பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இனிமேலும் ஏன் தாமதிக்க முடியாது? -ஷாமிகா ரவி

பெண் வாக்காளர்களின் அதிக வாக்குப்பதிவு ஜனநாயகம் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருபதறகான அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தல் என்பது வாக்களிப்பது மட்டுமல்ல. முடிவெடுக்கும் பொறுப்புகளிலும் பெண்களுக்கு இடம் இருக்க வேண்டும்.


இந்தியா ஒரு அசாதாரணமான ஜனநாயகச் சந்திப்பில் உள்ளது. இது உலகின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றாகும். அதிக வாக்காளர் பங்கேற்பு மற்றும் அதிகாரித்துவரும் பெண் வாக்காளர்களால் இது குறிக்கப்படுகிறது. ஆனால், அதன் சட்டமன்ற அமைப்புகளுக்குள், பெண்களின் பிரதிநிதித்துவம் வெளிப்படையாகக் குறைவாகவே உள்ளது. பங்கேற்புக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இந்த முரண்பாடு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான ஒரு வலுவான வாதத்தை முன்வைக்கிறது.


இந்த இடைவெளி தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பெண்கள் ஒரு தீர்க்கமான தேர்தல் சக்தியாக உருவெடுத்துள்ள போதிலும், சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மிகக் குறைவாகவே உள்ளது. மாநில மற்றும் தேசியப் பிரதிநிதித்துவத்திற்கு இடையிலான பெரும் வேறுபாட்டில் இந்த ஏற்றத்தாழ்வு மிகவும் தெளிவாகத் தெரிகிறது.


மாநில சட்டமன்றங்களில், சராசரியாக, சட்டமன்ற உறுப்பினர்களில் பெண்கள் சுமார் 9% மட்டுமே உள்ளனர். அதேசமயம், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் சுமார் 14%-15% ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பெண்களின் பங்கான கிட்டத்தட்ட 50%-ஐப் பிரதிபலிப்பதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது.


இந்த ஏற்றத்தாழ்வு வெறும் எண்ணிக்கை சார்ந்தது மட்டுமல்ல, இது கட்டமைப்பு ரீதியானது. கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவில் பெண்கள் செயலற்ற வாக்காளர்களிலிருந்து தீவிர அரசியல் பங்கேற்பாளர்களாக மாறியுள்ளனர். பல மாநிலங்களில், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க ஜனநாயகச் சாதனையாகும். இது பெண்களிடையே தங்களின் செயல்திறன், விழிப்புணர்வு மற்றும் வளர்ந்துவரும் அரசியல் உரிமையுணர்வை உணர்த்துகிறது. இருப்பினும், பங்கேற்பில் ஏற்பட்ட இந்த எழுச்சி, பிரதிநிதித்துவத்தில் அதற்கு இணையான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கவில்லை.


கட்டமைப்புரீதியான குறைபாடுகள்


இதற்கான காரணங்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பின் செயல்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளன. அரசியல் கட்சிகள் வாயில்காப்பாளர்களாகச் செயல்படுகின்றன. மேலும், ஆண்களைவிட மிகக் குறைவான பெண் வேட்பாளர்களையே தொடர்ந்து நியமிக்கின்றன. தேர்தல் அரசியல் என்பது அதிக வளங்கள் தேவைப்படும் ஒரு துறையாகும். இதற்கு நிதி ஆதரவு, வலையமைப்புகள் மற்றும் சமூக மூலதனம் தேவைப்படுகின்றன. இந்தத் துறைகளில் பெண்கள் பெரும்பாலும் அமைப்புரீதியான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கலாச்சார நெறிமுறைகளும் பாதுகாப்பு குறித்த கவலைகளும் பெண்களை அரசியல் களத்தில் நுழைவதிலிருந்து மேலும் தடுக்கின்றன. இதன் விளைவாக, ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து நிகழும் ஒரு புறக்கணிப்புச் சுழற்சி உருவாகிறது. சரியாக இந்த காரணத்தினால்தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரும்பத்தக்கது மட்டுமல்ல, அவசியமானதும் ஆகும். சட்டமன்றங்களில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவதன் மூலம், நியாயமான பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் கட்டமைப்புத் தடைகளை இது நேரடியாகக் களைகிறது. இத்தகைய ஒதுக்கீடுகள் தகுதியைக் குறைத்து மதிப்பிடுகின்றன அல்லது பெயரளவிலான பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கின்றன என்று விமர்சகர்கள் அடிக்கடி வாதிடுகின்றனர். ஆனால் இந்த வாதம், தற்போதைய அமைப்புரீதியாக தகுதியின் அடிப்படையில் இயங்குகிறது என்று கருதுகிறது. ஆனால் அது தெளிவாக அவ்வாறு இல்லை. இந்தியாவில் அரசியல் அதிகாரத்திற்கான அணுகலானது, திறமையைப் போலவே சலுகைகள் மற்றும் வலையமைப்புகளாலும் வடிவமைக்கப்படுகிறது.



உள்ளாட்சி மட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்த இந்தியாவின் தனிபட்ட அனுபவத்திலிருந்தே கிடைக்கும் சான்றுகள் ஒரு வலுவான மாற்றுக்கருத்தை அளிக்கின்றன. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில், பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில், அதன் விளைவுகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பெண் தலைவர்கள் திறம்படப் பங்கேற்றது மட்டுமல்லாமல், சுகாதாரம், கல்வி, நீர் மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை நோக்கி கொள்கை முன்னுரிமைகளையும் மாற்றியுள்ளனர். இவை சாதாரணமான பிரச்சினைகள் அல்ல, அவை மனித வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மையமானவை.


மேலும், பிரதிநிதித்துவம் ஒரு சங்கிலித் தொடர் விளைவை ஏற்படுத்துகிறது. பெண்கள் அதிகாரப் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் ஆழமாக வேரூன்றிய சமூக நெறிகளுக்கு சவால் விடுகிறார்கள். இளம் பெண்கள் தலைமைப் பதவியை அடைய முடியும் என்று கருதி வளர்கிறார்கள். குடும்பங்களும் சமூகங்களும் பெண்களின் பொதுப் பங்குகளை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகின்றன. காலப்போக்கில், இது எதிர்காலத் தலைவர்களின் ஒரு தொடர் வரிசையை உருவாக்குகிறது. எனவே, இட ஒதுக்கீடு என்பது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல, மாறாக அது ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. அது வரலாற்று ரீதியான ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்ய உதவுகிறது மற்றும் மிகவும் சமத்துவமான ஒரு அமைப்புக்கு களம் அமைக்கிறது.


மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றம் குறித்து


மாநில சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ஒப்பீடு, இந்த சீர்திருத்தத்தின் அவசரத்தை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


மாநில அளவில் பிரதிநிதித்துவம் 9% ஆகக் குறைவாக இருந்தால், சட்டமியற்றும் அதிகாரத்தின் அடிமட்டத்தில் பிரச்சினை இன்னும் கடுமையாக உள்ளது என்பதையே அது காட்டுகிறது. சுகாதாரம், கல்வி, சட்டம் மற்றும் ஒழுங்கு, மற்றும் உள்ளாட்சி மேம்பாடு தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதில் மாநில அரசுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த முடிவெடுக்கும் அமைப்புகளில் பெண்கள் ஏறக்குறைய இல்லாததால், மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு அவற்றை வடிவமைப்பதில் குறைந்த அளவே குரல் மட்டுமே உள்ளது என்பதாகும்.


தேசிய அளவில், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் சுமார் 14%–15% என்ற சற்றே உயர்ந்த எண்ணிக்கை பெரும்பாலும் ஒரு முன்னேற்றமாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இதுவும் உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு போதுமானதாக இல்லை. ஒரு பிரதிநிதித்துவ ஜனநாயகம், அதன் மக்களின் பன்முகத்தன்மையை வெறும் கோட்பாட்டில் மட்டுமல்ல, நடைமுறையிலும் பிரதிபலிக்க வேண்டும். பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களின் சட்டபூர்வத்தன்மையையும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் பலவீனப்படுத்துகிறது.


காலம் மற்றொரு முக்கியக் காரணியாகும். இந்தியா சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வேகமாக மாறி வருகிறது. அதிகமான பெண்கள் உயர்கல்வியில் சேர்கிறார்கள். அதிகமான பெண்கள் பணியிடங்களில் இணைகிறார்கள். அவர்கள் தங்கள் உரிமைகளை மேலும் வலுவாக நிலைநாட்டுகிறார்கள். அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய நிறுவனங்களைவிட அவர்களின் விருப்பங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைச் செயல்படுத்துவதில் தாமதம் செய்வது, இந்த இடைவெளியை மேலும் விரிவுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்துவதோடு, விரக்திக்கும் ஈடுபாடின்மைக்கும் வழிவகுக்கும்.


சட்டப்பூர்வ ஆணைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, அரசியல் கட்சிகள் தாமாக முன்வந்து அதிக பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். இது ஒரு விரும்பத்தக்க இலக்காக இருந்தாலும், தாமாக முன்வந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பதை கடந்தகால அனுபவங்கள் காட்டுகின்றன. தொடர்ந்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இருந்தபோதிலும், பெண் வேட்பாளர்களின் விகிதம் குறைவாகவே நீடித்து வருகிறது. கட்டமைப்பு சார்ந்த சிக்கல்களுக்குக் கட்டமைப்பு சார்ந்த தீர்வுகளே தேவை; இட ஒதுக்கீடு அத்தகைய தீர்வுகளில் ஒன்றாகும்.



ஜனநாயகத்தை வலுப்படுத்துதல்


மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் சாராம்சம், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே ஆகும். பெண் வாக்காளர்களிடையே அதிக வாக்குப்பதிவு என்பது ஜனநாயகத்தின் தீவீரத்திற்கான ஓர் அறிகுறியாகும். ஆனால், உண்மையான அதிகாரமளித்தலுக்கு வாக்களிப்பது மட்டும் போதாது. முடிவெடுக்கும் அமைப்புகளிலும் பெண்களுக்கு ஓர் இடம் தேவை. சட்டங்களும் கொள்கைகளும் உருவாக்கப்படும் இடங்களில் அவர்கள் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பங்கேற்பிலிருந்து பிரதிநிதித்துவத்திற்கு நகர்வதே இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தின் அடுத்த தர்க்கரீதியான படியாகும்.


இதில் ஒரு வலுவான வளர்ச்சி சார்ந்த வாதமும் உள்ளது. பாலின சமத்துவமான ஆளுகை சிறந்த விளைவுகளுக்கு வழிவகுக்கிறது என்பதை நாடு தழுவிய ஆய்வுகள் காட்டுகின்றன — அதாவது, அதிக சமத்துவமான கொள்கைகள், மேம்பட்ட சமூகக் குறிகாட்டிகள் மற்றும் நிலையான வளர்ச்சி. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் சிக்கலான ஒரு நாட்டில், மக்கள்தொகையில் பாதியை அரசியல் தலைமையிலிருந்து விலக்குவது அநீதியானது மட்டுமல்ல, அது திறமையற்றதும் ஆகும்.


நிறுவன சீர்திருத்தத்தால் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இந்தியா ஏற்கனவே காட்டியுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் இட ஒதுக்கீட்டின் வெற்றி, அரசியல் விருப்பம் இருக்கும்போது மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. இந்தக் கொள்கையை மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் விரிவுபடுத்துவது ஒரு தீவிரமான நடவடிக்கை அல்ல, அது ஒரு அவசியமான முன்னேற்றமாகும். இறுதியில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு இந்தியா தயாராக இருக்கிறதா என்பது கேள்வியல்ல, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டிற்காக அதன் ஜனநாயகம் இன்னும் காத்திருக்க முடியுமா என்பதே கேள்வி. பங்கேற்பிற்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான இடைவெளி புறக்கணிக்க முடியாத அளவுக்குப் பெரியது.


இந்தியாவின் ஜனநாயகப் பயணம் குறிப்பிடத்தக்கது, ஆனால் அது இன்னும் முழுமையடையவில்லை.


இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத் துணிச்சலான நடவடிக்கை தேவை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாகச் செயல்படுத்துவது என்பது வெறும் நியாயத்தைப் பற்றியது மட்டுமல்ல, அது மேலும் பிரதிநிதித்துவமிக்க, பதிலளிக்கக்கூடிய மற்றும் மீள்திறன் கொண்ட ஒரு ஜனநாயகத்தைக் கட்டமைப்பதாகும்.


ஷாமிகா ரவி, EAC-PM அமைப்பின் உறுப்பினர்.


Original Link : Why women’s reservation cannot wait any longer 


Share:

தக்க தோல்வி : அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026 முறியடிக்கப்பட்டது குறித்து . . .

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கடைபிடிக்கப்பட்ட அணுகுமுறை தோல்வியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தன.


ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடியே, அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, 2026-ஆனது, ஒரு அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறத் தவறியது. மொத்தம் 298 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்த நிலையில், மசோதா நிறைவேற 352 வாக்குகளே தேவைப்பட்டன. இது அவையில்  வந்திருந்த வாக்களித்த 528 உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்காகும். இதைத் தொடர்ந்து, துணை மசோதாக்களான 'தொகுதி மறுவரையறை மசோதா' (Delimitation Bill) மற்றும் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா' (Union Territories Laws (Amendment) Bill) ஆகியவற்றைத் தனித்தனியாகப் பார்க்க இயலாது என்று கூறி, அவற்றை அரசு ஒத்திவைத்தது. விவாதத்திற்குப் பதிலளிக்கும்போது, ​​உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு வாய்மொழி உத்தரவாதத்தை அளித்தார். அதாவது, 816 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அவற்றின் தற்போதைய பங்கிற்குச் சமமான விகிதத்திலேயே அதிகரிக்கும் என்று அவர் கூறினார். மேலும், 50 சதவீத சீரான அதிகரிப்பை அதிகாரப்பூர்வத் திருத்தமாகச் சேர்த்து மசோதாவை மறுவரைவு செய்ய, அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கவும் அவர் முன்வந்தார். எதிர்க்கட்சிகள் இதை நிராகரித்தன. அது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியது. விகிதாசார அதிகரிப்புதான் எப்போதும் நோக்கமாக இருந்ததென்றால், அது ஏன் மசோதாவில் இடம்பெறவில்லை? தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் வாசகங்கள், தொகுதி மறுவரையறையை மிகச் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் (தற்போது 2011-ம் ஆண்டைய கணக்கெடுப்பு) அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருந்தது. இது, இந்தி பேசும் மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட தென், கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவப் பங்கைக் குறைத்திருக்கும். 2026-27-ஆம் ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இத்தகைய சர்ச்சைக்குரிய அரசியலமைப்புத் திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முயன்றது ஏன்? மேலும், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெற்றுள்ள 'பெண்களுக்கான இடஒதுக்கீடு' மசோதாவை, தொகுதி மறுவரையறை விவகாரத்துடன் இந்த முறையில் இணைக்கவேண்டிய அவசியமே இல்லை. எதிர்க்கட்சிகளைக் குழப்பிப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் கையாளப்பட்ட இந்த விசித்திரமான, கண்துடைப்பு நாடக அணுகுமுறை, நாடாளுமன்ற நடைமுறையையே கேலிக்கூத்தாக்கியது.


இந்தத் திட்டமிட்ட நகர்வுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றுபட்டு வாக்களித்தது பாராட்டுக்குரியது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் திமுக போன்ற கட்சிகள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகளைக் கடந்து, அவையில் ஒருங்கிணைப்பை உறுதிசெய்தன. இதற்கு மாறாக, மசோதாவின் வாசகத்தில் முரண்பாடான சொற்கள் இருந்தபோதிலும், உள்துறை அமைச்சரின் வாய்மொழி உறுதிமொழிகளின் அடிப்படையில் மசோதாவிற்கு ஆதரவாகப் பேசிய தெலுங்கு தேசம் கட்சி மற்றும் அதிமுகவின் அறியாமையைக் கவனிக்க வேண்டும். மசோதாவின் நிபந்தனைகளின்படியே ஆந்திரப் பிரதேசம் ஐந்து இடங்களையும், தமிழ்நாடு 11 இடங்களையும் இழக்க நேரிட்டபோதும், இக்கட்சிகள் அவ்வாறு பேசின. இந்தத் தோல்வி அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைய வேண்டும். அது இப்போது அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட்ட வழிமுறையின் மூலம் மகளிர் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த வேண்டும். முதலில், அது 2026-27 மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நிறைவு செய்து, தொகுதி மறுவரையறை மற்றும் மக்களவை விரிவாக்கம் ஆகியவற்றை உண்மையான ஒருமித்த கருத்திற்காக நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டும். பரந்த உடன்பாடு இல்லாமல் தொலைநோக்குக் கட்டமைப்பு மாற்றங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற வரம்பு துல்லியமாக உள்ளது. மேலும் அந்தப் பாதுகாப்பு இன்று நிலைநிறுத்தப்பட்டது.


Original Link: Deservedly dead: On the defeat of the Constitution (131st Amendment) Bill, 2026


Share:

சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை -சஷி தரூர்

ஒரு சாதாரண மனிதருக்கு, சட்டரீதியான செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும், பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது.


நமது சட்ட அமைப்பின் சிக்கலான பாதைகளில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, நீதிமன்றம் என்பது பெரும்பாலும் நம்பிக்கை குறைந்துவரும் ஓர் இடமாகவே உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, வழக்குப் பட்டியல்களில் வெளிப்படையான வேகத்துடன் முன்னேறும்போது, சராசரி குடிமகனோ, தலைமுறைகள் வரை நீடிக்கக்கூடிய ஒத்திவைப்புகள் மற்றும் நடைமுறைத் தடைகளின் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறார். "நீதி தாமதமானால், அது மறுக்கப்பட்டதற்குச் சமம்" என்ற சொற்றொடர் இனி வெறும் எச்சரிக்கை அல்ல, மாறாக அதுவே ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகிவிட்ட ஒரு நிலையை நாம் அடைந்துவிட்டோம்.


இப்போது, ​​கவனம் மாறவேண்டும். அது, தீர்ப்பை வழங்கும் நீதிபதியிடமிருந்து கவனத்தை விலக்கி, குற்றவாளிக் கூண்டில் நிற்கும் மக்கள் பக்கம் திருப்ப வேண்டிய நேரம் இது. இந்தியாவில் நீதித்துறை சீர்திருத்தத்தின் அவசரம் என்பது வழக்கறிஞர்களுக்கான ஒரு தொழில்முறை அக்கறையோ அல்லது கல்வியாளர்களுக்கான ஒரு கோட்பாட்டுப் பயிற்சியோ அல்ல, இது ஒரு அடிப்படை மனித உரிமையின் நெருக்கடியாகும். இது அரசு தனது நியாய வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்றுகிறது என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்யக் கோருகிறது.


வேதனை தரும் காத்திருப்பு


சாதாரண மக்களின் முக்கியப் புகார், நிலுவையில் உள்ள வழக்குகளின் பெரும் சுமையாகும். இந்தச் சுமைதாங்க முடியாததாகவும், கடினமானதாகவும் இருக்கிறது. தற்போது ஐந்து கோடிக்கும் அதிகமான வழக்குகள் நமது நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக, இந்த அமைப்பு தனக்குத்தானே எதிராகச் செயல்படுகிறது. ஒரு சாமானிய மனிதனுக்கு, சட்ட செயல்முறை என்பது, தீர்வுக்கான தெளிவான எல்லையின்றி நேரமும் பணமும் காணாமல் போகும் ஒரு கருந்துளை போலத் தோன்றுகிறது. இந்த நிலுவை, சட்டத்தை மீறுபவர்களுக்குத் தைரியமூட்டுகிறது மற்றும் சட்டத்தை மதிப்பவர்களைச் சோர்வடையச் செய்கிறது. ஒரு நிலத்தகராறு தீர்க்கப்பட 20 ஆண்டுகள் ஆகும் போது, சொத்தின் மதிப்பைவிட சட்டக் கட்டணங்களுக்காக அதிகமாகச் செலவழித்த வெற்றியாளர், அந்த வெற்றியை பெரும்பாலும் வெற்று வெற்றியாகவே காண்கிறார்.


இந்திய சட்ட அமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட மந்தநிலை, நீதிக்கான தேடலை ஒரு சகிப்புத்தன்மைச் சோதனையாக மாற்றியுள்ளது. இது "செயல்முறையே தண்டனை" என்ற கடுமையான கருத்துக்கு வழிவகுக்கிறது. பல தேவையற்ற நடைமுறைத் தடைகளும், அடிக்கடி மற்றும் பெரும்பாலும் அர்த்தமற்ற முறையில் வழக்குகளை ஒத்திவைக்கும் கலாச்சாரமும், ஒரு தீர்ப்பு எட்டப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பே, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை திறம்படப் பறித்து, வழக்குகளைப் பல பத்தாண்டுகளுக்குத் தேக்கநிலையில் வைத்திருக்கும் ஒரு நிலையை உருவாக்குகின்றன. இந்த அமைப்புரீதியான தோல்வியானது, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தனிநபர்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டு, இழப்பீடு ஏதுமின்றி தங்கள் வாழ்க்கை சிதைந்து, வாழ்வின் பொன்னான ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கக்கூடும்.


சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA)) போன்ற கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணையின்றியும் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பின்றியும் நெரிசல் மிகுந்த சிறைகளில் சிக்கித் தவிப்பது குறிப்பாக மனசாட்சியற்ற செயலாகும். ஏனெனில், மேலோட்டமான ஆதாரங்களின் அளவுகோல், சிறைவாசத்தை விதிவிலக்காக அல்லாமல் விதியாகவே ஆக்கிவிடுகிறது. சுதந்திரம் குறித்த அரசியலமைப்பு வாக்குறுதியை நிலைநிறுத்த, நீதித்துறை விரைவாகத் தெளிவான, கட்டாய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். அந்த வழிகாட்டுதல்கள், அரசு ஒரு அர்த்தமுள்ள விசாரணையைத் தொடங்க வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை வழங்கவேண்டும் என்ற உறுதியான காலக்கெடு ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் நிர்ணயிக்க வேண்டும்.


இந்த மாற்றத்திற்கு 21-ம் நூற்றாண்டை முழுமையாகத் தழுவுவது அவசியமாகிறது. நீண்டகாலமாக, நமது நீதிமன்றங்கள் காலனித்துவ காலத்தில் உறைந்து போனது போல இயங்கி வருகின்றன. மலை போன்ற காகிதக் கோப்புகளையும், விசாரணைக்கான புதிய தேதியைக் கேட்பதற்காகவே நூற்றுக்கணக்கான மைல்கள் பயணிக்க வேண்டிய வழக்காடுகளின் நேரடி வருகையையும் அவை சார்ந்திருந்தன. நாம் வங்கிச் சேவைகளைப் பயன்படுத்தும், பொருட்களை வாங்கும், மற்றும் தொடர்பு கொள்ளும் முறைகளை மாற்றியமைத்துள்ள டிஜிட்டல் புரட்சி, இப்போது நீதித்துறையையும் வெல்ல வேண்டும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு சார்ந்த வழக்கு மேலாண்மை ஆகியவை ஆடம்பரப் பொருட்கள் அல்ல, மாறாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கலைப்பதற்கு அவசியமான கருவிகளாகும். வழக்கமான நிர்வாகத் தாக்கல் பணிகளை செயற்கை நுண்ணறிவு கையாள்வது, தாமதங்களைக் கண்டறிவது, மற்றும் சட்ட ஆராய்ச்சியில்கூட உதவுவது போன்ற ஒரு அமைப்பை கற்பனை செய்து பாருங்கள். இது, நீதிபதிகள் தங்கள் மன ஆற்றலை வழக்கின் மிக முக்கியமான பகுதிகளில் முழுமையாகச் செலுத்த வழிவகுக்கும்.



அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய தன்மைக்கான தேவை


இருப்பினும், ஒரு விரைவு நீதிமன்றம் என்பது தீர்வின் ஒரு பகுதி மட்டுமே. மேலும் நமக்கு அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நீதிமன்றமும் தேவைப்படுகிறது. சட்டத்தின் மீதான குடிமக்களின் நம்பிக்கை, அதை விளக்கும் நபர்களில் தங்களைப் பிரதிபலிப்பதாக அவர்கள் காண்கிறார்களா என்பதோடு வலுவாகப் பிணைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட “பழைய சிறுவர்களின் கூடாரம்” (old boys’ club) என்று நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அங்கு, பெண்களுக்கும் விளிம்புநிலை சமூகங்களுக்கும் உள்ள கண்ணுக்குத் தெரியாத தடையானது அப்படியே நீடிக்கிறது. மேலும், பல நீதிபதிகள் முந்தைய தலைமுறை நீதிபதிகளின் உறவினர்களாகவே உள்ளனர். உண்மையான சீர்திருத்தம் என்பது, இந்தத் தடைகளை உடைத்து, நீதித்துறையானது இந்தியாவின் பரந்த மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்வதாகும். இது அடையாள அரசியல் பற்றியது அல்ல, இது நீதித்துறையின் தரம் பற்றியது. ஒரு பன்முக மக்கள்தொகையின் வாழ்வியல் யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் ஒரு நீதித்துறையால், நுணுக்கமான மற்றும் அனுதாபமான தீர்ப்புகளை வழங்க முடியும். ஒரு பெண்ணோ அல்லது வரலாற்றுரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரோ தீர்ப்பு வழங்க அமரும்போது, அவர் சட்டத்தை வளப்படுத்தும் ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டு வருகிறார். மேலும், அது இந்திய சமூகத்தின் நுணுக்கங்களுக்கு ஏற்ப சட்டத்தை மேலும் பதிலளிக்கக்கூடியதாக மாற்றுகிறது.


நீதிமன்றத்தின் அமைப்புக்கு அப்பால், செலவு செய்ய முடியாத தன்மை என்ற பெரும் சிக்கலும் உள்ளது. அதன் தற்போதைய வடிவத்தில், நீதி என்பது ஒரு ஆடம்பரப் பொருளாக உள்ளது. திறமையான வழக்கறிஞரை நியமிப்பதற்கான செலவும், நீண்டகால வழக்குகளின் இதர செலவுகளும், மக்களின் கணிசமான பகுதியினரை திறம்பட விலக்கிவிடுகின்றன. இந்தியா தனது சட்ட உதவி அமைப்பை முழுமையாக சீர்திருத்தி, பணக்காரர்களுக்குக் கிடைக்கும் பிரதிநிதித்துவத்திற்கு இணையான தரத்தை ஏழைகளுக்கும் வழங்கும் ஒரு உயர்தர நிறுவனமாக அதை மாற்ற வேண்டும். அரசால் உணவையும் கல்வியையும் வழங்க முடியுமானால், ஒரு குடிமகன் தனது வாழ்வையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளையும் அது வழங்க வேண்டும்.


மேலும், நமது உச்சநீதிமன்றங்கள் புவியியல்ரீதியாக மையப்படுத்தப்பட்டிருப்பது கடந்த காலத்தின் ஒரு எச்சமாகவே உள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு மனுதாரர் இறுதி மேல்முறையீட்டிற்காக தலைநகருக்குப் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு தேவையற்ற சுமையாகும். பிராந்திய அமர்வுகள் அல்லது உச்சநீதிமன்றத்திற்கான மேலும் வலுவான காணொளிக் காட்சி விசாரணை முறை, மிக உயர்ந்த மட்டத்திலான நீதியை ஒரு தொலைதூரக் கனவாக இல்லாமல் உள்ளூர் யதார்த்தமாக மாற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும்.


இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அடிப்படை சீர்திருத்தத்தின் நம்பிக்கை உள்ளது. அரசியலமைப்பு நெறிமுறைகளையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதுகாத்தல், மக்களுக்கு அச்சமற்ற நடுவராகச் செயல்படும், அதிகாரத்தில் இருப்பவர்களைத் தயக்கமின்றிப் பொறுப்பேற்கச் செய்யும் ஒரு நீதித்துறை தேவை. இந்தச் சுதந்திரமே ஒரு செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இருப்பினும், சுதந்திரத்தைப் பொறுப்புணர்வு பற்றாக்குறையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது. முக்கிய வழக்குகளை நேரலையில் ஒளிபரப்புதல் மற்றும் நீதித்துறை நியமனங்களுக்கான தெளிவான அளவுகோல்கள் போன்றவற்றின் மூலம் இந்தச் செயல்முறையைத் திறப்பதன் மூலம், நீதிமன்றம் மக்களுடன் தனக்கிருக்கும் 'சமூக ஒப்பந்தத்தை' மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.


ஒரு அமைப்புரீதியான முழுமையான சீரமைப்பு


நாடு, நீதித்துறை சீர்திருத்தத்தை சிறிய, படிப்படியான மாற்றங்களின் தொடராகக் கருதுவதை நிறுத்தி, அதை ஒரு தேசிய அவசரநிலையாகக் கருதத் தொடங்க வேண்டும். தற்போதைய நிலைமை, ஒவ்வொரு நாளும் சட்டத்தின் ஆட்சியை சுரண்டிக்கொண்டிருக்கும் ஒரு மெதுவான பேரழிவாகும். மக்கள் பிரம்மாண்டமான பேச்சுகளையோ அல்லது சடங்குரீதியான வாக்குறுதிகளையோ எதிர்பார்க்கவில்லை, அவர்கள் செயல்படக்கூடிய, வேகமான மற்றும் நியாயமான ஒரு அமைப்பையே எதிர்பார்க்கிறார்கள். ஒவ்வொரு சட்டரீதியான கருத்து வேறுபாட்டையும் ஒரு மரணப் போராட்டமாகக் கருதும் பகைமை மனப்பான்மை கொண்ட கலாச்சாரத்திலிருந்து விலகி, தீர்வு காணும் கலாச்சாரத்தை நோக்கி நாம் நகர வேண்டும். சட்டப் புத்தகத்தில் தேர்ச்சி பெறுவது போலவே கணினித் திரையிலும் தேர்ச்சி பெற்ற நீதிபதிகளும், கட்டணத்தை நீட்டிப்பதைவிட ஒரு வழக்கை முடித்து வைப்பதை மதிக்கும் ஒரு சட்டத் தொழிலும் நமக்குத் தேவை.


‘வளர்ந்த இந்தியா’ 2047-ஐ நோக்கி நாம் நகரும்போது, ஒரு தேசமாக நமது வெற்றியின் அளவுகோல் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது நமது தொழில்நுட்பத் திறமை மட்டுமல்ல, நமது நீதிமன்றங்களில் நீதியை நாடும் நபரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதுதான். நாம் சீர்திருத்தம் செய்யத் தவறினால், சட்டம் என்பது பலவீனர்களுக்கான கேடயமாக இல்லாமல், வலிமை வாய்ந்தவர்களின் கருவியாக மட்டுமே பார்க்கப்படும் ஒரு எதிர்காலத்தை நாம் எதிர்கொள்ள நேரிடும்.


ஆனால் நாம் வெற்றி பெற்றால், நீதியின் தராசு இறுதியாக சமநிலைப்படுத்தப்படும் ஒரு அமைப்பை நம்மால் உருவாக்க முடியும். அதன்மூலம், ஒரே நாளில் கிடைத்திருக்க வேண்டிய ஒரு உண்மைக்காக, எந்தவொரு இந்தியரும் மீண்டும் ஒருபோதும் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதிசெய்யலாம். விவாதிப்பதற்கான காலம் கடந்துவிட்டது, குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு மாற்றத்திற்கான நேரம் இதுவே.


சசி தரூர், திருவனந்தபுரம் (மக்களவை) தொகுதியின் நான்காவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ்) ஆவார். இவர், சமீபத்தில் வெளியான ‘இந்து மதத்தை மறுவரையறை செய்த ஞானி: ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை, பாடங்கள் மற்றும் மரபு’ உட்பட 28 புத்தகங்களை எழுதிய, விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவின் தலைவர் ஆவார்.


Oiginal link:

The institutionalised sluggishness of the legal system 


Share:

இந்தியாவின் கிராமப்புற மாதிரிகளானவை வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை வடிவமைக்கின்றன. - வேதா வைத்தியநாதன்

 சமீப ஆண்டுகளில், ஆப்பிரிக்க அரசாங்கங்கள் பலவும், இந்திய சுய உதவிக் குழு (Self-Help Group (SHG)) அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன.


2011-ம் ஆண்டில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்தியா 'தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம்' (National Rural Livelihood Mission (NRLM)) என்ற திட்டத்தைத் தொடங்கியபோது, ​​ஒரு லட்சிய நோக்கத்துடன் அதை முன்னெடுத்தது. அதாவது, கிராமப்புறக் குடும்பங்கள் சுயதொழில், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம், வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகளையும் நிலையான வாழ்வாதாரங்களையும் பெறுவதற்கு உதவுவதன் வாயிலாக, பன்முகத்தன்மை கொண்ட வறுமையை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.


தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்திட்டத்தின் தீவிரம், நிலைத்தன்மை மற்றும் விளைவுகள் ஆகியவை, இதைத் தொடக்கத்தில் முன்னெடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் விடவும் வெகுவாக வளர்ந்துள்ளது. சுயஉதவிக்குழுக்களில் (SHGs) உறுப்பினர்களாக உள்ள 2 கோடிக்கும் அதிகமான பெண்கள், தலா ₹1,00,000-க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். மேலும், 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளில் பெண் வங்கித் தொடர்பாளர்கள் (banking correspondents) சேவையாற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, 5 கோடிக்கும் அதிகமான பெண்கள் வங்கிக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது 2018-ம் ஆண்டிலிருந்து பெண் தொழிலாளர் பங்கேற்பை கணிசமாக உயர்த்தியுள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) திட்டமானது இந்தியாவின் எல்லைகளைக் கடந்து, 'உலகளாவிய தெற்கு' (Global South) நாடுகளிலும், குறிப்பாக ஆப்பிரிக்காவிலும் கிராமப்புற வாழ்வாதார முயற்சிகளுக்கு வழிகாட்டியாக வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த இராஜதந்திரத்தை இது நுட்பமான முறையில் வடிவமைத்து வருகிறது.


இந்தியாவின் அமைதியான மாற்றம்


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) சாதனைகளின் தீவிரம் பிரமிக்க வைப்பதாக உள்ளது. 2025-ம் ஆண்டின் நடுப்பகுதி நிலவரப்படி, இத்திட்டம் 742 மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறதுடன், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைந்துள்ளது, 90 லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவிக்குழுக்களை ஒருங்கிணைத்துள்ளது, ₹51,368 கோடி அளவிலான மூலதன உதவியை வழங்கியுள்ளது. மேலும், ₹12 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இத்தகைய விரிவாக்கம், இத்திட்டத்தின் வீச்சிலும் சரி, பெண்களை மையமாகக் கொண்ட அதன் அணுகுமுறையிலும் சரி, இதுவரையில்லாத ஒரு விரிவான வளர்ச்சியை இது எட்டியுள்ளது. 2026-27-ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ₹19,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம், இத்திட்டத்தின் வளர்ச்சிப் பாதை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கிராமப்புற வறுமை ஒழிப்புக்கான இந்தியாவின் முதன்மைத் திட்டமாக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தை (NRLM) மற்ற திட்டங்களிலிருந்து தனித்துக்காட்டுவது அதன் பரந்து விரிந்த செயல்பாடுகள் மட்டுமல்ல, அது உருவாக்கியுள்ள சூழலமைப்பும் (ecosystem) ஒரு முக்கிய காரணம் ஆகும். இது கிராமம், தொகுப்பு மற்றும் வட்டார அளவுகளில் ஒருங்கிணைந்த சமூக நிறுவனங்களை இது உருவாக்கியுள்ளது. கடைக்கோடி மக்களுக்குச் சேவைகளை நேரடியாகக் கொண்டு சேர்க்கும் சமூக அடிப்படையிலான பணியாளர் குழுக்களை இது அமைத்துள்ளது. மேலும், கிராமப்புறப் பெண்களை முறைசார்ந்த நிதி அமைப்புகளுடன் முழுமையாக இணைத்துள்ளது. சமூக ஒருங்கிணைப்பு, நிறுவனக் கட்டமைப்பு, கடன் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளுக்கான அணுகல் ஆகியவற்றை ஒன்றிணைத்து, உலகளாவிய வளர்ச்சி நடைமுறைகளில் இத்திட்டத்தை ஒரு தனித்துவமான மற்றும் நீடித்த முன்னெடுப்பாக மாற்றியுள்ளது.




எல்லைகளுக்கு அப்பால்


வளர்ச்சித் துறையில் ஏற்படும் புதுமைகள், உள்ளூர் அரசியல் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்புகள் மற்றும் அரசின் திறன்களால் வடிவமைக்கப்படுவதால், அவை அரிதாகவே எல்லைகளை எளிதில் கடந்து செல்கின்றன. இருப்பினும், தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) வடிவமைப்பு வழக்கத்திற்கு மாறாக எளிதில் எடுத்துச் செல்லக்கூடியதாகத் தோன்றுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், பெருகிவரும் எண்ணிக்கையிலான ஆப்பிரிக்க அரசாங்கங்கள், இந்திய சுய உதவிக் குழு அடிப்படையிலான வாழ்வாதாரக் கட்டமைப்பை ஆராயத் தொடங்கியுள்ளன. எத்தியோப்பியா, தான்சானியா, மலாவி, கென்யா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குழுக்கள் இந்தியாவிற்கு விரிவான ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டுள்ளன. அவை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) விளைவுகளை மட்டுமல்லாமல், அது செயல்படுவதற்கான செயல்பாட்டு வழிமுறைகளையும் ஆய்வு செய்தன. இந்தியா எவ்வாறு சுய உதவிக் குழுக்களைப் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வரை விரிவுபடுத்தியது, வங்கிகளுடனான கடன் இணைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன, சமூகங்கள் எவ்வாறு கூட்டமைப்புகளாகத் திரட்டப்பட்டன, பயிற்சி பெற்ற பணியாளர்கள் எவ்வாறு பெருமளவில் பணியமர்த்தப்பட்டனர் மற்றும் பொறுப்புணர்வும் நிதி ஒழுக்கமும் இந்த அமைப்பில் எவ்வாறு நிலைநிறுத்தப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இந்த ஆர்வத்தின் எழுச்சி, உலகளாவிய தெற்கு நாடுகள் வளர்ச்சி சிந்தனையில் ஒரு பரந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நாடுகள் இனி மேற்கத்திய மாதிரிகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக, அவை ஒன்றுக்கொன்று கற்றுக்கொள்கின்றன. அவை தங்களின் சொந்தச் சூழல்களுக்கும் உள்ளூர் யதார்த்தங்களுக்கும் பொருந்தக்கூடிய தீர்வுகளில் கவனம் செலுத்துகின்றன.


ஆப்பிரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல காரணங்களுக்காக தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தால் (NRLM) ஈர்க்கப்படுகிறார்கள். முதலாவதாக, பெண்களின் கூட்டு அதிகாரமளித்தல் (women’s collective empowerment) மீதான அதன் கவனம், ஆப்பிரிக்கா முழுவதும் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை வலுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுடன் வலுவாக ஒத்துப்போகிறது. ஒன்றுதிரட்டப்பட்ட சேமிப்புகள், பல கற்றல் மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான கடன் ஒழுக்கம் ஆகியவற்றின்மீது கட்டமைக்கப்பட்ட சுய உதவிக் குழு மாதிரியானது, பெண்களின் அமைப்புகளை வலுப்படுத்த ஒரு கட்டமைக்கப்பட்ட அதே சமயம் தளர்வான வழியை வழங்குகிறது. இரண்டாவதாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கட்டமைப்பு செலவு குறைந்ததாகும், இது பெரும் மூலதன முதலீட்டைச் சார்ந்திருக்காமல், சமூகம் சார்ந்த செயல்முறைகள் மற்றும் பணியாளர் அமைப்புகளை நம்பியுள்ளது. இது, வளப் பற்றாக்குறை உள்ள அரசாங்கங்கள்கூட இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அனுமதிக்கிறது. மூன்றாவதாக, வாழ்வாதாரப் பன்முகப்படுத்தலும் குறுந்தொழில் உருவாக்கமும் மிக முக்கியமானதாக இருக்கும் ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பெரிய முறைசாரா பொருளாதாரங்களின் யதார்த்தங்களுடன் இந்த மாதிரி நன்கு ஒத்துப்போகிறது. இறுதியாக, இந்த மாதிரி வெறும் ஒரு திட்டமாக இல்லாமல், ஒரு நிறுவனத்தை உருவாக்கும் அணுகுமுறையாக இருப்பதால் இந்த நாடுகளை ஈர்க்கிறது. இது உள்ளூர் நிர்வாகத்தை வலுப்படுத்துகிறது, பொறுப்புடைமையை மேம்படுத்துகிறது மற்றும் நீண்டகால சமூகத் திறனை உருவாக்குகிறது.


இந்தியாவின் வளர்ந்துவரும் வளர்ச்சி ராஜதந்திரம்


இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பு, வரலாற்றுரீதியாக திறன் மேம்பாடு, சலுகை நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் (NRLM) பரவலானது ஒரு தெளிவான பரிணாம வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியா இப்போது தனது சொந்த வளர்ச்சி அனுபவத்தில் வேரூன்றிய சமூகத் துறை நிறுவனங்களை ஏற்றுமதி செய்கிறது. இத்தகைய நிறுவன மாதிரிகள், அதிகார அமைப்புகள், செயல்படுத்தும் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே நீடித்த இணைப்புகளை உருவாக்கி, சர்வதேச ஈடுபாட்டிற்கு ஒரு தனித்துவமான வழியை வழங்குகின்றன. டிஜிட்டல் ஆளுகை, வேளாண்மை மற்றும் நிதிக் கட்டமைப்பு ஒத்துழைப்பில் செல்வாக்கு செலுத்துகின்றன. வளங்களை மட்டும் பகிராமல், அறிவையும் நிறுவன நடைமுறைகளையும் பரப்புவதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டுப் புத்தாக்கங்கள் எவ்வாறு தெற்கு-தெற்கு ஒத்துழைப்பை வடிவமைக்கின்றன என்பதை தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) ஒரு உதாரணத்தை விளக்குகிறது. இந்த உத்வேகத்தை மேலும் வலுப்படுத்த, மாநில வாழ்வாதாரத் திட்டங்கள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஆப்பிரிக்க அரசாங்கங்களை இணைக்கும் ஒரு பிரத்யேக கிராமப்புற வாழ்வாதார அறிவுப் பரிமாற்றத் தளம் மூலம், இந்தியா தனது கிராமப்புற வாழ்வாதார அறிவைப் பகிர்வதை நிறுவனமயமாக்கலாம். இது விரிவாக்கப்பட்ட பயிற்சி, நீண்டகால ஆய்வு உதவித்தொகைகள், களப்பயணங்கள் மற்றும் கூட்டு முன்னோடித் திட்டங்கள் ஆகியவை சுய உதவிக் குழு அடிப்படையிலான முயற்சிகளை உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவும்.


தேசிய கிராமப்புற வாழ்வாதார திட்டம் (NRLM) என்பது இனி இந்தியாவின் கிராமப்புற மாற்றத்திற்கான கதை மட்டுமல்ல. ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து அதிகரித்துவரும் ஆர்வம், இந்தியா தனது எல்லைகளுக்கு அப்பால் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் தீர்வுகளை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியா உலகளாவிய வளர்ச்சிக்கான ஒரு புதிய முன்மாதிரியை வடிவமைக்கிறது.


வேதா வைத்தியநாதன், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையத்தின் ஆய்வாளர்.


Original link:


Share:

இந்தியாவில் வாக்காளர் பங்கேற்பு (Electoral participation) விகிதம் சீராக அதிகரித்து வருவது குறித்து . . . -சஞ்சய் குமார், அரிந்தம் கபீர்

பல பத்தாண்டுகளாக மாநிலங்கள் முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இது திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல.


மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சமீபகாலத்தில் காணப்படும் நிலைமைகளைவிட, இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு விகிதம் மாநிலங்கள் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது கடந்த பத்தாண்டுகளில், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் வாக்காளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. இது, தேர்தல் ஈடுபாடு திடீரென அதிகரித்திருப்பதை விடவும், அது காலப்போக்கில் சீராக வலுவடைந்து வருவதையே உணர்த்துகிறது.


இந்தத் தரவுகளிலிருந்து கிடைக்கும் மிகத் தெளிவான செய்தி என்னவென்றால், அதிக அளவிலான வாக்காளர் பங்கேற்பு என்பது ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலுக்கோ மட்டும் உரியதல்ல. குஜராத்தில், வாக்காளர் பங்கேற்பு 2007-ல் 59.77%-லிருந்து 2022-ல் 64.84%-ஆக உயர்ந்தது. அதேகாலகட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் இது 45.96%-லிருந்து 61.08%-ஆக அதிகரித்துள்ளது. கோவாவில் வாக்காளர் பங்கேற்பு 70.51 சதவீதத்திலிருந்து 81.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மணிப்பூரில் அது 86.73 சதவீதத்திலிருந்து 90.28 சதவீதமாக அதிகரித்தது எனபதை அட்டவணை-1-ல் குறிப்பிட்டுள்ளது. புவியியல் அமைப்பு, அரசியல் போட்டி, சமூகக் கட்டமைப்பு மற்றும் கடந்தகால வாக்களிப்பு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இம்மாநிலங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்டவையாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பரந்த போக்கையே வெளிப்படுத்துகின்றன. அதாவது, அதிகமான மக்கள் தேர்தல்களில் பங்கேற்று, தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.


கர்நாடகாவின் வாக்குப்பதிவு 64.84%-லிருந்து 73.84% ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் வாக்குப்பதிவு 69.63%-லிருந்து 77.74% ஆகவும், இராஜஸ்தானின் வாக்குப்பதிவு 66.49%-லிருந்து 75.33% ஆகவும், சத்தீஸ்கரின் வாக்குப்பதிவு 70.66%-லிருந்து 76.75% ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-2 குறிப்பிட்டுள்ளது.


இந்த உயர்வுக்குரிய விதிவிலக்குகள்


ஒட்டுமொத்தமாக வாக்காளர் பதிவு விகிதம் மேல்நோக்கியதாக இருந்தாலும், அது எல்லா இடங்களிலும் காணப்படவில்லை. பஞ்சாப் 2007-ல் 76.04%-லிருந்து 2022-ல் 72.15%-ஆகக் குறைந்தது. அதேசமயம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை காலப்போக்கில் சரிவையோ அல்லது ஏறக்குறைய நிலையான தன்மையையோ காட்டுகின்றன. ஹரியானா மற்றொரு முக்கியமான விதிவிலக்காகும். அதன் பதிவு விகிதம் 2009-ல் 72.37%-லிருந்து 2024-ல் 67.89%-ஆக உயர்கிறது என்று அட்டவணை-3 காட்டுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் முக்கியமானவை. ஏனெனில், வாக்காளர் பதிவு விகிதம் தானாகவே உயர்ந்துவிடுவதில்லை என்பதையும், அது உள்ளூர் அரசியல் சூழல்கள், அரசியல் போட்டியின் தீவிரம் மற்றும் நிர்வாகரீதியான காரணிகள் ஆகியவை வாக்காளர் பதிவைச் செல்வாக்குக்கு உட்படுத்தக்கூடும்.


அதேநேரத்தில், ஏற்கனவே அதிக அளவிலான வாக்காளர் பதிவு விகிதத்தைக் கொண்டிருந்த பல மாநிலங்கள், தொடர்ந்து வலுவான பங்கேற்பைப் பதிவு செய்துள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் வாக்காளர் எண்ணிக்கை 2009-ல் 79.45%-லிருந்து 2024-ல் 86.89%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. புதுச்சேரியின் பதிவு விகிதம் 2011-ல் 86.19%-லிருந்து 2026-ல் 89.85%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-5 காட்டுகிறது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் பதிவு விகிதம் அதிகமாகக் காணப்படுகின்றன. கேரளாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 75.26%-லிருந்து 78.27%-ஆகவும், தமிழ்நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை 78.29%-லிருந்து 85.15%-ஆகவும், மேற்கு வங்கத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 84.72%-லிருந்து 92.47%-ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-5 குறிப்பிட்டுள்ளது. இதில், மேற்கு வங்கம் சிறப்புக் கவனத்திற்குரியது. ஏனெனில் அரசியல்ரீதியாகத் தீவிரமான மற்றும் மிகுந்த போட்டி நிறைந்த ஒரு மாநிலத்தில்கூட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. இம்மாநிலம் நீண்டகாலமாகவே, இந்தியாவில் மிக உயர்ந்த வாக்காளர் பங்கேற்பு விகிதங்களில் ஒன்றைக் கொண்டிருந்தாலும், வாக்குப்பதிவு விகிதம் 2011-ல் 84.72%-லிருந்து 2026-ல் 92.47%-ஆக உயர்ந்துள்ளது.


தேர்தல் அணிதிரட்டல் குறித்த விவாதங்களில் மேற்கு வங்கம் பெரும்பாலும் ஒரு விதிவிலக்கான நிகழ்வாகக் கருதப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், ஏற்கனவே அதிக வாக்குப்பதிவு இருந்த மாநிலங்களிலும் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. எனவே, வாக்காளர் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயர்வு ஒரு திடீர் அல்லது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இதற்கு மாறாக அது ஒரு பரந்த மற்றும் நீண்டகாலப் போக்கின் ஒரு பகுதி என்ற முக்கிய வாதத்தை மேற்கு வங்கம் வலுப்படுத்துகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் அதிக வாக்குப்பதிவைக் கொண்டிருந்த மாநிலங்களில்கூட இந்த அதிகரிப்பு தெளிவாகத் தெரிகிறது. இது வாக்காளர் பங்கேற்பு ஆதாயங்கள் குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.




பல்வேறு தேர்தல் சுழற்சிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், வாக்காளர் பங்கேற்பு விகிதம் காலப்போக்கில் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. ஆந்திரப் பிரதேசம் தனது வாக்காளர் பங்கேற்பை 2009-ல் 72.72%-லிருந்து 2024-ல் 81.79% ஆகவும், ஒடிசா 65.35%-லிருந்து 74.79% ஆகவும், ஜார்க்கண்ட் 57.03%-லிருந்து 67.66% ஆகவும் அதிகரித்துள்ளன என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. இதேபோல், பீகார் தனது வாக்காளர் பங்கேற்பு விகிதத்தை 2010-ல் 52.73%-லிருந்து 2025-ல் 67.67% ஆக அதிகரித்துள்ளது என்பதை அட்டவணை-4 காட்டுகிறது. பொதுவாகப் பார்க்கும்போது, ​​இந்த எண்ணிக்கைகள் இந்தியாவின் தேர்தல்களத்தில் வாக்காளர் பங்கேற்பு விகிதம் திடீரென அதிகரித்ததைக் காட்டிலும், சீராக விரிவடைந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.

இது முக்கியமானதாகும். ஏனெனில், இது வாக்காளர் பங்கேற்பில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இந் அதிகரிப்பை, ஒரு நீண்ட காலகட்டத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த பங்கேற்பு உயர்வை, சிறப்புத் தீவிர திருத்தக் காலத்திற்கு (SIR) மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு திடீர் நிகழ்வாகக் கருதுவதைவிட, மாநிலங்கள் முழுவதும் சீரற்ற விளைவுகளைக் கொண்ட ஒரு பத்தாண்டு காலப் போக்காகவே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.


பெரிய தாக்கம் இல்லை


மாநில அளவிலான வாக்காளர்களின் எண்ணிக்கை சிறிதளவு மட்டுமே மாறினாலும், பகுதிவாரியான எண்ணிக்கைகளை மாற்றுவதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் வருகையை மேலும் அதிகரித்திருக்கலாம். அதாவது, அதன் விளைவு அடிப்படையானதாகக் கருதப்படாமல், கூடுதல் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். இன்னும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் முன்பே பல மாநிலங்களில் வாக்காளர் வருகை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இதன் எண்ணிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு இந்த வேறுபாடு முக்கியமானது. தகுதியுள்ள வாக்காளர் தளத்தை மறுசீரமைப்பதன் மூலம், வாக்காளர்களின் வருகை அதிகரித்து, இது இறுதிகட்ட சதவீதத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், பல மாநிலங்களில் வாக்காளர் வருகை ஏற்கனவே அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒரு புதிய போக்கைத் தொடங்குவதைவிட, ஏற்கனவே இருந்த ஒரு போக்கின் மீதுதான் செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது.


வாக்காளர் வருகையில் ஏற்பட்டுள்ள பரவலான அதிகரிப்பு, மக்களிடையே வலுவான அரசியல் ஈடுபாட்டையும், அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களும் அதிக செயல்திறன் மிக்கவையாக மாறியுள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது வாக்காளர்களின் மாறிவரும் மனப்பான்மை, மேம்பட்ட விழிப்புணர்வு அல்லது தேர்தல்கள் முக்கியமானவை என்ற பரந்த உணர்வையும் பிரதிபலிக்கக்கூடும். இதற்கான காரணங்களின் ஒருங்கிணைப்பு எதுவாக இருந்தாலும், மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு மேலும் விரிவடைந்துள்ளது என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


அதே நேரத்தில், பங்கேற்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை இந்த விதிவிலக்குகள் நமக்கு நினைவூட்டுகின்றன. சில மாநிலங்களில் வாக்காளர் வருகையில் சரிவுப் போக்கும் காணப்படுகிறது. மேலும், இந்த வேறுபாடுகளை ஒரே தேசியக் கண்ணோட்டமாகச் சுருக்கிவிடாமல், அவற்றுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், ஒட்டுமொத்தப் போக்கு தெளிவாக உள்ளது. இந்தியா முழுவதும், வாக்காளர் வருகை பொதுவாக அதிகரித்துள்ளது. மேலும், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற சமீபத்திய காரணிகள், ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த இந்த உயர்வுக்குப் பங்களித்திருக்கலாம்.










Original Link: Electoral participation has been on a steady rise in India.


Share:

மேற்குவங்க சிறப்புத் தீவிர திருத்த விவகாரம்: வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமையை எவ்வாறு பாதிக்கிறது? -அமால் ஷேக்

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


திங்கள்கிழமை ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், மேற்குவங்கத்தில் மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த  (Special Intensive Revision (SIR)) நடவடிக்கைக்குப் பிறகு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 34 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இது தொடர்பான மேல்முறையீடுகள் இன்னும் தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளதால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த மனுதாரர்களால் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.


ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமை என்பது "தேசியப்பற்று மற்றும் தேசபக்தியின் மிகப்பெரிய வெளிப்பாடு" என்று நீதிமன்றம் விவரித்துள்ளது.


தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும்போது இந்த மனுதாரர்களை வாக்களிக்க அனுமதித்தால், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கும் மற்றவர்களும் இதே போன்ற சலுகையை கேட்க வழிவகுக்கும் என்று கூறியது. தலைமை நீதிபதி கேள்வி எழுப்புகையில், சலுகை அடிப்படையில் வாக்களிக்க அனுமதித்தால் வாக்களிப்பதன் நோக்கமே சிதைந்துவிடும் என்றும் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டவர்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.


வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுவது குறித்த பெரிய சர்ச்சைக்குள், ஒரு சிறிய பிரச்சனையும் உள்ளது. பொதுவெளியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து, வேட்புமனுவும் தாக்கல் செய்த ஒரு வேட்பாளரின் பெயரே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால், அவருடைய நிலை என்னவாகும்?


கடந்த வாரம், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி, தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் தனது பெயரை மீண்டும் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இந்த நிகழ்வு ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இந்த மனு மிகத் தாமதமாக முன்வைக்கப்பட்டது என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் (Election Commission of India (ECI)) வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.


வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்தலில் போட்டியிடும் உரிமை


வாக்களிக்கும் உரிமைக்கும், தேர்தலில் போட்டியிடும் உரிமைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி ராம் சந்திர சௌத்ரி vs ரூப் நகர் துக்த் உத்பாதக் சககாரி சமிதி லிமிடெட் (Ram Chandra Choudhary vs Roop Nagar Dugdh Utpadak Sahakari Samiti Ltd) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதில், இந்த இரண்டு உரிமைகளுமே குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.


வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு உறுப்பினர் சட்டத்தின்படி தனது வாக்கைச் செலுத்த அனுமதிப்பதாகும்; ஆனால், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது அதிலிருந்து வேறுபட்ட ஒரு கூடுதல் உரிமையாகும். இந்தப் போட்டியிடும் உரிமைக்குத் தகுதிகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் தகுதியிழப்புகள் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தேர்தல் உரிமைகளை இந்தத் தீர்ப்பு தெளிவாக விளக்குகிறது. 


தகுதி என்பது தேர்தல் நடைமுறையில் ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அடிப்படைத் தேவையாகும். ஒருவருக்குத் தேவையான தகுதிகள் இல்லையென்றால், அது தண்டனையோ அல்லது அவமானமோ கிடையாது; அந்த நபர் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்வரை தேர்தலில் போட்டியிடும் உரிமையை வெறும் காலதாமதம் மட்டுமே செய்கிறது என்று  தகுதி மற்றும் தகுதியின்மை ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாட்டை நீதிமன்றம் விளக்கியுள்ளது.


கூட்டுறவு சங்கத் தேர்தல்களின்போதும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. இது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கையின்போது மேற்கொள்ளப்பட்ட பெயர் நீக்கங்களால் பாதிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும். ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது என்பது சட்டப்பூர்வமான தகுதியிழப்பு கிடையாது என்றாலும், அதன் பிறகு அவர்கள் வாக்காளர்களாகக் கருதப்படமாட்டார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act), ஒரு வேட்பாளர் தான் போட்டியிட விரும்பும் அதே தொகுதியில் வாக்காளராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த மாநிலத்தின் ஏதேனும் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.


இது ஒன்றும் புதிய கருத்து அல்ல என்றும் ஜோதி பாசு vs தேபி கோஷல் (1982) (Jyoti Basu v. Debi Ghosal (1982)) என்ற வழக்கில், தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது முற்றிலும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்தது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், கே. கிருஷ்ணமூர்த்தி vs இந்திய ஒன்றியம் (2010) (K. Krishna Murthy v. Union of India (2010) என்ற வழக்கிலும், அரசியலில் பங்கேற்கும் உரிமைகள் வரம்பற்றவை அல்ல; அவை சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதை நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.


இருப்பினும், இதில் ஒரு புதிய விஷயம் என்னவென்றால், ஒரு மிகப்பெரிய நிர்வாக நடைமுறையின் மூலமாகப் பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இது சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்குத் தெரியாமலேயே நடந்துள்ளது.


இரண்டு வழக்குகள்


தமிழ்நாட்டைச் சேர்ந்த மனுதாரரான சி. கீதா, 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, அதற்கான வைப்புத் தொகையையும் செலுத்தினார். ஒரு சுயேச்சை வேட்பாளராகத் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த வேளையில், வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் விசாரித்தபோது, சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள், அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும், அவருடைய வீட்டை மட்டும் கவனிக்காமல் விட்டுச் சென்றதும் தெரியவந்தது.


இது ஒரு சாதாரண எழுத்துப் பிழை அல்ல என்றும் மாறாக, திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என்றும் அவர் தனது மனுவில் குறிபிட்டார். அவர் பெயர் விடுபட்ட சூழல் இந்த வாதத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால், இந்தப் புகார் மிகவும் தாமதமாக எழுப்பப்பட்டுள்ளதாகவும் வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டதாலும், வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாலும், வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாக அவரது பெயரைச் சேர்க்க வழி ஏதுமில்லை என்றும் தேர்தல் ஆணையம் (ECI) நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.


தேர்தல் சட்டத்தின்படி, இந்த நிலையில் ஒரு பெயரினை துணைப் பட்டியலில் (Supplementary list) மட்டுமே சேர்க்க முடியும். அவ்வாறு சேர்ப்பதற்கு, ஒரு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  அந்த நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, அவரது பெயரை பட்டியலில் சேர்க்குமாறு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.


இந்த வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கருத்தை ஏற்றுக்கொண்டு, ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்தது.


1960-ஆம் ஆண்டின் தேர்தல் பதிவு விதிகளின் (Registration of Electoral Rules, 1960), விதி 23(5)-ன்படி, ஒரு வாக்காளரின் மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்தல் பதிவு அதிகாரி உடனடியாக வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், இந்த விதி தீர்ப்பாயம் அந்த மேல்முறையீட்டின்மீது இறுதி முடிவை எடுத்திருந்தால் மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.


உதாரணமாக, மேற்குவங்கத்தின் ஃபக்கா (Fakka) தொகுதிக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக மோதாப் ஷேக் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.


பல்வேறு ஆவணங்களில் அவருடைய பெயர் வெவ்வேறு விதமாக இருந்ததால், வாக்காளர் பட்டியலிலிருந்து அவருடைய பெயர் நீக்கப்பட்டது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அவருடைய ஆதார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைச் சரிபார்த்து, அவை அனைத்தும் ஒரே நபருக்குச் சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியது. பின்னர், அன்றைய தினம் இரவு 8 மணிக்குள் அவருடைய பெயரைத் துணைப் பட்டியலில் சேர்க்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், அவருடைய மேல்முறையீடு வெற்றியடைந்தது என்கின்றனர்.


கடந்த திங்கட்கிழமை நடந்த நீதிமன்ற நடவடிக்கைகள், ஏன் ஒரு பொதுவான தீர்வை வழங்குவதில் நீதிமன்றங்கள் சிரமப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. வாக்காளர் பதிவு விதிகள் (Registration of Electors Rules), விதிகள் 19 மற்றும் 20-ன்கீழ் உள்ள வழக்கமான நடைமுறையிலிருந்து மேல்முறையீட்டுச் செயல்முறை வேறுபட்டுள்ளது. பொதுவாக, இந்த விதிகளின்படி ஒருவருடைய பெயரைப் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு முன்னால், அவர்களுக்கு அதுகுறித்த முன்னறிவிப்பை  வழங்கி, அவர்களின் விளக்கத்தைக் கேட்க வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்றனர்.


மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருக்கும்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒரு பெயரைத் தற்காலிகமாக மீண்டும் சேர்க்க 'விதி 23(3)' அனுமதிக்காது என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், நீக்கப்பட்ட ஒரு வாக்காளர் அல்லது வேட்பாளர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொண்டாலும், தேர்தல் நடைமுறை நடந்துகொண்டிருக்கும்போது அவரது பெயரை அவ்வளவு எளிதாக மீண்டும் பட்டியலில் சேர்த்துவிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.



Original link:

West Bengal SIR row: How the right to vote affects the right to contest.


Share:

இந்திய வரலாற்றில் 5 முக்கிய ஏப்ரல் மாத நிகழ்வுகள் -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி


இந்திய வரலாற்றை வடிவமைத்த பல வரலாற்று நிகழ்வுகள் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்துள்ளன. பீம்ராவ் அம்பேத்கரின் பிறப்பு முதல் ஜாலியன்வாலா பாக் படுகொலை வரை, இந்த மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.


முக்கிய அம்சங்கள்:


  1. தண்டி யாத்திரை


மார்ச் 12 அன்று சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொடங்கிய தண்டி யாத்திரை, ஏப்ரல் 5, 1930 அன்று நிறைவடைந்தது. 24 நாட்கள் நீடித்த இந்த யாத்திரை, ஆங்கிலேயரின் உப்பு ஏகபோகத்திற்கு எதிரான ஒரு வரி எதிர்ப்புப் பிரச்சாரமாக அமைந்தது. ஏப்ரல் 6 அன்று உப்புச் சட்டத்தை மீறியதன் மூலம் இந்த யாத்திரை முழுமையாகத் தொடங்கியது.


காந்தியின் அகிம்சை அல்லது சத்தியாகிரகக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த இந்தப் பேரணி, சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

1882-ஆம் ஆண்டின் உப்புச் சட்டம், உப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆங்கிலேயர்களுக்கு ஏகபோக உரிமையை வழங்கியது. இந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் உப்பு அதிகமாகக் கிடைத்தபோதிலும், இந்தியர்கள் அதை  ஆங்கிலேயர்களிடமிருந்து வாங்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவதற்கு ஏதேனும் ஒரு பொருள் இருக்குமானால், அது உப்புதான் என்று காந்தி முடிவு செய்தார்.


காந்தி ஏப்ரல் 5 அன்று தண்டி சென்றடைந்தார். ஏப்ரல் 6 அதிகாலையில், அவர் மற்ற யாத்திரிகர்களுடன் இணைந்து கடலை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சிறிய குழியில் கிடந்த இயற்கையான உப்புக்கட்டிகளை அவர் கையில் எடுத்தார். இந்தச்செயல் ஒரு குறியீட்டுச் செயலாக அமைந்தபோதிலும், பத்திரிகைகளால் மிக விரிவாகப் பேசப்பட்டது. மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பிற சட்டமறுப்புப் போராட்டங்களுக்கும் இந்த யாத்திரையே தொடக்கமாகவும் அமைந்தது.


உதாரணமாக, வங்கத்தில், சதீஷ் சந்திர தாஸ்குப்தா தலைமையிலான தன்னார்வலர்கள், உப்பு தயாரிப்பதற்காக சோதேபூர் ஆசிரமத்திலிருந்து மஹிஸ்பதன் கிராமத்திற்கு நடந்து சென்றனர். பம்பாயில் கே.எஃப். நாரிமன் மற்றொரு குழுவினரை ஹாஜி அலி முனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் அருகிலுள்ள ஒரு பூங்காவில் உப்பு தயாரித்தனர். ரயத்வாடி பகுதிகளில், வாடகை செலுத்தாததுடன், கிராமக் காவல்துறை எதிர்ப்பு (anti-chowkidari) வரியும் பின்பற்றப்பட்டது.


வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North-West Frontier Province (NWFP)), 'எல்லைப்புற காந்தி' (Frontier Gandhi) எனப் பிரபலமாக அறியப்பட்ட கான் அப்துல் கஃபார் கான், வன்முறையற்ற தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். இந்தக் குழு இறைவனுக்காக சேவைசெய்யும் சிவப்பு சட்டையணிந்த தன்னார்வலர்கள் (Red Shirts) குழு என்று அழைக்கப்பட்டது. மேலும், அவர்கள் இந்த இயக்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


  1. மகாத்மா ஜோதிராவ் பூலே


இந்திய அரசு, மகாத்மா ஜோதிபா பூலே அவர்களின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 2026 முதல் ஏப்ரல் 2027 வரை ஒரு ஆண்டு காலத்திற்கு கொண்டாட்டங்களை நடத்தி வருகிறது.


ஃபுலே 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி பிறந்தார். அவர் தோட்டக்காரர்கள் மற்றும் காய்கறி உழவர்களான மாலி சாதியைச் சேர்ந்தவர். அவருக்கு 1888-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மகாராஷ்டிர சமூக ஆர்வலர் விதல்ராவ் கிருஷ்ணாஜி வந்தேகர் என்பவரால் மகாத்மா பட்டம் வழங்கப்பட்டது.


மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சமமான சமூக மற்றும் பொருளாதார நலன்களைப் பெற்றுத் தரும் நோக்கில், பூலே தனது மனைவி சாவித்ரிபாய் பூலே மற்றும் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து உண்மை தேடுவோர் சங்கம் (Satyashodhak Samaj) என்ற அமைப்பை உருவாக்கினார்.



ஃபுலே 1873-ஆம் ஆண்டு “குலாம்கிரி” (Gulamgiri) என்ற நூலை எழுதினார். இதில் இந்தியாவில் ‘தீண்டத்தகாதவர்கள்’ எதிர்கொள்ளும் அவல நிலையை விளக்கியுள்ளார். சாதி எதிர்ப்பு இயக்கங்களின் சொற்களில் ‘தலித்’ (‘தீண்டத்தகாதோர்’ அல்லது ‘தனித்து துண்டிக்கப்பட்ட மக்கள்’) எனும் சொல்லை அவர் பயன்படுத்தியதுடன், ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு குறித்த தனது சொந்த விளக்கத்தையும் பரப்பினார்.


ஃபுலேவின் பிற முக்கியமான படைப்புகள்: “ஷேத்கார்யாச்சா அஸூத்” (1883), “சர்வஜனீக் சத்யதர்ம புஸ்தக்” மற்றும் “பிரம்னாஞ்சே கசாப்” ஆகியவையாகும்.


3. ஜாலியன்வாலா பாக் படுகொலை


பல வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, ஜாலியன்வாலா படுகொலையானது, இந்தியா தனது ஆங்கிலேய ஆட்சியாளர்களுடன் கொண்டிருந்த உறவில் ஒரு திருப்புமுனையாகவும், அதன் விளைவாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டப் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாகவும் அமைந்தது.


1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் திரண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். சுதந்திரத்திற்காகப் போராடிய இரண்டு தலைவர்களான சத்ய பால் மற்றும் சைஃபுதீன் கிட்ச்லேவ் ஆகியோரின் சிறைவாசம் மற்றும் ரௌலட் சட்டம் அமல்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.


ரௌலட் சட்டம் (Rowlatt Act


ஆங்கிலேய எதிர்ப்புச் சதித்திட்டங்கள் அதிகரித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆங்கிலேய அரசாங்கம் 1919-ஆம் ஆண்டின் 'அராஜக மற்றும் புரட்சிகரக் குற்றங்கள் சட்டத்தை' (Anarchical and Revolutionary Crimes Act) இயற்றியது. இது பொதுவாக 'ரௌலட் சட்டம்' என்றழைக்கப்படுகிறது. சர் சிட்னி ரௌலட் தலைமையில் அமைக்கப்பட்ட 'அரசத்துரோகக் குழுவின்' (Sedition Committee) பரிந்துரைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட இந்தச்சட்டம், மக்கள் அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதையும், இந்தியர்கள்மீது கூடுதல் ஆதிக்கத்தைச் செலுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.


இந்தச் சட்டம், தீவிரவாதம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே, எந்த இந்திய குடிமகனையும் விசாரணையின்றி இரண்டு ஆண்டுகள் வரை கைது செய்து சிறையில் வைக்க ஆங்கிலேய அரசுக்கு அதிகாரம் வழங்கியது. இந்தச் சட்டம்  இந்திய முழுவதும் பரவலான எதிர்ப்பை சந்தித்தது.


நோபல் பரிசு பெற்றவரும் உலகப் பிரமுகருமான ரவீந்திரநாத் தாகூர், தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக தனக்கு வழங்கப்பட்ட 'நைட்' (knighthood) பட்டத்தைத் திருப்பிக் கொடுத்தார். வைசராய் Chelmsford அவர்களை நோக்கி ரவீந்திரநாத் தாகூர், “என் நாட்டு மக்களில், தங்களது பெயரற்ற தன்மை காரணமாக மனிதர்களுக்கு உகந்ததல்லாத அவமானத்தை அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்களுடன், அனைத்துச் சிறப்புப் பட்டங்களும் நீக்கப்பட்ட நிலையில், நானும் நின்று கொள்ள விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார்.


சில மாதங்களுக்குள் மகாத்மா காந்தி, இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் அகில இந்திய இயக்கமான ஒத்துழையாமை இயக்கமான கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த ஆண்டு அக்டோபரில் வெளியான ஒரு தலையங்கத்தில் அவர், “எனது நாட்டு மக்களின் சுதந்திரத்தை மதிக்காத எந்த அரசும் மரியாதைக்குரியது அல்ல” என்று ஒரு ‘A Punjab Victim”, Young India, 1919’  கட்டுரையில் குறிப்பிட்டார்.

4. அம்பேத்கர் ஜெயந்தி


பி. ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 1891-ல் மகர் சாதியில் பிறந்த அம்பேத்கர், தன் வாழ்நாள் முழுவதும் கடுமையான சாதிப் பாகுபாட்டை (caste discrimination) அனுபவித்தார்.


டாக்டர் அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் இந்தியாவில் பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடி, சமூகப் பாகுபாட்டை ஒழித்து, அதன் மூலம் இந்தியாவின் அனைத்து  மக்களுக்கும் சட்டத்தின்முன் அனைவரும் சமம் (Equality Day) என்ற கோட்பாட்டை நிலைநாட்டியதால், இந்த நாள் சமத்துவ தினம் என்றும் அழைக்கப்படுகிறது.


1927-ஆம் ஆண்டின் மகத் சத்தியாகிரகம், அம்பேத்கர் தலைமையில் தலித்துகள் நடத்திய முதல் பெரிய கூட்டுப் போராட்டமாகும். இது தலித் இயக்கத்தின் “அடித்தள நிகழ்வாக” (foundational event) கருதப்படுகிறது. சாதி அமைப்பை நிராகரித்து, தங்களின் மனித உரிமைகளை நிலைநாட்டும் உறுதியை அந்தச் சமூகம் கூட்டாக வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.


அம்பேத்கர், அதிகாரமளித்தல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகக் கல்வியை முன்னிறுத்தினார். மேலும், விளிம்புநிலை சமூகத்தினரிடையே கல்வியைப் பரப்புவதற்காக 1923-ல் பகிஷ்கிரித் ஹிதகர்னி சபாவை (Bahishkrit Hitkarini Sabha) நிறுவினார்.


சாதி அமைப்பை விமர்சித்து, அதை முழுமையாக ஒழிக்க அழைப்பு விடுத்த 'சாதி ஒழிப்பு' (Annihilation of Caste) என்ற நூல், சமூக சமத்துவம் குறித்த அம்பேத்கரின் மிகவும் செல்வாக்கு மிக்க நூல்களில் ஒன்றாகும். அவருடைய மற்ற படைப்புகளில், ‘The Untouchables’ (தீண்டத்தகாதவர்கள்), ‘Who Were the Shudras’ (சூத்திரர்கள் யார்), ‘States and Minorities’ (அரசுகளும் சிறுபான்மையினரும்) மற்றும் ‘Buddha and His Dhamma’ (புத்தரும் அவரது தம்மமும்) ஆகியவை அடங்கும்.


மேலும், ‘Administration and Finance of the East India Company’ (கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும் நிதியும்), ‘The Evolution of Provincial Finance in British India’ (ஆங்கிலேய இந்தியாவில் மாகாண நிதியியலின் பரிணாம வளர்ச்சி) மற்றும் ‘The Problem of the Rupee: Its Origin and Its Solution’ (ரூபாயின் பிரச்சினை: அதன் தோற்றமும் தீர்வும்) போன்ற பொருளாதார நூல்களையும்  எழுதியுள்ளார்.


5. பானிபட் முதல் போர்


ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட், இந்திய வரலாற்றில் மூன்று முக்கியப் போர்கள் நடந்த இடமாகும். முதல் பானிபட் போர், 1526-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, டெல்லி சுல்தான் இப்ராஹிம் லோதிக்கும் தைமூரியப் படைத்தளபதி ஜஹீருதீன் பாபருக்கும் இடையே நடைபெற்றது.

இது, பானிபட்டின் முதல் ஆட்சியாளரான பாபருக்குப் பிறகு இந்தியாவில் முகலாயப் பேரரசுக்கு அடித்தளமாக இருந்ததுடன், லோடி வம்சத்தின் தலைமையிலான டெல்லி சுல்தானியத்தின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது.

லோதி தோட்டம் (Lodhi Garden)


1936-ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, சையத் மற்றும் லோதி வம்சப் பிரபுக்கள் பல நூற்றாண்டுகளாகப் புதைக்கப்பட்டிருந்த பண்டைய டெல்லியின் ஒரு பகுதி, லேடி வில்லிங்டன் பூங்கா (Lady Willingdon Park) என்ற பெயரில் முறைப்படி பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது லோதி தோட்டம் என்று அழைக்கப்படுகிறது.


தலைநகரின் மையப்பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தோட்டம், முகமது ஷாவின் கல்லறை, படா கும்பாத், ஷிஷ் கும்பாத் மற்றும் சிக்கந்தர் ஷாவின் கல்லறை ஆகிய நான்கு இடைக்கால நினைவுச்சின்னங்களையும், அத்துடன் ஒரு மூங்கில் தோப்பு, ஒரு போன்சாய் பூங்கா, மூன்று குளங்கள் மற்றும் 210 இனங்களைச் சேர்ந்த 5,400-க்கும் மேற்பட்ட மரங்களையும் கொண்டுள்ளது.


NCERT, இந்தப் போரில் துப்பாக்கி மண் (gunpowder), வெளிப்புற துப்பாக்கி பீரங்கிகள் (field artillery) மற்றும் தீக்குச்சித் துப்பாக்கி (matchlock) துப்பாக்கிகள் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இவை சமீபத்தில் இந்தியப் போர்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவை ஆகும்.

1556-ஆம் ஆண்டில் நடந்த இரண்டாம் பானிபட் போரில், ஹேமு ‘விக்ரமாதித்ய’ (Vikramaditya’) மன்னரிடமிருந்து வந்த அச்சுறுத்தலை அக்பர் முறியடித்தபோது, ​​முகலாய ஆட்சி வலுப்பெற்றது.


மூன்றாம் பானிபட் போர் 1761-ல் மராத்தா படைகளுக்கும், படையெடுத்து வந்த ஆப்கானிய தளபதி அகமது ஷா அப்தாலியின் படைகளுக்கும் இடையே நடைபெற்றது.  இந்தப்போரில் மராத்தாக்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்களின் 40,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே, சமயம் அப்தாலியின் படையில் 20,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்படுகிறது.


லோதி தோட்டம்: 90-ஆண்டுகளுக்குப் பிறகு, சுதந்திரம் பெற்றதிலிருந்து லோதி தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தத் தோட்டம், அமைதியான காலை நடைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புவோருக்கு ஒரு புகலிடமாக மாறியுள்ளது.  



மகாவீர் – ஜைன மதத் தத்துவம் (Mahavir – Jainism philosophy)


1. மார்ச் மாதத்தின் கடைசி நாளில் (மார்ச் 30-31, 2026), ஜைன மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பகவான் மகாவீரரின் பிறப்பைக் குறிக்கும் ‘மகாவீர் ஜெயந்தி’ அல்லது ‘மகாவீர ஜன்ம கல்யாணக்’ கொண்டாடப்பட்டது. வர்தமானர் (Vardhamana) என்றும் அழைக்கப்படும் பகவான் மகாவீரர், ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை நிறுவினார். அவை இன்றும் மில்லியன் கணக்கான பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டி வருகின்றன.


2. பகவான் மகாவீரர், கி.மு. 599-ல் பீகாரில் உள்ள குண்டலகிராமத்தில், மன்னர் சித்தார்த்தருக்கும் ராணி திரிசாலைக்கும் மகனாகப் பிறந்தார். அவரது தாயாரான திரிசாலை, லிச்சாவித் தலைவரான சேதகரின் சகோதரி ஆவார். அவர் தனது 30-வது வயதில் அரச பதவியைத் துறந்து, அனைத்து விதமான உலக வாழக்கை முறைகளிலிருந்தும் விலகி 12 ஆண்டுகள் துறவ வாழக்கையைக் கழித்தார்.


3. மகாவீரர், பிற்காலத்தில் ஜைன மதத்தின் அடிப்படைக் கொள்கைகளாக மாறிய தனது அகிம்சை (non-violence), சத்யம் (truth), அஸ்தேயம் (non-stealing), பிரம்மச்சரியம் (chastity), மற்றும் அபரிகிரகம் (non-attachment) ஆகிய தத்துவங்களைப் போதிப்பதற்காக, 30 ஆண்டுகள் இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.


4. ஜைன மதத்தின் உண்மையின் பன்முகத் தன்மை (anekantavada)  மற்றும் சார்பியல் உண்மை கோட்பாடு (syadavada) ஆகியவை, உண்மை என்பது சிக்கலானதும் பல அம்சங்களைக் கொண்டதுமாக இருப்பதால், அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்று வலியுறுத்துகின்றன. இருக்கும் அனைத்திற்கும் மூன்று அம்சங்கள் உள்ளன. அவை பொருள் (dravya), குணம் (guna) மற்றும் காலம் (paryaya) ஆகும்.

5. ஜைன மதத்தின் மூன்று முக்கிய கேட்பாடுகள்: முக்தியின் பாதை, என்பது சரியான நம்பிக்கை ((samyag-darshana)), சரியான அறிவு ((samyag-jnana)) மற்றும் சரியான நடத்தை (samyag-charitra) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Original link:

5 crucial April events in Indian history

Share: