பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் அதில் பெண்களின் பிரதிநிதித்துவத்துடன் தொடர்புடைய அரசியலமைப்பு விதிகள் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


• முன்னாள் சுரங்கத்துறை செயலாளர் சுஷில் குமார் தலைமையிலான குழு, சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. “பிரதான் பதி”, “சர்பஞ்ச் பதி” அல்லது “முக்கிய பதி” நடைமுறைகளைச் சரிபார்க்க, கொள்கைத் தலையீடுகள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் “முன்மாதிரியான அபராதங்கள்” உள்ளிட்ட அதன் பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.


• ஜூலை 6, 2023 தேதியிட்ட உச்சநீதிமன்ற உத்தரவின் தொடர் நடவடிக்கையாக செப்டம்பர் 2023-ல் அமைக்கப்பட்ட குழு, பிரச்சினையை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் நான்கு பிராந்திய பயிற்சி பட்டறைகளை நடத்தியது. அவர்கள் கள வருகைகளையும் நடத்தினர் மற்றும் பெண் பஞ்சாயத்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். இந்த பயிற்சி பட்டறைகள், வருகைகள் மற்றும் விவாதங்களிலிருந்து முக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் படிப்பினைகள் கிடைத்தன:


• அரசியல் தலைமையின் பற்றாக்குறை அல்லது போதிய அனுபவமின்மை: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு குறைவான வெளிப்பாடு மற்றும் அனுபவமின்மை இருப்பதாக குழு கவனித்தது. உள்ளூர் சுய-அரசுத் தலைவர்களாக தங்கள் பொறுப்புகளை எவ்வாறு திறம்படச் செய்வது என்பதைக் கற்றுக்கொள்ள போராடுகிறார்கள். மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பிற்குள் கிராமப் பஞ்சாயத்து  மட்டத்தில் இந்த சவால் அதிகமாக உள்ளது.


பாலின அடிப்படையிலான பாகுபாடு:  பாலின அடிப்படையிலான பாகுபாடு

அதிகாரப்பூர்வ, அரை-அதிகாரப்பூர்வ மற்றும் முறைசாரா கூட்டங்களில் பெண் பிரதிநிதிகள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பிரதிநிதிகள் அவர்களைப் புறக்கணிக்கிறார்கள். கிராமப் பஞ்சயத்துகளில் உள்ள ஆண் அதிகாரிகள்கூட ஆண் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள். இது சர்பஞ்ச்/பிரதான் பதி நிலைமையை வலுப்படுத்துகிறது. அதில் ஆண் உறவினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் பதவிகளைக் கட்டுப்படுத்துகிறார்கள். இதன் விளைவாக, பெண்கள் பொது விவகாரங்களில் தங்கள் தலைமைத்துவக் குரலை இழக்கிறார்கள். இது பெண்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு உரிமைகளைப் பறிக்கிறது.


• ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள்: கிராமப்புற சமூகம் இன்னும் ஆழமாக வேரூன்றிய ஆணாதிக்க நம்பிக்கைகளையும் கடுமையான சமூக விதிமுறைகளையும் பின்பற்றுகிறது என்று அறிக்கை கூறுகிறது. பெண்கள் தொடர்ந்து 'பர்தா' அணிவதைப் பயிற்சி செய்கிறார்கள். குறிப்பாக, பெண்கள் பெரியவர்கள்முன் மற்றும் பொது இடங்களில் தலையை மூடுவது அல்லது முக்காடு போடுவது போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.


• அரசியல் அழுத்தம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் பெரும்பாலும் அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல்கள் மற்றும் வன்முறையை எதிர்கொள்கின்றனர். அரசியல் எதிரிகளும் ஆதிக்கக் குழுக்களும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள் அவர்களை பதவியில் இருந்து நீக்குகிறார்கள். இந்த அழுத்தம் பெண்கள் தலைமைப் பதவிகளில் தொடர்வதைத் தடுக்கிறது என்று அறிக்கை கூறுகிறது.


• பலவீனமான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் இல்லாமை: அதிகாரப்பூர்வமற்ற முறையில் பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்தும் ஆண் உறவினர்களைத் தண்டிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்த சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த சட்டங்கள் போதுமானதாக இல்லை. பல ஆண் உறவினர்கள் பெண் பிரதிநிதிகளின் அதிகாரப்பூர்வ பாத்திரங்களை குறைமதிப்பிற்கு அவர்களின் அதிகாரத்தையும் முடிவெடுக்கும் திறனையும் கட்டுப்படுத்துகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? :


• 73-வது மற்றும் 74-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இந்தியாவில் உள்ளூர் சுயாட்சியை (local self-governance) அறிமுகப்படுத்தின.  இந்த இரண்டு திருத்தங்களும் அரசியலமைப்பின் பகுதி IX-ல் "பஞ்சாயத்துக்கள்" (The Panchayats) என்ற தலைப்பிலும், பகுதி IXA-ல் "நகராட்சிகள்" (The Municipalities) என்ற தலைப்பிலும் சேர்க்கப்பட்டன.


• இந்தத் திருத்தங்களுக்குப் பிறகு, பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகள் சுயராஜ்ய நிறுவனங்களாக (institutions of self-government) அங்கீகரிக்கப்பட்டன.


• கிராமங்களில் கிராம சபை அடிப்படை ஜனநாயக அலகாக மாறியது. அதே நேரத்தில் நகராட்சிகளில், "வார்டு குழுக்கள்" (ward committees) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த அமைப்புகள் அனைத்து வயது வந்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியது. மேலும், பஞ்சாயத்து அல்லது நகராட்சி அவர்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பை கொண்டுள்ளது.


• பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த 1/3 இடங்களில், 33% பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். முக்கியமாக, அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்களின் இருக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.


• ஒவ்வொரு அமைப்புக்கும் ஐந்து ஆண்டு பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய, பதவிக்காலம் முடிவதற்குள் அடுத்த அமைப்புக்கான தேர்தல்கள் முடிக்கப்பட வேண்டும். அமைப்பு கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.




Original article:

Share:

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் பராமரிப்பு சேவையை மையப்படுத்துதல் -ஸ்ரீரூபா, ஹர்ஷிதா

 உலகளாவிய தெற்கைச் சேர்ந்த பெண்ணிய பொருளாதார வல்லுநர்கள், இந்தப் பிராந்தியங்களில் ஊதியம் பெறாத வேலை, உலகளாவிய வடக்கைவிட அதிகமான பணிகளை உள்ளடக்கியது என்று கூறுகிறார்கள். இது வீட்டு பராமரிப்பு வேலைகளுக்கு அப்பாற்பட்டது என்பதை வலியுறுத்துகின்றனர்.


2025-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில், பாலின வரவு செலவு அறிக்கைக்கு (Gender Budget (GB)) ₹4,49,028.68 கோடி ஒதுக்கப்பட்டது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான ஒதுக்கீடாகும். இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 37.3% அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. பாலின வரவு செலவு அறிக்கைக்கு ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கையில் 8.86% உள்ளது. வரவு செலவு அறிக்கையில் ஏற்பட்ட இந்த உயர்வுக்கு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM Garib Kalyan Anna Yojana) சேர்க்கப்பட்டதே முக்கிய காரணமாகும். இந்தத் திட்டம் மட்டுமே பாலின வரவு செலவு அறிக்கையில் 24% பங்களிக்கிறது. அதிகரிப்பு இருந்தபோதிலும், பராமரிப்பு உட்கட்டமைப்பில் அத்தியாவசிய முதலீடுகள் இன்னும் இல்லை. இது இந்தியாவின் பொருளாதார திட்டமிடலில் பராமரிப்புப் பணிகளை தொடர்ந்து காணவில்லை. 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்டுகளுக்கான பொருளாதார ஆய்வுகள், பெண்கள் அதிகாரமளிப்புக்கு பராமரிப்பு உட்கட்டமைப்பு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் வரவு செலவு அறிக்கை இந்தியாவின் சமூக-பொருளாதாரத் தேவைகளின் அடிப்படையில் பராமரிப்பு பொருளாதாரத்தை  (care economy) மேம்படுத்த உண்மையான முதலீடுகளைச் செய்யத் தவறிவிட்டது.


உலகளவில், பெண்கள் சராசரியாக 17.8% நேரத்தை ஊதியம் இல்லாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் (unpaid care and domestic work (UCDW)) செலவிடுகிறார்கள். உலகளாவிய தெற்கில் உள்ள பெண்கள் அதிக சுமைகளைச் சுமக்கிறார்கள். தென்னாப்பிரிக்கா மற்றும் சீனாவில் உள்ள இந்தியப் பெண்களை விட 40% அதிகமான சுமையை இந்தியப் பெண்கள் சுமந்திருப்பதால், இந்தியா குறிப்பாக கவலை அளிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization) அறிக்கையின்படி, 53% இந்திய பெண்கள் பராமரிப்புப் பொறுப்புகள் காரணமாக பணியிடத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, இந்திய ஆண்களில் 1.1% மட்டுமே இதே காரணத்திற்காக பணியிடத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இது இந்தியாவில் நிலவி வரும் பாலின சமத்துவமின்மையை எடுத்துக்காட்டுகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இன்னும் பெரிய சுமையை எதிர்கொள்கின்றனர். அவர்கள் 17 முதல் 19 மணிநேரம் வரை தினசரி பணிகளை செய்கிறார்கள். ஊதியம் பெறும் வேலைகள் மற்றும் வீட்டு வேலைகள் இரண்டையும் நிர்வகிக்கிறார்கள். இது “நேரப் பற்றாக்குறையை” (time poverty) ஏற்படுத்துகிறது மற்றும் அவர்களின் நல்வாழ்வைப் பாதிக்கிறது.


உலகளாவிய தெற்கைச் சேர்ந்த பெண்ணிய பொருளாதார வல்லுநர்கள், இந்தப் பகுதிகளில் ஊதியம் பெறாத வேலைகள், உலகளாவிய வடக்கை விட அதிகமான பணிகள் இருப்பதாக எடுத்துக்காட்டுகின்றனர். வீட்டு பராமரிப்பை தாண்டி, பெண்கள் குடும்ப பண்ணைகளிலும் வேலை செய்கிறார்கள், தண்ணீர் மற்றும் எரிபொருள் சேகரிக்கிறார்கள், சுத்தம் செய்கிறார்கள் மற்றும் சமைக்கிறார்கள். தண்ணீர், சுத்தமான எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுக்கான அணுகல் குறைவாக இருப்பதால், பெண்கள் தங்கள் நேரத்தில் 73% வரை ஊதியம் பெறாத பணிகளில் செலவிடுகிறார்கள். உதாரணமாக, பெண்கள் தினமும்  ஐந்து மணிநேரம் தண்ணீர் சேகரிக்கிறார்கள், ஆண்கள் 1.5 மணிநேரம் மட்டுமே செலவிடுகிறார்கள். காலநிலை மாற்றம் இந்தச் சுமையை அதிகரிக்கிறது. அதிக உமிழ்வு சூழ்நிலையில் இந்தியாவில் நீர் தொடர்பான ஊதியம் பெறாத உழைப்பு 2050-ஆம் ஆண்டுக்குள் $1.4 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பராமரிப்பு உட்கட்டமைப்பில் குறைந்த பொது முதலீடு மற்றும் பெண்களுக்கான பராமரிப்புப் பணியை வழங்கும் சமூக நெறிமுறைகளிலிருந்து உருவாகிறது.


தீர்வுகள் 


2023-24ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பராமரிப்பு உட்கட்டமைப்பில் முதலீடு செய்வது 11 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் மற்றும் பெண்களின் ஊதியம் பெறாத வேலையைக் குறைக்கலாம் என்று கூறுகிறது. மூன்று R கட்டமைப்பு - அங்கீகாரம் (Recognise), குறைத்தல் (Reduce), மறுபகிர்வு (Redistribute) செய்தல் மற்றும் பிரதிநிதித்துவம் (Represent) - கொள்கைகளை திறம்படவும் மாற்றத்தக்கதாகவும் மாற்ற உதவும். முதல் படியாக, ஊதியம் பெறாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைப் பணிகளில் (unpaid care and domestic work (UCDW)) பெண்களின் முழு செயல்திறனை அங்கீகரிப்பதாகும். இந்தியாவின் 2019 நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்பு இந்தப் பிரச்சினையை ஒப்புக்கொள்வதில் ஒரு முக்கியமான படியாகும். பெண்கள் சராசரியாக தினமும் 7-மணிநேரம் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலைகளில் செலவிடுகிறார்கள் என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. நேரப் பயன்பாட்டு கணக்கெடுப்புகள் மதிப்புமிக்க தரவை வழங்குகின்றன. ஆனால், நடத்துவதற்கு விலை அதிகம். தற்போதுள்ள வீட்டு ஆய்வுகளில் நேரத்தைப் பயன்படுத்தும் தொகுதிகளை (Time-use modules) சேர்ப்பது ஒரு தீர்வாகும்.


இரண்டாவது படி, ஊதியம் பெறாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளின் சுமையைக் குறைப்பதாகும். நேரத்தை சேமிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் மலிவு குறைந்த பராமரிப்பு உட்கட்டமைப்பு மூலம் இதைச் செய்யலாம். அத்தியாவசிய சேவைகளில் உள்ள இடைவெளிகளை ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளது. 100% குடிநீர் பாதுகாப்பை வழங்குவதற்காக ஜல் ஜீவன் திட்டத்தை (Jal Jeevan Mission (JJM)) 2028 வரை நீட்டித்துள்ளது. நிதி தாமதங்கள் மற்றும் போதுமான பயன்பாடு இல்லாதது ஜல் ஜீவன் திட்டத்தின் முன்னேற்றத்தை மெதுவாக்குகிறது. கடந்த ஆண்டு வரவு செலவு அறிக்கை மதிப்பீடுகளைவிட இந்தாண்டு திட்டத்தின் பட்ஜெட் 4.51% குறைந்திருந்தாலும் அது திருத்தப்பட்ட மதிப்பீடுகளைவிட (RE) 195% அதிகமாக உள்ளது. இது ஒதுக்கீட்டிற்கும் உண்மையான செலவினத்திற்கும் இடையிலான இடைவெளியைக் காட்டுகிறது. இந்தியாவின் பாதிக்கும் குறைவான கிராமங்கள் வீட்டு குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டம் வெற்றி பெற சிறந்த செயல்படுத்தல் மற்றும் நிலையான நீர் மேலாண்மை தேவைப்படுகிறது.


குழந்தை பராமரிப்பு மையங்களை விரிவுபடுத்துவது, முதியோர் பராமரிப்பு ஆதரவை வழங்குவது மற்றும் உதவி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது ஆகியவை பெண்களின் பராமரிப்புச் சுமையைக் குறைத்து, அவர்களை பணியிடத்தில் சேர உதவும்.


மூன்றாவது முக்கிய படி பராமரிப்பு பணியை மறுபகிர்வு செய்வது (redistributing care work) - மாநிலத்திற்கும், வீடுகளுக்குள்ளும் பராமரிப்புப் பணிகளை மறுபகிர்வு செய்வதாகும். அரசாங்கம் ₹1 லட்சம் கோடி நகர்ப்புற சவால் நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ₹10,000 கோடி நிதியாண்டு 2025-26-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி, நகர்ப்புற மறுமேம்பாடு, நீர் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் தனியார் மற்றும் பொதுத்துறை ஈடுபாட்டை ஈர்க்கும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் 25%-ஐ உள்ளடக்கும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் (Smart Cities Mission) கீழ் தற்போதுள்ள பராமரிப்பு உட்கட்டமைப்புத் திட்டங்களை விரிவுபடுத்த இந்தியா இந்த நிதியைப் பயன்படுத்தலாம். பெண்களின் ஊதியம் பெறாத வேலையைக் குறைக்க பராமரிப்பு சேவைகளை ஒன்றிணைக்கும் போகோட்டாவின் பராமரிப்புத் தொகுதிகளால் (Bogotá’s Care Blocks) ஈர்க்கப்பட்டு, இந்த அணுகுமுறை நிதியின் நிலையான நகர்ப்புற வளர்ச்சி என்ற இலக்கை ஆதரிக்கிறது.


இறுதியாக, பாலினத்தை மாற்றும் கொள்கைகளை உருவாக்க முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. இதிலிருந்து பெண்கள் விலக்கப்படும்போது, ​​கொள்கைகள் அவர்களின் உண்மையான வாழ்க்கை சவால்களை நிவர்த்தி செய்யாமல் போகலாம். உண்மையில், முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களை ஈடுபடுத்துவது அவர்களின் செயல்திறனை சில நேரங்களில் ஆறு முதல் ஏழு மடங்கு வரை அதிகரிக்கும்.


பொருளாதார வளர்ச்சிக்கு பெண் சக்தியை (Nari Shakti) அரசாங்கம் முக்கிய அம்சமாக எடுத்துக்காட்டுகிறது. இது பாலின மற்றும் பராமரிப்பு உணர்திறன் கொண்ட பொருளாதாரத்தில் இந்தியாவை வழிநடத்த வாய்ப்பளிக்கிறது. இருப்பினும், தற்போதைய வரவு செலவு அறிக்கை பராமரிப்பை முன்னுரிமையாகக் கருதவில்லை. பராமரிப்புப் பணிகளை உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசியமானதாகக் கருதுவதற்கு நன்கு நிதியளிக்கப்பட்ட திட்டம் தேவைப்படுகிறது.


ஸ்ரீரூபா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் ஸ்டடீஸ் டிரஸ்டில் ஒரு ஆராய்ச்சி தலைவராக உள்ளார். மேலும், ஹர்ஷிதா தி குவாண்டம் ஹப் கன்சல்டிங்கில் பொதுக் கொள்கையில் ஒரு அசோசியேட் ஆவார்.




Original article:

Share:

இந்தியாவில் ஆழமாக வேரூன்றிய ஆணாதிக்க சார்புகள் பற்றி . . .

 சமூகத்திலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் வலுவான ஆணாதிக்க (patriarchal) சார்புகள் அகற்றப்பட வேண்டும்.


நிறுவனங்கள் பாலியல் பாகுபாட்டை நீக்க விரும்பினால், அதைப் பற்றிப் பேசுவது மட்டும் இல்லாமல், தேவையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். பணியிடங்களில் அதிக பெண்கள் பணிபுரிவதை கொண்டாடுவதற்குப் பதிலாக, அங்கு பணிபுரிபவர்களுக்கு நல்ல சூழலை உருவாக்க வேண்டும். கடந்த வாரம், உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் இதை தெளிவுபடுத்தியது. அதிக பெண்கள் நீதித்துறையில் சேரும்போது, ​​நீதித்துறை பணியில் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது."திறமையின்மை" (inefficiency) காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண் நீதித்துறை அதிகாரிகளை நீதிமன்றம் மீண்டும் பணியில் அமர்த்தியது. அவர்களில் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. பெண் நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் போதாது என்பதை வலியுறுத்தினார். அவர்களுக்கு ஆதரவான பணிச்சூழலை வழங்குவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு ஆதரவான மற்றும் உணர்திறன் மிக்க பணிச்சூழலும் தேவைப்படுகிறது. சரிதா சவுத்ரி மற்றும் அதிதி குமார் சர்மா ஆகிய இரண்டு குடிமை நீதிபதிகளின் பணி நீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அவர்களின் பணிநீக்க உத்தரவுகள் "தண்டனைக்குரியவை (punitive), தன்னிச்சையானவை (arbitrary) மற்றும் சட்டவிரோதமானவை" (illegal) என்று தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் 34 அங்கீகரிக்கப்பட்ட பதவிகளைக் கொண்ட இரண்டு பெண் நீதிபதிகளில் நீதிபதி பி.வி. நாகரத்னாவும் ஒருவர். இந்த வழக்கில் அவரது ஈடுபாடு பாலின சமத்துவத்திற்கான போராட்டம் நீண்டது மற்றும் சவாலானது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மனநிலையில் மாற்றம் மற்றும் சட்ட சீர்திருத்தங்களின் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. முந்தைய தீர்ப்புகளில், உச்சநீதிமன்றம் பெண்களுக்கு எதிரான பாலின நிலைப்பாடு மற்றும் பாகுபாடு ஆகியவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளது.


நீதித்துறையில் அதிகமான பெண்கள் இருப்பதன் முக்கியத்துவத்தை நீதிபதி பி.வி. நாகரத்னா தனது தீர்ப்பில் வலியுறுத்தினார். இது சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறை போன்ற அரசாங்கத்தின் பிற கிளைகளுக்கும் பொருந்தும் என்று அவர் கூறினார். உயர்ப் பதவிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பது பெண்களின் தேவைகளைப் பற்றிய புரிதலை உருவாக்க உதவும். இது வலுவான மற்றும் மிகவும் பயனுள்ள கொள்கைகளுக்கு வழிவகுக்கும். வேலையில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நீதிபதி நாகரத்னா எடுத்துரைத்தார். பெண்களுக்கு பாகுபாட்டிலிருந்து விடுபட உரிமை உண்டு என்றும், மகப்பேறு காலத்தில் சட்டத்தால் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி பி.வி. நாகரத்னா கூறினார். தாய்மை மகிழ்ச்சியைத் தருகிறது, ஆனால் கருச்சிதைவு ஒரு பெண்ணின் மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை ஆழமாகப் பாதிக்கும். கொள்கை வகுப்பாளர்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற கடினமான காலங்களில் பெண்களை ஆதரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மோசமான செயல்திறனுக்கு பாலினம் ஒரு காரணமாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், தாய்வழி உரிமைகள் போன்ற அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்க நீதிமன்றம் தலையிட வேண்டியிருப்பது கவலையளிக்கிறது என்று நீதிபதி தனது கவலைகளை வெளிப்படுத்தினர். இதன் மூலம், வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நாட்டில் காலாவதியான ஆணாதிக்க அமைப்புகள் இருக்கக்கூடாது என்பதை அதிகாரத்திலும் சமூகத்திலும் உள்ளவர்களுக்கு நீதிமன்றம் நினைவூட்டியது. முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக தேவைப்படுகிறது. இது இல்லாமல், கொள்கை வகுப்பதில் அவர்களின் கவலைகள் புறக்கணிக்கப்படும். பாலின சமத்துவத்தை அடைய, பெண்களுக்கு கல்வியில் சமமான உரிமை இருக்க வேண்டும். பணியிடத்தில், பெண்களுக்கு அடிப்படை உரிமையாக பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்ய வேண்டும்.




Original article:

Share:

‘பணிக் கலாச்சார’ விவாதங்களில் காணாமல் போன தொழிலாளர்கள். -டினா குரியகோஸ் ஜேக்கப்

 சாதி, வகுப்பு, பாலினம் அல்லது மாநிலம் பாராமல் அனைத்து தொழிலாளர்களுக்கும் ‘’பணிக் கலாச்சாரம்’ மற்றும் ‘வேலை நேரம்’ பற்றிய விவாதங்கள் தேவை.


குழந்தைகளாக நாம் கேட்கும் கதைகள் பெரிய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதுபோன்ற ஒரு கதை, குதிரைலாட ஆணி காணாமல் போனதால் ஏற்படும் ஒரு போரை பற்றியது.


இந்தியாவில் சமீபத்தில் நடந்த ஒரு விவாதம் வேலை கலாச்சாரம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை குறித்து கவனம் செலுத்துகிறது. இருப்பினும், இந்த விவாதங்கள் முறைசாரா துறையில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற விரும்புகிறது. ஆனால், அதன் வளர்ச்சியில் முரண்பாடுகள் உள்ளன. சமீபத்தில் புதுதில்லியில் நடந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில், இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இருப்பினும், உலக வங்கியின் சர்வதேச ஒப்பீட்டுத் திட்டம் (World Bank’s International Comparison Programme) (2023) இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (வாங்கும் சக்தியை அடிப்படையாகக் கொண்டது) குறைந்தது 100 பிற நாடுகளைவிடக் குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.


பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா போன்ற பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பும் மாநிலங்களில் இந்தியாவின் தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது.


2018-2022ஆம் ஆண்டுக்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) தரவுகளின் பகுப்பாய்வு, பல இளம் தொழிலாளர்கள் விவசாயம், மீன்பிடித்தல், வனவியல் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணிபுரிந்ததாகக் காட்டுகிறது. இளம் தொழிலாளர்கள் அதிக ஊதியம் மற்றும் அதிக உற்பத்தித் திறன் கொண்ட வேலைகளைக் கண்டறிய உதவுவதற்கு சிறந்த கல்வி மற்றும் திறன் மேம்பாடு தேவை என்று பொருளாதார வல்லுநர்களும் கொள்கை வகுப்பாளர்களும் நம்புகின்றனர். அதே நேரத்தில், உற்பத்தி மற்றும் சேவைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.


தொழிலாளர் சந்தையின் கீழ் மட்டங்களில் உள்ள வேலைகள் பெரும்பாலும் அழுக்காகவும், கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். அவற்றுக்கு அதிக நேரமும் முயற்சியும் தேவை. ஆனால், அவை அதிக வருமானம் ஈட்டுவதில்லை.


உணவு, மருந்து மற்றும் பணியிடத்தில் தங்குதல் போன்றவற்றுக்கான கூடுதல் கட்டணங்கள் காரணமாக கட்டாய உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் அதிகரித்து வரும் கடன்களை எதிர்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் சமூகப் பாதுகாப்பு அல்லது வேலை வாய்ப்புகள் இல்லாமல், பல ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கடன் அடிப்படையிலான கொத்தடிமை தொழிலில் விழுகின்றனர்.


சுகாதாரப் பிரச்சினைகள் அல்லது திருமணங்கள் அல்லது இறுதிச் சடங்குகளுக்கான செலவுகள் போன்ற அவசரநிலைகளில் கடன்கள் அதிகரிக்கின்றன. இது குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. இதனால் எதிர்கால சந்ததியினரும் வறுமை சுழற்சியில் தொடர்கின்றனர்.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இ-ஷ்ராம் போர்டல், (E-Shram Portal) கிட்டத்தட்ட 90% முறைசாரா தொழிலாளர்கள் மாதத்திற்கு ₹10,000க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


இந்தியாவின் முறைசாரா மற்றும் அமைப்புசாரா துறைகளில் கட்டாய மற்றும் கொத்தடிமை உழைப்பு மிகவும் பொதுவானது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC)) சமீபத்தில் கூறியது. பாதிக்கப்பட்டவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த குடும்பங்கள் அச்சுறுத்தல்கள் கீழ் கடுமையான சூழ்நிலைகளில் வேலை செய்கிறார்கள்.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆய்வில், மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களில் 80%-க்கும் மேற்பட்டோர் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (ST) என்று கண்டறியப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பெரும்பாலும் சமூக வலைப்பின்னல்கள் மற்றும் முக்கிய முதலாளியுடன் தெளிவற்ற தொடர்புகளைக் கொண்ட இடைத்தரகர்கள் மூலம் பணியமர்த்தப்படுகிறார்கள்.


இடைத்தரகர்கள் பெரிய முன்பணங்களை வழங்குவதன் மூலமும், அதிக ஊதியத்தை உறுதியளிப்பதன் மூலமும் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஈர்க்கிறார்கள். இது செங்கல் சூளைகள், கட்டுமானம், ஜவுளி, கல் குவாரிகள், விவசாயம் மற்றும் தொடர்புடைய துறைகள் போன்ற தொழில்களில் நிகழ்கிறது. இந்தத் தொழில்கள் தொழிலாளர்கள் வேறு வேலைகளைக் கண்டடைவதைத் தடுக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் வாராந்திர இலக்குகளை அடைய வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். இவற்றில் பெரும்பாலும் மிகக் குறைந்த அல்லது ஊதியம் இல்லாமல் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


கொத்தடிமை தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டம் (Bonded Labour System (Abolition) Act (BLSA)) தொழிலாளர்களை பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சுரண்டுவதைத் தடுக்க, பிப்ரவரி 9, 1976 அன்று நிறைவேற்றப்பட்டது. தற்போது கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதனால், இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய இது ஒரு நல்ல நேரமாக அமைந்தது.


கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா நாடு தழுவிய கொத்தடிமை தொழிலாளர் கணக்கெடுப்பை நடத்தவில்லை. 2021ஆம் ஆண்டில், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization (ILO)) உலகளவில் 28 மில்லியன் மக்கள் கட்டாய உழைப்பில் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது. அவர்களில் 15 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் இருந்தனர்.


1978 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் படி, இந்தியாவில் 3,00,000-க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றனர். 2019ஆம் ஆண்டு முதல் ஜனவரி 2023 வரை 2,650 பேர் மறுவாழ்வு பெற்றதாக பாராளுமன்றத் தரவு காட்டுகிறது. தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (National Crimes Record Bureau (NCRB)) இதே காலகட்டத்தில் 2,978 கொத்தடிமைத் தொழிலாளர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.


கொத்தடிமை தொழிலாளர் தொடர்பான மறுவாழ்வு மற்றும் குற்றங்கள் குறித்த தரவுகள், முறைசாரா தொழிலாளர்களின் போராட்டங்களுடன் சில ஒற்றுமைகளைக் காட்டுகின்றன. கொத்தடிமை தொழிலாளர்களுக்காக முதலாளிகள் தண்டிக்கப்படும் வழக்குகள் மிகக் குறைவு. பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பில் பல அடுக்குகள் இருப்பதால், அவர்களுக்கு பெரும்பாலும் ஊதியம் கிடைப்பதில்லை.


கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளை அடையாளம் காண மாநிலங்கள் கணக்கெடுப்புகளை நடத்த மத்திய அரசு அனுமதிக்கிறது. ஆனால், இந்த கணக்கெடுப்புகள் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. ரொக்கம் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை மறுவாழ்வு செய்ய உதவும் ஒரு தேசியத் திட்டம் உள்ளது. இருப்பினும், மாநில அளவில் எத்தனை பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் இந்த சலுகைகளைப் பெறுகிறார்கள் என்பதைக் கண்காணிக்க சரியான அமைப்பு இல்லை.


நீராஜா சவுத்ரி வழக்கில் (Neeraja Chaudhary case) (1984), உச்ச நீதிமன்றம் மாநிலங்கள் சரியான நேரத்தில் மற்றும் சரியான மறுவாழ்வை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியது. இது இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக மாறக்கூடும்.


கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்கான மத்திய துறை திட்டம் (Central Sector Scheme for Rehabilitation of Bonded Labourer), 2021-ன் கீழ் மாநிலங்கள் எவ்வாறு நிதி மற்றும் சலுகைகளை விநியோகிக்கின்றன என்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும்.


இது திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதும், அரசு அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆவணப்படுத்துவதும், முன்னேற்றத்திற்கான பலங்களையும் பகுதிகளையும் அடையாளம் காண உதவும்.


கொத்தடிமை தொழிலாளர் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான சட்டங்களை திறம்பட செயல்படுத்தும் மாநிலங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். மேலும், பொறுப்பான வணிக நடைமுறைகளை ஊக்குவிக்க அவற்றின் வெற்றிகரமான முறைகள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.


நேர்மையற்ற முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை சுரண்டுவதைத் தடுக்க மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.


சாதி, வர்க்கம், பாலினம் அல்லது மாநிலம் எதுவாக இருந்தாலும், அனைத்து தொழிலாளர்களுக்கும் "வேலை கலாச்சாரம்" மற்றும் "வேலை நேரம்" பற்றி நாம் பேச வேண்டும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைந்து, ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும். 


நியாயமற்ற மற்றும் கடுமையான வேலை நிலைமைகளிலிருந்து அவர்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் நாம் பாதுகாக்கவில்லை என்றால், வறுமைக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் தோல்வியடையும் .


டினா குரியாகோஸ் ஜேக்கப், எழுத்தாளர் மற்றும் இடம்பெயர்வு, கொத்தடிமைத் தொழிலாளர்கள், மனித கடத்தல் போன்ற தளங்களில் பணிபுரியும் ஒரு மேம்பாட்டுத் துறை பயிற்சியாளர்.




Original article:

Share:

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 19 என்பது என்ன? -பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


  • தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பேலா எம். திரிவேதி அடங்கிய அமர்வு, 1962 சுங்கச் சட்டம் மற்றும் 2017 ஜி.எஸ்.டி. சட்டத்தின் கைது விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 279 மனுக்களை விசாரித்தது. அரசியலமைப்பின் பிரிவு 246ஏ-ன் கீழ், ஜி.எஸ்.டி.யில் சட்டங்களை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று அமர்வு கூறியது. வரி ஏய்ப்பைத் தடுக்க விதிகளை உருவாக்குவதும் இதில் அடங்கும். எனவே, ஜி.எஸ்.டி வசூல் மற்றும் அமலாக்கத்திற்காக அபராதம் விதிப்பது அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது சட்டமன்ற அதிகாரத்தின் செல்லுபடியாகும் பயன்பாடாகும்.


  • சுங்க அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் அல்ல என்ற முந்தைய தீர்ப்புகளுடன் அமர்வு உடன்பட்டது. இருப்பினும், கைது செய்வதற்கான நடைமுறை மற்றும் கைது செய்யும்போது ஒரு காவல்துறை அதிகாரியின் கடமைகளை விளக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 41B, சுங்க அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்று கூறியது.


  • சுங்கச் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நபரின் உறவினர்களிடம் கைது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. கைது செய்யப்பட்ட நபர் ஒரு நீதிபதி முன் நிறுத்தப்படும்போது, ​​இந்த விதிகள் பின்பற்றப்பட்டதா என்பதை நீதிபதி சரிபார்க்க வேண்டும்.


  • பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 19-ல் உள்ள நியாயமற்ற கைதுக்கு எதிரான பாதுகாப்பு, சுங்கம் மற்றும் GST சட்டங்களின் கீழ் கைதுகளுக்கும் பொருந்தும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


உங்களுக்குத் தெரியுமா?


  • அக்டோபர் 3, 2023 அன்று, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர், அமலாக்க இயக்குநரகம் (ED) ஒருவரை கைது செய்யும்போது, ​​கைதுக்கான எழுத்துப்பூர்வ காரணங்களை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். கைது செய்யப்பட்ட நபருக்கு வழக்கு  ஆவணத்தின் நகலை  வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.


  • ஒரு கைது நடவடிக்கையின் சட்டப்பூர்வத்தன்மை வெறும் தொழில்நுட்ப விவரம் மட்டுமல்ல. அது மிகவும் முக்கியமானது.  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) மற்றும் UAPA போன்ற சட்டங்கள் ஜாமீன் பெறுவதை மிகவும் கடினமாக்குகின்றன. இதன் காரணமாக, நியாயமற்ற கைதுகளைத் தடுக்க கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஜாமீன் பெறுவது கடினம் என்பதால், ஒருவரைக் கைது செய்யும்போது அதிகாரிகள் அனைத்து சட்ட விதிகளையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.


  • "நம்புவதற்கான காரணங்கள்" ("reasons to believe") "குற்றத்தை" நிரூபிக்க போதுமானதாக இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக எதுவும் இருக்கக்கூடாது என்று பிரிவு 19 கூறுகிறது. அமலாக்க இயக்குநரகம் (ED) நம்புவதற்கு ஒரு செல்லுபடியாகும் காரணமாகக் கருதும் விஷயங்களுக்கு உயர் தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பொருள், குற்றத்தை நிரூபிக்க அத்தகைய சான்றுகள் தேவைப்படுவதால், இதற்கான காரணம் கிட்டத்தட்ட "நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகள்" போலவே இருக்க வேண்டும். அமலாக்க இயக்குநரகம் தனிப்பட்ட கருத்தை தவிர குற்றத்தை நிறுவுவதற்கான கருத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.




Original article:

Share:

இந்தியாவின் பிராந்திய இராஜதந்திரத்தில் பூட்டானின் தனித்துவமான இடம் -கே எம் சீதி

 தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பிராந்திய இராஜதந்திரத்தில் பூட்டானின் முக்கிய பங்கை பட்ஜெட் 2025 எவ்வாறு வலியுறுத்துகிறது?


இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான சமீபத்திய உயர்மட்டக் கூட்டங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைக் காட்டுகின்றன. பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே 2025-ம் ஆண்டு நடைபெற்ற அல்டிமேட் லீடர்ஷிப் பள்ளி (School of Ultimate Leadership (SOUL)) மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு, பிரதமர் நரேந்திர மோடியை தனது "மூத்த சகோதரர்" மற்றும் "வழிகாட்டி" என்று பாராட்டினார். இது பூட்டானுடனான இந்தியாவின் வளர்ந்து வரும் பிணைப்பை பிரதிபலிக்கிறது. இது இந்தியாவின் அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கையின் (Neighbourhood-First Policy (NFP)) வெற்றியையும் காட்டுகிறது.


இந்தியாவின் தெற்காசிய இராஜதந்திரத்தை அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கை (NFP) 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி வருகிறது. 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட், அதன் அண்டை நாடுகளுக்கான இந்த உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. புதிய பட்ஜெட்டில் வெளியுறவு அமைச்சகம் (MEA) ₹20,516 கோடியைப் பெற்றது. இதில், ₹5,483 கோடி வெளிநாட்டு உதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 


உலகளாவிய புவிசார் அரசியல் மாறி வருகிறது. மேலும், தெற்காசியா நாடுகள் இராஜதந்திர ரீதியில் போட்டிகளை எதிர்கொள்கிறது. அதன் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் பட்ஜெட்கான ஆதரவு அதன் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அண்டைநாட்டுக்கு முன்னுரிமைக் கொள்கையின் (NFP) முக்கிய யோசனை முதன்முதலில் 2014-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பதவிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நம்பிக்கை, வளர்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களின் அடிப்படையில் பிராந்திய கூட்டாண்மைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை இராஜதாந்திர ரீதியாக எதிர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


தெற்காசியாவில் அதன் பிராந்திய அளவில் இராஜதந்திர ரீதியில் பூட்டானுக்கு இந்தியாவின் ஆதரவு எவ்வாறு பொருந்துகிறது? 2025-26 ஒன்றிய பட்ஜெட்டின் கீழ் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியப் பகுதிகள் யாவை? இந்தியா தனது ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பு எங்கே?


இந்தியாவின் அண்டை நாடுகளில் பூட்டான் மிகப்பெரிய பயனாளியாகும். இது ₹2,150 கோடியைப் பெறுகிறது. இது பூட்டானுடன் இந்தியாவின் வலுவான உத்திக்கான கூட்டாண்மையை எடுத்துக்காட்டுகிறது. மாலத்தீவுகளுக்கான உதவி ₹600 கோடியாக அதிகரித்துள்ளது. மியான்மருக்கு ₹350 கோடியும், இலங்கைக்கு ₹300 கோடியும் கிடைக்கும். இது பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் கவனத்தைக் காட்டுகிறது.


இதற்கிடையில், வங்காளதேசத்திற்கான உதவி ₹120 கோடியாக உள்ளது. இது நிலையான ஈடுபாட்டைக் காட்டுகிறது. நேபாளத்திற்கான உதவி ₹700 கோடியாக உள்ளது, இது நிலைத்தன்மையையும் குறிக்கிறது. அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் ஆப்கானிஸ்தானுக்கு ₹100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.


இந்திய பிராந்தியளவில் பூட்டான் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற தெற்காசிய நாடுகள் இந்தியா மற்றும் சீனாவின் போட்டியிடும் நலன்களுக்கு இடையில் மாறிவிட்டன. ஆனால், பூட்டான் எப்போதும் இந்தியாவின் மிகவும் விசுவாசமான நட்பு நாடாகவே இருந்து வருகிறது. 2025 பட்ஜெட் ஒதுக்கீடு பழைய உறவுகளைப் பேணுவதைவிட அதிகம். இது இந்தியாவின் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான ஒரு உத்தியின் நடவடிக்கையாகும். சீனா இமயமலையில் தனது இருப்பை அதிகரித்து வரும் நேரத்தில் இது மேற்கொள்ளப்படுகிறது.


பூட்டானின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க இந்தியா பூட்டானுக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த உதவி பூட்டானின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் ஒரு இடையகமாக செயல்படுவதால் பூட்டான் முக்கிய நாடாகப் பார்க்கப்படுகிறது. தெற்காசிய நாடுகளில் ஒரு முக்கிய கூட்டணி நாடாக இருப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த உதவி காட்டுகிறது. நேபாளத்தில் திட்டங்கள், இலங்கையில் துறைமுக ஒப்பந்தங்கள் மற்றும் மாலத்தீவில் முதலீடுகள் மூலம் சீனா இப்பகுதியில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதால் இது மிகவும் முக்கியமானது.


கூடுதலாக, பூட்டானுடனான உறவுகளை தீவிரப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது பிராந்திய செல்வாக்கு சவாலற்றதாக இருப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், பொருளாதார மேம்பாடு மற்றும் சுத்தமான எரிசக்தி கூட்டாண்மைகளை மேம்படுத்துகிறது. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (South Asian Association for Regional Cooperation(SAARC)), பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation(BIMSTEC)), மற்றும் வங்காளதேசம் பூட்டான் இந்தியா நேபாளம் (Bangladesh Bhutan India Nepal(BBIN)) போன்ற பலதரப்புத் தளங்களில் இந்தியாவுடன் பூட்டானின் தீவிரமான இராஜதந்திர ஒருங்கிணைப்பு, சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative (BRI)) சமநிலைப்படுத்தும் பிராந்திய கூட்டணிகளை உருவாக்கும் இந்தியாவின் திறனை வலியுறுத்துகிறது.


ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளுக்கு இடையில் அமைந்துள்ள பூட்டான் தெற்காசிய விவகாரங்களில் சமமற்ற புவிசார் அரசியல் தன்மையையும் கொண்டுள்ளது. இந்தியாவின் சிலிகுரி காரிடாருக்கு வடக்கே அதன் இருப்பிடம், வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் குறுகிய நில இணைப்பு, இது சீனாவின் பிராந்திய லட்சியங்களுக்கு எதிரான ஒரு முக்கியமான இடையகமாக செயல்படுகிறது. 


சர்ச்சைக்குரிய பீடபூமியில் சீனா தனது இருப்பை விரிவுபடுத்த முயன்றதால் 2017 டோக்லாம் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் இந்தியாவின் பாதுகாப்பில் பூட்டானின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அப்போதிருந்து, எல்லை மோதல்களைத் தீர்க்க சீனா பூட்டானுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், பூட்டானை நெருக்கமாகக் கொண்டுவர சீனா பொருளாதார நன்மைகளை வழங்குகிறது.


2025-26ஆம் ஆண்டில் பூட்டானுக்கு இந்தியாவின் பட்ஜெட் உறுதிப்பாடு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல. இது ஒரு வலுவான புவிசார் அரசியல் செய்தியையும் அனுப்புகிறது. பூட்டானின் பொருளாதாரம் மற்றும் இராஜதந்திரத்தை ஆதரிப்பது சீனா இந்த முக்கியமான பிராந்தியத்திற்குள் நுழைவதைத் தடுக்க இந்தியாவுக்கு உதவுகிறது. இந்த ஆதரவு பூட்டானின் சுதந்திரத்தை வலுப்படுத்துகிறது. நேபாளம் மற்றும் இலங்கையில் காணப்படுவது போல், சீனாவின் பொருளாதார சலுகைகளுக்கு பூட்டான் விழுவதற்கான வாய்ப்பை இது குறைக்கிறது.


இந்தியாவும் பூட்டானும் நீண்டகால கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. அவர்களின் பிணைப்பு இராஜதந்திரம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியா-பூட்டான் வாணிபம், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தம் முதன்முதலில் 1972-ல் கையெழுத்தானது மற்றும் பின்னர், கடைசியாக 2016-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தடையில்லா வர்த்தகத்தை அனுமதிக்கிறது. இது இந்தியாவை பூட்டானின் மிகப்பெரிய பொருளாதார நட்பு நாடாக மாற்றுகிறது.


இருதரப்பு வர்த்தகம் கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது 2014-15-ல் $484 மில்லியனில் இருந்து 2022-23-ல் $1.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. பூட்டானின் மொத்த வர்த்தகத்தில் இந்தியா 73% ஆகும். 2025-ம் ஆண்டில் ₹2,150 கோடி ஒதுக்கீடு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இது வர்த்தகம், முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பூட்டான் இந்தியாவைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கும்.


மோடி அரசாங்கம் இந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியின் பூட்டான் பயணத்தின் போது, ​​பல முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் மங்தேச்சு நீர்மின் திட்டம் (Mangdechhu Hydropower Project), இஸ்ரோ தரை நில நிலையம் (ISRO Ground Earth Station) மற்றும் ரூபே கார்டு அமைப்பு (RuPay Card system) ஆகியவை அடங்கும்.


2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில், பூட்டான் மன்னர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இந்த வருகைகள் நீர் மின்சாரம், டிஜிட்டல் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்தின. மார்ச் 2024-ம் ஆண்டில், பூட்டானின் பிரதமர் இந்தியாவுக்கு பயணம் செய்தார். இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் பொருளாதார உதவி, வர்த்தக வழித்தடங்கள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதித்தனர்.


பூட்டானின் பொருளாதாரம் இந்தியாவை பெரிதும் சார்ந்துள்ளது. நீர் மின்சார ஏற்றுமதிகள் பூட்டானின் தேசிய வருவாயில் 40% மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% ஆகும். பூட்டானின் நீர் மின்சாரத் துறையின் முக்கிய நிதியளிப்பாளராகவும், மேம்பாட்டாளராகவும் இந்தியா இருந்து வருகிறது. இந்தக் கூட்டாண்மை பூட்டானின் பொருளாதாரத்திற்கு உதவுகிறது மற்றும் இந்தியாவிற்கு குறைந்த விலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குகிறது. 2025 பட்ஜெட் நீர்மின்சார முதலீடுகளில் கவனம் செலுத்துகிறது. இது பிராந்தியத்தில் தூய்மையான எரிசக்தி மையமாக மாறும் பூட்டானின் இலக்கை ஆதரிக்கிறது.


பல ஆண்டுகளாக பூட்டான் முக்கியமான நீர்மின் திட்டங்களை உருவாக்க இந்தியா உதவியுள்ளது. இவற்றில் தலா (1020 மெகாவாட்), சுகா (336 மெகாவாட்), குறிச்சு (60 மெகாவாட்) மற்றும் மங்டெச்சு (720 மெகாவாட்) ஆகியவை அடங்கும். புனாட்சங்சு I & II (2,200 மெகாவாட்) மற்றும் கோலோங்சு (600 மெகாவாட்) போன்ற புதிய திட்டங்கள் பூட்டானின் இந்தியாவிற்கான மின்சார ஏற்றுமதியை அதிகரிக்கும். 2022ஆம் ஆண்டில், இந்த ஏற்றுமதிகள் ₹2,448 கோடி மதிப்புடையவை ஆகும்.


இந்த பரஸ்பர நன்மை பயக்கும் ஏற்பாடு பூட்டானின் பொருளாதாரம் வலுவாக இருக்க உதவுகிறது. இது குறிப்பாக, நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகரும்போது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் பலப்படுத்துகிறது.


உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியா பூட்டானின் முக்கிய நட்பு நாடாகும். 2025-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் எல்லை சாலைகள், வர்த்தக வசதி மையங்கள் மற்றும் நவீன சோதனைச் சாவடிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேம்படுத்தும். பூட்டானை பிராந்திய பொருளாதார கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க இந்தியாவும் செயல்பட்டு வருகிறது. BBIN (வங்காளதேசம்-பூடான்-இந்தியா-நேபாளம்) வழித்தடம் பூட்டான் ஏற்றுமதியாளர்கள் இந்திய துறைமுகங்களை எளிதாக அணுக உதவும்.


டிஜிட்டல் துறையில், பூட்டான் அதன் நிதித்தொழில்நுட்ப உள்கட்டமைப்பை (fintech infrastructure) உருவாக்க இந்தியா உதவுகிறது. எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை அதிகரிக்க ரூபே (RuPay) மற்றும் யுபிஐ கட்டண முறைகளைப் (UPI payment systems) பயன்படுத்துவதையும் இந்தியா ஆதரிக்கிறது. அதே நேரத்தில், பூட்டானில் போக்குவரத்து, இரயில் இணைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவற்றில் இந்தியா முதலீடு செய்கிறது. இந்த முதலீடுகள் பூட்டான் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக இணைந்திருப்பதை உறுதிசெய்கின்றன. மேலும், சீனா வழியாக வர்த்தக வழிகளைத் தேடுவதில்லை.


வரும் ஆண்டுகளில், இந்தியா புதிய ஒத்துழைப்புத் துறைகளில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இவற்றில் காலநிலை மீள்தன்மை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் ஆகியவை அடங்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணியில் இருக்க பூட்டான் இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் நிலைத்தன்மை இலக்குகளுடன் பொருந்துகிறது. இது எதிர்கால எல்லை தாண்டிய எரிசக்தி திட்டங்களுக்கான வாய்ப்புகளைத் திறக்கிறது.


2025-26ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் வெறும் பொருளாதார உறுதிப்பாட்டைவிட அதிகம். பூட்டான் இந்தியாவின் பிராந்திய ராஜதந்திரத்தின் முக்கிய பகுதியாக உள்ளது என்பது ஒரு உத்தியாகும். சீனா தெற்காசியாவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துகிறது. இந்த சூழலில், பூட்டானுக்கு இந்தியா அளிக்கும் வலுவான ஆதரவு இமயமலை இராச்சியத்தை நம்பகமான கூட்டணி நாடாகவும், பாதுகாப்பான இடைத்தரகராகவும், பொருளாதார நட்பு நாடாகவும் வைத்திருக்க உதவுகிறது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், இந்தியா-பூட்டான் உறவு செழிக்கும். பகிரப்பட்ட வளங்களின் செழிப்பு மற்றும் இராஜதந்திர திட்டமிடல் தெற்காசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்பதைக் காட்டும் வகையில், பிராந்திய ஒத்துழைப்புக்கு இது ஒரு முன்மாதிரியாகவும் அமையும்.




Original article:

Share:

‘நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பு’ (Time Use Survey) ஏன் முக்கியமானது? - குஷ்பு குமாரி

 புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI)) கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistics Office (NSO)) 2024-ம் ஆண்டு ஜனவரி-டிசம்பர் காலத்திற்கான இரண்டாவது அகில இந்திய நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பை (All-India Time Use Survey) வெளியிட்டுள்ளது. இது வெவ்வேறு செயல்பாடுகளில் மக்கள்தொகையின் நேரத்தை அளவிடுகிறது. கணக்கெடுப்பின் முதன்மை நோக்கம் பணம் செலுத்தும் மற்றும் செலுத்தப்படாத நடவடிக்கைகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அளவிடுவதாகும். முதல் அகில இந்திய கணக்கெடுப்பு ஜனவரி - டிசம்பர் 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இதில், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா குடியரசு, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற உலகெங்கிலும் உள்ள சில நாடுகளில் மட்டுமே மக்கள் தங்கள் நேரத்தை பல்வேறு அன்றாட நடவடிக்கைகளுக்கு எவ்வாறு ஒதுக்குகிறார்கள் என்பதை பகுப்பாய்வு செய்வதற்காக இதுபோன்ற தேசிய நேர பயன்பாட்டுக் கணக்கெடுப்பை (National Time Use Survey) நடத்துகின்றனர்.


முக்கிய அம்சங்கள் :


1. ‘நேர பயன்பாட்டு கணக்கெடுப்பு’ (Time Use Survey(TUS)) மற்ற வீடு தொடர்பான ஆய்வுகளிலிருந்து வேறுபட்டது. ஏனெனில், இது மனித நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களில், அது ஊதியம் பெற்றதா, ஊதியம் பெறாததா அல்லது பிற செயல்பாடுகளாக இருந்தாலும், பாலின புள்ளிவிவரங்களின் பல்வேறு அம்சங்களை அளவிட உதவும் விவரங்களுடன் நேரத்தைப் பயன்படுத்துகிறது. இது வீட்டு உறுப்பினர்களால் கற்றல், சமூகமயமாக்கல், ஓய்வுநேர நடவடிக்கைகள், சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் செலவிடும் நேரம் பற்றிய தகவலையும் வழங்குகிறது.


2. குடும்ப உறுப்பினர்களுக்கான ஊதியம் இல்லாத வீட்டுச் சேவைகளில் ஒரு நாளில் பெண்கள் செலவிடும் நேரம் 2019-ம் ஆண்டில் 299 நிமிடங்களில் இருந்து 2024-ம் ஆண்டில் 289 நிமிடங்களாக, அதாவது 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு ஆண்களைவிட பெண்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக ஒரு நாளில் 201 நிமிடங்கள் கூடுதலாகச் செலவழித்துள்ளனர்.


3. ஒரு நாளில் ஆண்களைவிட பெண்கள் செலவிடும் நிமிடங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஊதியம் பெறாத வீட்டு வேலைகளுக்கு மிக அதிகமானது. அதைத் தொடர்ந்து வீட்டு உறுப்பினர்களுக்கான ஊதியம் இல்லாத பராமரிப்பு சேவைகள் உள்ளன. ஆண்களைவிட பெண்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ஊதியமில்லாத பராமரிப்பு நடவடிக்கைகளில் ஒரு நாளில் 62 நிமிடங்கள் அதிகமாக செலவிட்டுள்ளனர். பெண்களின் சராசரி நேரம் 2019-ம் ஆண்டில் 134 நிமிடங்களிலிருந்து 2024-ம் ஆண்டில் 137 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.


4. 15-59 வயதுடைய பெண்களில் 41 சதவீதம் பேர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதில் பங்கேற்றனர். அதேசமயம், ஆண்களின் பங்கேற்பு 21.4 சதவீதமாக இருந்தது. "இது இந்திய சமூகக் கட்டமைப்பை உறுதிப்படுத்துகிறது. இதில் வீட்டு உறுப்பினர்களுக்கான பெரும்பாலான பராமரிப்பு பொறுப்புகள் பெண்களால் சுமக்கப்படுகின்றன" என்று அமைச்சகம் கூறியது.


5. இருப்பினும், வேலைவாய்ப்பு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு, ஆண்கள் பெண்களைவிட 132 நிமிடங்கள் அதிகமாக செலவிட்டனர். பெண்கள் 341 நிமிடங்கள் செலவிட்டனர், ஆண்கள் 473 நிமிடங்கள் செலவிட்டனர்.


6. 2024-ம் ஆண்டில், சுமார் 83.9% பெண்கள் ஊதியம் பெறாத செயல்பாடுகளில் பங்கேற்றனர். இது 2019-ம் ஆண்டில் 84.0%ஆக இருந்தது. ஊதியம் பெறாத செயல்பாடுகளில் அவர்களின் பங்கேற்பு 2019-ம் ஆண்டில் 17.1%-ல் இருந்து 2024-ம் ஆண்டில் 20.6% ஆக அதிகரித்துள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை, ஊதியம் பெறாத செயல்பாடுகளில் பங்கேற்பு 2019-ம் ஆண்டில் 43.9%-லிருந்து 2024-ம் ஆண்டில் 45.8% ஆக உயர்ந்துள்ளது. ஊதியம் பெறாத வேலையில் அவர்களின் பங்கேற்பும் அதிகரித்து, 2019-ம் ஆண்டில் 54.8% இலிருந்து 2024-ம் ஆண்டில் 60.5% ஐ எட்டியது.


7. 2024 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பெண்கள் சமூகமயமாக்கல், தொடர்பு, சமூக பங்கேற்பு மற்றும் மத நடைமுறைகளில் 139 நிமிடங்கள் செலவிட்டனர். ஆண்கள் 2024-ம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளில் குறைந்த நேரத்தையே செலவிட்டனர். அவர்களின் நேரம் 2019-ம் ஆண்டில் 147 நிமிடங்களிலிருந்து 138 நிமிடங்களாகக் குறைந்துள்ளது.


ஊதியத்துடன் கூடிய வேலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கான சுய வேலைவாய்ப்பு அடங்கும். இதில் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கான வழக்கமான ஊதியம், சம்பளம் அல்லது சாதாரண உழைப்பும் அடங்கும். ஊதியமின்றி செய்யப்படும் செயல்பாடுகளில் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அவர்களின் சொந்த வீடுகளில் பராமரிப்பது அடங்கும். தனிப்பட்ட பயன்பாட்டிற்கான சேவைகள் மற்றும் பொருட்களை உற்பத்தி செய்வதும் இதில் அடங்கும்.


ஊதியமின்றி செய்யப்படும் பிற வேலைகளில் வீடுகள் மற்றும் சந்தை அல்லது சந்தை அல்லாத பிரிவுகளில் தன்னார்வ வேலை அடங்கும். இது ஊதியமின்றி செய்யப்படும் பயிற்சியாளர் வேலை மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதற்கான பிற ஊதியமின்றி செய்யப்படும் வேலைகளையும் உள்ளடக்கியது.


ஊதா பொருளாதாரம் (Purple Economy) மற்றும் பராமரிப்பு பொருளாதாரம் (Care Economy)


1. ஐக்கிய நாடுகளின் பொருளாதார வலையமைப்பு (United Nations Economist Network) என்பது ஊதா பொருளாதாரத்தை (Purple Economy), பராமரிப்புப் பொருளாதாரம் (care economy) என்று வரையறுக்கிறது. பல பெண்ணிய இயக்கங்கள் (many feminist movements) பயன்படுத்தும் வண்ணத்திலிருந்து இந்த பெயர் வருகிறது. இது பொருளாதாரம் பற்றிய புதிய சிந்தனை முறையைக் குறிக்கிறது. இது பராமரிப்புப் பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இது பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் சுதந்திரத்தை மதிக்கிறது. இந்த காரணிகள் பொருளாதாரங்கள், சமூகத்தின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கை நிலைத்தன்மையை எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.


2. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation (ILO)) பராமரிப்பு பொருளாதாரத்தை மக்கள், வீடுகள் மற்றும் சமூகங்களுக்கு பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்கும் செயல்பாடுகளாக வரையறுக்கிறது. இதில் ஊதியம் மற்றும் ஊதியம் பெறாத வேலைகள் இரண்டும் அடங்கும். பராமரிப்பு பொருளாதாரம் (Care Economy) தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் பராமரிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படும் பரந்த அளவிலான வேலைகள் மற்றும் வளங்களை உள்ளடக்கியது.


3. பராமரிப்பு பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அம்சமானது, அதில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும். சுகாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் மொத்த தொழிலாளர்களில் 70% பெண்கள் ஆவர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அவர்கள் சராசரியாக சுமார் 28% பாலின ஊதிய இடைவெளியை எதிர்கொள்கின்றனர். இது பராமரிப்பு பொருளாதாரத்தை ஊதியத்தின் அடிப்படையில் மிகவும் சமமற்ற துறைகளில் ஒன்றாக ஆக்குகிறது.


4. பராமரிப்புப் பணியின் குறைவான ஊதியம் மற்றும் குறைமதிப்பீடு ஆகியவை பொருளாதார தரவுகளில் அதை குறைவான அளவில் பங்களிக்க வைக்கிறது. இதன் விளைவாக சந்தை தோல்வி ஏற்படுகிறது. சமீபத்திய கொள்கைச் சுருக்கத்தின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பராமரிப்புப் பணியின் பங்களிப்பு சுமார் 15-17% என மதிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய பொருளாதார நடவடிக்கைகளில் இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்தாலும், ஊதியம் பெறாத மற்றும் குறைவான ஊதியம் வழங்கும் பணி வழங்கும் பொருளாதார மதிப்பை இந்த எண்ணிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


5. சர்வதேச தொழிலாளர் அமைப்பால் வழங்கப்படும் 5R கட்டமைப்பானது, கவனிப்புப் பணியின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் முக்கியமாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பில் ஊதியம் பெறாத பராமரிப்பை அங்கீகரித்தல், குறைத்தல் மற்றும் மறுபகிர்வு செய்தல், ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு போதுமான வெகுமதி அமைப்புகளை உறுதி செய்தல் மற்றும் கொள்கை வடிவமைப்பு முதல் மதிப்பீடு வரை பராமரிப்பாளர்கள் மற்றும் கவனிப்பு பெறுபவர்களின் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை அளிப்பது ஆகியவை அடங்கும்.




Original article:

Share: