ட தொழில்துறை நிறுவனங்களுக்கும் சுத்தமான மின்சாரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. எரிசக்தி தேவையுள்ள தரவு மையங்கள் மற்றும் அடிப்படை மின்உற்பத்தி திறனை விரைவாக அதிகரிப்பது போன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான தீர்வாக சிறிய மட்டு உலைகளை (SMR) இந்தியா பார்க்கிறது.


ரோசாட்டமின் எரிபொருள் நிறுவனமான TVEL எனும் எரிபொருள் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவிற்கு அணு எரிபொருள் TVC-2M ஐ வழங்குகிறது. மேலும், இது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு புதிய திறன்களை வழங்குகிறது. இந்த, நிலையம் 18 மாத எரிபொருள் சுழற்சியின் கீழ் செயல்பட அனுமதிக்கிறது. இதன் மூலம் பாரம்பரிய 12 மாத சுழற்சியுடன் ஒப்பிடும்போது மின் அலகுகளின் பொருளாதார செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது.


இந்தியாவின் அடிப்படை மின் உற்பத்தி : அணுசக்தி


குடிமை அணுசக்தித் துறையில், இந்தியா இப்போது சிறிய மட்டு உலைகளை (SMR) தொழில்துறை கார்பனை நீக்கத்திற்கு உதவும் ஒரு தொழில்நுட்பமாக முன்னிறுத்துகிறது. இதில் இந்த தொழில்நுட்பத்தைப் பரப்புவதில் தலைமைப் பங்கை வகிக்கும் நாட்டின் திறனையும் இது வலுவாக ஊக்குவித்து வருகிறது. இந்த மின்கட்டமைப்பை இயக்குபவர்களுக்கு ஓரளவு நெகிழ்வுத்தன்மையை வழங்கக்கூடிய அடிப்படை மின்ஆற்றலை வழங்குவதில் இவை முக்கியமானவை. குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியின் மாறுபாடுகளை சமநிலைப்படுத்த அடிப்படை மின் உற்பத்தியை அதிகரிப்பதன் சவாலை அதனுடன் கொண்டு வரும் மின்கட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சேர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் வெப்ப உற்பத்தி முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், அணுசக்தி அதிக கார்பன்-நடுநிலையான ஒரு அடிப்படை சுமை உற்பத்தி விருப்பத்தை வழங்குகிறது.


இந்தியாவில் 24 செயல்பாட்டு அணு உலைகள் உள்ளன. அவை ஒன்றாக 7,943 MWe திறனை உருவாக்குகின்றன. மேலும், ஆறு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. இவை 4,768 MWe திறனைக் கொண்டுள்ளன. மேலும், 10 அலகுகள் திட்டத்திற்கு முந்தைய நிலையில் உள்ளன. அவை சுமார் 7 GWe திறனைக் கொண்டது. 2047-ம் ஆண்டுக்குள் அதன் அணுசக்தி திறனை 100 ஜிகாவாட் ஆக விரிவுபடுத்த ஒன்றிய அரசு இலக்கு வைத்துள்ளது. இதற்காக, அது இரண்டு அணுகுமுறையை பின்பற்றத் திட்டமிட்டுள்ளது. இது, பெரிய திறன் கொண்ட அணு உலைகளை நிறுவுதல் மற்றும் புதிய அலகுகளின் வெளியீட்டை விரைவுபடுத்துவதை உறுதிசெய்ய சிறிய மட்டு உலைகளைப் (SMR) பயன்படுத்துதல் ஆகும்.


சிறிய மட்டு உலைகள் (SMR) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசாங்கம் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாக ஒதுக்கியுள்ளது. 2033-ம் ஆண்டுக்குள் குறைந்தது ஐந்து உள்நாட்டு சிறிய மட்டு உலைகளை (SMR) வடிவமைத்து இயக்க திட்டமிட்டுள்ளது. தனியார் துறையின் பங்களிப்பை கொண்டுவர, அணுசக்தித் துறைக்கு ஆதரவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அணுசக்தி மசோதா-2025 உடன் இது முன்னேறி வருகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையை நிர்வகிக்கும் முக்கிய சட்டங்களை மாற்றியமைக்கும் இரண்டு முக்கிய திருத்தங்களில் இந்த மசோதாவும் ஒன்றாகும்.


இந்தத் திருத்தம், அணுமின் நிலையச் சட்டம், 1962-ஐ மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை இந்தியாவில் அணு மின் நிலைய செயல்பாடுகளில் நுழைய அனுமதிக்க விரும்புகிறது. இந்த நிறுவனங்கள் புதிய அணுமின் திட்டங்களில் 49 சதவீதம் வரை சிறியளவிலான பங்கைப் பெறலாம். இந்தத் திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தத் திட்டங்களில் பங்குகளை முதலீடு செய்வதற்கான அடித்தளத்தையும் உருவாக்குகிறது. இது அணுமின் நிலையங்களை செயல்படுத்துவதை விரைவுபடுத்த உதவும். இதுவரை, அணுசக்தி இந்தியாவின் மிகவும் மூடப்பட்ட துறைகளில் ஒன்றாகும்.


original link:

Putin’s N-power hard sell: SMRs, new-gen large nuke reactors, serial production in India


Share:

மகத் (Mahat) சத்தியாகிரகம் அரசியலமைப்பு விவாதத்தை எவ்வாறு வடிவமைத்தது? -நிகில் சஞ்சய்-ரேகா அட்சூல்

மகத் என்பது 1927-ல் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தொடங்கிய இந்தியாவின் முதல் மனித உரிமை இயக்கங்களில் ஒன்றின் பிறப்பிடமாகும். இது சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், தலித் உரிமைகளை வலியுறுத்தியது. இது இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையும் வடிவமைத்தது.


சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், மகத் தாலுகா, பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், பம்பாய் மாகாணத்தின் தொழில்துறை துறைக்கு உழைப்பை வழங்கும் ஒரு முக்கிய பொருளாதார மையமாகவும் இருந்தது. மஹாத்தில், சாதி விதிமுறைகளைப் பின்பற்றுவது சாதிப் பாகுபாட்டை பரவலாக ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, உயர் சாதி நபர்கள் தலித்துகளை அவமதிப்புடன் நடத்தினர். சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டின் ஒரு வடிவமான தீண்டாமை, தலித்துகளை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருந்தது. மஹாத்தில், சாவடர் குளம் (Chavadar Tank) போன்ற பொது நீர்த்தேக்கங்களில் இருந்து தலித்துகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படவில்லை அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது இதன் மூலம் தெளிவாகத் தெரிந்தது.


இந்தியாவின் முதல் உரிமை இயக்கங்களில் ஒன்றான மகத் ஒரு முக்கியமான இடமாக இருந்தது. இது மனித உரிமைகள் பற்றிய கருத்துக்களை வடிவமைக்க உதவியது மற்றும் அரசியலமைப்பின் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.


மரபைப் புரிந்துகொள்வது


மனித உரிமைகள் மற்றும் நீர் ஜனநாயகத்திற்கான இயக்கம்  (water democracy) ஆகஸ்ட் 1923-ல் பம்பாய் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்துடன் தொடங்கியது. இதை எஸ்.கே.போலே தொடங்கினார். அதில், "தர்மசாலைகளில் உள்ள அனைத்து பொது நீர் தளங்களையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று சபை பரிந்துரைத்தது. தர்மசாலைகள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அல்லது சட்டத்தால் உருவாக்கப்பட்ட கட்சிகளால் நிர்வகிக்கப்படும் பொது நிதியிலிருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. அதேபோல் பொதுப் பள்ளிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் மற்றும் மருந்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன என்றும் சபை கூறியது.


இந்தத் தீர்மானம் பிராமண ஆதிக்கத்தை சவால் செய்தது மற்றும் மகத் அருகே உள்ள கோரேகான் மற்றும் தாஸ்கானில் சமூக மாற்ற முயற்சிகளைத் அதிகரிக்க செய்தது. 1926-ஆம் ஆண்டில், சம்பார் சாதியைச் சேர்ந்த ஒரு தலைவரான ராமச்சந்திர சாந்தோர்கர், கோரேகானில் உள்ள ஒரு பொது நீர்த்தேக்கத்தில் குதித்தார். இது கிராமவாசிகள் சாம்பார்கள் மற்றும் மகர்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்களின் சொத்துக்களின் மீது தாக்குதல் நடத்த வழி வகுத்தது. தாஸ்கானில், சந்தோர்கர், ஆர்.பி. மோர் மற்றும் ராம்ஜி போத்தார் உள்ளிட்ட மஹர் சமாஜ் சேவா சங்கத்தின் தலைவர்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உள்ளூர் ஏரி மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணிர் குடித்தனர். ஆர்.பி. மோரின் நினைவுக் குறிப்பு, இந்தப் பகுதி அம்பேத்கரின் சமத்துவப் போராட்டத்தை வலுவாக ஆதரித்ததைக் காட்டுகிறது. கோபால்பாபா வாலங்கர், என்.எம். ஜோஷி மற்றும் சாம்பாஜி கெய்க்வாட் போன்ற ஆர்வலர்களின் பிறப்பிடமாகவும் இந்தப் பகுதி இருந்தது. இந்தக் காரணங்களுக்காக, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இந்தியாவின் முதல் மனித உரிமை இயக்கங்களில் ஒன்றிற்கான இடமாக மஹாத்தைத் தேர்ந்தெடுத்தார்.


மகத் 1.0 மற்றும் 2.0


1923ஆம் ஆண்டு போலே தீர்மானத்தின்படி தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் குடிக்கும் உரிமையை வலியுறுத்தி, டாக்டர் அம்பேத்கரும் அவரது சீடர்களும் மார்ச் 19-20, 1927 அன்று சத்தியாக்கிரகத்தை நடத்தினர். அம்பேத்கரின் சீடர்கள் அந்த நிகழ்விற்கு சில உடைமைகளுடன், பசியுடன், தங்கள் உரிமைகளைக் கோருவதற்காக குச்சிகளை (லத்திகள் என்று அழைக்கப்படுகின்றன, அவை பம்பாய் ஜனாதிபதி பதவியில் இருந்தவர்களைத் தவிர மஹர்களால் பயன்படுத்தப்பட்டன) எடுத்துச் சென்றனர். ஆனால், உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டனர். எனவே, இந்த நோக்கத்திற்காக ரூ.40 மதிப்புள்ள தண்ணீரை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மகத் 1.0 சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு, மனித உரிமைகளுக்கு மேல் சாதி அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் டாக்டர் அம்பேத்கரும் அவரது சீடர்களும் தண்ணீரை அருந்தியதால், சுத்திகரிப்பு சடங்குகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக, டாக்டர் அம்பேத்கர் டிசம்பர் 25 மற்றும் 26, 1927 அன்று இரண்டாவது மகத் மாநாட்டை நடத்த திட்டமிட்டார். அதேநேரத்தில், சாவடார் குளம் தனியாருக்குச் சொந்தமானது என்று கூறி, தலித்துகள் அதைப் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் தடுத்தன.


இந்தக் காலகட்டத்தில், டாக்டர் அம்பேத்கர், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் "Bahishkrut Bharat" என்ற பதினைந்து வார இதழைத் தொடங்கினார். மகத் சம்பவத்தைத் தொடர்ந்து தலித்துகள் தாக்குதல்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, 1927ஆம் ஆண்டு நவம்பரில் டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் தலைமையில் நடைபெற்ற அம்பாபாய் கோயில் சத்தியாக்கிரகத்திலும் அவர் இணைந்தார். இது அவர்களைப் பாதுகாக்க அம்பேத்கர் சேவா தளம் உருவாக்க வழிவகுத்தது. சாவதர் ஏரி வழக்கு இன்னும் நிலுவையில் இருந்ததால், டாக்டர் அம்பேத்கர் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்தபிறகு சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டாம் என்று முடிவு செய்தார். இருப்பினும், டிசம்பர் 25 அன்று, கங்காதர் சகஸ்ரபுத்தே, ராஜ்போஜ் மற்றும் தோரட் ஆகியோரின் தீர்மானத்தைத் தொடர்ந்து அவர் மனுஸ்மிருதியை எரித்தார். மகத் 2.0-ல், அவர் பெண்களிடம் அதிகமாக உரையாற்றினார், மனித உரிமைகளில் பாலின சமத்துவம் (gender equality) இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மகத் புரட்சி (Mahad revolution)


மகத் 1.0 மற்றும் மகத் 2.0 சத்தியாக்கிரகங்கள் பிரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) காலகட்டத்தை வெளிப்படுத்தியதாக டாக்டர் அம்பேத்கர் கூறினார்.


மகத் சத்தியாக்கிரகத்தின் போது டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரைகளில், டாக்டர் அம்பேத்கர் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் ஊக்குவித்தார். மகத் 2.0-ல், அவர் 1798ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசிய சட்டமன்றத்தைக் குறிப்பிட்டார். மகாத் 1.0 மற்றும் மகத் 2.0 ஆகிய இரண்டு நிகழ்வுகளும் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையையும் மற்றும் அரசியலமைப்பின் மதிப்புகளையும் வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன.


இருப்பினும், பிரெஞ்சுப் புரட்சி பெண்களை அதன் உரிமைகள் பற்றிய கருத்தில் சேர்க்கவில்லை. அவர்களின் தேசிய சட்டமன்றமும் அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களும் பெண்களின் சமத்துவத்தைப் புறக்கணித்தன. மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட், தனது "பெண் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்" என்ற துண்டுப்பிரசுரத்தின் மூலம் தலையிட்டதே, பிரெஞ்சுப் புரட்சியில் பெண்களின் விலக்கு மற்றும் இடத்தை கேள்விக்குள்ளாக்கியது.


1916ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் தனது ஆய்வறிக்கையில், பாலினத்தின் மூலம் சாதியைப் பார்ப்பதற்கான ஒரு புதிய வழியை முன்மொழிந்தார். இந்திய சமூகவியலாளர்கள் சாதியில் பெண்களின் பங்கை எவ்வாறு ஆய்வு செய்தனர் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பிரச்சினைகளை தனித்தனி பகுதிகளாகப் பிரிப்பது சாதியை ஒழிக்க உதவாது என்று சுட்டிக்காட்டினார். பாலின வழிமுறைகள் மூலம் மட்டுமே முடிவை அடைய முடியும். மகத் 1.0-ல் நடந்த உரைகள் மற்றும் செயல்கள், அவர்களின் பாலினம், புவியியல், வர்க்கம் மற்றும் சாதி(கள்) ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பெண்கள் மற்றும் ஆண்களின் கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. பிராமணர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க தேசிய சட்டமன்றத்தைப் போல அவர்கள் ஒன்று கூடினர். இது டென்னிஸ் மைதான சத்தியப்பிரமாணத்தின் போது 11-ஆம் லூயி மன்னர் அனுமதி மறுத்த பிறகு மூன்றாம் வர்க்கம் எவ்வாறு செயல்பட்டது போன்று இருந்தது. மகத் 2.0-ல், எடுக்கப்பட்ட முடிவு முக்கியமாக சூத்திரர்களை (Shudras) நியாயமற்ற முறையில் நடத்துவதில் கவனம் செலுத்தியது போல் தெரிகிறது. இருப்பினும், மனுஸ்மிருதியில் உள்ளதைப் போன்ற ஆரம்பகால விதிகள் பெண்களும் சூத்திரர்களைப் போலவே நடத்தப்பட்டதாகக் காட்டுகின்றன. சமகால இலக்கிய மற்றும் வரலாற்று நூல்கள் இதை ஆதரிக்க ஏராளமான சான்றுகளை வழங்குகின்றன.


மகத் 2.0-ல் டாக்டர் அம்பேத்கரின் நடவடிக்கைகள், குறிப்பாக மநுஸ்மிருதி எரிப்பு மற்றும் பெண்கள் கூட்டத்தில் உரையாற்றுதல், அகிம்சை பௌத்தத்திலிருந்து பெறப்பட்ட சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கைகளைக் கொண்ட மனித உரிமைகள் குறித்த ஒரு புதிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றன.


டாக்டர் அம்பேத்கர், பாலின அடிப்படையிலான (gendered nation) ஒரு புதிய கருத்தை அறிமுகப்படுத்தினார். அதன் அறிவொளி பெற்ற தேசியவாதம், அத்தியாவசியத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக மக்களின் உண்மையான வாழ்க்கையையும் அவர்களின் இயற்கையான, சட்டப்பூர்வ மனித உரிமைகளிலும் வேரூன்றிய இருத்தலியல்வாதத்தை (existentialism) அடிப்படையாகக் கொண்டது. இதனால், டிசம்பர் 25 இந்தியாவில் இந்தியப் பெண்கள் விடுதலை நாளாகவும் (Indian Women’s Liberation Day) கொண்டாடப்படுகிறது. அது தேட முயற்சிக்கும் ஒரே அத்தியாவசியவாதம், மைத்ரியை அடிப்படையாகக் கொண்ட மனுஸ்கி ஆகும். இது வெறும் அரசாங்கக் கருத்தைவிட உண்மையான ஜனநாயகம் வாழ்ந்தது என்பதாகும். இது இந்திய அரசியலமைப்பில் நிறுவனமயமாக்கப்பட்ட

மகத் சத்தியாக்கிரகத்தின்போது கற்றுக்கொண்ட நெறிமுறைகளிலிருந்து பெறப்பட்ட அரசியலமைப்பு நெறிமுறையின் அடித்தளங்களை பிரதிபலிக்கிறது.


நிகில் சஞ்சய்-ரேகா அட்சுலே, இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-டெல்லியில் மூத்த ஆராய்ச்சி அறிஞர் ஆவார்.

original link:

How the Mahad satyagraha(s) shaped constitutional discourse 


Share:

உலக மண் தினம்: மரங்கள் அல்ல, புல்வெளி மண் தான் இந்தியாவின் காலநிலை மீள்தன்மையை நிலைநிறுத்துகிறது -துஷார் பதடே, அபி டி. வனக்

 

புல்வெளிகள் உறுதித்தன்மை கொண்ட மண்ணை உருவாக்குவதில் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. இவை முக்கியமாக ஆழமான மற்றும் நார்ச்சத்துள்ள வேர் அமைப்புகள் மூலம் மண்ணின் உறுதித்தன்மையை மேம்படுத்துகின்றன மற்றும் நீண்டகால கார்பன் சேமிப்பை ஊக்குவிக்கின்றன.


"தரிசு நிலங்கள்" (wastelands) பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலிருந்தே இந்தியாவின் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட அரை வறண்ட புல்வெளிகள் மற்றும் சவன்னாக்கள் இவ்வாறே மதிப்பிடப்படுகின்றன. காலனித்துவவாதிகளுக்கு, இந்தியத் துணைக்கண்டத்தின் மரக்கட்டைத் தாவர காடுகள் (woody forests) தொழில்மயமாக்கலுக்கு எரிபொருளாக அமைந்தன. ஆனால், புல்வெளி உயிர்மண்டலங்கள் அவர்களின் மரம் சார்ந்த காலனித்துவ ஆட்சிக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை.


சுதந்திரத்திற்குப் பிந்தைய கொள்கை மற்றும் நீதித்துறையின் பெரும்பகுதி முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து உருவாக்கப்பட்டன. மேலும், "தரிசு நிலங்கள்" நிலப் பதிவுகள் மற்றும் அரசாங்கக் கொள்கையில் இடம் பெற்றன. 1985-ஆம் ஆண்டில், "தரிசு நிலங்களை அடையாளம் காணவும், வகைப்படுத்தவும், மேம்படுத்தவும்" அதிக அறிவியல் அடிப்படையை கொண்டு வருவதற்காக தேசிய தரிசுநில மேம்பாட்டு வாரியம் (National Wastelands Development Board) உருவாக்கப்பட்டது. பள்ளத்தாக்குகள், புதர் நிலங்கள், சீரழிந்த புதர் காடுகள், பாதிப்படைந்த மேய்ச்சல் நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், தரிசு பாறைப் பகுதிகள், பனிப்பாறைகள் மற்றும் பனி மூடிய மலைகள், சுரங்க அல்லது தொழில்துறை தரிசு நிலம் மற்றும் சீரழிந்த தோட்ட நிலங்கள் அனைத்தும் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டன.


பல ஆண்டுகளாக, ஆய்வுகள், ஒரு தரிசு நிலமாக இருப்பதற்குப் பதிலாக, இந்த சவன்னா புல்வெளிகள் (savanna grasslands) தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மேய்ச்சல் சமூகங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கும் செழிப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளாகும் என்பதைக் காட்டுகின்றன. உதாரணமாக, மகாராஷ்டிரா இதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. 2018-2019ஆம் ஆண்டில், மாநிலத்தின் கால்நடை பொருளாதாரத்தின் மதிப்பு ஒரு வருடம் மட்டுமே ரூ.59,000 கோடிக்கும் அதிகமாக இருந்தது.


அடியில் என்ன இருக்கிறது?


புல்வெளிகள் ஆரோக்கியமான மண்ணை உருவாக்குவதிலும் பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், அவற்றின் ஆழமான, நார்ச்சத்துள்ள வேர்கள் நிலத்தை நிலையாக வைத்திருக்கின்றன, மண்ணின் தரத்தை மேம்படுத்துகின்றன மற்றும் நீண்டகால கார்பன் சேமிப்பை ஊக்குவிக்கின்றன. காடுகளைப் போலல்லாமல், அதிகப்படியான உயிரித்திரள் (biomass) மேலே தரையில் இருக்கும், புல்வெளிகளின் உற்பத்தித்திறன் (productivity) தரைக்கீழே குவிந்திருக்கிறது. இது அடர்த்தியான வேர் பின்னல்களை (dense root mats) உருவாக்குகிறது; அவை நீர் ஊடுருவலை மேம்படுத்துகின்றன, மண் அரிப்பைக் குறைக்கின்றன, மற்றும் வறட்சியிலிருந்து மண்ணைப் பாதுகாக்கின்றன. இந்த வேர்கள் தொடர்ந்து கரிமப் பொருட்களைச் சேர்த்து, பல நூற்றாண்டுகளாக மண்ணில் கார்பனைச் சேமிக்கின்றன. புல்வெளி மண், ஊட்டச்சத்து சுழற்சியை இயக்கி மண் வளத்தை பராமரிக்கும் பல்வேறு நுண்ணுயிர் மற்றும் பூஞ்சை சமூகங்களையும் ஆதரிக்கிறது. புல்வெளிகள் சீரழிக்கப்படும்போது, ​​மாற்றப்படும்போது அல்லது காடுகள் வளர்க்கப்படும்போது, ​​இந்த நிலத்தடி செயல்முறைகள் சீர்குலைந்து, சுருக்கம், அரிப்பு, மண்ணின் கரிம கார்பன் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மை குறைவதற்கு வழிவகுக்கிறது.


காலநிலை நெருக்கடி மோசமடைந்ததால், சுற்றுச்சூழல் அமைப்புகள் கார்பனை எவ்வாறு பிரித்தெடுத்து சேமிக்க முடியும் என்பதில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கினர். உலகம் முழுவதிலுமிருந்து ஆராய்ச்சிகள் குவியத் தொடங்கின, புல்வெளிகள் கார்பன் பிரித்தெடுப்பதற்கான மஹாத்தான ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. எனவே, பல வகையான வனவிலங்குகளை ஆதரிப்பதோடு உள்ளூர் சமூகங்களுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், புல்வெளிகள் அதிக அளவு கார்பனை நிலத்தடியில் சேமித்து வைக்கின்றன. மேலும், இந்த கார்பன் தீ விபத்துகளின்போது கூட பாதுகாப்பாக இருக்கும்.


குஜராத்தின் கச்சில் உள்ள பன்னி புல்வெளிகளை (Banni grasslands) எவ்வாறு மீட்டெடுக்க முடியும்?


சோலாப்பூரின் அரை-வறண்ட புல்வெளிகளில் தொடங்கப்பட்ட ஒரு முன்னோடித் திட்டம், மகாராஷ்டிரா மாநில வனத்துறையின் உயிர்மண்டலங்கள் பற்றிய பார்வையில் மாற்றத்தைக் குறிக்கிறது. காடுகளை வளர்ச்சிப் பணிகளுக்காக வனமல்லாதவையாக மாற்றுவதற்குச் சேகரிக்கப்படும் நிதியை நிர்வகிக்கும் இழப்பீட்டு வன உருவாக்க நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் குழு (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)), இந்த நிதியில் ஒரு பகுதியை பாழடைந்த புல்வெளிகளை மீட்டெடுப்பதற்குப் பயன்படுத்த முடிவு செய்தது.


மகாராஷ்டிராவின் வனத்துறையைச் சேர்ந்த வன உருவாக்க நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் குழு, சோலாப்பூரில் உள்ள மால்ஷிராஸ் (Malshiras) வனப்பகுதியில் பாழடைந்த புல்வெளிகளை சரிசெய்ய பல ஆண்டுகளாக உழைத்தது. டிகாந்தியம் அன்யூலேட்டம், கிறைசோபோகன் ஃபுல்வஸ் மற்றும் சென்க்ரஸ் செடிகெரஸ் போன்ற பூர்வீக புற்கள் ஒரு நாற்றங்காலில் வளர்க்கப்பட்டு, முதல் பருவமழைக்குப் பிறகு அதே இடத்திலேயே நடப்பட்டன.


அதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தி கிராஸ்லேண்ட்ஸ் டிரஸ்ட் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், வனத்துறையுடன் இணைந்து, கார்பன் பிரித்தெடுத்தல் உட்பட, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் தாக்கங்களைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள ஒரு ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வு, ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகளாக மீட்டெடுக்கப்பட்ட புல்வெளிகளை, சீரமைக்கப்படாத பகுதியுடனும், இயற்கையான, எந்த விதமான பாதிப்புகளையும் புல்வெளியுடனும் ஒப்பிட்டது. சீரமைக்கப்படாத பகுதிகளைவிட, மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் அதிக மண் கார்பன் (soil organic carbon (SOC)) இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீட்டெடுக்கப்பட்ட பகுதிகளில் சிகிச்சையளிக்கப்படாத பகுதிகளைவிட 21% அதிக மண் கரிம கார்பன் (SOC) இருந்தது. மேலும், மூன்றாம் ஆண்டில், அவற்றில் 50% அதிகமாக இருந்தது. இந்த கண்டுபிடிப்புகள், வன உருவாக்க நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் குழு (Compensatory Afforestation Fund Management and Planning Authority (CAMPA)) நிதியிலிருந்து புல்வெளி மறுசீரமைப்பு எவ்வாறு இந்தியா தனது காலநிலை இலக்குகளை அடைய வழிவகுக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.


ATREE-ன் ஆராய்ச்சியாளர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பன்னி (Banni) புல்வெளியின் குறிப்பிடத்தக்க கார்பன் பிரித்தெடுத்தல் திறனை எடுத்துக்காட்டியுள்ளது. ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரிய வெப்பமண்டல புல்வெளியாக கொண்டாடப்பட்ட பன்னி புல்வெளி, பல தசாப்தங்களாக தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டது. இந்த கொள்கைகள் ஆக்கிரமிப்பு இனமான வேலிக்காத்தான் (Neltuma juliflora) செடியை பெரிய அளவில் நடவு செய்ய ஊக்குவித்தன. இதன் விளைவாக, பரந்து விரிந்த திறந்தவெளி சவானா புல்வெளிகள் விரைவாக அடர்ந்து ஊடுருவ முடியாத புதர்க்காடுகளாக மாறின; இது சூழலியலையும் ஆயர் சமூகங்களின் வாழ்வாதாரத்தையும் பெரிதும் சீர்குலைத்தது.


இந்த ஆய்வு ஒரு குறிப்பிடத்தக்க வடிவத்தை வெளிப்படுத்துகிறது: உள்நாட்டில் wada என்று அழைக்கப்படும் மீட்டெடுக்கப்பட்ட புல்வெளித் திட்டுகள், மண்ணின் கரிம கார்பனை (soil organic carbon (SOC)) மிக உயர்ந்த அளவில் சேமித்து வைக்கின்றன. அதைத் தொடர்ந்து ஈரநிலங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் குறைவாகவும், கலப்பு வனப்பகுதிகள் மற்றும் உப்புத்தன்மை வாய்ந்த புல்வெளிகள் (saline grasslands) குறைவாகவும் உள்ளன. உள்ளூர் சமூகத்தினர் முதலில் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு சீமைக் கருவேல (Prosopis) மரங்களை அகற்றி, பின்னர் பூர்வீக புற்களை மீண்டும் வளர அனுமதிப்பதன் மூலம் இந்தப் பகுதிகளை மீட்டெடுத்ததால் Banni புல்வெளி சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.


கார்பன் நிறைந்த மற்றும் வறண்ட பகுதி


மால்தாரி மேய்ச்சல்காரர்கள் (Maldhari pastoralists) இந்தப் பகுதிகளை சுழற்சி முறையில் மேய்ச்சல், நிலையான உயிரிப்பொருட்களின் கட்டுப்படுத்தப்பட்ட அறுவடை மற்றும் புல்வெளி மீட்பை கவனமாக கண்காணித்தல் மூலம் நிர்வகிக்கின்றனர். அதன் நான்கு முக்கிய நில பயன்பாட்டு வகைகளிலும், Banni 30 செ.மீ மண் ஆழம் வரை 27 மெட்ரிக் டன் கார்பனை சேமித்து வைக்கிறது, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 120 டன் கார்பன் அடர்த்தி கொண்டது. இது Banni புல்வெளியை உலகின் மிகவும் கார்பன் நிறைந்த வறண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாற்றுகிறது. வறண்ட பகுதிகளில் காலநிலை மீள்தன்மைக்கு ஆக்கிரமிப்பு மரங்கள் அல்ல - உறுதித்தன்மை கொண்ட புல்வெளிகள் முக்கியம் என்பதைக் காட்டுகிறது.


பன்னி (Banni) புல்வெளி முன்னோக்கி செல்லும் வழியையும் காட்டுகிறது : பூர்வீக புற்களை மீட்டெடுப்பது, ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றுவது மற்றும் உள்ளூர் மேய்ச்சல் சமூகங்களை முடிவெடுப்பதில் ஈடுபடுத்துவது முக்கியம். சமூகங்கள் புல்வெளி பராமரிப்பை வழிநடத்தும்போது, ​​அவை அதை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல் - அவை வெற்றிகரமான மறுசீரமைப்பின் விளைவாகவும் மாறுகின்றன.


காற்று மற்றும் அனைத்து உயிரின தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைவிட மண் இரண்டு மடங்கு கார்பனை சேமித்து வைக்கிறது என்று காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (Intergovernmental Panel on Climate Change (IPCC)) நினைவுப்படுத்துகிறது. வெப்பநிலை உயர்வும் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீ கொண்ட இந்தக் காலகட்டத்தில், புல்வெளிகளில் மண்ணுக்கு அடியில் பாதுகாக்கப்படும் மண் கரிம கார்பனின் (SOC) ஒப்பீட்டளவிலான உறுதித்தன்மையை விரைவாக அங்கீகரிக்க வேண்டும்.


2025ஆம் ஆண்டு உலக மண் தினத்தன்று (World Soil Day), Banni மற்றும் Malshiras நமக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் காட்டுகிறார்கள். சிறந்த காலநிலை தீர்வுகள் நம்மிடம் உள்ளன. "கார்பன் சேமிப்பு" பற்றி மக்கள் பேசுவதற்கு முன்பே, பூர்வீக புற்களின் ஆழமான வேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கார்பனை சேமித்து வருகின்றன. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் வலுவான எதிர்காலம் மரங்களை நடுவதால் மட்டும் வராது. பல பகுதிகளில், குறிப்பாக வறண்ட நிலங்களில், மண் இன்னும் ஆரோக்கியமாகவும் உறுதித்தன்மையுடனும் இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை சரிசெய்வதன் மூலம் வரும்.


துஷார் பததே ஒரு கொள்கை ஆய்வாளர் மற்றும் அபி டி. வனக் பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கொள்கை வடிவமைப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார்.

Original link:

World Soil Day: Grassland soils, not trees, anchor India’s climate resilience 


Share: